Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Wednesday, February 3, 2016

கதை - 16. வெறிபிடித்த நாய் சட்டம்

Share |
ஒரு ஊரில் வெறி பிடித்த நாய்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. அந்த வெறி பிடித்த நாய்களிலும் உயர் ரக நாய்கள், தெரு நாய்கள் என வகை பிரிக்கப்பட்டு இருக்கிறது.
நாய்கள் கடித்தால் அதற்கு ஏற்றவாறு மக்கள் மருந்துண்டார்கள். ஊசி போட்டுக்கொண்டார்கள். சிலர் மற்ற மனிதர்களை கூட கடித்துவைத்தார்கள். ஆனால் வெறிப்பிடித்த நாய்களின் கடி குறித்து பெரும்பாலும் யாரும் புகார் சொல்லவில்லை.
அதனையும் மீறி கடித்தாங்காமல் யாராவது புகார் சொன்னால் - உயர் ரக நாய்களை மாநகராட்சி பிடிப்பதற்கு அரசாங்கத்திடம் நிச்சயம் அனுமதி வாங்க வேண்டும். அரசாங்கத்திடம் அனுமதி பெற்று அந்த உயர் ரக நாய்கள் மீது புகார் கொடுப்பதற்கு பேசாமல் இன்னும் இரண்டு கடியே வாங்கிக்கொள்ளலாம் போல இருந்தது.
கடி பொறுக்க முடியாத ஒருவர் நீதிமன்றத்தை நாடினார். அய்யா இந்த உயர் ரக நாய்கள் கடித்தால் அரசாங்கத்தின் அனுமதி தேவையில்லை என சட்டம் போடுங்கள் என்றார்.
நீதிமன்றம் அரசாங்கத்திடம் பதில் கேட்டது. எந்த நாய் கடித்தாலும் மக்களுக்கு துன்பம்தானே, பின் ஏன் உயர் ரக நாய்களுக்கு விலக்கு என்றது. அனைத்து வெறிப் பிடித்த நாய்களுக்கும் பொதுவான நீதி வேண்டும் என்றது.
அரசாங்கம் - "அய்யா நீங்கள் சொல்வது 100% சரி. இனி உயர் ரக நாய் மட்டுமில்லாது எந்த வெறிப்பிடித்த நாய் கடித்தாலும், அரசாங்க அனுமதி பெற வேண்டும் என்று நாங்கள் சட்டம் இயற்றுகிறோம். இதன் மூலம் நீதி அனைத்து வெறி பிடித்த நாய்களுக்கும் சமமாகும் என்றது."
வழக்கு தொடுத்த நபர் அடுத்த பிறவியிலாவது நான் ஒரு நாயாகவோ இல்லை நாய்களை காப்பாற்றும் அரசாங்கத்தின் அங்கமாகவோ இருக்க வேண்டும் என்று சொல்லி மாண்டார்.
இந்த கதையை எழுத தூண்டிய செய்தி -http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=194118

Tuesday, September 23, 2014

பைத்தியக்காரன்-3 - "என்னாச்சு?"

Share |

இப்படி நடப்பது இது 2வது முறை. முதல் முறையும் அதே இடத்தில்தான் நடந்தது. அன்று நடந்தது மாதிரியே பொதுக் கூட்டத்தின் முடிவில் ஏதோ ஒரு கேள்விக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கும்பொழுது பாதியில் அப்படி ஆனது. இன்றும் பாதி பதிலில் அப்படி ஆனது. மிகக் குறைந்த நொடிகளே அப்படி இருந்ததால் அதனை யோசிப்பதற்கான நேரம் என சொல்ல முடியாது.  யோசனை என்று இருந்திருந்தால் ‘வந்து..வந்து...’ என வாய் சொல்லிக்கொண்டேயிருந்திருக்கும். "நீங்கள் கேட்கும் கேள்வி எனக்கு புரிகிறது. நீங்கள் உங்கள் பேச்சில் ‘வந்து..’ என்ற சொல்லை பயன்படுத்துவதில்லை. அடுத்தவருக்கு அறிவுரையாகக் கூட இதனை நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்.”

“ஆம், உண்மைதான் ‘வந்து..வந்து’ என்று இழுப்பது ஒரு நல்ல பேச்சாளருக்கு அழகில்லை. அவர் பேச்சாளரே இல்லை. எப்படி நான் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் அனைத்திலும் பேச்சாளருக்கு அவர் பேசிய பிறகு கேள்வி-பதில் பகுதி இருக்கவேண்டுமோ அப்படித்தான் 'வந்து' பயன்படுத்துதல் கூடாது.”

ஆனால் அப்படி இழுக்காமல், எனக்கு நடந்தது மிக குறைந்த நொடிகள் மட்டும் இருந்ததில் ஒரு நன்மையும் இருந்தது. யாருக்கும் அது தெரியவில்லை. எனக்கு தெரிந்திருந்தாலும் புரியவில்லை.

தீவிரமாக யோசித்தேன். ஒற்றுமைகள் சரி. வேற்றுமைகள்..? முதல் தடவை நடந்தபோது இரவு 9 முதல் 10 மணிக்குள்....1 மணி நேரம்தான் பேச்சு. 9.30 தாண்டித்தான் நடந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் கேள்வி-பதில் நேரம்.

2வது தடவை 12 முதல் 12.30க்குள். அரை மணி நேரம்தான் பேச்சும், கேள்வி-பதிலும். அந்த இடைவெளியில் எப்பொழுது வேண்டுமானாலும் நடந்திருக்கலாம்.

முதல் தடவை முக்கிய பேச்சாளர்கள் பேசிய பின்தான் நான் கடைசியாக பேசினேன். 2வது தடவை என்னைத் தவிர முக்கிய பேச்சாளர் யாரும் இல்லை. இல்லை அப்படித்தான் சொல்லிக்கொள்கிறார்கள்.

அது இருக்கட்டும். ஏன் அப்படி ஆனது? ஒரு சிகரெட் பற்ற வைத்தால் புரிய வாய்ப்புள்ளதா? எனக்கு அப்படி தோன்றவில்லை. அதைத் தவிர சிகரெட் புகைத்தும் வெகு நாளாகிவிட்டது.

மேலோட்டமாக பார்த்தால் அதனை நினைத்து நான் சிரிக்கலாம். கூட்டத்தில் கூட இது குறித்து பேசி, அதில் சில நன்மைகள் உண்டு என்று நகைச்சுவைக்கு சொல்லி கைத்தட்டல் வாங்கலாம். ஆனால் தீவிரமாக யோசித்தால்? அது தொடர்ந்திருந்தால்? நினைத்துப்பார்க்கவே பயமாக உள்ளது. அது தொடர்ந்திருந்தால், எங்கு நினைப்பார்ப்பது? அத்தோடு எல்லாம் காலி. வெகுகாலம் இல்லை. சில நிமிடங்கள் தொடர்ந்திருந்தாலே என் ஆட்டம் முடிந்திருக்கும்.

இதனை பற்றி யாரிடமாவது சொல்லலாம் என்றால் ஒரு பக்கம் பயம். எங்கே ஏதாவது தர்கா கூட்டி சென்று தாயத்தோ இல்லை பகவதி அம்மன் கோயில் கூட்டி சென்று பேயோட்டுவார்களோ என்ற பயம்.

இன்னொரு பக்கம் நாம் நகைப்புக்கு உள்ளாவாமோ என்ற நினைப்பு – ‘நடிக்காதடா’ என்ற நகைப்பு.

அது எந்த மாதிரி நிலை..? கஞ்சா அடித்து திரிவார்களே அந்த மாதிரி நிலையா..? கஞ்சா அடித்தால் கடைசியாக என்ன செய்துகொண்டிருந்தார்களோ அதைதான் செய்வார்கள் என கேள்விப்பட்டுள்ளேன். கடைசியாக சிரித்துக்கொண்டிருந்தால் சிரிப்பு, அழுகை வந்தால் அழுகை. உங்களிடம் சொல்வதில் என்ன? – நான் ஒரு முறை மரிஜூணா புகைத்துள்ளேன். நண்பர்கள் வீட்டில் விருந்து. விருந்து முடித்து அனைவரும் சுற்றி அமர்ந்து ஒரு பெரிய சிகரெட் எடுத்து பத்தவைத்து, ஒரு இழு இழுத்து அதற்கு அடுத்தவரிடத்தில் ‘pass’ செய்தார்கள். நானும் சிகரெட் என்று நினைத்து உறிஞ்சினேன். அடுத்தவரிடம் கொடுத்துவிட்டு இது என்ன என கேட்டேன். அப்பொழுதுதான் சொன்னார்கள். எல்லாம் ஒரு அனுபவம் என பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அடுத்த சுற்றில் நான் பங்கேற்கவில்லை. ஆனால் அன்று கஞ்சா குடித்த யாருக்கும் எனக்கு நடந்தது மாதிரி ஒன்றும் நடக்கவில்லை.

பின் எனக்கு ஏன் இப்படி நடந்தது? நடந்தது கூட பரவாயில்லை. இனி இது நடக்காமல் இருக்கும் என்று என்ன நிச்சயம். ஒரு முறை மட்டும் நடந்திருந்தால் பரவாயில்லை. இரண்டாம் முறையும் இப்படி நடக்கும்போதுதான் இதற்கான தீர்வு என்ன என நான் யோசிக்கிறேன்.

இதற்கு மருத்துவம் ஒரு தீர்வாக அமையலாம். ஆனால் நான் அதனை எப்படி விளக்குவேன்? தேவையில்லாமல் வேறு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டுவிட்டால்? அதுவும் வீட்டுக்கு தெரியாமல் எப்படி?

வீட்டிற்கு தெரிந்தால் கூட சமாளித்துவிடலாம். பொதுவில் தெரிந்துவிட்டால்? பின் எனக்கான கைத்தட்டல்? எனக்கான பாராட்டு? இல்லை. நிச்சயம் தெரியக்கூடாது. கைத்தட்டல்கள் இல்லை என்றால் கூட சமாளித்துவிடலாம். கல்லடி கிடைத்தால்? நமக்கு ஏதாவது ‘பட்டம்’ கட்டிவிட்டால்? இல்லை இதனை சரி செய்யாமல் இன்னொரு கூட்டம் இல்லை. யாராவது கூப்பிட்டால் ஏதாவது பதில் சொல்லி சமாளிக்கலாம். அங்கு சென்று அடிபடுவதை விட இது எவ்வளவோ மேல்.

யோசித்து யோசித்து பின் மண்டை வலிப்பது போல் உள்ளது. கொஞ்சம் தலை பயிற்சி செய்ய வேண்டும். தலையை இந்த பக்கமும் அந்த பக்கமும் மாற்றி, மாற்றி சுற்ற வேண்டும். இப்படித்தான் ஒரு முறை ஒரு மருத்துவர் யாருக்கோ சொல்லிக்கொடுத்ததை பார்த்தேன். நானும் இதனை அடிக்கடி செய்து பார்த்துள்ளேன். தலைக்கு ஒரு பயிற்சி. கை வலித்தால் ஒரு பயிற்சி. முதுகு வலிக்கு ஒரு பயிற்சி. எல்லா பிரச்சனைக்கும் ஒரு பயிற்சி. நானே எனக்குள் சிரித்துக்கொண்டேன். ஒரு யோசனையும் பிறந்தது. இவ்வளவு பிரச்சனைகளுக்கு பயிற்சி இருக்கும்பொழுது நம் பிரச்சனைக்கு பயிற்சி இருக்காதா? ஆனால் அப்படி ஒரு பயிற்சி உண்டா இல்லையா என எப்படி தெரிந்துகொள்வது? இணையம்.

ஆனால் என்ன என்று தேடுவேன்? புரியாத ஒரு பிரச்சனையை எப்படி விளக்குவேன்? பெருவிரல் நகம் வைத்து பற்களை நற நற என தேய்த்தேன். சுற்றும், முற்றும் பார்த்தேன். ஒன்றும் இல்லை. பின் மண்டை வலி ஜாஸ்தியானது. பயிற்சி துவக்கம்.

இந்த பக்கம் 10 முறை. அந்த பக்கம் 10 முறை. தூக்கம் வருவதுபோல் உள்ளது. எழுந்தபின் இது குறித்து யோசிக்கலாம்.

அவர் தூங்கிப்போனார். அவரை சுற்றிலும் எண்ணற்ற காகிதங்கள். ஒரு காகிதத்தில் ஒரு முடிவற்ற கவிதை. இன்னொரு காகிதத்தில் ஒரு நாடகத்திற்கான ஆரம்ப மேடை அலங்காரங்கள். இன்னொன்று சினிமா ‘script’என்ற ஆரம்பம் மட்டும். இன்னொரு காகிதத்தில் இந்த கதையின் தொடக்கம்.......
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த கதைக்கு சம்பந்தமற்ற, மேலும் பைத்தியக்கார கதைகள் படிக்க :  பைத்தியக்காரன்-1 பைத்தியக்காரன்-2 

Thursday, October 7, 2010

மாங்கல்யம் தந்துனானே

Share |
"என்ன தேதி இன்னைக்கு..?"
கேள்வி கேட்டு சுவரின் மேல் மாட்டப்பட்டிருந்த நாட்காட்டி பார்த்தார். அது புது வருட தேதியிலேயே இருந்தது.


"ரொம்ப மேல இருக்கா அதான்...." என தலையை சொரிந்தார்.
அவர் சம்மனமிட்டு உட்கார்ந்து எழுதுவதற்கு ஏதுவாக அந்த பலகை அமைந்திருந்தது. அந்த பலகையின் முன் புறம் 'கோயில் கணக்கர்' என எழுதியிருந்தது. அந்த நாட்காட்டியின் பக்கத்திலேயே இருந்த ஒரு பச்சை நிற பலகை அர்ச்சனையில் ஆரம்பித்து மிருக காணிக்கை வரைக்கான அனுமதி சீட்டுக்கு எவ்வளவென பறைசாற்றியது.


பக்கத்தில் நின்றிருந்த எங்கள் அலுவலக நண்பர் குமார், "இன்னைக்கு தேதி...." என்று தொடங்கும்போது என் கண்கள் பார்த்த அவன், "சுபா, ஸ்ரீய கூட்டிட்டு முன்னாடி போ..அய்யர் எல்லா ஏற்பாட்டயும் செய்திட்டாரான்னு கொஞ்சம் பாரு. நாங்க ரஷீது வாங்கிட்டு வறோம்" என்றான்.


நான் அவன் கண்கள் பார்த்துக்கொண்டே அங்கிருந்து கிளம்பினேன். கொஞ்சமும் கலங்கமில்லாத கண்கள். இப்பொழுதும் பெரிதாய் சலனப்படவில்லை.


தூரத்தில் குமார் "தேதி 8/8/2008 சாமி" என்பது கேட்டது.


8/8/2007
அன்று பயங்கர மழை. ஆகஸ்ட் மாதம் இவ்வளவு மழை யாரும் எதிர்பார்க்காத ஒன்று. நான் வேலை பார்த்து வந்தது ஆவடி பக்கம் இருக்கும் ஒரு கால் செண்டரில். என்னுடய ஷிஃப்ட் நேரம் மாலை 4.30 முதல் இரவு 12.30 வரை. என்னுடைய விடுதி இருப்பது நுங்கம்பாக்கத்தில். விடுதியில் வந்து ஏற்றிக்கொள்ளவும், இறக்கிவிடவும் எங்கள் நிறுவனத்தில் ஒரு மாருதி வேன் ஏற்பாடு செய்திருந்தார்கள். நான் வேலைக்கு சேர்ந்து மூன்று ஆண்டுகள் ஆனதால் வேலை நேரம் நிறையவே பழகிவிட்டது. மாதம் ஒரு முறை அம்மாவையும், தங்கைகளையும் பார்க்க போகும்பொழுது கூட இந்த நேரம் வீட்டில் தூங்கி விடுவேன்.


என்னுடய விடுதிக்கு பக்கத்தில்தான் எங்கள் நிறுவனம் ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்தது. அப்பொழுதும் கார் சேவைகள் இருந்தாலும் நடந்தே விடுதிக்கு சென்று விடுவேன்.இரவு நேர அமைதி எனக்கு மிகப்பிடித்த ஒன்று.
சென்ற வருடம் இங்கு மாற்றியப்பின்தான் வேறு வழியில்லாமல் காரில் வருகிறேன். தூரத்தின் காரணமாக நாந்தான் முதல் ஆளாய் ஏற்றப்படுவேன், நாந்தான் கடைசியாக இறக்கிவிடப்படுவேன். என்னுடன் வரும் இருவர் இறங்கிய பிறகு, ஒரு அரை மணி நேரம் பயணம் செய்தால்தான் என்னுடய விடுதி வரும்.


பயண நேரத்தை உபயோகமாக செலவழிக்க சில நாவல்கள் வாசிக்க தொடங்கினேன். கி.ராவும், ஜெயகாந்தனும் என்னுடைய உலகத்திற்கு முழுமையாக வந்தனர். என்னுடய பயண நேரம் எனக்கு மிகச்சிறப்பாக அமைந்தது. கூட வரும் இருவரும் நிறைய பேசக் கூடியவர்கள் இல்லை என்றாலும், ஏதோ கொஞ்சம் பேசுவார்கள். அது இப்பொழுது அவர்களுக்குள்ளே நின்றுபோனது. வண்டி ஓட்டுனரை சரியாக கூட பார்த்ததில்லை. "போலாமா மேடம்", "குட் நைட் மேடம்" என்பதை தவிர வேறு எதும் பேசிக்கேட்டதில்லை.


அன்று மழை காரணமாக வண்டி கொஞ்சம் நேரம் கழித்தே வந்தது. வந்தபோதே ஓட்டுனர் நனைந்து இருந்தார். "போலாமா மேடம்?". வண்டியை மிக மெதுவாய்தான் ஓட்டி சென்றார். வண்டி திடீர் என நின்றது. "சாரி மேடம்...மழைனால படுத்துது..." வண்டியை விட்டு கீழே இறங்கினார். மாருதி வேனின் பின் பக்கம் வந்து ஏதோ தேடினார்.


அந்த இருவரில் ஒருத்தி, "மழைன்னு தெரியிதில்ல, வேற வண்டி எடுத்துட்டு வந்திருக்கலாம்ல..வந்து சேறானுங்க பாரு" என்றாள்.


'பாவம் அவரும் என்ன பன்னுவாரு..மழை இப்படி இருக்கும்னு அவருக்கு தெரியுமா' என நான் நினைத்துக்கொண்டேன். அவள் மீண்டும் ஏதும் பேசவில்லை.


ஒரு பத்து நிமிடத்தில் வண்டி கிளம்பியது. அவர்கள் இருவரும் இறங்கிய பிறகு வண்டி கிளம்பியது. மீண்டும் நின்றது. அவர்கள் அதை பார்த்தும் அவர்களின் விடுதிக்குள் சென்றனர்.


அவர் மீண்டும் இறங்கினார். மீண்டும் பின் வந்தார். ஏதோ தேடினார்.
"மேடம் உங்க சீட் கீழே ஒரு ஸ்க்ரெவ் ட்ரிவெர் இருக்கான்னு கொஞ்சம் பாருங்களேன். நான் கீழே குனிந்தேன். என் முதுகுக்கு பின் ஒரு பாரம் அழுத்தியது.


"ஏய்...என்ன செய்றீங்க..?"
"விட்றா..."
"அம்மா......கடவுளே...."
என் ஆடைகள் கிழிக்கப்பட்டன. அவனின் கைகள் எனக்கு அருவருப்பு உண்டு செய்தது.


அதன் பின் எப்படி நான் விடுதிக்கு வந்தேன் என்பதும், எப்படி நான் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தேன் என்பது இன்று வரை தெரியவில்லை.ஒவ்வொரு இரவும் நரகமாய் இருந்தது.


ஆனால் நானாகத்தான் காவல் துறைக்கு சென்றேன். அவனைப் பற்றி புகார் செய்தேன். அவன் சிறையில் அடைக்கப்பட்டான். காவல் துறை விசயத்தை நல்ல விதத்தில் கையாண்டது. இருந்தும் நான் பாதிக்கப்பட்டது ஊர் முழுக்க தெரிந்தது. என் சொந்த ஊருக்கு செல்வதிலேயே நிறைய சிக்கல் இருந்தது.


எங்களுக்கு தெரியாத சொந்தம் எல்லாம் வந்து நலம் விசாரித்து சென்றது.
"அவள சென்னயிலேயே தங்க சொல்லு... இங்க நீ தனியா இருக்க....ரெண்டு பொண்ணுங்கள வச்சிட்டு..."




