Showing posts with label பைத்தியம். Show all posts
Showing posts with label பைத்தியம். Show all posts

Tuesday, September 23, 2014

பைத்தியக்காரன்-3 - "என்னாச்சு?"

Share |

இப்படி நடப்பது இது 2வது முறை. முதல் முறையும் அதே இடத்தில்தான் நடந்தது. அன்று நடந்தது மாதிரியே பொதுக் கூட்டத்தின் முடிவில் ஏதோ ஒரு கேள்விக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கும்பொழுது பாதியில் அப்படி ஆனது. இன்றும் பாதி பதிலில் அப்படி ஆனது. மிகக் குறைந்த நொடிகளே அப்படி இருந்ததால் அதனை யோசிப்பதற்கான நேரம் என சொல்ல முடியாது.  யோசனை என்று இருந்திருந்தால் ‘வந்து..வந்து...’ என வாய் சொல்லிக்கொண்டேயிருந்திருக்கும். "நீங்கள் கேட்கும் கேள்வி எனக்கு புரிகிறது. நீங்கள் உங்கள் பேச்சில் ‘வந்து..’ என்ற சொல்லை பயன்படுத்துவதில்லை. அடுத்தவருக்கு அறிவுரையாகக் கூட இதனை நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்.”

“ஆம், உண்மைதான் ‘வந்து..வந்து’ என்று இழுப்பது ஒரு நல்ல பேச்சாளருக்கு அழகில்லை. அவர் பேச்சாளரே இல்லை. எப்படி நான் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் அனைத்திலும் பேச்சாளருக்கு அவர் பேசிய பிறகு கேள்வி-பதில் பகுதி இருக்கவேண்டுமோ அப்படித்தான் 'வந்து' பயன்படுத்துதல் கூடாது.”

ஆனால் அப்படி இழுக்காமல், எனக்கு நடந்தது மிக குறைந்த நொடிகள் மட்டும் இருந்ததில் ஒரு நன்மையும் இருந்தது. யாருக்கும் அது தெரியவில்லை. எனக்கு தெரிந்திருந்தாலும் புரியவில்லை.

தீவிரமாக யோசித்தேன். ஒற்றுமைகள் சரி. வேற்றுமைகள்..? முதல் தடவை நடந்தபோது இரவு 9 முதல் 10 மணிக்குள்....1 மணி நேரம்தான் பேச்சு. 9.30 தாண்டித்தான் நடந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் கேள்வி-பதில் நேரம்.

2வது தடவை 12 முதல் 12.30க்குள். அரை மணி நேரம்தான் பேச்சும், கேள்வி-பதிலும். அந்த இடைவெளியில் எப்பொழுது வேண்டுமானாலும் நடந்திருக்கலாம்.

முதல் தடவை முக்கிய பேச்சாளர்கள் பேசிய பின்தான் நான் கடைசியாக பேசினேன். 2வது தடவை என்னைத் தவிர முக்கிய பேச்சாளர் யாரும் இல்லை. இல்லை அப்படித்தான் சொல்லிக்கொள்கிறார்கள்.

அது இருக்கட்டும். ஏன் அப்படி ஆனது? ஒரு சிகரெட் பற்ற வைத்தால் புரிய வாய்ப்புள்ளதா? எனக்கு அப்படி தோன்றவில்லை. அதைத் தவிர சிகரெட் புகைத்தும் வெகு நாளாகிவிட்டது.

மேலோட்டமாக பார்த்தால் அதனை நினைத்து நான் சிரிக்கலாம். கூட்டத்தில் கூட இது குறித்து பேசி, அதில் சில நன்மைகள் உண்டு என்று நகைச்சுவைக்கு சொல்லி கைத்தட்டல் வாங்கலாம். ஆனால் தீவிரமாக யோசித்தால்? அது தொடர்ந்திருந்தால்? நினைத்துப்பார்க்கவே பயமாக உள்ளது. அது தொடர்ந்திருந்தால், எங்கு நினைப்பார்ப்பது? அத்தோடு எல்லாம் காலி. வெகுகாலம் இல்லை. சில நிமிடங்கள் தொடர்ந்திருந்தாலே என் ஆட்டம் முடிந்திருக்கும்.