நான் சென்னையிலேயே தங்கினேன். ஒரு மூன்று மாதம் கழித்து என் பழைய அலுவலகம் சென்றேன். நிறைய அனுதாபங்கள்.....மேலாளர் அழைத்தார்.


நலம் விசாரித்து முடித்து, "ஸ்ரீநிதி, சொல்றேன்னு தப்பா நெனசுக்காத, உனக்கு 3 மாசம் சம்பளம் தர்றோம். நீ வேலய விட்டு நின்னுக்கிரியா....உன்ன பாக்குற ஒவ்வொருத்தொரும் இந்த சூழ்நிலை அவ்வளவு பாதுகாப்பில்லாத மாதிரியே உணருவாங்க...அது எங்களுக்கு அவ்வளவு நல்லதில்லமா..."


வெளியே வந்தேன். என்னுடன் காரில் வரும் இருவரும் என்னுடய பழைய இருக்கையில் நின்றிருந்தனர்.
"ஒரு நிமிடம் எங்க கூட வர முடியும்மா?"

பெண்கள் கழிப்பறை கூட்டி சென்று இருவரும் என் காலில் விழுந்தனர். "அன்னைக்கு நாங்க மட்டும் கதவ சாத்தாம போயிருந்தா..எங்கள மன்னிச்சிடு ஸ்ரீ...."


அவர்களிடம் விடைபெற்றேன். நான் நிறுவனத்தை விட்டு வெளியே செல்வதை கேட்டு அவர்கள் முன்னர் வேலை செய்த பெங்களூர் கால் சென்டர் தொடர்புகள் தந்தனர்.


பெங்களூர்
இங்கு பகலில்தான் வேலை.என்னை பற்றி இங்கு யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. யாருடனும் எனக்கு பேசவும் பிடிக்கவில்லை. மதிய வேலைகளில் கூட நாவல் படித்துக்கொண்டே சாப்பிடுவேன்.


என்னுடைய அனுபவத்திற்கு எனக்கு டீம் லீட் வேலை கிடைத்தது. என்னுடய ப்ரொஜெக்ட் லீட்தான் முரளி. அலுவல் காரணமாக நான் பேச வேண்டிய குமார், ப்ரேம், சுபா ஆகிய நால்வரில் இவனிடம்தான் நான் அதிகம் பேச வேண்டும். எல்லோரிடத்திலும் சகஜமாய் பழகுவான். தனக்கு மேலே வேலை செய்பவர்கள் கீழே இருப்பவர்கள் என்ற எந்த பாரபட்சமும் இல்லாமல் எல்லோரிடத்திலும் ஒரே மாதிரியாய் பழகுவான். எந்த இக்கட்டான சூல்நிலையிலும் அவனால் மட்டும் சிரிக்க முடியும்.வேலை தவிர்த்து அவன் கேட்கும் எந்த கேள்விக்கும் நான் பதில் சொன்னதில்லை.


எங்கள் அலுவலகத்தில் யாருக்கு பிறந்தநாள் வந்தாலும் அதை வெகு சிறப்பாக கொண்டாடுவர். என்னுடய பிறந்தனாளும் வந்தது. வேலை முடித்து எனக்காக என் குழுவில் இருந்த மூவரும், முரளியும் ஒரு கேக் வாங்கி காத்திருக்க, நான் விடுதிக்கு கிளம்பிவிட்டேன்.


அடுத்த தினம் எல்லோரும் என்னை திட்ட முரளி வந்து ஒரு பரிசுப்பொருள் வைத்துவிட்டு சென்றான். ஜெயகாந்தனின், “சில நேரங்களில் சில மனிதர்கள்”


உள்ளே “இனிய பிறந்தனாள் வாழ்த்து” என எழுதி இருந்தது.


அவனுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். “மன்னிக்கவும். நன்றி”


உடனே என் இடத்திற்கு வந்தான்.
“எல்லாரும் அத கொண்டு வாங்க....”
கேக் வந்தது.


நீண்ட நாட்கள் கழித்து சிரித்தேன். “ஸ்ரீ...உங்களுக்கு இது கூட தெரியுமா..?”
“எது ..?!”
“அதான் இப்போ எதோ ஒன்னு வாயில செஞ்சீங்களே.”
மீண்டும் சிரித்தேன்.


எல்லோருக்கும் நன்றி சொன்னேன்.
“தோடா..நன்றிக்குதான் இவ்வளவும் செஞ்சோம்னு நினைக்கிறீங்களா..? உங்களுக்கு சின்ன மீனு போட்டு, பெரிய மீனு பிடிக்கிற வித்தை தெரியுமா..?”
“அப்டீனா..?”
“பசங்களா...கொஞ்சம் சொல்லுங்கப்பா..”
“என்ன ஸ்ரீ இது கூட தெரியாம..ஆமா நீங்க வெஜ்ஜா..இல்ல நான்-வெஜ்ஜா..?”


எல்லொரும் வெளியே சென்று சாப்பிட்டோம். திரும்ப வரும்பொழுது எல்லோருடய வீடு பற்றியும் விசாரித்தேன். நாந்தான் கடைசியாக இறங்குவேன் என தோன்றியது.


அந்த பயம் என்னை கவ்விக்கொண்டது. ‘என்ன செய்வேன்’? எல்லொரும் ஒவ்வொருவராக இறங்கினார்கள். வண்டி நிற்பது போல தோன்றினால் நாமும் கீழே இறங்கிவிடலாம்.


“என்ன ஸ்ரீ பலமான யோசனை..?”
“ம்ம்...ஒன்னுமில்ல முரளி..”
“இருட்டு பார்த்தா பயமா..?”
“அதெல்லாம் இல்ல முரளி”
“நான் உங்கள்ட ஒன்னு கேட்கலாமா..?”
“என்ன முரளி..?”
“நேரடியா விசயத்துக்கு வரேன். நான் உன்ன காதலிக்கிரேன் ஸ்ரீ....”
“என்ன சொன்னீங்க..?”


அதற்கு பிறகு இருவரும் ஒன்றுமே பேசவில்லை. என் விடுதி வந்தது.
முரளி பேசினான்....”அப்பா... இப்போ பயம் இல்லாம வந்தீங்களா..? “
“என்ன சொல்றீங்க முரளி?”
“எங்கடா இவன் நம்மள லவ் பண்றானோன்னுங்ற நெனப்புல, மத்ததெல்லாம் மறந்து போச்சா..?”
“அப்போ...?” சிரித்துவிட்டேன்.
என்னை கேட்காதவன் போல், “என்ன இதுக்காக அவசரபட்டு என் காதல சொல்ல வேண்டியதா போச்சு..என் பிறந்தநால்ள சொல்லலாம்னு நெனச்சிருந்தேன். உன் பிறந்தநாளுக்கு சொல்லிட்டேன்.”
நான் அவனை முறைத்தேன்.
“நாளைக்கு ஆபிஸ்ல பாக்கலாமா..?” கார் பறந்தது.


அடுத்த தினம்.
அவன் இடத்திற்கு சென்றேன்.
“உங்கள்ட கொஞ்சம் பேசனும்..”


அலுவலக உணவகம் சென்றோம்.
நான் தொடங்குவதரற்குள் அவன், “உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா..? நேத்துதான் காதல சொன்னென், கனவுல வந்து எப்ப கல்யாணத்த வச்சிக்கலாம்னு இப்டியா தொல்ல பன்னுவ..? எனக்கு கொஞ்சம் டயம் குடும்மா..”
நான் மீண்டும் முறைத்தேன்.
“இப்ப என்னடான்னா ஆபிஷ் வந்த உடனே இங்க கூட்டிட்டு வர...காதலன் மேல ஆசை இருக்கலாம்..அதுக்காக இப்டியா..?”
“முரளி...உங்கள்ட நான் கொஞ்சம் சீரியசா பேசனும்..”
“ம்ம்..சொல்லு ஸ்ரீ..”
எல்லாம் சொன்னென்.


“எப்போ கல்யாணம் வச்சுக்கலாம்..?”
“என்ன முரளி....நான் சொன்னதெல்லாம் கேட்டப்புறம்....”
“உனக்கு ஆட்சேபனை இல்லன்னா அதே ஆகஸ்ட் 8 வச்சிக்கலாமா..?”
“முரளி எல்லாம் புரிஞ்சுதான் பேசுறியா..?”
“என்ன தேவயில்லாம சீரியசான ஆளா ஆக்குற நீ......சரி நீ உடம்பால கெட்டுபொய்ட்ட....உன் மனசு உண்டதானே இருக்கு...அத யாரும் ஒன்னும் பண்ணிடலயே..? எனக்கு உன் உடம்பு வேணாம்...உன் மனச மட்டும் கொடு.. சரியா..? இன்னும் ஒன்னு சொல்லவா...எனக்கு இந்த விசயம் எல்லாம் எப்பவோ தெரியும்."
எனக்கு பேரதிர்ச்சியாய் இருந்தது.
"உன்ன பார்த்த உடனே நான் உன்ன காதலிக்க ஆரம்பிச்சுட்டேன். சரி மொதல்ல உங்க வீட்ல போய் பேசிடுவோம்னு உன் பைல புரட்டுனேன். உன் அட்ரஸ் எடுத்து உங்க வீட்டுக்கு போனேன். உன் தையிரத்த, தன்னம்பிக்கைய தெரிஞ்சுக்கிட்டேன். அப்பதான் உன்ன நிறைய காதலிக்க ஆரம்பிச்சேன்.எத்தன பேருக்கு வரும் இந்த துணிச்சல்...நேத்து உன் பயம் போக நான் ஒன்னு சொன்னேன்..நீ கார் இறங்குர வரை பழச பத்தி நெனைக்கல....அதே மாதிரி அந்த சம்பவம் முழுக்க நீ மறக்கனும்னுதான் கல்யாணத்த கூட அதே நாள்ல வச்சிக்கலாம்மன்னு கேட்டேன்”


என் கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்தது.




முரளி கோவிலுக்குள் வந்தான். அய்யர் எல்லாம் தயார் செய்துவைத்திருந்தார்.
முரளி என்னிடம், “என்ன ஸ்ரீ தேதி நெனச்சு கண் கலங்குரியா..?”
“ஆமா....ஆனா பழைய தேதி நென்னசில்ல, புதுசு நெனச்சு...”
முரளி முகத்தில் ஆனந்த ரேகைகள்.


அய்யர், “தம்பி, வீட்ல போய் காதல் பண்ணலாம். இப்போ தாலிய கட்டுடா என்றார். மாங்கல்யம் தந்துனானே இருக்கா உங்க போன்ல”
ப்ரேம், “இருக்கு சாமி என்று....ரஹ்மானின் ‘மாங்கல்யம் தந்துனானே’ அலைபேசியில் போட்டான்.

Monday, August 31, 2009

ராஜேஷும் பில் கேட்சும் (கதை - 13)

Share |
"டேய் ஜெகதீஸ் எங்க இருக்க..?"

ராஜேஷ் கூப்பிட்ட தொனியிலே ஒரு பதட்டம் இருந்தது. பல தமிழ் திரைப்படங்களில் காட்டப்படுவது போல, அப்பொழுதே நான் சாப்பிட அமர்ந்து முதல் உருண்டையை கையில் எடுத்திருந்தேன். முதல் உருண்டையை என்பதை விட முதல் சிக்கன் பீஸ் என்று சொல்வதே சாலச் சிறந்தது.

"வீட்லதாண்டா...ஏன்..? வந்து உன்ன பிக்-அப் பண்ணனுமா..?"

"பிக்-அப்பா....டேய் அப்ளிகேசன் பாரம் பில்-அப் பண்ணனும்டா...உடனே வா..."
அப்ளிகேசன் பாரம்?!.....என்னால் அதிர்ச்சியை தாங்க முடியவில்லை.

"அப்போ மொத ரவுண்டு முடிஞ்சதா..?"

"முடிஞ்சதுடா.....ப்ளீஸ் டா...உடனே வா....சீக்கிரம் கூப்ட்ருவாங்க ..."

அப்ளிகேசன் பாரம் பில்-அப் செய்வதை விட ராஜேஷ் தேர்வாகிவிட்டான் என்ற பேரதிர்ச்சியிலே கைகளை அளம்பினேன். போன இரண்டு வாரமும் இதே போல் சாப்பிடுவதற்கு முன்போ இல்லை , சாப்பிடும் வேலையிலோ தொலைபேசி அழைப்பு வந்து கிளம்பியது அம்மா திட்டும்போதுதான் தெரிந்தது. சென்ற ஜென்மத்தில் இதை விட அதிக கோழிகளை கொன்று குவித்திருப்பேனோ..?

நான் என்னுடைய இரு சக்கர வாகனத்தில் கிளம்பினேன். நான் அங்கு போய் சேர்வதற்குள் கொசுவத்தியை சுற்றுவதே கதை படிப்பவர்களுக்கு நலம்.


ராஜேஷ். என் கல்லூரி நண்பன். பார்ப்பதற்கு பீமன் போல (மகாபாரத பீமன் - தமிழ் படம் அல்ல) காட்சி அளிப்பான். அவனுடைய உடல் வாகினாலும், அவனுடைய அப்பா அரிசி மண்டி வைத்திருந்ததாலும் அவனை எல்லோரும் "அரிசி மூட்டை" என செல்லமாக அழைப்பர்.

நாங்கள் படித்தது மெக்கானிக்கல் என்றாலும் எங்களுடைய இரண்டாம் ஆண்டு பாடத்தில் C++ என்னும் கணிப்பொறி சார்ந்த ஒரு பாடமும் இருந்தது. அதுவரை கணிப்பொறியை கண்ணாடி வழியாக மட்டுமே பார்த்த நாங்கள் அதனுடன் நெருங்கி பழக வேண்டிய இக்கட்டு ஏற்பட்டது. எல்லோரும் தட்டு தடுமாறி அந்த பாடத்தில் தேர்ச்சி பெற்றோம். ஆனால் ராஜேஷ் தேர்வாக கொஞ்சம் நேரம் பிடித்தது. மூன்றாம் பருவத்தில் 3 மதிப்பெண்ணில் தொடங்கி எட்டாம் மற்றும் இறுதி பருவத்தில் ஒரு வழியாக தேர்ச்சி அடைந்தான்.

கல்லூரி முடியும்போது ராஜேஷின் ஆட்டோகிராப் புத்தகத்தில் எல்லோரும் வைத்த விண்ணப்பம், வேண்டுகோள், ஆணை எல்லாம் ஒன்றே ஒன்றுதான் - "தயவு பண்ணி ஈமெயில் id கிரியேட் பண்ண முயற்சி பண்ணாத. எல்லோரும் எல்லோரோடயும் டச்-ல இருக்க மெயில் id வெச்சுக்குவாங்க. அதே ஆசை உனக்கும் வரலாம். ஆனா அப்பிடி ஒரு ஆசை இந்த கணிப்பொறி துறை முழுக்க பாதிக்க கூடிய வாய்ப்பு இருக்கு. நீ எப்ப வேணும்னாலும் எங்களுக்கு கடுதாசி எழுதலாம்." என்பதோடு எல்லோரும் அவர்களின் முகவரியை அவனுக்கு மட்டும் கொடுத்தார்கள்.

இன்று வரை யாரேனும் எங்கே இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள நாங்கள் ராஜேஷிடம் அவர்களுக்கு கடிதம் எழுத சொல்லுவோம். அவன் எழுதினால் யார் எங்கு இருந்தாலும் உடனடி பதில் வரும். அவர்களால் முடியவில்லை என்றால், நண்பர்கள் அவர்களின் பெற்றோர்கள் மூலியமாக கடிதம் எழுதுவர்.

ஆனால் விதி வலியதல்லவா..?? ராஜேஷின் அப்பா அவன் படிப்பு முடிந்தவுடன் ஒரு பெருஞ்செயல் செய்தார். அவருடைய நண்பரின் ஆலோசனைப்படி, அவனை ஒரு கம்ப்யூட்டர் கோர்ஸில் சேர்த்துவிட்டார். ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டிவிட்டால் போதும், அந்த கோர்ஸில் தற்பொழுது வேலை வாங்கி தரக்கூடிய பாடங்கள் எடுத்து, அவர்களே குறைந்தபட்சம் 1 வருடத்திற்கு வேலையும் தருவார்கள்.அதற்கான மாத சம்பளம் 6,000 ரூபாய் தரப்படும்.

'போட்ட காச இப்டி எடுத்தாதான் உண்டு' என்ற அவரின் வியாபார தந்திரம் எங்களை மெய் சிலிர்க்க வைத்தாலும், இதனால் கணிப்பொறி துறைக்கு ஏற்பட போகும் தீங்கை எங்களால் சிந்திக்கக்கூட முடியவில்லை.

ராஜேஷ் அங்கு சேர்ந்தான். இவனை போலவே இன்னும் சிலர் சேர்ந்தனர் போல. அங்கு நடக்கும் பரிட்சைகளில் இவனையும் சேர்த்து ஒரு ஆறு பேர் குறைந்த மதிப்பெண்ணே வாங்கி வந்தனர்.

"கவலைபடாதடா, எல்லாத்தையும் உங்க அப்பா பார்த்துக்குவாரு.."

"போடா...செருப்ப கழட்டி அடிப்பாரு....இவ்ளோ காசு போட்டுட்டு, சரியா மார்க் வங்காளன்னா..."

"அந்த எடத்துலதான் உங்க அப்பாவ நீ சரியாய் புரிஞ்சிக்கல. இப்போ இவனுங்க என்ன சொல்லி இருக்காங்க.....ஒரு வருசத்துக்கு வேல உண்டுன்னு சொல்லி இருக்காங்க இல்லையா..."

"ஆமாண்டா..ஆனா இப்போ சரியாய் மார்க் வாங்காட்டி நல்ல ப்ராஜெக்ட் கொடுக்க மாட்டங்க..நான் அப்புறம் எப்டி ஒரு வருஷம் கழிச்சு நல்ல கம்பெனி போறது..."

"பெர்பெக்ட்" அதுவரை ஏதோ சிந்தித்து கொண்டிருந்த இன்னொரு நண்பன்.

"என்னடா பெர்பெக்ட்..?"

"உங்க அப்பாக்கு இது தெரியுமா...??"

"ம்ம்.."

"பார்த்தியா....இப்போ உன்ன நேரடியா அரிசி மண்டிக்கு கூப்பிட்டா போவியா..?போகமாட்ட ..ஆனா ஒரு வருஷம் கழிச்சு அரிசி மண்டிக்குதான் போவ.....இதுக்கு பேர்தான் பெர்பெக்ட் ப்லன்னிங்-நு சொல்றது..."

ஒரு வழியாக படிப்பு முடிந்து ராஜேஷ் வேலை தொடங்கினான். இவனுடன் படித்தவர்களில் சிலருக்கு வேறு இடங்களில் படிப்பு முடித்தவுடனேயே வேலை கிடைத்தது. சிலர் மலேசியா எல்லாம் சென்றார்கள்.

ஒரு வருட வேலையும் முடிந்து இவனையும் சேர்த்து நால்வர் மட்டுமே வேறு ஏதேனும் வேலை கிடைக்காமல் இருந்தனர். கம்பெனி என்ன நினைத்தோ ராஜேஷை இன்னொரு வருடம் கூட தேவைப்பட்டால் வேலையை தொடரலாம் என்றனர்.

கம்பெனி முதலாளி செய்த பாவத்துக்கு பிராயச்சித்தம் தேடினார் போல.ராஜேஷ் மிக்க மகிழ்ச்சி அடைந்தான்.

நானும், என் நண்பர்களும் ராஜேஷைவிட நிறையவே ஊதியம் வாங்கினோம். நானும் ஒரு புகழ் பெற்ற மென்பொருள் நிறுவனத்தில்தான் வேலை பார்த்து வந்தேன். நாங்கள் அனைவரும் அவனை வேறு நிறுவனத்திற்கு மாறுமாறு வற்புறுத்தினோம். அவன் ஒவ்வொரு முறையும், "கொஞ்சம் படிச்சிகிறேண்டா. இண்டர்வியுலே கேள்வி எல்லாம் கேட்பாங்க இல்ல.." என்பான்.

எங்களில் ஒரு நண்பன், உண்மையான அக்கறையுடன், "உனக்கு winamp ல பாட்டு போட தெரியுமில்ல..?"

"ம்ம்"

"மீடியா பிளேயர்ல படம் ..?"

"ம்ம்.."

"அது போதும். விடு பார்த்துக்கலாம்."

"ஆனா நான் வேல பாக்குறது டாட்.நெட் டா. அதுலதான் கேள்வி கேட்பாங்க."

"விட்ரா. winamp தெரியுது, டாட்.நெட் தெரியாமலா இருக்கும்..?" .

நான் அவனை இடைமறித்து, "என்னடா இன்னும் படிக்கிற...நீ போற மொத இண்டர்வியுவே கிளியர் பண்ணனும்னு அவசியம் இல்லே...மொதல்ல முயற்சி பண்ணு...அப்புறம் பார்ப்போம் " என்று சொல்லி ஒரு வழியாக இரண்டாம் ஆண்டு முடிவில் நான் என் நிறுவனத்திலேயே அவனை பரிந்துரை செய்தேன்.

அதற்கான நேர்முகம்தான் இன்று. கொசுவத்தியை அணைத்துவிடலாம்.

நான் என் நிறுவனத்தின் உள்ளே சென்றேன். இரண்டாம் மாடியில் ராஜேஷ் அமர்ந்து இருந்தான். "என்னடா ஆச்சு..?"

"இந்த பாரம் மொதல்ல எப்பிடி பில்-அப் பண்றதுன்னு சொல்டா..நானே கொஞ்சம் பண்ண ஆரம்பிச்சிட்டேன்."

"அதுக்குள்ள மொத ரவுண்டு முடிஞ்சதா..?"

தொழில் சார்ந்த கேள்விகள் முதல் சுற்றில் இருக்கும். அதில் தேர்வு பெற்றவர்கள் மட்டுமே இந்த விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும். அடுத்தது மனித வள சுற்று. அதில் பொதுவாக கொஞ்சம் பேசி, மனித வள பணியாளரிடம் சம்பள பேரம் பேச வேண்டும்.

"டேய்...நான் பில்-அப் பண்றேன். மொதல்ல என்ன நடந்ததுன்னு சொல்லு.."

"சொல்றேன்-டா.....இத முடிச்சிட்டு வந்திடறேன்.."

விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்கிறேன் என்று அங்கு அங்கு அடித்து திருத்தியிருந்தான், அவன் பெயர் உட்பட. "டேய், இதென்ன உன்னோட கணக்கு பரீட்சைத் தாளா..உன் பெயரக்கூட உனக்கு சரியா எழுத தெரியாதா..?"

"இல்லடா.... மொதல்ல இனிசியல் தானே போடனும்னு போட்டேன். அப்புறம்தான் பச்ட் நேம், லாஸ்ட் நேம் ..." தலையை சொரிந்தான்.

"HR ரவுண்டு-ல அவ்வளவு சுலபமா வேலை போகாது....நான் இத பார்த்ததுக்கு அப்புறம் அத மாத்திக்கனும்னு தோணுது..."

"என்னடா சொல்ற..?"

"அத விடு. உனக்கு என்ன பதில் வேணும்னு கேளு. நான் சொல்றேன்."

தொடங்கினான்.
"காரியார் கோலா..அப்டீனா..? "என்னடா என் strength..?"

"ம்ம்..ஒரே நேரத்துல 40 இட்லி சாப்பிடுவேன்னு போடு.."

"டேய்...ப்ளீஸ் டா.." நான் ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாக பதில் சொன்னேன்.

"டேய், எவ்ளோடா சம்பளம் கேட்கலாம்..?"

"கூச்சமே படறதில்ல......கேளு ஒரு 5 லட்ச ரூவா கேளு..."

"ரொம்ப ஜாச்தியிள்ள....?"

"நீ பாக்குற வேலைக்கு நியாயப்படி நீதான் அவங்களுக்கு கொடுக்கணும்.....பரவா இல்ல....கேட்டுப்பாரு.."

உள்ளே போய் வந்தான். "என்னடா இவன், 4.75 தான் கொடுப்பேன்னு சொல்லிட்டான்."

"அட நாயே...உண்மையிலே உனக்கு வேல கெடைச்சிருச்சா..?"

"ஆமா ஜகதீசு உனக்கு எவ்ளோ சம்பளம் இங்க....என்னோட ஜாஸ்தியா..." நக்கல் கலந்த தொனியில் கேட்டான்.

யோசித்து பார்த்தால் எனக்கு இதை விட குறைவுதான் என்பது தெரிந்தது.

"ஒழுங்கு மரியாதையா மொத ரவுண்டு என்ன நடந்துச்சுன்னு சொல்லு..."

"இதுதான் நடந்தது...நான் மொதல்ல உள்ளே போனேன். அவரு டாட்.நெட் கேள்வி ஒன்னு கேட்டாரு. நான் சரியாய் தப்பான்ன பதில் சொன்னேன். அவரு சரிபன்னாரு. இன்னொரு கேள்வி கேட்டாரு, நாமதான் தப்பா சொல்றேமேன்னு, இந்த தடவ சொல்லவே இல்லை. அவரு என்ன தயவு பண்ணி வெளிய போக சொல்லிட்டார். நான் வந்துட்டேன்."

"என்னடா சொல்ற...அப்புறம் எப்டி ரெண்டாவது ரவுண்டு.."

"இருடா கத இன்னும் முடியல....எனக்கு அடுத்து இன்னொருத்தன் போனான். நானாவது 5 நிமிஷம் இருந்தேன். அவன் சரியா 3 நிமிஷம். வெளிய வந்துட்டான்.அவனே பார்த்து நான் சிரிச்சிட்டு இருக்கும்போதே அவரே வெளிய வந்தார். என்ட்ட எங்க மத்தவங்கன்னு கேட்டாரு."

"ம்ம்....எங்க போயிருந்தாங்க அவங்க எல்லாம்..? ஒரு நிமிஷம் இரு. இதே மாடிலதான் உனக்கு மொத ரவுண்டு நடந்ததா..?"

"மத்தவங்களா.....வந்தது மொத்தம் ரெண்டுபேர்தாண்டா..."

"என்னது...?"

"ஆமா....இதே அதிர்ச்சிதான் அவரு முகத்துலையும். சரின்னு நான் கிளம்பினேன்...என்ன திரும்ப கூப்பிட்டு மறுபடியும் உள்ள வர சொன்னாரு. மறுபடியும் கேள்வி கேட்டாரு. அவரே பதிலும் சொன்னாரு. இப்படியே ஒரு பத்து கேள்வி. பத்து பதில். இதெல்லாம் படிக்க எவ்ளோ நாள் ஆகும்னு கேட்டாரு. நான் ஒரு 3 வாரம் சொன்னேன்."

"என்ன சொன்ன..? அந்த கேள்வியாவது உனக்கு ஞாபகம் இருக்கா..?"

"அவர பாக்க பாவமா இருந்துச்சுடா...அதான் சொன்னேன்."

"அட நாசமா போனவனே...."

"சரிடா, அதான் வேல கிடைச்சிடுச்சே , உனக்கு ட்ரீட் வேணுமா..?"

"இந்த கருமத்த கேட்டபுரம் கொஞ்சம் விஷம் இருந்தா வாங்கிக் கொடு.."


இதெல்லாம் நடந்து ஒரு வருடம் ஆனது. என்னுடைய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த ராஜேஷ் ஒரு வருடம் பல பல ப்ராஜெக்ட்ஸ் மாற்றப்பட்டான். கடைசியாக நேற்று மைக்ரோசாப்ட் ப்ராஜெக்ட் ஒன்றில் சேர்ந்திருப்பதாக சொன்னான். இன்று அதிகாலை செய்தித்தாள் எடுத்தேன். முதல் பக்கத்தில் இருந்த செய்தி இது: "Bill Gates retired today".

Monday, July 20, 2009

பைத்தியக்காரன்-2 (கதை - 12)

Share |
முன் குறிப்பு : என்னுடைய இந்த கதைக்கும், முந்தைய பைத்தியக்காரன்-1 க்கும் சில சம்பந்தகள் உள்ளது. முதல் கதையை படித்தால்தான் இது புரியும் என்ற கட்டாயம் இல்லை.


ரு வழியாக எனக்கு வேலை கிடைத்தது. நான் தொடர்ந்து என் சித்தி வீட்டிலேயே தங்கி இருந்தேன். முடிந்தவரை என் சித்திக்கும், என் தங்கைக்கும் உதவியாக இருந்தேன்.

ஒரு சனிக்கிழமை மாலை என்னுடன் வேலை செய்யும் உயர் அலுவலகர் வீட்டிற்கு புறப்பட்டு கொண்டிருந்தேன். அவருடைய பெண் குழந்தைக்கு இன்று பிறந்தநாள்.வெளியில் மழை தூவிக்கொண்டிருந்தது.

என்னுடைய இரு சக்கர வாகனம் மழையில் நின்றிருந்ததால் அதனை உயிர்ப்பிப்பது கொஞ்சம் சிரமமாய் இருந்தது. மீண்டும் மீண்டும் உதைந்தேன்.வண்டியில் அமர்ந்தவாறே கீழே குனிந்து ஸ்பார்க்-ப்ளக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். நிமிர்ந்து பார்க்கும்பொழுது எனக்கு மிக நெருக்கத்தில் ஒரு சிறுவன் நிற்க, கொஞ்சம் தூக்கிவாரி போட்டது.

என்னுடைய பயம் தெளியும் முன்னரே, "அங்கிள், ஒரு 2 ருபீஸ் இருக்குமா அங்கிள் " என்றான். அவனுடைய உடலில் ஒரு நடுக்கம் இருந்தது

என்னுடைய பயம் இப்பொழுது கோபமாக மாறி இருந்தது. அவனுக்கு ஒரு 15,16 வயது இருக்கலாம். மேல்சட்டையும், ஷார்ட்சும் அணிந்திருந்தான். அவனுடைய முகத்தில் கொஞ்சம் பயம் இருந்தது. இப்பொழுது என்னுடைய முக மாற்றம் கண்டு இன்னும் கொஞ்சம் பயந்து போனான்.

"உன் வீடு எதுடா..?" கோபமாக கேட்டேன்.
"இல்ல அங்கிள், வேணாம் அங்கிள், நான் போயிடறேன்.."
"உன் வீடு எது சொல்லு..? உன் பெயர் என்ன..?"
"இல்ல அங்கிள்....." சொல்லிக்கொண்டே ஓட்டமும், நடையுமாக அங்கிருந்து கிளம்பினான்.
"நில்லு..."
என்னுடைய கோபம் குறைந்து அவனுடைய செய்கை கண்டு அவன் மீது பரிதாபம் வந்தது. அவனை தொடர்ந்தேன்.
"நில்லு தம்பி..."

தூறலுக்கு ஒதுங்கி நின்ற எங்கள் குடியிருப்புகளின் காவலாளி என்னை நோக்கி வேகமாக வந்தார்.
"என்ன சார்...என்ன ஆச்சு..?"
"ஒன்னும் இல்லங்க....." நான் அவனை தொடர முயற்சித்தேன்.
அவன் எங்களது குடியிருப்பில் என்னுடைய வலது பக்க வீதியில் சென்று மறைந்தான்.
"சார், என்ன ஆச்சு..?"
"ஒன்னும் இல்ல வாட்ச்மன், அந்த பையன் நம்ம காலனிதானா..?"
"நம்ம காலனிதான் சார்..ஏன் சார்..? எதாவது பிரச்சனை பண்ணிட்டானா..?"
"அதெல்லாம் ஒன்னும் இல்ல....."

தூறல் முழுமையாக நின்றது. வண்டியும் உயிர்ப்பெற்றது.வாட்ச்மேனிடம் ஒரு 10 ரூபாய் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.

என்னுடைய உயர் பணியாளருக்கு ஒரு பையன் மற்றும் ஒரு பெண். போகும் வழியில் அவளுக்கு ஒரு பிறந்தநாள் பரிசு வாங்கிக்கொண்டேன்.

வீடு முழுக்க அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அந்த அறையின் நடுவில் ஒரு மேசை வைக்கப்பட்டு அதன் மீது ஒரு சிகப்பு நிற பட்டு போர்வை போர்த்தப்பட்டு இருந்தது. அதற்கு பின்னே இருந்த சுவற்றில் , "இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சிவானி" என்ற வார்த்தைகள் காட்சி அளித்தன.

என்னுடைய உயர் பணியாளர் என்னை அவர்களின் குடும்பத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார். அவருடைய பையனை பார்த்தவுடன் எனக்கு என் வீட்டருகே சந்தித்த பையனின் நினைவு வந்தது. "என்னவாக இருக்கும் அவனின் பிரச்சனை..?"

பிறந்தநாள் விழா முடிந்து வீட்டிற்கு வந்தேன். மீண்டும் மீண்டும் அவன் நினைவுக்கு வந்தான். தூக்கம் பிடிக்கவில்லை. நாளையும் விடுமுறைதான்.

வீட்டை விட்டு வெளியே வந்தேன். அவன் சென்ற திசை நோக்கி நடந்தேன். மாலை நேர காவலாளி மாறி இப்பொழுது இரவு நேர காவலாளி வந்திருந்தார். புகைப்பிடித்துக்கொண்டிருந்தார். இவர் கொஞ்சம் வயது மூத்தவர். நிறைய பேர் இவரை அய்யா என்றுதான் அழைப்பார்கள்.

"என்ன தம்பி ..? ஏதாவது வேணுமா..?"
"இல்லங்க அய்யா....சும்மா தூக்கம் வரல..."
"ஆமா ராசு ஏதாவது பிரச்சனை பண்ணிட்டான உங்ககிட்ட..? நம்ம ஏழுமலை சொன்னான்....நீங்க அவன தொரத்திட்டே போனீங்கன்னு.."
அவன் பெயர் வரதராஜு.
"இல்லங்க அய்யா. பிரச்சனை ஏதும் பண்ணல.....ஆமா அவன் வீடு எது..?"
"அதோ அங்க ஒரு போஸ்ட் கம்பம் தெரியுதில்ல, அதுல இருந்து மூணாவது வீடு, ரெண்டாவது மாடி...." "ஹ்ம்ம்.." என்ற ஒரு பேரு மூச்சுக்கு பின், அவரே தொடர்ந்தார்.
"அவனுக்கு ஏழு வயசு இருக்கும்போது அவங்க குடும்பம் இங்க வந்துச்சு.....எப்ப பார்த்தாலும் அவங்க அப்பன்ட்ட அடி, ஒத வாங்கிட்டே இருப்பான். இப்ப இந்த மாதிரி ஆயிட்டான்."
"எந்த மாதிரி...?"

வரதராஜுவிற்கு போதை பழக்கம் உள்ளது என்றும், அவன் பெற்றோர் அதனால்தான் அவனை வீட்டிற்குள்ளேயே அடைத்துவைக்கிறார்கள் என்றும் தெரிந்துகொண்டேன்.
அதற்காகத்தான் என்னிடம் ரூபாயும் கேட்டிருப்பான் போல.

"அவன பார்த்தா எனக்கு போதை பிரச்சனை மட்டும் தெரியல அய்யா...வேற ஏதாவது பிரச்சனை இருக்குமோன்னு தோணுது. அவங்க அப்பா அம்மாவ நெனச்சாதான் கஷ்டமா இருக்கு.."
"என்ன பைத்தியக்காரன் மாதிரி இருக்கானா..?" அண்ணாந்து பார்த்து ஒரு வறட்டு சிரிப்பு சிரித்தார். "அட போங்க தம்பி, அப்பா அம்மா....அவன் அப்பாதான் இது எல்லாத்துக்கும் காரணம்.."
"என்ன சொல்றீங்க..?"

வரதராஜு பிறந்தது அமெரிக்காவில். அவனுடைய பெற்றோர் இருவரும் அங்கு வேலை பார்த்து வந்தவர்கள். தங்களுடைய வேலை பளுவுக்கு இடையிலும் அவனுக்கு செய்ய வேண்டிய எல்லாவற்றையும் சரியாகவே செய்து வந்தனர். அவனின் அப்பா அடிக்கடி மற்ற ஊர்களுக்கும் அழைவதால் அவனுக்கான அன்பு கொஞ்சம் கம்மியாகவே கிடைத்துவந்தது. படிப்பில் கெட்டியாக இருந்தாலும் வரதராஜு ஒரு சுட்டி பிள்ளையாகவே வளர்ந்து வந்தான். அவனின் சக மாணவர்களை அடிப்பது, அமெரிக்க குழந்தைகளை கேலி செய்வது அவனின் பொழுதுபோக்கு.

தனக்கு கிடைக்கும் கொஞ்ச நேரத்திலும் தன் குழந்தையை பற்றி அவர் கேட்ட விஷயங்கள் அவருக்கு கோபத்தையே வெளிப்படுத்தியது. முதலில் திட்டிப் பார்த்த அவர் ஒரு நாள் அடித்தேவிட்டார். இதுவே கொஞ்ச காலத்தில் வழக்கமாகிப்போனது.

அவனுக்கு ஒரு ஏழு வயது இருக்கும். அவன் செய்த ஒரு சுட்டித் தனத்துக்கு அவனை இவர் அடிக்க, வரதராஜு அமெரிக்க காவல்துறைக்கு தொலைப்பேசினான்.
வெளியூர் செல்ல காத்திருந்த அவனின் தந்தையை ஒரு விமான நிலையத்தில் வைத்து காவல் துறை கண்டித்தது. பிள்ளைகளிடம் எப்படி அன்பாக நடந்துகொள்ள வேண்டும் என்று புத்தி சொல்லி சென்றது.

வீட்டுக்கு வந்தவர் அனைவரும் ஒரு வாரத்தில் இந்தியா கிளம்புவதாக அறிவித்தார். விஷயம் தெரிந்த அவள் மனைவி வரதராஜுவை அடிக்க சென்றால். அதை அவர் தடுத்துவிட்டார். மன்னிப்பு கேட்ட வரதராஜுவையும் அவர் கண்டுக்கொள்ளவில்லை.

விமானம் சென்னையில் தரை இறங்கியது. வெளியே வந்தவுடன், தான் மாட்டி இருந்த பெல்ட் அவிழ்த்து தூக்கத்தில் தடுமாறிக்கொண்டிருந்த சிறுவனை............
"இப்ப கூப்பிடறா, எவன் வர்றான்னு பாக்குறேன்.." என்றார்.

எனக்கு கண்ணீர் முட்டியது.

அதற்குப் பிறகு அவன் இங்கு ஒரு பள்ளியில் சேர்க்கப்பட்டான். அமெரிக்காவில் வாங்கிய அதே அளவு பணம் தேவைப்பட்டதால் கணவனும் மனைவியும் நிறைய நேரம் உழைத்தனர். வரதராஜு அனாதையாக்கப்பட்டான். எப்பொழுதும் ஒரு அச்சத்தோடு வாழ்ந்துவந்தான். பத்தாம் வகுப்பு படிக்கும்போது அவனுக்கு போதை பழக்கம் வந்தது.

தெரிந்த அவன் அப்பா, "என்னைக்கு பெத்த அப்பன போலீஸ்ல புடிச்சு கொடுத்துச்சோ, அன்னைக்கே இதெல்லாம் உரப்படாதுன்னு தெரியும்" என்றார்.

"அப்ப இருந்து ராச வீட்டுக்குள்ள வச்சு பூட்டிட்டு போய்டுவாங்க."

அவனுடைய வீடு எதுவென விசாரித்து அவன் வீட்டின் பக்கம் சென்றேன். அவன் அந்த ஜன்னலின் வழியே வீதியை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான்.