இதனை பற்றி யாரிடமாவது சொல்லலாம் என்றால் ஒரு பக்கம் பயம். எங்கே ஏதாவது தர்கா கூட்டி சென்று தாயத்தோ இல்லை பகவதி அம்மன் கோயில் கூட்டி சென்று பேயோட்டுவார்களோ என்ற பயம்.

இன்னொரு பக்கம் நாம் நகைப்புக்கு உள்ளாவாமோ என்ற நினைப்பு – ‘நடிக்காதடா’ என்ற நகைப்பு.

அது எந்த மாதிரி நிலை..? கஞ்சா அடித்து திரிவார்களே அந்த மாதிரி நிலையா..? கஞ்சா அடித்தால் கடைசியாக என்ன செய்துகொண்டிருந்தார்களோ அதைதான் செய்வார்கள் என கேள்விப்பட்டுள்ளேன். கடைசியாக சிரித்துக்கொண்டிருந்தால் சிரிப்பு, அழுகை வந்தால் அழுகை. உங்களிடம் சொல்வதில் என்ன? – நான் ஒரு முறை மரிஜூணா புகைத்துள்ளேன். நண்பர்கள் வீட்டில் விருந்து. விருந்து முடித்து அனைவரும் சுற்றி அமர்ந்து ஒரு பெரிய சிகரெட் எடுத்து பத்தவைத்து, ஒரு இழு இழுத்து அதற்கு அடுத்தவரிடத்தில் ‘pass’ செய்தார்கள். நானும் சிகரெட் என்று நினைத்து உறிஞ்சினேன். அடுத்தவரிடம் கொடுத்துவிட்டு இது என்ன என கேட்டேன். அப்பொழுதுதான் சொன்னார்கள். எல்லாம் ஒரு அனுபவம் என பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அடுத்த சுற்றில் நான் பங்கேற்கவில்லை. ஆனால் அன்று கஞ்சா குடித்த யாருக்கும் எனக்கு நடந்தது மாதிரி ஒன்றும் நடக்கவில்லை.

பின் எனக்கு ஏன் இப்படி நடந்தது? நடந்தது கூட பரவாயில்லை. இனி இது நடக்காமல் இருக்கும் என்று என்ன நிச்சயம். ஒரு முறை மட்டும் நடந்திருந்தால் பரவாயில்லை. இரண்டாம் முறையும் இப்படி நடக்கும்போதுதான் இதற்கான தீர்வு என்ன என நான் யோசிக்கிறேன்.

இதற்கு மருத்துவம் ஒரு தீர்வாக அமையலாம். ஆனால் நான் அதனை எப்படி விளக்குவேன்? தேவையில்லாமல் வேறு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டுவிட்டால்? அதுவும் வீட்டுக்கு தெரியாமல் எப்படி?

வீட்டிற்கு தெரிந்தால் கூட சமாளித்துவிடலாம். பொதுவில் தெரிந்துவிட்டால்? பின் எனக்கான கைத்தட்டல்? எனக்கான பாராட்டு? இல்லை. நிச்சயம் தெரியக்கூடாது. கைத்தட்டல்கள் இல்லை என்றால் கூட சமாளித்துவிடலாம். கல்லடி கிடைத்தால்? நமக்கு ஏதாவது ‘பட்டம்’ கட்டிவிட்டால்? இல்லை இதனை சரி செய்யாமல் இன்னொரு கூட்டம் இல்லை. யாராவது கூப்பிட்டால் ஏதாவது பதில் சொல்லி சமாளிக்கலாம். அங்கு சென்று அடிபடுவதை விட இது எவ்வளவோ மேல்.