Thursday, June 25, 2009

கடிதம் (கதை - 11)

Share |
                                உ
திருச்சி                                   மதுரை
      அன்புள்ள சந்தோஷிற்கு நயினா அம்மா எழுதிக்கொண்டது. இங்கு யாபேர்களும் நலம். இதுபோல அங்கு நீ நலமாக இருக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.மேலும் நலத்திற்கு கடிதம் எழுதவும்.
      உன் கடிதம் கிடைக்கப்பெற்றோம். உன் கடிதம் கண்டவுடன் எங்கள் இதயம் உடைந்து சுக்கு நூறாகி விட்டது. ஏனென்றால் நீ ஒரு பரிட்சையில் பெயில் ஆவாய் என்று நாங்கள் கொஞ்சம் கூட நினைத்து கிடையாது. ஏதோ ஒரு இடி எங்கள் தலை மேல் விழுந்ததை போன்று உணர்கிறோம். எது நடக்க வேண்டுமோ அது கண்டிப்பாக நடந்தே தீரும். நாங்கள் எங்கள் மனதை தேற்றிக்கொள்ள முயற்சிக்கிறோம். முடியுமா என்பது சந்தேகமே. ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள். நீ நன்றாக படித்தால்தான் நம் சொந்தபந்தங்களும், மற்ற சுற்றத்தாரும் உன்மேல் வைத்திருக்கும் மரியாதை நிலைத்து நிற்கும். இனியாவது அதனை கெடுத்துக்கொள்ளும்படி நடக்காதே.
      ஆனால் என் மனதில் பட்டதை அன்றே சொன்னேன். ஹாஸ்டலை விட்டு வெளியே வந்தால் இப்படி ஆகும் என்று. இது என் கருத்து. என் கருத்தை நீ பொய்யாக்கி இருக்க வேண்டும்.
      நீ பாஸ் ஆனாலும், பெயில் ஆனாலும் அது உன்னுடைய வாழ்க்கை. நாங்கள் உனக்கு செலவுதான் செய்யலாம். ஆலோசனை கூறலாம். மேற்கொண்டு உன் வாழ்க்கையை நிர்ணயிப்பது நீதான். ஆயிரம் சமாதானம் சொன்னாலும் மனதால் ஜீரணிக்கவே முடியவில்லை. இனிமேலாவது உன் எதிர்கால வாழ்கையை நினைத்து, நம் குடும்ப சூழ்நிலையையும் நினைத்து எப்படி படிக்க விரும்புகிறாயோ, அப்படி படி. உனக்கு அதிகப்படியாக புத்தி கூற தேவையில்லை என்று நினைக்கிறேன்.
நைனா கூறிய யாவற்றையும் அப்படியே அம்மா எழுதி உள்ளேன்.

சந்தோஷிற்கு அம்மா எழுதுவது.
      உன் படிப்பையும், வேலையையும் வைத்துதான் நம் குடும்பமே முன்னுக்கு வரவேண்டும் என்று எண்ணி உள்ளேன். எனவே அனுதினமும் நன்றாக படித்து வீட்டிற்கு மார்குகள் வரும்படி செய்யவும்.
      மேலும் நயினா மிகவும் மனது உடைந்து போயுள்ளார். யாரிடமும் சந்தோஷ் பெயில் என்று கூறிவிடாதே, எல்லா சொந்தங்களும் வேதனைப்பட்டு விடுவார்கள் என்று கூறினார். நயினா வாழ்க்கையில மிகவும் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறார். உன் மார்க்கும் இப்படி ஆனவுடன் மிகவும் வேதனைப்பட்டார். எனவே வாழ்க்கையில் கடவுள் நம்பிக்கையும், படிப்பில் நன்கு கவனமும் செலுத்தப்பார்க்கவும்.
      மேலும் யார் மீதும் வாழ்க்கையில் கோபம் என்பதே வைத்துக்கொள்ளாதே. எல்லோரிடமும் அன்பாக பேசவும். எல்லோரையும் போல நீயும் நிறைய கோபப்படுகிறாய். தயவுகூர்ந்து அன்புடன் கோபத்தை குறைத்துக்கொள். இது என் தாழ்மையான வேண்டுகோள். நன்றாக படி.

என் கண்களில் கண்ணீர் கோர்த்துக்கொண்டது. என் பக்கத்தில் இருந்த குடத்தில் கொஞ்சம் தண்ணீர் எடுத்து குடித்தேன். தண்ணீர் விழுங்குவது சிரமமாய் இருந்தது.

என் கடிதத்திற்கான பதில் கடிதம்தான் இது. முதலில் வீட்டில் தெரியப்படுத்தாமல் மறைத்துவிடலாம் எனதான் நினைத்தேன். அதற்காக கல்லூரி பதிவேட்டில்கூட என் நிரந்தர முகவரியை மதுரைக்கே மாற்றி இருந்தேன்.

நான் ஒரு பரிட்சையில் தோல்வி அடைந்தேன் என்பது எனக்கே மிகுந்த வேதனையாகவும், சில நேரத்தில் ஆச்சர்யமாகவும் இருந்தது.


பள்ளி படிப்பில் எப்பொழுதுமே நான் முதல் ரேங்க் மாணவன். LKG முதற்கொண்டு எட்டாம் வகுப்பு வரை நான் முதல் ரேங்க் தவிர்த்து வாங்கியதில்லை. ஒன்பதாம் வகுப்பு வேறு ஒரு பள்ளிக்கு மாறினேன். அங்கு நிறையவே போட்டி இருந்தது. முதல் ரேங்க் என் கையை விட்டு போனது. இரண்டாம், மூன்றாம் இடங்களுக்கு எப்பொழுதும் தள்ளப்பட்டேன். பத்தாம் வகுப்பிலும், பன்னிரெண்டாம் வகுப்பிலும் பள்ளியில் முறையே இரண்டாம், மூன்றாம் இடம் பிடித்தேன். அப்பா சிறிது கவலை கொண்டாலும் பெரிதாய் ஒன்றும் காட்டிக்கொள்ளவில்லை.

நல்ல மதிப்பெண்கள்தான் எனக்கு அரசு பொறியியல் கல்லூரியை பெற்றுக்கொடுத்தது. அதே கல்லூரி என்னை இப்படி ஏளனப்படுத்தி பார்க்கும் என்று ஒருநாளும் நான் நினைத்ததில்லை.

நிறைய நண்பர்கள், ஊர் சுற்றல் என்று காலம் கழிந்தது. ஹாஸ்டல் சாப்பாடு எப்பொழுதும் கசந்ததால், பெரும்பாலும் வெளியேதான் சாப்பிட்டோம். நாங்கள் சாப்பிடும் ஒவ்வொரு உணவகம் பக்கமும் ஒரு திரை அரங்கு தவறாமல் இருந்தது. வெளியே சாப்பிடுவது கட்டுபடி ஆகாத காரணத்தால் ஹாஸ்டல் விட்டு வந்து வெளியே ஒரு வீடு எடுத்து தங்கினோம். இன்னும் சுதந்திரமாக செயல்பட்டோம். மாலை காட்சி இரவு காட்சியானது. சில பழக்கங்கள் எங்களோடு வந்து சேர்ந்தது.

முதலாம் செமஸ்டர் தினம் படித்தேன். இரண்டாம் செமஸ்டர் இன்டெர்னல் மட்டும் படித்தேன். மூன்றாம் செமஸ்டர் கடைசி பரீட்சைக்கு மட்டும் படித்தேன். தேவையான அளவு மட்டும் வகுப்புக்கு சென்றேன். டிராயிங் வகுப்புகளுக்கு யாராவது proxy கொடுக்க, அதனை முற்றிலும் தவிர்த்தேன்.
"என்ன மாப்ள நாம பார்க்காத ட்ராயிங்கா..?"

டிராயிங் பரீட்சை தொடங்கிய மூன்றாவது நிமிடம் முதல் முதலாய் என்னை பின்னோக்கி ஓட்டிப்பார்த்தேன். கடவுளிடம் கெஞ்சினேன். இந்த முறை எப்படியாவது தேற்றிவிட்டால், கண்டிப்பாக ஒழுங்காய் படிப்பதாய் வேண்டிக்கொண்டேன். தியரி பரீட்சை என்றாலாவது அக்கம் பக்கம் பார்க்கலாம், இந்த பரிட்சையில் என்ன செய்ய முடியும். மேலும் டிராயிங் கருவியான drafter-ஐ எப்படி சரியாக பொருத்துவது என்பது கூட என்னால் யோசிக்கமுடியவில்லை. தொடர்ந்து அங்கு இருந்தால் ஏதேனும் இருதய கோளாறு உண்டாகும் என 1 மணி நேரத்தில் அறையை விட்டு கிளம்பிவந்தேன்.


அப்பா - இன்று முன்னேறிவிடலாம், இன்று முன்னேறிவிடலாம் என்று பெருங்கனவுகளோடு வாழும் ஒரு ஏழ்மையான மனிதர். நான் நன்றாக படிப்பதால் எனக்கு எப்பொழுதும் அவரிடத்தில் ஒரு தனி மரியாதை.
"என் புள்ளதான் என்னோட கனவெல்லாம் நெனவாக்குவான் பாரேன்"....பெருமையோடு என் அப்பா. அவர் ஆசையெல்லாம் ஒன்றுதான். ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும். அதற்கும் பணம் செர்த்துக்கொண்டுதான் உள்ளார். ஆனால் சேர்க்கும் பணம் ஒவ்வொரு முறையும் ஏதாவது செலவுக்கு உபயோகப்படுகிறது, என் படிப்பு, சாப்பாடு செலவு உட்பட.

அம்மா - அன்பான அம்மா. அடுத்தவர் உள்ளம் நோகாமல் எல்லோரிடத்திலும் அன்பு காட்டுபவர். அவரின் கனவு, அப்பாவின் கனவை நினைவாக்குவது.

சொந்தபந்தங்கள் - "ச..நம்ம சந்தோஷுக்கு டிஷ்டிரிக்ட் ரேங்க் வரலன்னா, அப்போ சரியாய் யாரும் பேப்பர் திருத்தலன்னுதானே அர்த்தம்."
என் பத்தாம் வகுப்பு பரிட்சையை பெரிதாக எதிர் பார்த்து ஏமாந்தவர்கள்.

இவர்களை ஏமாற்றுவது நான் கண்ட தோல்வியைவிட என்னை பெரிதும் துன்புறுத்தியது. அதனால்தான் என் கடிதம் எழுதினேன். என்னை மன்னிக்கும்படி வேண்டி கேட்டுக்கொண்டேன். பதில் கடிதமும் கிடைக்கப்பெற்றேன்.


"எங்கள் இதயம் உடைந்து சுக்கு நூறாகி விட்டது "
"எங்கள் இதயம் உடைந்து சுக்கு நூறாகி விட்டது"
இந்த வார்த்தைகளை தேடியே மீண்டும் மீண்டும் மனது அலைபாய்ந்தது. கண்ணீர் பீறிட்டு வந்தது.

என் கண்ணீரில் சிலத்துளி பட்டு அந்த எழுத்துக்கள் அழிந்து போனது.

அங்கங்கே சிதறி கிடந்த புத்தகங்களை ஒழுங்கு செய்து என் மேஜையில் வைத்தேன். எல்லா புத்தகங்களுக்கும் மேலே என் பெற்றோரின் கடிதத்தை வைத்தேன்.

Wednesday, June 17, 2009

பைத்தியக்காரன் - 1 (கதை - 10)

Share |
அவன் அந்த ஜன்னலின் வழியே வீதியை வெறித்து பார்த்துக்கொண்டிருப்பான். அவனுக்கு சுமார் 18 வயது இருக்கும். அந்த வீட்டினுள் இருந்து எப்பொழுதும் மெல்லிய ஓசையில் ஃப்.ம் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். அந்த வீட்டில் அவனை தவிர அவனின் தந்தை, தாய் மற்றும் அவனின் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் தம்பி. அவர்கள் எல்லோரும் தத்தம் தங்கள் பணிகளுக்கு கிளம்பிவிட, அவன் வீட்டினுள் வைத்து பூட்டப்படுவான். ஒரு சிறு குழந்தையை கொஞ்சுவதைபோல் அவன் அன்னை அவனை கொஞ்சிச் செல்வார்.கொஞ்சி முடித்து தன்னுடைய கணவனின் வண்டியில் பின் அமரும்போது அவர்களின் கண்களில் தண்ணீர் கோர்த்திருக்கும்.

நான் தங்கி இருந்தது அவனின் எதிர் வீட்டில். நிறைய வீடுகளை கொண்டது எங்கள் குடியிருப்பு. எங்கள் இருவரின் வீடும் தரை தளத்தில் எதிர் எதிராய் அமைந்திருக்கும். என் வீட்டை விட்டு வெளியே வந்து மூன்று அடி நேராக வைத்தால் அவர்களின் வீட்டுக்குள் நான் ஒரு அடி சென்றிருப்பேன். எங்கள் குடியிருப்புக்கு எதிர்புறம் வெறும் பொட்டல் காடு போல் இருக்கும். நிறைய முள் செடிகள் மட்டுமே காட்சி அளிக்கும். மக்கள் அதைதான் குப்பை போடும் இடமாக பயன் படுத்தி வந்தனர். இந்த வரிசையில் ரயில் பாதை வரும் ஒரு திட்டம் இருப்பதால் இங்கு யாரும் வீடு கட்டவில்லையாம்.

அவன் அடைக்கப்பட்ட அறை வீதி நோக்கி இருந்ததால், அவனை பார்க்க நான் வீட்டை விட்டு வெளியில்தான் வர வேண்டும். வீதியில் செல்லும் யாவரும் அவனை பார்க்கலாம் என்றாலும், இந்த அவசர சென்னையில் யாருக்கும் அவனை பார்க்கும் நேரமோ, எண்ணமோ கூட இருந்திருக்க வாய்ப்பில்லை. என் சித்திக்கு கூட இப்படி ஒருவன் இருக்கிறான் என்று தெரியாது. அவளும் பணிக்கு செல்பவள். என் அம்மாவாக இருந்திருந்தால் இந்த நேரத்திற்கு அந்த குடும்பத்தின் கதையை கேட்டிருப்பாள்.

நான் தங்கியிருந்த வீடு என் சித்தி, அம்மாவின் தங்கயுடையது. எல்லோரும் போல் நானும் வேலை தேடித்தான் இங்கே வந்திருக்கிறேன். என் சித்திக்கு ஒரு பெண் மட்டும். பதிணொண்றாம் வகுப்பு படிக்கிறாள்.

வேலை தேடும் மற்ற பொழுதில் நான் இவனைதான் கவனித்துக்கொண்டிருப்பேன். அவனை பார்த்துக்கொள்ள ஒரு ஆளாவது இருந்திருக்கலாம். இல்லையேல் அவன் அன்னையே அவனை பார்த்துக்கொண்டிருக்கலாம். காலையில் வேலைக்கு செல்லும் அவன் அம்மா மதியம் ஒரு 3 மணிபோல் வந்துவிடுகிறார். அதன் பிறகு அவனை ஒரு அரை மணி நேரத்திற்கு அங்கு காண முடிவதில்லை.

காலையில் அவர்கள் எல்லோரும் வெளியே செல்கையில் அவன் மேல் சட்டை, கால் சட்டை அணிந்து காண்கிறேன். அவன் ஜன்னலுக்கு வரும்பொழுது, அவனின் மேல சட்டை இல்லை. கால் சட்டை அணிந்துள்ளானா என்பதை என்னால் நிச்சயம் சொல்ல முடியவில்லை. மதியம் அவன் அன்னை வந்த பிறகு வேறு ஒரு ஆடையில் தோன்றுகிறான்.

அவன் அன்னை வந்த பிறகு வானொலி சத்தம் குறைகிறது. நான் என் வீட்டுக்குள் சென்றால், அவனின் அன்னை அவனை கொஞ்சும் சத்தம் கேட்கின்றது. அவனை சாப்பிட வைக்க, சில மாத்திரைகள் விழுங்க வைக்க என்று விதவிதமான கொஞ்சல்.

அவனுடைய தந்தை ஒரு 5 மணிக்கு வருகிறார். அவர் சில நேரத்தில் அவனை கொஞ்சுகிறார்.

அவன் தம்பி பள்ளி முடிந்து 6 மணிக்கு வருகிறான். அவனுடைய முகத்தில் ஒரு சலிப்புதான் தோன்றுகிறது.

அன்று நான் வெளியே ஒரு நேர்முகத்தேர்விற்கு சென்று வந்தேன். வீட்டு பக்கத்தில் வந்ததும் அவனை பார்க்க நினைத்தேன். அவனை காணவில்லை. நான் ஆடை மாற்றும்பொழுது அவன் வீட்டில் இருந்து கத்தும் சத்தம் கேட்டது. ஓடிப்போய் அந்த வீட்டை தட்டினேன். வீடு பூட்டபட்டிருக்க வேண்டும். ஜன்னல் வழியே பார்த்தேன். சத்தம் மட்டுமே வந்தது. வீட்டை உடைக்கலாமா..? யாரையாவது கூப்பிடலாமா..? வீதிக்கு வந்தேன். நல்ல வேலையாக அவன் அம்மா வந்துகொண்டிருந்தார்.அவர் திசை நோக்கி ஓடினேன்.

"கொஞ்சம் சீக்கிரம் வாங்க.." என்னை வெறித்து பார்த்தார்.
"நான் உங்க எதிர் வீட்ல இருக்கேன். உங்க பையன் உள்ள சத்தம் போட்டுட்டு இருக்கான்."
"நீங்க புதுசா. மன்னிச்சிடுங்க. உங்கள தொந்தரவு செஞ்சிட்டனா..?"
இவர் என்ன பேசுகிறார்.
"அதெல்லாம் இல்லங்க. அவனுக்கு என்ன ஆச்சோன்னு..."

அவர் பதட்டப்படவில்லை.
கதவு திறந்தார். அவன் ஆடை ஒன்றும் அணியாமல் கீழே படுத்திருந்தான்.
"என் செல்ல குட்டி..." என்று கொஞ்ச ஆரம்பித்தார்.
நான் அங்கிருந்து விலகினேன்.

ஒரு சனிக்கிழமை காலை, அவன் அப்பா அவனை வீட்டைவிட்டு வெளியே கூட்டிவந்தார். அவனை தன் ஸ்கூட்டரின் முன் இருக்கையில் அமர்த்தி, இவர் பின் அமர்ந்து கொண்டார். ஒரு ஆட்டோ வந்தது. அதில் அவன் அம்மா ஏறிக்கொண்டார்.

"நான் வேணா ஆட்டோல கூட்டிவரட்டா..?"
"இல்லமா வேணாம். நானே பார்த்துகிறேன்."

ஒரு 2 மணி நேரம் கழிந்து அவர்கள் வந்தார்கள். மீண்டும் கொஞ்சல் சத்தம் கேட்டது.

கொஞ்ச நேரத்தில் வெளியே சென்ற என் தங்கை வீட்டிற்குள் ஓடி வந்தாள். அவன் தன் உடம்பில் ஆடை ஏதும் இல்லாமல் வீதி நோக்கி போய்க்கொண்டிருக்கிரானாம்.
ஓடி சென்று அவனை இழுத்து வந்து அவனுடைய வீட்டில் சேர்த்தேன்.

அவர்கள் இருவரும் அவனை ஆற தழுவிக்கொண்டார்கள்.
"என்ன கண்ணு. அடி பட்டிருந்தா என்ன பண்ணுவ..?"
"ரொம்ப தேங்க்ஸ் சார். கதவ திறந்து வெச்சிட்டு தூங்கிட்டோம்."

"இந்த தம்பிதாங்க அன்னைக்கு இவன் சத்தம் கேட்டு, ஓடி வந்தாப்ள"
"தேங்க்ஸ் தம்பி. நீங்க எதிர் வீட்ல இருக்கீங்களா..?"

நான் அவனை பற்றி ஒன்றும் கேட்டுக்கொள்ளவில்லை.

அடுத்த தினம் முதல் நான் பார்க்கும்போது, அவனும் என்னை பார்ப்பான். நான் சிரிக்க அவனும் சிரிப்பான். அவனுக்கு ஏதாவது வாங்கித்தர தோன்றியது.

என் அம்மா என் சித்தி வீட்டிற்கு வந்தாள். அம்மாவை பேருந்து நிலையத்திலிருந்து கூட்டி வரும்போது அவனை பற்றி பேசி வந்தேன்.


அவன் சிறு வயதில் எல்லா குழந்தையை போல் நன்றாகவே இருந்திருக்கிறான். படிப்பும் நன்றாகவே இருந்திருக்கிறது. ஏழாம் வகுப்பு படிக்கும்போது இவர்கள் ஏதோ ஒரு உறவினரின் திருமணத்திற்கு சென்றனர். திரும்பி வரும்பொழுது, இவனுக்கு பிடித்த ரயிலில் பயணிக்கலாம் என நினைத்தனர். இவனின் தம்பியும், அன்னையும் நடை மேடையில் காத்திருக்க, பிரயான சீட்டு வாங்க இவன் தந்தையுடன் இவனும் சென்றான். சீக்கிரம் வாங்கி திரும்ப வேண்டும் என்பதற்காக தண்டவாளம் வழியே இவர்கள் செல்ல, பக்கத்து தண்டவாளத்தில் வந்த வண்டி தன்னுடைய தண்டவாளத்தில்தான் வருவதாய் நினைத்து இவன் பயம் கொண்டு "அப்பா" என சத்தம் செய்துள்ளான். அவன் பேசிய கடைசி வார்த்தை அதுதான்.

எத்தனையோ மருத்துவர்கள், எவ்வளவோ மாத்திரைகள்.பார்க்கும் மருத்துவர் எல்லாம் கண்டிப்பாக குணமடைய வாய்புள்ளதாகவே கருதுகின்றனராம். ஆனால் எப்பொழுது என்று சரியாக சொல்ல முடியவில்லை.

இரவெல்லாம் மழை பெய்தது. காலை பார்க்கும்பொழுது தெருவெல்லாம் சேறாக காட்சி தந்தது.

அவனை மருத்துவமனை அழைத்து செல்ல வேண்டிய தினம் போல இன்று. சென்ற முறை போல் இந்த முறையும் ஆட்டோ வந்தது. அவன் அம்மா ஆட்டோவில் ஏறிக்கொள்ள, அவன் அப்பா அந்த ஸ்கூட்டரில் அவனை ஏற்றிக்கொண்டார். அவனை என்னால் சரியாக பார்க்க முடியவில்லை. அவன் சிரிப்பு பார்க்க எண்ணி ஏமாந்தேன்.

ஒரு பத்தடி செல்வதுற்குள் வேகமாக சைக்கிள் ஓட்டி வந்த ஒருவர் இவரின் ஸ்கூட்டரில் மோத அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவனுக்கு வலிப்பு வந்தது.

எல்லோரும் ஓடினோம். விழுந்த அதிர்ச்சியில் அவனுக்கு வலிப்பு உண்டாகி இருந்தது. அவன் அம்மா ஆட்டோவில் இருந்து ஓடி வந்து அவனை தூக்கினார். அவனுடைய தந்தையும் தடுமாறி எழுந்தார். செய்வதறியாது திகைத்து நின்றார். ஒருவர் யாரையாவது சாவி அல்லது இரும்பு எடுத்து வர சொன்னார். அவனின் அம்மா சென்ற ஆட்டோ ஓட்டுனர் இரும்பு எடுத்து வந்தார். நான் ஓடி சென்று தண்ணீர் எடுத்து வந்தேன். அவனுக்கு வலிப்பு அடங்கியது. என்னிடம் தண்ணீர் வாங்கி அவன் முகத்தில் அறைந்தனர். அவன் உடல் எல்லாம் சேறு பூசி இருந்தது. அவன் பெற்றோர் கண்களில் கண்ணீர் கசிந்தது.

"ஒண்ணுமில்ல விழுந்த அதிர்ச்சி..எல்லாம் சரியாய் போய்டும்." தண்ணீர் அறைந்தவர் சொன்னார்.
அவர்கள் அவனுக்கு வேறு ஏதேனும் அடிபட்டுள்ளதா என பார்த்தனர். நல்லவேளையாக ஒன்றும் இல்லை. அவனின் தந்தைக்குதான் கையில் சிராய்ப்பு ஏற்பட்டு இருந்தது.

ஒரு இரண்டு தினம் கழித்து மருத்துவமனை போகலாம் என முடிவு செய்தனர். அவனை வீட்டுக்குள் அழைத்து சென்றார்கள். உள்ளே போகாமல் அவன் அடம் பிடித்தான். அவன் அன்னை அவனை கட்டிக்கொண்டு உள்ளே இழுத்து சென்றார். அவனுடைய கத்தல் அந்தே வீதியே கேட்டது.

அடுத்த நாள் அவன் அம்மா என்னிடம் வந்தார்.
"அவன கொஞ்சம் அப்பப்ப பாத்துக்கிரியா..?"

இரவு வெகு நேரம் கண் விழித்து இருந்ததாகவும் இப்பொழுதே தூங்குகிறான் எனவும் சொன்னார்.
எனக்கு ஒரு மணி நேர வேலை இருந்தது.

"கூட இருக்கெல்லாம் வேணாம் கண்ணு. ஏதாவது சத்தம் கேட்டா மட்டும் பாரு. இந்தா சாவி."

நான் வெளியே சென்றேன். நன்றாக மழை பிடித்துக்கொண்டது. ஒரு மணி நேரத்திற்கு மேலாகி இருந்தது.மழையிலேயே வீடு வந்து சேர்ந்தேன். அவன் வீட்டின் ஜன்னல் வழி பார்த்தேன். அவனை காணவில்லை. உள் அறையில் தூங்குகிறான் போல. கதவில் காது வைத்து பார்த்தேன். வீட்டுக்குள் இருந்து ஒன்றும் சத்தம் இல்லை. மழையின் சத்தம்தான் அதிகமாக இருந்தது.

இரண்டு மணி நேரம் ஆனது. எனக்கு பசித்தது. கதவை திறக்க எண்ணி என் வீட்டை திறந்தேன். என் கதவின் மேல் ஒரு பாம்பு நின்றது. ஒரு நிமிடம் பயந்து போய் அலறினேன். என் சத்தம் வெளியே கேட்டிருக்க வாய்ப்பில்லை. கதவை அப்படியே வைக்கவும் முடியாது. மூடினாலும் பாம்பு போய் விடும் என்று உறுதியாக சொல்ல முடியாது. கண்ணுக்கு எட்டும் தூரத்தில் எதுவும் அகப்படவில்லை. வீட்டிற்குள் சென்று ஏதேனும் எடுக்கக்கூட முடியாமல் அந்த பாம்பையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு 15 நிமிடத்தில் பாம்பு கதவை விட்டு இறங்கி வீதி நோக்கி சென்றது. பின் அந்த பொட்டலில் சென்று மறைந்தது.

ஒரு நிம்மதி பெரு மூச்சு விட்டு வீட்டுக்குள் வந்தேன். பாம்பு வந்ததில் நான் அவனை மறந்துபோயிருந்தேன். சாவியை எங்கு வைத்தேன் என நினைவில்லை. திடீர் என ஒரு பயம் என்னை கவ்விக்கொண்டது. எங்கிருந்து வந்தது இந்த பாம்பு..?அவன் கதவில் மீண்டும் காது வைத்தேன். இப்பொழுதும் சத்தம் இல்லை.

வேகமாக தேடி சாவியை கண்டுப்பிடித்தேன். வீட்டை திறந்தேன். அவன் இன்னும் உறங்கிக்கொண்டிருந்தான். நிம்மதியாக இருந்தது. அவனை எழுப்ப முயற்சித்தேன்.

எழுந்து என்னை வித்தியாசமாய் பார்த்தான். சுற்றும் முற்றும் பார்த்தான்.
"அப்பா..." என்றான், அவர் எங்கே என கேட்பதுபோல்.

Thursday, May 28, 2009

நிருபர் (கதை - 9) - போட்டிக்கான சிறுகதை

Share |
குழந்தை தொழிலாளிகள்...முன்வருமா சமூகம்..?
------------------------------------------------------------------------
வாசு


வாகனங்களின் சத்தம் காதில் இரைந்தது.

"உன் பெயர் என்ன தம்பி..?"
அவன் என்னை பார்த்தான். கண்கள் என்னை பார்த்தபோதும் அவனுடைய கை மிக நேர்த்தியாக பூக்களை ஒரு நூலில் கோர்த்துக்கொண்டிருந்தது. என் கையில் இருக்கும் சின்ன ஏடு, என் கழுத்தில் மாட்டி இருந்த புகைப்படக் கருவி எல்லாம் பார்த்தான்.

"பாண்டி சார். பூ வேணுமா சார்..?"
"இல்லபா உன்ட்ட கொஞ்சம் பேசணும்."

கொஞ்சம் வித்தியாசமாய் பார்த்தான்.
"என்ன சார் பேசணும்..? நீ அந்த பத்திரிக்கை கம்பேனீல வேல பாக்குறியா சார்..?"

"ஆமா தம்பி. உன் வயசு என்ன..?"
"என் வயசு 12 இருக்கும் சார். நான் பொறந்த மாசம் அம்மாக்கு சரியா நெனவில்லியாம்."

"எவ்ளோ நாளா பூ வியாபாரம் பாக்குற..?" இடையிடையே குனிந்து பூக்களை எடுத்துக்கொண்டான்.
"இப்போ ஒரு ரெண்டு வருசமாதான் சார். மொத எங்க அப்பாகூடதான் வந்திட்டு இருந்தேன். இப்போ அப்பா வேற ஏரியா பாக்குறார். அதனால என்னையே பாத்துக்க சொல்லிட்டாரு."

"அதுக்கு முன்ன என்ன பண்ண..?"
"இஸ்கூல் போவேன் சார்.."

"எந்த கிளாஸ் வர படிச்ச..?"
"அஞ்சாவது வர படிச்சேன் சார். அதுக்கு அப்புறம்தான் அப்பா பூ வியாபாரம் பாக்க கூட்டிட்டு போனார்.."

"ஸ்கூல் போகாதது உனக்கு கஷ்டமா இல்லையா..?"
"ஆரம்பத்தில என் பிரண்ட்ஸ் எல்லாம் பாக்காம கஷ்டமாத்தான் இருந்திச்சு. அப்புறம் தெரியல சார்.."

"நீ ஸ்கூல்-ல என்ன ரேங்க் வாங்குவ..?"
"10 குள்ள வருவேன் சார்.."

"ஒரு நாளைக்கு எவ்வளவு வியாபாராம் பார்ப்ப..?"
"சில நாள் 100 ரூவா வரும். நல்ல வியாபாரம்னா, 200 ரூவா வரும் சார்.."
"உன்ன ஒரு போட்டோ பிடிச்சிக்கவா..?"

பாண்டி அண்ணா சாலை நடை மேடையில் தொழில் செய்யும் ஒரு குழந்தை தொழிலாளி.

இன்னும் கொஞ்ச தூரம் நடந்தேன்.

வயது மூத்த ஒருவரும், சிறுவனும் ஒரு குடையின் கீழ் அமர்ந்திருந்தனர்.அந்த மூத்தவர் சுற்றி நிறைய பூட்டுக்களும், சாவியும் இருந்தது. அந்த சிறுவன் ஒரு கூடை நிறைய மாம்பழம் வைத்திருந்தான்.

"என்ன நைனா...சாவி தொலைஞ்சு போச்சா..?" அந்த மூத்தவர் என்னை பார்த்துக்கேட்டார்.
"இல்லங்க...இந்த பையன் யாரு..?"
"இது நம்ம புள்ளதான் நைனா...இன்னாத்துக்கு கேட்குற..? டேய், அம்மாசி சார்-க்கு மாம்பழம் வேணும் போல இருக்கு...கொடுரா.."

"ஒரு டஜன் போடவா சார்..?" இது அம்மாசி.

"இல்ல எனக்கு மாம்பழம் வேணாம். உங்களோட கொஞ்சம் பேசணும்..."
"பேசு நைனா...எதாவது சினிமால என் புள்ள நடிக்கணுமா..?"
"அதெல்லாம் இல்ல. உங்களோட ஒரு பேட்டி வேணும்.."
"ஓ..நீ பத்திரிக்கையா..? ஒரு போட்டோ எடு நைனா...என்னையும், என் புள்ளையையும்..."

"சொல்லுங்க ...அம்மாசிய பள்ளிக்கூடத்துக்கு அனுப்பலையா..?"
"போய்ட்டுதான் நைனா இருந்தான் போன வருஷம் வரைக்கும். இந்த வருஷம் போல.."
"அதான் ஏன்..?"
"போன வருஷ லீவுக்கு என்னோட தொழில் பாக்க கூட்டி வந்தேன். அவனுக்கு பூட்டு தொழில் பிடிக்கலயாம். அவனா மாம்பழம் வாங்கி யாவாரம் பார்த்தான். அதையே இப்பவும் பாக்குறான்...நல்ல கெட்டிக்கார பய நைனா..இஸ்கூல்ல நல்லா மார்க் எல்லாம் வாங்குவான். "

"அம்மாசி...நீ ஸ்கூல் போலையா..?"
"இதுலையே நல்ல காசு வருது சார். எங்க அப்பா நான் சம்பாதிக்கிற காசு கேட்கமாட்டாரு. அம்மாட்டதான் கொடுப்பேன். அம்மாதான் ஸ்கூல் போகாம இதையே பாக்க சொல்லிருச்சு." அவன் கண்களில் ஒரு ஏக்கம் இருந்தது.
"உனக்கு படிப்பு வேணாமா..?"
"தெரியலையே சார்..அம்மாட்டதான் கேட்கணும்."

"நைனா..பீடி வச்சிருக்கியா..?" அம்மாசியின் அப்பா என்னிடம் கேட்டார்.
"இல்லையே..."
அம்மாசியின் அப்பா பீடி வாங்க கிளம்ப,
"என்ன அம்மாசி உனக்கு படிப்பு வேணாமா..? நல்லா மார்க் வாங்குவன்னு வேற உங்க அப்பா சொல்றாரு.."
"இல்ல சார்...அப்பா இதுல வர்ற வருமானத்துல குடிச்சிடுவார் சார். அதனாலதான் அம்மா என்னையும் கூட அனுப்புது. இப்பவும் நான் வராட்டி குடிக்க போய்டுவார். அதனாலாதான் அம்மா என்னையும் இங்க உட்கார சொல்லிடுச்சு."

குழந்தை தொழிலாளி என்றாலே ஏதோ உணவங்களிலும், சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலையிலும், மெக்கானிக் கடைகளிலும் உள்ளவர்கள் என்றே நாம் நினைக்கிறோம். இவர்களும் தொழிலாளர்கள்தான். நாளை உலகத்தில் இவர்களின் நிலைமை ஒரு கேள்விக்குறியே.

இதற்கு ஏதேனும் ஒரு தீர்வு இல்லையா என்று இந்த தருணத்தில் நீங்கள் நினைத்தால், அதற்கான பதிலும் நீங்களாகத்தான் இருப்பீர்கள்.

இதை போக்க மக்களாகிய நீங்கள்தான் முன் வரவேண்டும். நீங்கள் செய்வது பொருள் உதவியாக இருக்கலாம், அல்லது உங்கள் அறிவை பகிர்வதாய் இருக்கலாம். அவர்கள் இடம் சென்று அவர்களுக்கு நீங்கள் கற்பிக்கலாம். இன்னொரு கலாம் கூட உருவாக்கலாம்.
--------------------------------------------------------------------------------

என்னுடைய முதல் கட்டுரையை எழுதி முடித்தேன். பத்திரிக்கை ஆசிரியரைப் பார்க்க அவரின் அறை சென்றேன். கதவில் இருக்கும் பொத்தானை அமுக்கினேன்.

"யாரு..?" ஆசிரியர் குரல் கேட்டது.
"வாசு சார்..உள்ள வரலாமா..?"
"வா வாசு.."

ஒரு நிமிடம் என்று செய்கை காட்டி, என்னை அமரும்படி செய்கை செய்தார். ஆசிரியர் ஏதோ ஒன்றில் மூழ்கி இருந்தார்.
அவருடைய அறை முழுக்க பத்திரிக்கை தாள்கள்.சுவற்றோரத்தில் சில சாக்கு மூட்டைகள்.அவருக்கு பின் இருக்கும் சுவற்றில் பத்திரிக்கை தொடங்கிய ஆசிரியரின் புகைப்படம். அவரின் மேஜை மீது ஒழுங்கு செய்யப்பட்டு காட்சி அளித்த காகிதங்கள்.

"சொல்லு வாசு.."
"இல்ல சார்...என் ஆர்டிகள்.."

"ம்ம்...நல்லா இருக்கு வாசு....சில சேன்ஜஸ் பண்ணனும். நான் பண்ணிடவா..?"
"என்ன சேன்ஜஸ் சார்..?"

"நல்ல ஆரம்பம்...நல்ல மெசேஜ். ஆனா ஆர்டிகள் முடிச்சது சரி இல்லையோன்னு தோணுது.."
"ஏன் சார்..?"

"நீ யாரு..?"
"சார்..." நான் கொஞ்சம் அதிர்ச்சியானேன்.

"அதாவது நீ இங்க யாரு..?"
"பத்திரிக்கை நிருபர் ."

"பத்திரிக்கையாலனோட வேல நியூஸ் சொல்றது மட்டும்தான். அதற்கான தீர்வு சொல்றது நம்ம வேல இல்ல."
"அப்போ நம்ம பத்திரிக்கைல கட்டுரைகள் எழுத வேண்டிய அவசியம் என்ன சார்..?"

"அத நாம படிக்க வைக்கணும்...அவளோதான். அத பார்த்து வாசகர்கள் என்ன செய்யணும்ங்கறது சொல்றது நம்மோட வேல இல்ல.."
"நாம யோசிக்கிற மாதிரி அவங்களும் வாசகர்களோட வேல படிக்கிறதுன்னு சும்மா இருந்துட்டா..?" இந்த கேள்வி கொஞ்சம் கோபமாகத்தான் வந்தது.

"உணர்ச்சி வசப்படாத வாசு....ஆர்டிகள் நல்லா வந்திருக்கு...கண்டிப்பா ஏதாவது நடக்கும்.."
"என்ன சார் நடக்கும்..? சென்னை அண்ணா சாலையில ஒரு நாளைக்கு போறவுங்க எத்தன பேரு..? ஏன் உங்க ஆபீஸ் ஸ்டாஃப் கூட தினம் அவன்ட்ட பூ வாங்குறாங்களாம். யாராவது இத ஒரு விஷயமா யோசிச்சாங்களா..?"
என்னுடைய சத்தம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

"வாசு. உன்னோட முதல் ஆர்டிகள் இது. நான் இங்க 25 வருசமா வேல செய்றவன். உன்ன தட்டி கொடுத்து தூக்கிவிட வேண்டியது என் வேல. என் அனுபவுத்துல சொல்றேன். நான் சொல்ற மாதிரி போடலாம்." அவரிடம் துளியும் கோபம் இல்லை.

"சரி சார். நீங்க சொல்ற மாதிரியே போடலாம்." அதற்கு மேல் அவரிடம் பேச ஒன்றுமில்லை.

வெளியே வந்தேன். என்னுடைய இரு சக்கர வாகனத்தில் அறைக்கு கிளம்பினேன். வெய்யில் இன்னும் குறையவில்லை. பாண்டியும், அம்மாசியும் தொழில் பார்த்துக்கொண்டிருந்தாகள்.

எனக்குள்ளே மீண்டும் அந்த கேள்விகள் வந்தது.
"டேய்..மெக்கானிக்கல் படிச்சுட்டு ஜர்னலிசம் பக்கம் போறியா..? என்ன பிரச்சனை உனக்கு..? எல்லோரும் சிரித்தனர்.
"அப்போ மெக்கானிக்கல் படிச்சிட்டு சாப்ட்வேர் இஞ்சினியர் ஆகலாம்....ஆனா பத்திரிக்க பக்கம் போகக்கூடாது.."

நான் படித்தது பொறியியல். பன்னிரண்டாம் வகுப்பில் நிறைய மதிப்பெண் வாங்கி இருந்ததால் என் பெற்றோரின் வற்புறுத்தலுக்காக பொறியியல் படித்தேன். ஆனால் என்னுடைய ஆசை, கனவு எல்லாமே ஒரு பத்திரிக்கையாளனாக வேண்டும் என்பதுதான். என்னை பொறுத்தவரை படிப்பு அறிவை வளர்க்க மட்டுமே. படித்த படிப்பு சம்பந்தமாகத்தான் வேலை செய்ய வேண்டும் என்பதெல்லாம் சுத்தமான பொய். எங்கு நிறைய வருமானம் கிடைக்குமோ அங்கு சேர்வதுதான் இங்கு பலரின் எண்ணம்.

காம்பஸ் இன்டெர்வியு என சொல்லப்படும் வேலை வாய்ப்பில் எனக்கும் வேலை கிடைத்தது. நிறைய வருமானமும் தருவதாய் சொன்னார்கள். வேலை கிடைத்த இரவுதான் நிறைய யோசித்தேன். இந்த நான்கு ஆண்டு கல்லூரி வாழ்க்கை எனக்கான சுயத்தை இன்னும் அதிகரித்திருந்தது. வேலையில் சேர முடியாதென மறுத்துவிட்டேன். வேலைக்கு சேர்ந்தால் ஒரு பத்திரிக்கையாளனாக மட்டுமே வேலை செய்ய வேண்டும் என் உறுதி பூண்டேன்.