யோசித்து யோசித்து பின் மண்டை வலிப்பது போல் உள்ளது. கொஞ்சம் தலை பயிற்சி செய்ய வேண்டும். தலையை இந்த பக்கமும் அந்த பக்கமும் மாற்றி, மாற்றி சுற்ற வேண்டும். இப்படித்தான் ஒரு முறை ஒரு மருத்துவர் யாருக்கோ சொல்லிக்கொடுத்ததை பார்த்தேன். நானும் இதனை அடிக்கடி செய்து பார்த்துள்ளேன். தலைக்கு ஒரு பயிற்சி. கை வலித்தால் ஒரு பயிற்சி. முதுகு வலிக்கு ஒரு பயிற்சி. எல்லா பிரச்சனைக்கும் ஒரு பயிற்சி. நானே எனக்குள் சிரித்துக்கொண்டேன். ஒரு யோசனையும் பிறந்தது. இவ்வளவு பிரச்சனைகளுக்கு பயிற்சி இருக்கும்பொழுது நம் பிரச்சனைக்கு பயிற்சி இருக்காதா? ஆனால் அப்படி ஒரு பயிற்சி உண்டா இல்லையா என எப்படி தெரிந்துகொள்வது? இணையம்.

ஆனால் என்ன என்று தேடுவேன்? புரியாத ஒரு பிரச்சனையை எப்படி விளக்குவேன்? பெருவிரல் நகம் வைத்து பற்களை நற நற என தேய்த்தேன். சுற்றும், முற்றும் பார்த்தேன். ஒன்றும் இல்லை. பின் மண்டை வலி ஜாஸ்தியானது. பயிற்சி துவக்கம்.

இந்த பக்கம் 10 முறை. அந்த பக்கம் 10 முறை. தூக்கம் வருவதுபோல் உள்ளது. எழுந்தபின் இது குறித்து யோசிக்கலாம்.

அவர் தூங்கிப்போனார். அவரை சுற்றிலும் எண்ணற்ற காகிதங்கள். ஒரு காகிதத்தில் ஒரு முடிவற்ற கவிதை. இன்னொரு காகிதத்தில் ஒரு நாடகத்திற்கான ஆரம்ப மேடை அலங்காரங்கள். இன்னொன்று சினிமா ‘script’என்ற ஆரம்பம் மட்டும். இன்னொரு காகிதத்தில் இந்த கதையின் தொடக்கம்.......
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த கதைக்கு சம்பந்தமற்ற, மேலும் பைத்தியக்கார கதைகள் படிக்க :  பைத்தியக்காரன்-1 பைத்தியக்காரன்-2 

Monday, July 20, 2009

பைத்தியக்காரன்-2 (கதை - 12)

Share |
முன் குறிப்பு : என்னுடைய இந்த கதைக்கும், முந்தைய பைத்தியக்காரன்-1 க்கும் சில சம்பந்தகள் உள்ளது. முதல் கதையை படித்தால்தான் இது புரியும் என்ற கட்டாயம் இல்லை.


ரு வழியாக எனக்கு வேலை கிடைத்தது. நான் தொடர்ந்து என் சித்தி வீட்டிலேயே தங்கி இருந்தேன். முடிந்தவரை என் சித்திக்கும், என் தங்கைக்கும் உதவியாக இருந்தேன்.

ஒரு சனிக்கிழமை மாலை என்னுடன் வேலை செய்யும் உயர் அலுவலகர் வீட்டிற்கு புறப்பட்டு கொண்டிருந்தேன். அவருடைய பெண் குழந்தைக்கு இன்று பிறந்தநாள்.வெளியில் மழை தூவிக்கொண்டிருந்தது.

என்னுடைய இரு சக்கர வாகனம் மழையில் நின்றிருந்ததால் அதனை உயிர்ப்பிப்பது கொஞ்சம் சிரமமாய் இருந்தது. மீண்டும் மீண்டும் உதைந்தேன்.வண்டியில் அமர்ந்தவாறே கீழே குனிந்து ஸ்பார்க்-ப்ளக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். நிமிர்ந்து பார்க்கும்பொழுது எனக்கு மிக நெருக்கத்தில் ஒரு சிறுவன் நிற்க, கொஞ்சம் தூக்கிவாரி போட்டது.