என்னுடைய எழுத்து மூலம் நிறைய மாற்றங்கள் கொண்டு வர முடியும் என நம்பினேன். ஏன்..? ஒரு பத்திரிக்கையாளன் நினைத்தால் எந்த விதமான சமூக புரட்சியும் ஏற்படுத்த முடியும். என்னுடைய ஆசைப்படி ஒரு புகழ்பெற்ற பத்திரிக்கையில் இணைந்தேன்.


என் அறை வந்து சேர்ந்தேன்.
என் நண்பனுக்கு கைபேசியில் அழைத்தேன்.
"என்னடா ஜர்னளிச்ட், வேல எப்டி இருக்கு..? வேல இன்னைக்கே ஆரம்பிச்சிட்டியா..?"

எல்லாம் அவனிடம் சொன்னேன்.
"இன்னிக்குதாண்டா சேர்ந்து இருக்க.. அவங்க சொல்றத கேட்க வேண்டியதுதானே..?"


அடுத்த இதழில் என்னுடைய கட்டுரை வந்தது. நிறைய வாசகர்கள் கட்டுரை அற்புதமாக உள்ளதாக சொல்லி இருந்தனர். சிலர் அந்த சிறுவர்களுக்காக வருந்தினர். கண்டிப்பாக இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு உண்டு என்றனர். சில பேர் அரசை குற்றம் சொல்லினர்.

வாசகர் கடிதம் எடுத்துக்கொண்டு ஆசிரியர் அறை சென்றேன்.
"நல்ல ரெஸ்பான்ஸ் பார்த்தியா..? அடுத்த கட்டுரை ஆரம்பிக்கிறியா..?"

வெளியே வந்தேன். என் நண்பனை கூப்பிட்டேன்.
"எனக்கு ஒரு உதவி பண்ணுவியா..? உங்க கம்பெனி-ல எனக்கு வேல கெடைக்குமான்னு பாக்குறியா..? உன் அக்கௌன்ட்ல எவ்ளோ பணம் வெச்சிருக்க..?"

கைபேசியை வைத்துவிட்டு பாண்டியையும், அம்மாசியையும் பார்க்கச் சென்றேன்.

(உரையாடல்-சமூக கலை இலக்கிய அமைப்பு போட்டிக்கான சிறுகதை)

Tuesday, May 12, 2009

கதவு (கதை - 8)

Share |
இன்று வெகு நாட்களுக்கு பிறகு மதிய உணவு உண்ண வீட்டிற்கு போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒரு காலத்தில் தினம் சென்றுகொண்டிருந்தேன். அந்த "ஒரு காலம்" இன்றும் நெஞ்சை படபடக்க வைக்கிறது.


என் அலுவலகத்திற்கும், வீட்டிற்குமான தூரம் 6 நிமிட நடைத்தொலைவு. ஒரு ஞாயிறன்று காலையில் யாரோ ஒருவர் கதவு தட்டும் சத்தம் கேட்டது. தூக்கத்திலேயே கதவை திறந்தேன். பார்பதற்கு அந்த பெண்மணி தமிழ் போலவே காட்சி அளித்தார். அவர் கை பிடித்த ஒரு குழந்தை ஒன்று தலை நிமிர்ந்து என்னை பார்த்தது. தமிழாய் தெரிந்தாலும் நாங்கள் வாழ்வது அமெரிக்கா என்பதால், ஆங்கிலத்தில், "என் வீட்டு கதவை திறக்க கொஞ்சம் உதவ முடியுமா" என வினவினார்.

நான் வேறு ஆடை மாற்றிக்கொண்டு அவர் பின் சென்றேன். அவர் வீடு நான் வசித்த அதே ஏழாவது மாடியில் ஒரு மூன்று வீடு தள்ளி இருந்தது. அவர் புதிதாக குடி வந்தவராக இருத்தல் வேண்டும். நாங்கள் வசித்த குடியிருப்பில் இருக்கும் பொதுவான பிரச்சனை இது. ஒவ்வொரு கதவுக்கு பின்னும், இரண்டு பூட்டுகள் இருக்கும். ஒன்று auto lock என சொல்லப்படும் தானியங்கி பூட்டு. மற்றொன்று நாம் சாவியால் பூட்ட வேண்டிய பூட்டு.

நான் சாவி வாங்கினேன். இரண்டு மூன்று முறை முயற்சி செய்து பார்த்தேன். அவரின் கணவரிடம் இருக்கும் சாவியில் எந்த வித பிரச்சனையும் இல்லை என சொன்னார். கீழே சென்று குடியிருப்பு நிர்வாகிகள் யாரையாவது கூப்பிடலாமா என எண்ணிய போது சரியாக கதவு திறந்தது.

அவரிடம் இரண்டு பூட்டுகள் பற்றி தமிழிலேயே விளக்கி வந்தேன். அவர் என் முகத்தை கூட சரியாக பார்க்கவில்லை.

அடுத்த நாள் மதியம் வீட்டிற்கு உணவருந்த என் வீட்டை நோக்கி வந்துக்கொண்டிருந்தேன். அவர் திறக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தார்.
"என்னங்க திரும்பவும் திறக்க முடியலையா..?"
"ஆமாங்க. இப்பதான் மேநேஜ்மென்ட்ல வந்து பார்த்தாங்க, அவங்க வந்து பார்த்தப்புறம் மேல என் பிரண்ட் வீட்டுக்கு போயிட்டு வந்தேன். மறுபடியும் திறக்க முடியல."

நான் முயற்சி செய்தேன். இந்த முறை எனக்கு கொஞ்சம் எளிமையாகவே இருந்தது. வீட்டை திறந்து, உள்ளே சென்று அவரையும் உள்ளே அழைத்து, இரு பூட்டுகள் காண்பித்து, அவை எவ்வாறு வேலை செய்கிறதென விளக்கினேன். இந்த முறை அவர் நன்றாக கேட்டுக்கொண்டார். அவர் குழந்தை மெதுவாய் சிணுங்கியது.

அடுத்த நாள் நான் மதிய உணவு உண்ணும்பொழுது யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டது. "சாரிங்க, எப்ப பார்த்தாலும் உங்கள டிஸ்டர்ப் பண்றோம். ஐயோ, சாபிடரீங்களா...சாப்ட்டு வாங்க, நாங்க வெயிட் பண்றோம்."
"இல்லங்க பரவா இல்ல."

நான் கை கழுவி அவரிடம் சாவி வாங்கினேன். அவர் குழந்தை பசியில் இருப்பதுபோல் தோன்றியது.அவர் குழந்தையை சமாதானம் செய்தார்.இந்த முறை நான் முதல் முயற்சியில் மிக எளிதாய் திறந்தேன்.

"என்னங்க, நீங்க இவ்ளோ ஈசியா திறக்கறீங்க..."
"நீங்க வந்து எவ்ளோ நாள் ஆச்சு..?"
"ஏன்..? போன வாரம் வந்தோம்..."
"நான் ரொம்ப நாளா இங்க இருக்கேன் இல்லையா. அதன் இந்த பூட்டு ஏன் பேட்சு கேட்குது."

இந்த முறை மீண்டும் விளக்கினேன்.
"அமெரிக்கால லாக் வந்து இந்தியாவோட தலைகீழ். இதுல ரெண்டு பூட்டு இருக்குதுல்ல, அதுல ஆட்டோ லாக் மட்டும் போட்டா கூட போதும். அதனால நீங்க பூட்டும்போது சும்மா கதவ சாத்திடுங்க. அதுவே பூட்டிக்கும்."

நான் விளக்கியது போல் செய்து காண்பித்தேன்.
"இப்போ பூட்டிகிச்சா."
"ம்ம்."
"இப்போ திறக்கிறேன் பாருங்க. திறக்கும்போது இந்த நாப உங்க பக்கம் இழுத்துக்கங்க."
நான் கதவின் கைப்பிடி இழுத்து எளிதாக திறந்து காண்பித்தேன். கதவை மீண்டும் மூடி அவரை திறக்க சொன்னேன்.

அவர் முயற்சி செய்தார். அவர் முயலும்பொழுது சரியாக பூட்டை திறந்தார். ஆனாலும் பூட்டு திறந்தவுடன் உடனே கைப்பிடியை விட அது மீண்டும் பூட்டிக் கொண்டது.
"ஓ. உங்க பிரச்சனை என்னனு புரியுது. பிடிச்ச நாப கதவு திறக்கற வரை விடாதீங்க. இப்போ முயற்சி பண்ணுங்க."

இந்த முறை அவரே கதவு திறந்தார். ஆயினும் இன்னும் அவருக்கு அது லாவகமாக ஏற்படவில்லை.

"இது நல்லா வர்றவரை நீங்க ஆட்டோ லாக்-கே மட்டும் போடுங்க. இன்னொரு லாக் போடவேணாம்."
"ரொம்ப தேங்க்ஸ்ங்க"

நான் என் வீடு நோக்கி சென்றேன்."இருடா செல்லம், அம்மா மம்மு கலந்து தர்றேன்" குழந்தையை தூக்கிக்கொண்டு அவர் வீட்டினுள் நுழைந்தார்.
அதற்கு பிறகு நான் அவரை சந்திக்கவில்லை.

ஒரு நாள் இரவு 8 மணி. கதவு தட்டும் சத்தம்.
"சாரிங்க, என் வீட்டுக்காரர் வேலை விஷயமா பக்கத்துக்கு சிட்டிக்கு போய்ட்டார். போனவர் ரெண்டு சாவியையும் எடுத்துட்டு போய்ட்டார். நான் இவ்ளோ நேரம் மேல என் பிரண்ட் வீட்ல இருந்த போது எனக்கு நெனப்பே இல்ல. கீழ மேநேஜ்மென்ட்டும் மூடி இருக்கு."
"செக்யூரிட்டில பார்த்தீங்களா..?"
"இல்லங்க"

நான் கீழே சென்றேன். செக்யூரிட்டி "எமெர்ஜென்சி மெயின்டெநன்ஸ்" அழைக்கச் சொன்னார்.

அவர்களை கூப்பிட்டேன். அவர்கள் சாவி காலையில்தான் கிடைக்கும் என கூறினர்.
"உங்க பிரண்ட் மேல இருக்காங்களா..?"
"நீங்க கேட்குறது புரியுதுங்க, அவங்க வெளியூர் கிளம்பிட்டாங்க, அவங்களுக்கு கொஞ்சம் திங்க்ஸ் எல்லாம் அடுக்கிட்டு இருந்ததுலதான் சாவி விஷயத்தையே மறந்துட்டேன். "
"சரி. என்ன பண்ணலாம்."
"......"
"உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லனா நீங்க என் வீட்ல தூங்கலாம். நான் என் பிரண்ட் வீட்ல பொய் படுத்துக்கறேன். காலைல கீழ போய் விஷயம் சொன்னா அவங்க உங்க வீட்ட திறந்துகொடுப்பாங்க."

நான் அவருக்கு படுக்கை ஏற்படுத்தி, அவர் குழந்தைக்கு தேவைப்பட்டால் வேண்டிய பால், அவருக்கு தேவைப்பட்டால் வேண்டிய உணவு எல்லாம் என் குளிர் சாதன பெட்டியில் வைத்து கிளம்பினேன்.

"நான் என் சாவிய இங்க வச்சிட்டு போறேன். காலைல கதவு தட்டறேன். உங்க போன் நம்பர் கொடுங்க. அதையும் எதுக்கும் வச்சிக்குறேன்"

காலை நான் கதவு தட்டிய உடனையே அவர் திறந்தார். முன்னரே எழுந்திருப்பார் போல.
"காப்பி..?"
"இல்லங்க பரவா இல்ல. பையனுக்கு மட்டும் கொஞ்சம் பால் எடுத்துகிட்டேன்"
நான் இருவருக்கும் காப்பி கலக்கினேன்.

"சரிங்க நான் ஆபீஸ் கிளம்புறேன். இன்னொரு அரை மணிநேரத்துல கீழ ஆள் வருவாங்க. நீங்க போகும்போது சும்மா சாத்திட்டு போங்க"
"ரொம்ப தேங்க்ஸ்ங்க"

அன்று மாலை மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்டது.
"என்ன ஆச்சு..?"
"பயப்படாதீங்க. இன்னைக்கு நீங்க எங்க வீட்டுக்கு சாப்பிட வரணும்."
"அட பரவா இல்லங்க."
நல்ல உணவு. சாப்பிட்டு வந்தேன்.

ஒரு ஒரு வாரம் ஆனது. மீண்டும்.. அவராகத்தான் இருக்க வேண்டும்.திறந்தேன்.
"டேய்.. ............. நீதான் என் பொண்டாட்டிய வச்சிருக்கியா..? ஏன்டா இப்படி அழயறீங்க..? உங்களுக்கு எல்லாம் வேற வேலை இல்லை."

அக்கம் பக்கத்தில் இருந்த வெள்ளைக்காரர்கள், இந்தியர்கள் வெளியே வந்தார்கள்.
"ஒரு நிமிஷம் உள்ள வர்றீங்களா சார்..?"
"என் பொண்டாட்டிய மொதல்ல உள்ள கூப்பிட்ட, இப்போ என்ன கூப்படரியா..? என் பொண்டாட்டி செல் போன்ல என்ன ............. உன் நம்பர் இருக்கு..? வெளிய ஊர் சுத்தரீங்களா ரெண்டு பேரும்..?"

எனக்கு கோபத்தை விட இந்த காலத்தில் கூட இந்த மாதிரி ஆட்கள் இருப்பது வியப்பை தந்தது. இப்பொழுது நான் என்ன பேசினாலும் அவரின் மனைவிதான் பாதிக்கப்படுவார்கள். நான் மறுபேச்சு பேசவில்லை.

"பேசுடா. உண்மை தெரிஞ்சிடுச்சுன்னு அசிங்கமா இருக்கா..? இது மாதிரி எத்தன குடும்பத்த தாலி அத்துருக்க..?"

நான் பேசாதது அவனை அமைதி அடைய வைத்ததுபோல தெரியவில்லை.
நேரே அவன் வீட்டுக்குள் சென்றான். அவன் மனைவியை வெளியே இழுத்துவந்து, "இந்தாடா இவளே நீயே வெச்சுக்க. போடி...அவன்கூடவே போ.."

அவர் முகம் முழுக்க அவன் கைரேகைகள். முடி எல்லாம் களைந்து இருந்தது. இனியும் பொறுமை காத்து ப்ரயஜோனமில்லை. நான் அவனை நோக்கி போகவும் உள்ளே ஒரு அமெரிக்கா காவலர் நுழையவும் சரியாக இருந்தது.

அவன் அப்படியே அமைதியானான். வந்தவர் அவனிடம் சில கேள்விகள் கேட்டார். அவன் மனைவியிடமும் சில கேள்விகள் கேட்டார். நாலு வீடு தள்ளி இருந்த பெரியவர் தான்தான் காவலரை வர சொன்னேன் என்றார். மேலும் அவர் அவன் அந்த பெண்ணை தாக்கியதாகவும் புகார் கொடுத்தார். அவன் வந்த காவலர்களால் அழைத்து செல்லப்பட்டான். காவலர் இன்னும் 5 நிமிடத்தில் முதலுதவி வண்டி வரும் என்றும், அதில் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். செய்வதறியாது அவர் மனைவி திகைத்து நின்றார்.

குழந்தையையும் தூக்கிக்கொண்டு, நாங்கள் மருத்துவமனை சென்றோம். என்னை வெளியே இருக்க சொல்லி அவர் மட்டும் அழைத்து செல்லப்பட்டார்.

நிறைய இடங்களில் காயம் போல. நிறைய தழும்புகள் வேறாம். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த குழந்தையின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவருக்கு ஒரு அரை வழங்கப்பட்டது. ஆனால் அதை மறுத்து உடனடியாக வீட்டுக்கு போக வேண்டும் என்றார். நான் மருத்துவமனையில் பேசினேன். நாங்கள் வீட்டுக்கு சென்றோம். நாங்கள் வீடு அடைவதற்குள் குழந்தை உறங்கிப்போனான்.

"யாருக்காவது போன் பண்ணவா உங்க வீட்ல..?"
"............"
"உங்களைதான் கேட்குறேன்.."
"இல்லங்க வேணாம். அவர எப்ப விடுவாங்க. அவரு ஒன்னும் தப்பு பண்ணலன்னு போய் நாம சொல்ல முடியுமா..?"

எனக்கு இந்த மாதிரியான சட்டங்கள் பற்றி தெரியவில்லை.
"நான் முயற்சி பண்றேங்க. என் கிளையன்ட் யார்டயாவது பேசி என்ன பண்ணலாம்னு பாக்குறேன். நீங்க இப்பைக்கு ஒன்னும் கவலை படாதீங்க."

இந்த நேரத்தில் என் வெள்ளைக்கார முதலாளிகளிடம் பேச முடியாது. காலை முதல் வேலையாக இதை பார்க்க வேண்டும்.
இப்பொழுதே 911 எண்ணிற்கு தொலைபேசியில் பேசிப்பார்த்தால் என்ன என தோன்றியது. நான் விபரம் முழுவதும் சொன்னேன். அவன் எங்கு வைக்கப்பட்டிருக்குறான் என தெரிந்து கொண்டேன்.

அவரை அவர் அறையில் விட்டு, நான் என் அறைக்கு வந்தேன்.
காலை கதவு தட்டப்பட்டது. அவராகத்தான் இருக்கும்.
காவலர்கள்!!
"எஸ்"

வெளியே வந்தேன். நிறைய காவலர்கள் அவர் வீட்டில்.அவனை மீண்டும் அழைத்து வந்துவிட்டார்களா..? குழந்தை அழுதது. குழந்தையை ஒரு காவலர் தன கையில் வைத்திருந்தார்.

"என்ன ஆனது..."
"அவர் மேலிருந்து கீழே குதித்துவிட்டார்."
"......................."
"R u alright..?"

எனக்கு மயக்கம் வந்தது. அவருடைய வீட்டில் யாரையாவது எனக்கு தெரியுமா என காவலர் வினவினார்.அவருடைய செல் போனில் இருந்த எண்கள் முயற்சித்து கடைசியாக அவரின் மாமனாரிடம் பேசினோம். நான் எல்லா விசயமும் சொன்னேன்.
"அடப் பாவி, நல்லா இருந்த குடும்பத்த நாசமாக்கிட்டியே.."யாரும் புரிந்து கொள்வதாக தெரியவில்லை.

அவரின் அப்பா, அம்மாவிடம் பேச முயற்சித்தோம். அவர்கள் எங்கிருப்பர்கள் என தெரியவில்லை.அவன் அழைத்துவரப்பட்டான்.

நாந்தான் அவன் மனைவியை கொலை செய்திருக்க கூடும் என சொன்னான். அவன் மனைவியை அவன் காதல் திருமணம் செய்துள்ளான் என்பதும், அவர் ஒரு அனாதை விடுதியில் வளந்தார் என்பதும் அப்பொழுதே தெரிந்தது.

சில மாதங்கள் வழக்கு நடந்தது. குழந்தை அரசு கவனிப்பில் இருந்தது. அவன் மனைவியின் இறப்புக்கு காரணம் அவன்தான் என முடிவானது.

சாப்பிட்டு முடித்தேன். நேற்றுதான் எல்லா வேலைகளும் முடிந்தது. அவர் வீட்டை பார்த்துக் கொண்டே கிளம்பினேன். நேற்றே அந்த வீட்டை அவருக்காக திறந்தது போல் இருந்தது.

நான் வக்கீல் வீட்டுக்கு சென்றேன். அவர் எல்லாம் சரி பார்த்தார். நாங்கள் இருவரும் அந்த குழந்தை கவனிப்பு மையம் சென்றோம்.

அவர் கடைசியாக என்னிடம், "U sure u want to do this..?" என்றார்.

அவனை தூக்கிக்கொண்டு வீடு வந்தேன். அந்த குழந்தை அது இருந்த வீடு பார்த்து பார்த்து கதவை நோக்கி கை நீட்டியது.

Monday, May 11, 2009

அம்மா (கதை - 7)

Share |
இன்று உலகம் முழுக்க அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரின் வாழ்விற்கும் ஆரம்பப் புள்ளி அவள்தான் என்பதை விட ஒரு சிறப்பு அவளுக்கு என்ன இருக்க முடியும். ஆனாலும் அதையும் தாண்டி ஒவ்வொரு தாய்க்கும் ஒரு மகனின் பார்வையில் ஒரு சிறப்பம்சம் இருக்கத்தான் செய்கிறது.
இது என் தாயைப் பற்றிய சிறப்பம்சம்.

எங்கள் வீட்டில் நானும், என் தங்கையும். அப்பா ஒரு அரசு வேலையில் இருக்க, என் அன்னை வீட்டை கவனித்து வந்தார்.

அப்பொழுது நான் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேர வேண்டிய நேரம் வந்தது. மதுரையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்க்கப்பட்டேன். இயந்திரவியல் பிரிவு. என் அப்பாவும், அன்னையும் வந்து என்னை சேர்ப்பித்து, விட்டுச் சென்றனர்.

முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. வெள்ளிக்கிழமை வந்தால் என் கால்கள் மாட்டுத்தாவநியில்தான் நிற்கும். என் ஊருக்கு 3 மணிநேரம்தான்.

ஒவ்வொரு புதியவரும், நண்பனாய் மாற எல்லாம் பழகிப்போனது, சீனியர்சின் ராகிங் உட்பட. சென்னை, கோயம்புத்தூர் போன்ற ஊர்களில் இருந்து வந்த மாணவர்களால் வாரவாரம் ஊருக்கு செல்ல முடியவில்லை.
"ஏன்டா நாங்க எல்லாம் எல்லா வாரமுமா ஊருக்கு போறோம்..?"

அந்த வாரம் நான் ஊருக்கு செல்லவில்லை.
"அம்மா, பிரண்ட்ஸ் எல்லாம் ஊருக்கு போவேணாம்னு சொலறாங்கம்மா. அவங்களுக்கு தனியா போர் அடிக்குதாம்."

விடுதியிலேயே தங்கி விட்டேனே தவிர, ஊருக்கு போயிருக்க வேண்டும் என்றே யோசித்துக்கொண்டிருந்தேன். அவர்கள் எல்லோரும் விடுதிக்கு உள்ளேயே கிரிக்கெட் விளையாடினார்கள். சிலர் பீர் அருந்தினார்கள். எனக்கு அதில் அவ்வளவு ஆர்வமில்லை.

அடுத்த வாரம் எப்பொழுது வரும் என காத்துக்கொண்டிருந்தேன்.
இரண்டு வாரங்கள் கழிந்தது. "டேய், போன வாரம்தானே ஊருக்கு போன.."
"ஆமாண்டா. ஊருக்கு போனேன். ஆனா இங்க இருக்கப்போ மட்டும் என்ன பண்ணேன்..? நீங்க பாட்டுக்கு கிரிக்கெட் விளையாண்டீங்க...ஊருக்கு போயிருந்தா கூட நல்ல சாப்பாடு, ஒரு படம் பார்த்திருப்பேன்..."
"இதான் உன் பிரச்சனையா.."

வெள்ளிக்கிழமை இரவு. அம்மா மெஸ்ஸில் சாப்பிடோம்.
"சொல்லு மாப்ள. என்ன படத்துக்கு போவோம்..?"
"செகண்ட்-சோவா..??"
"யார்ரா இவன். இவனுக்காக நம்ம வந்தா, பச்ச கொளந்த மாதிரி பேசிட்டு இருக்கான்.."

அண்ணாமலையில் முதல்வன் பார்த்து, ஆட்டோ பிடித்து ஹாஸ்டல் வந்தோம்.

சனிக்கிழமை எழுந்தபோது மணி 12. சாப்பிட்டு முடித்து எல்லோரும் கிரிக்கெட் விளையாடப்போனார்கள். நானும் விளையாட வேண்டி வந்தது.

கடுமையான உடல் வலி வந்தது.
"டேய், ஏதாவது பாம் வச்சிருக்கியா, உடம்பு வலி பின்னுது."
"என்னடா இதுக்கே, இப்படி ஆயிட்ட. இதுக்கெல்லாம் நம்ம மணி ரூம்தான். அங்கதான் எல்லா மருந்தும் இருக்கும்."

மணி அறையில்தான் எல்லோரும் பீர் அருந்துவார்கள். மணி ஏற்கனவே போதையில் இருந்தான். நான் மருந்து தேடினேன்.
"மாப்ள, நீ என் நண்பனா இல்லையா..?" இது மணி.
"ஏன்..?"
"சொல்லு மாப்ள.."
"ம்ம்."
"அப்படின்னா இந்த பீர் குடி."

எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் என்பதை விட, இப்பொழுது யோசித்தால் நான் விரும்பித்தான் குடித்திருப்பேன் என தோன்றுகிறது.

இரண்டு வாரம், மூன்று வாரம் ஆனது. மூன்று வாரம் 1 மாதமானது.

எங்கள் கல்லூரியில் மட்டும், முதலாம் ஆண்டும் இரண்டு செமஸ்டர். முதல் செமஸ்டர் வந்தது. ஓரளவுக்கு நல்ல மதிப்பெண்கள் எடுத்தேன்.
விடுதி வட்டாரத்தில் அது "டாப் மார்க்" ஆனது.

பீர் மாறி சில நேரங்களில் விஸ்கி, பிராந்தி என குடிக்க ஆரம்பித்து இருந்தோம். இரண்டாம் செம்மும் வந்தது.
"உனக்கென்னடா..எங்களோட சுத்திகிட்டே சூப்பர் மார்க் எடுத்திருவ.."

பரீட்சை முடிந்து எல்லோரும் கொடைக்கானல், ஊட்டி, சென்னை என ஊர் சுற்றினோம். நான் வீட்டை சுத்தமாக மறந்து போனேன்.

இம்முறையும் நான் "டாப் மார்க்" அவர்களை பொறுத்தவரை. விடுதியில் இருந்து அரியர் இல்லாமல் தப்பித்த சிலரில் நானும் ஒருவன் ஆனேன். 3 பேப்பரில் ஜஸ்ட் பாஸ். எல்லோரையும் கூப்பிட்டு HOD கண்டித்தார்.

"நீ போன தடவ, நல்லாதானே படிச்ச...இப்ப என்ன ஆச்சு உனக்கு..?"

நாங்கள் சீனியர்ஸ் ஆனோம். எங்கள் கல்லூரியின் மாணவ்ர்கள் சட்டப்படி, விடுதியில் இருக்கும் முதலாம் ஆண்டு மாணவர்களை விடுதியில் இருப்பர்வகள் மட்டுமே ராகிங் செய்ய முடியும்.

அதே போல்தான் தினம் வந்து செல்வோருக்கும்.

இந்த சட்டம் மீறப்பட்டது. சிவில் படிக்கும் மாணவன் ஒருவன், எங்கள் விடுதி மாணவனை ராகிங் செய்தான்.

"மச்சான், இந்த சிவில் ............ நாம யாருன்னு காட்டணும். இனி ஒரு ஜூனியர் டே-ஸ்காலர் கூட விடாதீங்க. எல்லாரையும் சாவடீங்க." மணி எங்களுக்கு உத்தரவு பிறப்பித்தான்.

ராகிங் செய்த மாணவன் தாக்கப்பட்டான். ஜூனியர் டே-ஸ்காலர் எங்களை பார்த்து நடுங்கினர்.

தாக்கப்பட்ட மாணவன் ஆள் சேர்க்க, விஷயம் அவன் வீட்டில் தெரிந்து, நாங்கள் எல்லோரும் 15 நாட்களுக்கு தற்காலிகமாக நீக்கப்பட்டோம்.

கல்லூரியில் இருந்து நீக்கப்படாலும், விடுதியில் தங்க அனுமதி கிடைத்தது. விடுதியில் இருக்கும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு எங்கள் மீது பயம் ஏதும் இல்லாமல் இருந்தது.

அன்று விடுமுறை. முதலாம் அண்டு மாணவன் ஒருவன் ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தான். எங்களை பார்த்தும் பார்க்காததுபோல் இருந்தான்.
"டேய்....இங்க வா....." "நீ அப்படியே கிளம்பு.."
அந்த பெண்ணை கிளம்ப செய்ததில், அவனுக்கு கோபம்.

"என்னங்க....நீங்க யாரு அவள கிளம்ப சொல்றதுக்கு..?"
"......இந்த வயசுலேயே உனக்கு ஜாரி கேட்குதா...? " மணி பொளேர் என ஒரு அரை வைக்க, அவன் மயக்கமானான்.இதை பார்த்துக்கொண்டிருந்த அந்த பெண் ஓட்டம் பிடித்தாள்.

இந்த முறை ஒரு மாதம் நீக்கப்பட்டோம். அதோடு பெற்றோரையும் அழைத்து வர வேண்டிய காட்டயத்திற்கு ஆளானோம்.

அப்பாவிடம் செய்யாத தவறுக்கு நான் மாட்டிக்கொண்டேன் என பொய் சொல்லி, அவரை அங்கிருந்தே பேசச் செய்தேன்.

ஒரு வழியாய் பிரச்சனை ஓய்ந்தது. அடுத்த செமஸ்டர் வந்தது.

இந்த முறை 10 நாட்களே விடுமுறை இருந்தது.

பரீட்சை முடிவு வந்தது. நான் எல்லா பாடங்களிலும் தோல்வியை சந்தித்தேன். ஒரு பாடத்தில் கூட இன்டெர்நலில் முப்பதிற்கு 10 மதிப்பெண் கூட வாங்கவில்லை. கல்லூரி விட்டு வெளியே வந்தேன். மணி பத்தவைத்திருந்த சிகரெட் வாங்கி புகைத்தேன்.

" ...... வேணும்னே குத்திருக்கானுங்க மாப்ள.."

என்னுடைய வகுப்பறைக்கு வெளியே எல்லா பாடங்களிலும் தோல்வி அடைந்த என்னையும், மணியையும் எந்த ஆசிரியரும் உள்ளே விடக்கூடாது என்று அறிவிப்பு இருந்தது.

HOD பார்க்க சென்றோம்.
"அப்பாவ கூட்டிட்டு வாங்க. நாங்க TC ரெடி பண்ணியாச்சு."
"சார்..."
"வெளியப் போ.."

வேறு வழியேயில்லை.
அப்பா வந்தார். HOD என்னை வெளியே நிற்கச் சொன்னார்.

அப்பா வெளியே வந்தார்.
"கிளம்பு. ஊருக்கு போகலாம்."
"அப்பா..."
விடுதியிலும், பேருந்திலும் ஒன்றும் பேசவில்லை.

வீட்டுக்குள் சென்றதும் பளார் என ஒரு அடி விழுந்தது. என் அப்பா என்னை இதுவரை கைநீட்டி அடித்ததில்லை.
"உன் வாழ்க்கை நல்ல இருக்கணும்னா படி"

அம்மா ஓடி வந்து என்னை தாங்கிப்பிடித்தார்.
அப்பா அம்மாவிடம், "உனக்கு தேவையான துணிமணி எடுத்துக்க. ரெண்டு பெரும் மதுரை கிளம்புங்க. ஒரு ரெண்டு நாளைக்கு நீ ஹாஸ்டல் கெஸ்ட் ஹவுஸ்ல தங்கிக்க. அதுக்குள்ள இவன காலேஜ் பக்கத்தில ஒரு வீடு பார்க்க சொல்லு. இனி அவன் நல்லா வர்றதும், நாசமா போறதும் உங்க ரெண்டு பேர் கைல."

நான் என் அறைக்கு சென்றதும் அப்பா அம்மா பேசுவது கேட்டது. "தண்ணி, சிகரெட் ஒன்னு விடல. ராக்கிங் வேற பண்ணி இருக்கான். என்ன பிரச்சனடி இவனுக்கு..?"

அம்மா என்னிடம் சகஜமாய்தான் பேசினார். மதுரை வந்து ஒரு வீடு பிடித்தேன்.
கல்லூரி சென்றேன். மணியின் அப்பாவும் வந்து போயுள்ளார்.
"தம் வாங்க கூட காசில்ல மாப்ள.."
"விட்றா..நான் வாங்கித்தரேன்."

நானும் மணியும் நன்றாக குடித்தோம்.
"மாப்ள, இதோட ஹாஸ்டல் போமுடியதுரா..."எங்க அப்பா வார்டன், வாட்ச்மன் எல்லார்டையும் சொல்லிட்டு போயிருக்கான்.

எங்கள் வீட்டுக்கு போனோம்.அம்மா உறங்காமல் காத்திருந்தார்.
"அம்மா. இது மணி."
"உள்ள வாப்பா."
இருவருக்கும் அம்மா உணவு பரிமாறினார்.

"மணி, உங்க அப்பாவும் வந்தாரப்பா..?"மணி தயங்கினான்.
"நீ கெட்டுப்போனதுக்கு என் பையன்தான் காரணம்னு HOD சொன்னாரா..?"மணி பதில் பேசவில்லை.
"என்னடா அப்பிடியா..?" இது நான்.

"உங்க அப்பாட்ட என்ன சொன்னாங்கன்னு தெரியுமா உனக்கு..?" இது அம்மா.
நாங்கள் இருவரும் வருகிற பரிட்சையில், ஒரு பாடத்தில் கூட தேர்ச்சி பெறப்போவதில்லை. கல்லூரிக்கும் சரியாக வரப்போவது கிடையாது. சென்ற பருவத்தில் வந்த நாட்கள், இந்த பருவத்தில் செல்லும் நாட்கள் எல்லாம் மொத்தம் கணக்கு செய்து வருகை பதிவேடு காரணம் காட்டி எங்களை எங்கள் பல்கலைக்கழகம் மூலியமாக வெளிய அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
அம்மா கொஞ்சம் கூட கோபம் காட்டாமல் எல்லாம் சொல்லி முடித்தார்.

"எனக்கு ஒரே ஒரு ஆசைதான்பா. நாளைக்கு உன் தங்கச்சி கல்யாணம்போது, என்னால முடிஞ்சது இதுப்பான்னு நீ கொடுத்தா, நாங்க எவ்வளவு சந்தோசப்படுவோம்."

எங்கள் இருவருக்கும் படுக்கை தயார் செய்து அவரும் உறங்க சென்றார்.
எங்களுக்கு தூக்கம் வரவில்லை. வீட்டின் வெளியே வந்து அமர்ந்தோம். அம்மா உறங்கிவிட்டார் என முடிவி செய்த மணி சிகரெட் பற்ற வைத்தான்.

"அவனுங்க வேணும்னே நம்மள குத்தறாங்க ....நம்ம என்னடா தப்பு பண்ணோம்..?"

காலை எங்கள் இருவருக்கும் அம்மா உணவு பரிமாறினார்."மணி. உன் பிரண்ட யாராவது வம்பிழுத்தா....நீ என்ன பண்ணுவ..?"
"சாவடிசிருவேன்மா..."
"உன்ன யாரவது வம்பிழுத்தா உங்க அப்பா அம்மா அந்த பையன என்ன பண்ணுவாங்க..?"

என்னிடம் 10 ரூபாய் நீட்டினார்.
"3 சிகரெட் வாங்கிக்க. காலேஜ்ல இருந்து நேரா வீட்டுக்கு வா."
"மணி. என் பையன நீ ஒரு நல்ல பிரண்டா நெனச்சா, நீயும் இங்கயே தங்கலாம். இல்லாட்டி இதுவே நீ இங்க வர்றது கடைசியா இருக்கும்."

ரெண்டு பேருக்கும் ஒன்னு சொல்றேன்.
"யாராவது உங்கள பழிவாங்குறதா நெனச்சா, உங்கள விட முட்டாள் யாருமே கிடையாது.."

பெட்டி படுக்கை எடுத்துக்கொண்டு மணியும் என்னுடன் வந்தான். அவனுக்கும் அம்மா 10 ரூபாய் கொடுத்தார்.

அடுத்த செமஸ்டர் வந்தது. இந்த செம் பேப்பர் காலையில் இருக்க, அரியர் பேப்பர் மதியம் இருக்கும். இரவு கண் விழித்து படிப்போம். எங்களுடன் அம்மாவும் அமர்ந்திருப்பார். நாங்கள் இருவரும் ஒரு 4 மணிப்போல் தூங்குவோம். அம்மா அதற்குள் காலை உணவு செய்து எங்கலுக்கு கொடுப்பார். மதிய உணவு சமைத்து கல்லூரிக்கே வந்து கொடுத்துப்போவார்.

நானும், மணியும் சேர்ந்து படித்தோம். அரியர் பேப்பரில் நான்கை இந்த முறையும், மீதி நான்கை அடுத்த முறையும் எழுத அம்மா சொன்னார்.

தேர்வு முடிந்ததது. நான் அம்மாவை ஊருக்கு போக சொன்னேன். அம்மா கேட்கவில்லை. நாங்கள் மூவரும் வீட்டிலயே இருந்தோம். அந்த 4 பாடம் படித்தோம். எங்கள் விடுமுறை நேரத்திலும் அம்மா அவ்வளவாக ஓய்வு எடுக்கவில்லை.

முடிவுகள் வந்தது. இந்த செமஸ்டரின் எல்லா பாடங்களிலும், அந்த 4 பாடங்களிலும் தேர்சிப்பெற்றோம்.

அப்பா முதல் முறையாக எங்கள் வீட்டிற்கு வந்தார். அம்மாவை கிளம்பச்சொன்னார். தங்கையும் வந்தாள். அம்மா தான் வந்த வேலை இன்னும் முடியவில்லை என சொல்லி மறுத்துவிட்டார். தங்கையிடம் தனியாக பேசினார்.

ஐந்தாவது செமஸ்டர். இந்த முறையும் காலை ஒரு பேப்பர். மதியம் ஒன்று. எல்லாம் தேர்ச்சி அடைந்தோம்.

HOD எங்களை அழைத்தார்.
"என்னடா படிக்கிறீங்க போல இருக்கு"
எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியாய் இருந்தது. அம்மாவிடம் சொன்னேன். அம்மாவின் முகத்தில் மகிழ்ச்சி இல்லை.

"இப்போ நீ எவ்ளோ பெர்செண்ட் வெச்சிருக்க..?"
"மொத செம்ல 70, ரெண்டாவது 60. மூனாவது...."
"பரவா இல்ல சொல்லு..."
"52"
"நாலு, அஞ்சு..?"
"55, 58"
"மொத்தம்..?"
"59"
"உங்களுக்கு எப்போ கம்பஸ்..?"
"7th செம் ஆரம்பத்திலேயே வந்துரும்.."
"எவ்ளோ வேணும் கம்பஸ்க்கு..?"
"60 - மினிமம். ஆனா நம்ம விட நெறைய பேர் இருந்தா அது ஜாஸ்தி கூட ஆகலாம்."
"சரி. போய் சாப்பிடு"

யோசித்து பார்த்தேன். இரண்டு தேர்விலும் 12 பாடங்கள் எழுதி உள்ளேன். இந்த முறை 8. ஏன் நான் முயற்சி செய்யக்கூடாது?

ஆறாவது செம்மில் நான் எடுத்தது 80 சகதிவிகிதம். எல்லோரும் புகழ்ந்தார்கள். என் மொத்த சகதிவிகிதம் 62.5 ஆனது.

அம்மா இப்பொழுதும் மகிழ்ச்சியாய் இல்லை.
"கம்பஸ்க்கு படிக்க ஆரம்பி."

என்னுடைய இயந்திரவியல் துறையில் நாந்தான் முதல் ஆளாக வேலைக்கு தேர்வு பெற்றேன்.இனிப்பு வாங்கி வீட்டிற்கு வந்தேன். அம்மா உறங்கிக்கொண்டிருந்தார். முதல் முறையாக அம்மா உறங்குவதை நான் பார்த்தேன்.

அம்மா என்னை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்தார்.
"நான் ஊருக்கு கிளம்புறேன்பா. செம் லீவுக்கு வீட்டுக்கு வா."

நானும் அம்மாவும் நல்ல உணவகத்தில் உணவருந்தினோம். அம்மா பேருந்தில் ஏறியவுடன், அம்மாவிடம் ஒரு மோதிரம் கொடுத்தேன்.
"என்னடா இது. யார்டயாவது கடன் வாங்கினியா..?"
"இல்லம்மா. நீ என்னைக்கு 10 ரூவா கொடுத்தியோ அன்னைக்கே நான் சிகரெட் பிடிக்கிறத நிருத்திட்டேன்மா. இது தங்கச்சிக்கு. நான் வாங்குன மொத நகை. என் தங்கச்சி கல்யாணம் என் காசில மட்டும்தான்மா நடக்கும்."