என்னுடைய பயம் தெளியும் முன்னரே, "அங்கிள், ஒரு 2 ருபீஸ் இருக்குமா அங்கிள் " என்றான். அவனுடைய உடலில் ஒரு நடுக்கம் இருந்தது

என்னுடைய பயம் இப்பொழுது கோபமாக மாறி இருந்தது. அவனுக்கு ஒரு 15,16 வயது இருக்கலாம். மேல்சட்டையும், ஷார்ட்சும் அணிந்திருந்தான். அவனுடைய முகத்தில் கொஞ்சம் பயம் இருந்தது. இப்பொழுது என்னுடைய முக மாற்றம் கண்டு இன்னும் கொஞ்சம் பயந்து போனான்.

"உன் வீடு எதுடா..?" கோபமாக கேட்டேன்.
"இல்ல அங்கிள், வேணாம் அங்கிள், நான் போயிடறேன்.."
"உன் வீடு எது சொல்லு..? உன் பெயர் என்ன..?"
"இல்ல அங்கிள்....." சொல்லிக்கொண்டே ஓட்டமும், நடையுமாக அங்கிருந்து கிளம்பினான்.
"நில்லு..."
என்னுடைய கோபம் குறைந்து அவனுடைய செய்கை கண்டு அவன் மீது பரிதாபம் வந்தது. அவனை தொடர்ந்தேன்.
"நில்லு தம்பி..."

தூறலுக்கு ஒதுங்கி நின்ற எங்கள் குடியிருப்புகளின் காவலாளி என்னை நோக்கி வேகமாக வந்தார்.
"என்ன சார்...என்ன ஆச்சு..?"
"ஒன்னும் இல்லங்க....." நான் அவனை தொடர முயற்சித்தேன்.
அவன் எங்களது குடியிருப்பில் என்னுடைய வலது பக்க வீதியில் சென்று மறைந்தான்.
"சார், என்ன ஆச்சு..?"
"ஒன்னும் இல்ல வாட்ச்மன், அந்த பையன் நம்ம காலனிதானா..?"
"நம்ம காலனிதான் சார்..ஏன் சார்..? எதாவது பிரச்சனை பண்ணிட்டானா..?"
"அதெல்லாம் ஒன்னும் இல்ல....."

தூறல் முழுமையாக நின்றது. வண்டியும் உயிர்ப்பெற்றது.வாட்ச்மேனிடம் ஒரு 10 ரூபாய் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.

என்னுடைய உயர் பணியாளருக்கு ஒரு பையன் மற்றும் ஒரு பெண். போகும் வழியில் அவளுக்கு ஒரு பிறந்தநாள் பரிசு வாங்கிக்கொண்டேன்.

வீடு முழுக்க அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அந்த அறையின் நடுவில் ஒரு மேசை வைக்கப்பட்டு அதன் மீது ஒரு சிகப்பு நிற பட்டு போர்வை போர்த்தப்பட்டு இருந்தது. அதற்கு பின்னே இருந்த சுவற்றில் , "இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சிவானி" என்ற வார்த்தைகள் காட்சி அளித்தன.

என்னுடைய உயர் பணியாளர் என்னை அவர்களின் குடும்பத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார். அவருடைய பையனை பார்த்தவுடன் எனக்கு என் வீட்டருகே சந்தித்த பையனின் நினைவு வந்தது. "என்னவாக இருக்கும் அவனின் பிரச்சனை..?"

பிறந்தநாள் விழா முடிந்து வீட்டிற்கு வந்தேன். மீண்டும் மீண்டும் அவன் நினைவுக்கு வந்தான். தூக்கம் பிடிக்கவில்லை. நாளையும் விடுமுறைதான்.

வீட்டை விட்டு வெளியே வந்தேன். அவன் சென்ற திசை நோக்கி நடந்தேன். மாலை நேர காவலாளி மாறி இப்பொழுது இரவு நேர காவலாளி வந்திருந்தார். புகைப்பிடித்துக்கொண்டிருந்தார். இவர் கொஞ்சம் வயது மூத்தவர். நிறைய பேர் இவரை அய்யா என்றுதான் அழைப்பார்கள்.

"என்ன தம்பி ..? ஏதாவது வேணுமா..?"
"இல்லங்க அய்யா....சும்மா தூக்கம் வரல..."
"ஆமா ராசு ஏதாவது பிரச்சனை பண்ணிட்டான உங்ககிட்ட..? நம்ம ஏழுமலை சொன்னான்....நீங்க அவன தொரத்திட்டே போனீங்கன்னு.."
அவன் பெயர் வரதராஜு.
"இல்லங்க அய்யா. பிரச்சனை ஏதும் பண்ணல.....ஆமா அவன் வீடு எது..?"
"அதோ அங்க ஒரு போஸ்ட் கம்பம் தெரியுதில்ல, அதுல இருந்து மூணாவது வீடு, ரெண்டாவது மாடி...." "ஹ்ம்ம்.." என்ற ஒரு பேரு மூச்சுக்கு பின், அவரே தொடர்ந்தார்.
"அவனுக்கு ஏழு வயசு இருக்கும்போது அவங்க குடும்பம் இங்க வந்துச்சு.....எப்ப பார்த்தாலும் அவங்க அப்பன்ட்ட அடி, ஒத வாங்கிட்டே இருப்பான். இப்ப இந்த மாதிரி ஆயிட்டான்."
"எந்த மாதிரி...?"

வரதராஜுவிற்கு போதை பழக்கம் உள்ளது என்றும், அவன் பெற்றோர் அதனால்தான் அவனை வீட்டிற்குள்ளேயே அடைத்துவைக்கிறார்கள் என்றும் தெரிந்துகொண்டேன்.
அதற்காகத்தான் என்னிடம் ரூபாயும் கேட்டிருப்பான் போல.

"அவன பார்த்தா எனக்கு போதை பிரச்சனை மட்டும் தெரியல அய்யா...வேற ஏதாவது பிரச்சனை இருக்குமோன்னு தோணுது. அவங்க அப்பா அம்மாவ நெனச்சாதான் கஷ்டமா இருக்கு.."
"என்ன பைத்தியக்காரன் மாதிரி இருக்கானா..?" அண்ணாந்து பார்த்து ஒரு வறட்டு சிரிப்பு சிரித்தார். "அட போங்க தம்பி, அப்பா அம்மா....அவன் அப்பாதான் இது எல்லாத்துக்கும் காரணம்.."
"என்ன சொல்றீங்க..?"

வரதராஜு பிறந்தது அமெரிக்காவில். அவனுடைய பெற்றோர் இருவரும் அங்கு வேலை பார்த்து வந்தவர்கள். தங்களுடைய வேலை பளுவுக்கு இடையிலும் அவனுக்கு செய்ய வேண்டிய எல்லாவற்றையும் சரியாகவே செய்து வந்தனர். அவனின் அப்பா அடிக்கடி மற்ற ஊர்களுக்கும் அழைவதால் அவனுக்கான அன்பு கொஞ்சம் கம்மியாகவே கிடைத்துவந்தது. படிப்பில் கெட்டியாக இருந்தாலும் வரதராஜு ஒரு சுட்டி பிள்ளையாகவே வளர்ந்து வந்தான். அவனின் சக மாணவர்களை அடிப்பது, அமெரிக்க குழந்தைகளை கேலி செய்வது அவனின் பொழுதுபோக்கு.