Thursday, April 30, 2009

அரசு (கதை - 6)

Share |
ஏப்ரல் 26 ஞாயிற்றுக்கிழமை மதியம், சென்னை

தொலைக்காட்சிகள் எல்லாம் அவசர செய்தி வாசித்தது.மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் சில நுண் உயிரினிங்கள் கலந்திருக்கலாம் என்றும், ஆகையால் அனைவரும் குடிநீரை ஒரு நிமிடமாவது காய்ச்சி குடிக்க வேண்டும் என்றும் சென்னை குடிநீர் வாரியம் கேட்டுக்கொண்டது. அரசு, குடிநீர் வாரியத்துடன் இணைந்து, விரைந்து செயல்பட்டு இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் என்றும் அந்த அரசு குறிப்பில் கூறப்பட்டது.

ஏப்ரல் 26 ஞாயிற்றுக்கிழமை இரவு, சென்னை

தொலைக்காட்சி, மாலை நாளிதழ்கள், வானொலி என எல்லா சாதனங்களும் இந்த தகவல் எல்லோருக்கும் சேர வேண்டும் என முனைப்புடன் செயல்பட்டது.மேலும் இந்த பிரச்சனை எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்றும் விளக்கம் கொடுத்தது.

மாநில முதல்வர் எல்லோருக்கும் விடுக்கும் வேண்டுகோள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

சென்னை குடிநீர் வாரியத்தின் தலைவர் பேட்டியும் ஒளிபரப்பானது.

கே: நான் எதற்காக தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும்?
ப: சென்னை குடிநீர் வாரியத்தின் நீர்த்தேக்கம் எண் ஆறில் நுண் உயிரினிங்கள் இருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம். ஆகையால் மக்களின் பாதுகாப்பு கருதி, தண்ணீரை காய்ச்சி குடிக்க கேட்டுக்கொள்கிறோம்.

கே: தண்ணீரை காய்ச்சி குடிப்பதால் இந்த உயிரினிங்கள் அழிக்கப்படுமா?
ப: தண்ணீரை காய்ச்சி குடிப்பதால் இந்த உயிரினிங்கள் கொல்லப்படும்.

கே: எவ்வளவு நேரம் நான் தண்ணீரை காய்ச்ச வேண்டும்?
ப: உணவுக்கு உபயோக்கிபடும் தண்ணீரையும், குடிக்கும் தண்ணீரையும் ஒரு நிமிடமாவது நன்றாக காய்ச்ச வேண்டும்.

கே: அந்த தண்ணீரில் குளிப்பது, பல் துலக்குதல் போன்றவற்றால் எதாவது பிரச்சனை ஏற்படுமா?
ப : இல்லை. தண்ணீரை உட்கொள்வதால் மட்டுமே பிரச்சனை வர வாய்ப்புள்ளது.

கே: வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் போன்றோர் ஏதாவது தனியாக செய்ய வேண்டுமா?
ப : இல்லை. தண்ணீரை காய்ச்சுவது மட்டுமே போதுமானது.

கே : இந்த நுண் உயிரினிங்கள் எப்படி இருக்கும்?
ப : இவற்றை நம் சாதரண கண்களினால் காண முடியாது. மைக்ரோஸ்கோப் எனப்படும் நுண்காட்டி வழியாக பார்த்தல் ஒரு கொண்டை ஊசி போல காணப்படும்.

கே : இவற்றை உட்கொண்டால் உண்டாகும் பாதிப்புகள் என்ன?
ப: இது வரை பாதிப்புகள் கண்டுபிடிக்க முடியவில்லை. நாங்கள் தொடர்ந்து முயற்சிக்கிறோம்.

அது ஒரு தேவையான, விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேட்டியாக தோன்றியது. மேலும் பிரச்சனையின் உக்கிரமும் புரிந்தது.
"தெரிஞ்ச பேய்நாலும் பரவா இல்ல. தெரியாத பிசாசா இருக்கே இது." மக்களின் கவலை வெளிப்பட்டது.

வீட்டில் இருப்பவர்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்கலாம். ஆனால் வெளியே அலைவோரின் நிலைமை பற்றி கேள்வி எழுந்தது.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் இன்னொரு அரசு செய்தி வெளியானது.
அரசு கனிம நீர் (mineral water) உற்பத்தியாளர்களிடம் தண்ணீர் புட்டிகளின் விலையை குறைக்க சொல்லி இருப்பதாகவும், அதற்கு அவர்கள் இது வரை விற்ற விலையில் இருந்து பாதி விலைக்கு விற்க முடிவு செய்திருப்பதாகவும் அது கூறியது.

மேலும் சில நுண்ணலை அடுப்பு(microwave oven) உற்பத்தியாளர்களும் தங்களின் விலையை குறைத்துள்ளதாக கூறினர். கலன் வாயு(Cylinder gas) பற்றி கவலை கொண்ட மக்களுக்கு இது ஒரு நல்ல மாற்றாக தோன்றியது. நுண்ணலை அடுப்பில் தண்ணீர் காய்ச்சுவது சிக்கனமானதாக தோன்றியது.

திங்கட்கிழமை காலை வெளியான அரசு செய்தி குறிப்பில், கலன் வாயுவின் விலையை குறைக்க சொல்லி மத்திய அரசுக்கு மாநில அரசு கோரிக்கை ஏற்படுத்தும் என்றும், ஏற்கனவே நிறைய மக்கள் நுண்ணலை அடுப்பு வாங்குவதால் உடனடியாக மின்சார கட்டணத்தை முடிந்தவரை அரசு குறைத்துள்ளதாகவும் வெளியானது. இந்த மின்சார கட்டண குறைப்பு பிரச்சனை முடியும் வரை தொடரும் என்றும் சொன்னது.

மக்கள் நுண்ணலை அடுப்பு வாங்கினர்.

சில இடங்களில் கடைக்காரர்கள் கனிம நீரின் விலையை குறைத்ததாக தெரியவில்லை. சில இடங்களில் விலை குறைந்து இருந்தது. சில இடங்களில் கனிம நீர் பற்றாகுறையினால் விலை அதிகமாக இருந்தது.

நுண்ணலை அடுப்பின் விலை 50 சதவீத தள்ளுபடியில் விற்பதாய் கடைகள் தெரிவித்தன. மக்கள் சரியான நேரத்தை பயன்படுத்தி கொண்டனர். நிறைய பணம் இல்லாதவர்களுக்கு, மாத தவணை திட்டம் வழங்கப்பட்டது. மக்கள் மேலும் நுண்ணலை அடுப்பு வாங்கினர்.

அடுப்பில் காய்ச்சுவதை விட, இதுவே சரியாக மக்களுக்கு தோன்றியது. கையாள்வதும் மிக சுலபமாய் இருந்தது. யாருக்கும் எந்த நோயும் ஏற்படாமல் நுண்ணலை அடுப்பு காப்பற்றியது.


சென்னை குடிநீர் வாரியம் ஒரு வார காலம் போராடி தண்ணீரில் நுண் கிருமிகள் இல்லை என கண்டுபிடித்தது.

ஏப்ரல் 26 ஞாயிற்றுக்கிழமை காலை, சென்னை மாநில முதல்வர் இல்லம்.

"தலைவரே உங்கள நம்பி நெறைய மைக்ரோவேவ் அடுப்பு இறக்கிட்டேன். சொல்லுங்க இப்போ எப்டி விக்குறது? "

"விக்குறது இருக்கட்டும். எவ்ளோ போட்ருக்க..?"
"10. எண் தம்பியோட மினரல் வாட்டர் பிசிநெஸ்ல இருந்து வந்த காசு எல்லாம். அவன் பிசிநெசும் இப்போ ரொம்ப டல்லாம். அவன்தான் மேஜர் பார்ட்னர் இப்போ வரைக்கும். இப்போ அதுக்கு வேற போட்டி வர மாதிரி சொல்றான்.

"எவ்ளோல முடிக்கலாம்..?"நீங்களே சொல்லுங்க தலைவரே."
"2 ரெண்டுக்கும் 2."

"2 ஆ..?"
"ரெண்டு கல்லுல ஒரு மாமரம் - கேள்வி பட்ருக்க..?"

"புரியலையே தலைவரே..."
"அங்க இருக்க புத்தகத்துல குடிநீர் வாரியம்-நு ஒரு நம்பர் இருக்கும், அத பார்த்து சொல்லு".

Friday, April 17, 2009

பிஞ்சமண்டயன் (கதை - 5)

Share |
"டேய், எங்கடா நம்ம புது மாப்ள, வந்துட்டானா..?" நான் கேட்டுக்கொண்டே வீட்டினுள் நுழைந்தேன்.
"அத ஏன் மாப்ள கேட்குற.....என்னடா பிஞ்சமண்டயான்னு கேட்டதுக்கு ஒரு மாதிரி பார்வை பார்த்துட்டு ரூம்குள்ள போனான்...இன்னும் வெளிய வரல...."


பிஞ்சமண்டயன். அவனுடைய இயற்பெயர் ரவி என்றாலும், அவனை எல்லோரும் அழைப்பது இப்படிதான். எல்லோரும் நினைப்பது போல் அவன் முன் தலயில் விழுந்த வலுக்கயால்தான் இப்படி ஒரு பெயர் வந்தது அவனுக்கு. முதலில் கொஞ்சம் கோபமடைந்தாலும் நாட்கள் செல்ல செல்ல இது அவனுக்கும் சகஜமாகிபோனது.

கல்லூரி படிக்கும்போது அவனுடைய தலைமுடி நன்றாய்தான் இருந்திருக்கிறது. வேலைக்காக சென்னை வந்து மூன்றே மாதத்தில், முன் மண்டையெல்லாம் கொட்டிபோனது. பின் தலையில் ஒன்றும் பிரச்சனை இல்லை. சரி செய்ய வேண்டும் என யோசிப்பதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது.

சென்னை தண்ணீரை பற்றி யாரவது உயர்வாக பேசினால் இவனுக்கு கோபம் வரும்.

இந்த முறை அவன் ஊருக்கு போனது அவனுக்கு பெண் பார்க்க. மிகுந்த மகிழ்ச்சியோடு சென்றான். அவர்கள் வீட்டில் பெண் பார்க்க ஆரம்பித்து சுமார் 1 வருடம் ஆகிறது. வந்த வரன் எல்லாம் ஜாதகம் பொருந்தாத காரணத்தினால், திருமணம் என்பது அவனுக்கு ஒரு கனவாகவும், கவலையாகவும் போனது.

பெண் ஒன்று அமைந்துவிட்ட மகிழ்ச்சியில் எங்களுக்கெல்லாம் விருந்தளித்தான்.

விருந்தின் போது, சக தோழன் ஒருவன், "டேய் பிஞ்ச மண்டையா ...ரொம்ப சந்தோசமா இருக்குடா..." என்றான்.
"thanks da"
"ஆமா பிஞ்சமண்டயா, உனக்கே கல்யாணம்னா அப்போ எங்களுக்கெல்லாம் எவ்ளோ ஈசியா நடந்துரும்..." எல்லோரும் சிரித்தனர்.
ரவியும் சிரித்தான்.
"டேய், பில் கொடுக்கவா வேணாமா...?"
"உன்ன கல்யாணம் பண்ற அந்த பொண்ணு ரொம்ப கொடுத்துவச்சவடா...பில் நீயே கொடுத்துரு மாப்ள.."

நான் ரவியை தனியாக அழைத்தேன்.
"உன் மனசுக்கு எல்லாம் நல்லபடியாக அமையும். எண்ணம்போல் வாழ்வு. சரி சொல்றதுக்கு முன்னாடி அந்த பொண்ணுட்ட பேசி முடிவு எடு. வாழ்த்துக்கள்" என்றேன்

ரவி உண்மையிலேயே ஒரு சிறந்த மனிதன். யாருக்கு உதவி என்றாலும் முதல் ஆளாக இருப்பவன். எங்கள் எல்லோரின் அன்புக்கு உரியவன். நானும் அவனும் ஒரே கல்லூரியில் வேறு படித்ததால் எங்களுக்குள் என்றுமே ஒரு நல்ல நட்பு இருந்து வந்தது.


இப்பொழுது என்ன கோபம் அவனுக்கு. பெண் இவன் நினைத்த மாதிரி இல்லையா.
இல்லை அவள் வேறு யாரையாவது மனதில் நினைத்திருந்தாளா..?

நான் அறைக்குள் சென்றேன். நல்ல இருட்டாக இருந்தது.

"ரவி.."
தூங்குகிறான் போல. சரி பிறகு எழுப்பலாம்.
"வினோத்"

"முழிச்சிட்டுதான் இருக்கியா. பேருந்துல வந்தது அசதியா இருக்கா.."
"அதெல்லாம் இல்லடா."

உடனே நான் தொடங்க வேண்டாம் என்று நினைத்தேன்.

"நான் வேணா போய் நம்ம ரெண்டு பேருக்கும் சாப்பாடு வாங்கிட்டு வரவா"
"அதெல்லாம் வேணாம் மாப்ள."

"சரி கொஞ்சம் நேரம் கழிச்சு ரெண்டு பேருமே போலாம். அப்புறம் ஊர்ல அப்பா, அம்மாவெல்லாம் எப்படி இருக்காங்க.."
"ம்ம்...நல்லா இருக்காங்கடா"

நான் உடை மாற்றி முடித்து மின் விளக்கை எரிய வைத்தேன்.
அவன் முகம் பார்த்தேன்.

"ரவி....." அவன் முகம் கொஞ்சம் வீங்கி போயிருந்தது. அவன் படுத்திருந்த தலையணை எல்லாம் ஈரம்.

அதற்குள் என் இன்னொரு நண்பன் அறைக்குள் வர அவன் நடப்பது புரியாமல்,
"பிஞ்சமண்டயா...ஊர்ல இருந்து வந்திருக்க...திங்க எதாவது கொண்டு வந்தியா..." என்றான்.

ரவிக்கு எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்ததோ....
அவன் பக்கத்தில் கிடந்த அவன் காலணி எடுத்து நண்பன் மீது விட்டெறிந்தான்.
பதிலுக்கு நண்பன் அவன் மீது பாய போக, நான் அவனை தடுத்து வெளியேற்றினேன்.

பிரச்சனை புரிந்தது.
"என்னடா ரவி..? பொண்ணு வேணாம்னு சொல்லிருச்சா..முடினால பிரச்சனையா..."

அவன் ஒன்னும் பேசவில்லை.பச்சை குழந்தை போல் அழத்தொடங்கினான்.

அவனை சரி செய்து விஷயம் தெரிந்து கொண்டேன். இதுவரை பொருந்தாத ஜாதகம் என்று சொன்னதெல்லாம் பொய். எல்லா பெண்களும் இவன் புகைப்படம் பார்த்து இவனை நிராகரித்து உள்ளனர். வருத்தமாய் இருந்தது.

இந்த பெண்ணுக்கு வீட்டில் இவனுடைய பழைய புகைப்படம் கொடுக்கப்பட்டுள்ளது. விஷயம் தெரியாமல் சென்ற இவனுக்கு அவமானமாய் போய்விட்டது.

தொடர்ந்து அழுதான். நானும் மனரீதியாக பேசிப்பார்த்தேன். அவனை வெளியே கூட்டிச் செல்ல முயன்றேன். முடியவில்லை.

இவனிடம் தர்க்க ரீதியாகத்தான் பேச வேண்டும்.

"ரவி...நான் ஒன்னு கேட்குறேன். ஒழுங்கா பதில் சொல்லு"
"கேளு"
"உன்னோட பிரச்சினையே ஒரு உதாரணமா எடுத்துக்குவோம். இப்போ நீ ஒரு பொண்ணு பாக்குற. அந்த பொண்ணுக்கு தலையில சில இடங்கள்ல முடி இல்ல. நீ அவல ஏத்துக்குவியா..?"
"கண்டிப்பா..." உடனே பதில் வந்தது.
"கத விடாதடா.."
"இல்ல மாப்ள...நீ கேட்குறதுக்கு முன்னாடியே நான் இத பத்தி யோசிச்சேன். அப்படி ஒரு பொண்ணு வந்தா நான் ஏத்துக்குவேன். இது எனக்கு ஒரு பிரச்சனை இல்ல. மனசு ஒத்து வாழ்ரபோ இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லடா.."

அப்பா நான் ஒன்னு சொல்றேன், என்ன தப்ப எடுத்துக்காத,
அவன் முடியை சுட்டிகாட்டி, "இத பார்த்து வர்றவ இது மாதிரிதான் இருப்பா என்றேன்."
"அப்டீங்கற...."

தெரியாத பெண்களை பற்றி தவறாக பேசியதில் எனக்கு மிகுந்த வருத்தம் இருந்தாலும், இவன் இப்பொழுது கொஞ்சம் அமைதியானான்.

"சரி வா. சாப்பிட போலாம். வெளிய வேற ஒரு பஞ்சாயத்து இருக்கு..."

வெளியே வந்ததும் ரவி நண்பனிடம் மன்னிப்பு கேட்டான்.
"என்னையும் மன்னிச்சிரு மாப்ள.நீயே ஏதோ பிரச்சனைல இருக்க போல. அது தெரியாம. சரி இப்போ சொல்லு, எதாவது திங்க கொண்டு வந்தியா..."
"ஒன்னும் கொண்டு வரல. வா வெளிய போலாம். என் treat. "
"பிஞ்சமண்டயன்...பிஞ்சமண்டயந்தாண்டா .."
ரவியும் இப்பொழுது சிரித்துவிட்டான்.

சாப்பிட்டு முடித்து இரவு பேசிகொண்டிருந்தோம்.
"ரவி...கொஞ்சம் யோசிச்சு பார்க்கும்போது, நீ என் உன் முடிக்கு எதாவது பண்ண கூடாதான்னு தோணுது.."
"என்னடா பண்ண முடியும் இனிமே..?"

அடுத்த மூன்று மாதம் மூலிகை சிகிச்சையில் புகழ் பெற்ற ஒரு நிறுவனம் சென்றோம். ஒன்றும் பலனில்லை.
அடுத்த மூன்று மாதம் ஹோமியோபதி. பலனில்லை.
வெளிநாடு மருந்து. உள்ளூர் மருந்து. சுத்தமாய் பலனில்லை.

"டேய்..பிஞ்சமண்டயா....இப்படி எல்லாம் பண்ணி அந்த பொண்ண ஏமாத்தலாம்னு பாக்குறியா".
என்னை தவிர யாருக்கும் அன்று நடந்த விஷயம் தெரியாது. ரவி அவர்களிடத்தில் சொல்லவில்லை. கூடிய சீக்கிரம் திருமணம் என்று மட்டும் சொல்லிவைத்தான்.

இதற்கு நடுவேதான் ரவிக்கு இன்னொரு வரன் வந்தது. ரவி மீண்டும் பயந்தான். சரியான புகைப்படம் அனுப்பபட்டுலதா என சரி பார்த்தான்.

அந்த பெண்ணுக்கு இவனை மிகவும் பிடித்து போனது. ரவி மீண்டும் மகிழ்ச்சியின் உச்சிக்கு சென்றான்.

"மாப்ள...இது வரைக்கும் நான் பார்த்ததில இந்த மாதிரி ஒரு அழகான, அறிவான பொண்ண பாக்கலாடா."

அந்த பெண் பாண்டிச்சேரியில் வேலை செய்தாள். கிட்டத்தட்ட அந்த பெண்ணை இவன் காதலிக்க தொடங்கிவிட்டான். நல்லா படியாக நிச்சயம் முடிந்தது. திருமணம் இன்னும் ஒரு ஆறு மாதத்தில் என முடிவானது.

ஒரு முறை அவளுடைய தோழி திருமணத்திற்கு அந்த பெண் சென்னை வரவேண்டிய சூழல் வந்தது. தோழி இவனையும் அழைத்துள்ளதாக சொன்னால். இது வரை அந்த பெண்ணின் தோழிகள் இவனை பார்த்தது இல்லையாம்.

அந்த பெண்ணோடு தொலைபேசியில் இது சம்பதாமாய் உரையாடிக்கொண்டிருந்தான் .
"கண்டிப்பா வரணுமா...?"
"...."
"இல்ல லீவுதான்..."
"...."
"சரி வரேன்."
"......"
"ஹ்ம்ம்....சொல்லு. எதாவது வாங்கிட்டு வரணுமா..?"
"......"
"வேற என்ன சொல்லுமா. என்ன தயக்கம்..?"
"................."
"அப்டியா.....?!?!......சரி.....நான் முயற்சி பண்றேன்."

நான் எல்லாம் கேட்டு கொண்டிருந்தேன்.
"என்ன மாப்ள. என்ன வேணுமா அவங்களுக்கு..?"
"இந்த Hair transplant பத்தி உனக்கு ஏதும் தெரியுமா மாப்ள..?"