தனக்கு கிடைக்கும் கொஞ்ச நேரத்திலும் தன் குழந்தையை பற்றி அவர் கேட்ட விஷயங்கள் அவருக்கு கோபத்தையே வெளிப்படுத்தியது. முதலில் திட்டிப் பார்த்த அவர் ஒரு நாள் அடித்தேவிட்டார். இதுவே கொஞ்ச காலத்தில் வழக்கமாகிப்போனது.

அவனுக்கு ஒரு ஏழு வயது இருக்கும். அவன் செய்த ஒரு சுட்டித் தனத்துக்கு அவனை இவர் அடிக்க, வரதராஜு அமெரிக்க காவல்துறைக்கு தொலைப்பேசினான்.
வெளியூர் செல்ல காத்திருந்த அவனின் தந்தையை ஒரு விமான நிலையத்தில் வைத்து காவல் துறை கண்டித்தது. பிள்ளைகளிடம் எப்படி அன்பாக நடந்துகொள்ள வேண்டும் என்று புத்தி சொல்லி சென்றது.

வீட்டுக்கு வந்தவர் அனைவரும் ஒரு வாரத்தில் இந்தியா கிளம்புவதாக அறிவித்தார். விஷயம் தெரிந்த அவள் மனைவி வரதராஜுவை அடிக்க சென்றால். அதை அவர் தடுத்துவிட்டார். மன்னிப்பு கேட்ட வரதராஜுவையும் அவர் கண்டுக்கொள்ளவில்லை.

விமானம் சென்னையில் தரை இறங்கியது. வெளியே வந்தவுடன், தான் மாட்டி இருந்த பெல்ட் அவிழ்த்து தூக்கத்தில் தடுமாறிக்கொண்டிருந்த சிறுவனை............
"இப்ப கூப்பிடறா, எவன் வர்றான்னு பாக்குறேன்.." என்றார்.

எனக்கு கண்ணீர் முட்டியது.

அதற்குப் பிறகு அவன் இங்கு ஒரு பள்ளியில் சேர்க்கப்பட்டான். அமெரிக்காவில் வாங்கிய அதே அளவு பணம் தேவைப்பட்டதால் கணவனும் மனைவியும் நிறைய நேரம் உழைத்தனர். வரதராஜு அனாதையாக்கப்பட்டான். எப்பொழுதும் ஒரு அச்சத்தோடு வாழ்ந்துவந்தான். பத்தாம் வகுப்பு படிக்கும்போது அவனுக்கு போதை பழக்கம் வந்தது.

தெரிந்த அவன் அப்பா, "என்னைக்கு பெத்த அப்பன போலீஸ்ல புடிச்சு கொடுத்துச்சோ, அன்னைக்கே இதெல்லாம் உரப்படாதுன்னு தெரியும்" என்றார்.

"அப்ப இருந்து ராச வீட்டுக்குள்ள வச்சு பூட்டிட்டு போய்டுவாங்க."

அவனுடைய வீடு எதுவென விசாரித்து அவன் வீட்டின் பக்கம் சென்றேன். அவன் அந்த ஜன்னலின் வழியே வீதியை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான்.

Wednesday, June 17, 2009

பைத்தியக்காரன் - 1 (கதை - 10)

Share |
அவன் அந்த ஜன்னலின் வழியே வீதியை வெறித்து பார்த்துக்கொண்டிருப்பான். அவனுக்கு சுமார் 18 வயது இருக்கும். அந்த வீட்டினுள் இருந்து எப்பொழுதும் மெல்லிய ஓசையில் ஃப்.ம் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். அந்த வீட்டில் அவனை தவிர அவனின் தந்தை, தாய் மற்றும் அவனின் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் தம்பி. அவர்கள் எல்லோரும் தத்தம் தங்கள் பணிகளுக்கு கிளம்பிவிட, அவன் வீட்டினுள் வைத்து பூட்டப்படுவான். ஒரு சிறு குழந்தையை கொஞ்சுவதைபோல் அவன் அன்னை அவனை கொஞ்சிச் செல்வார்.கொஞ்சி முடித்து தன்னுடைய கணவனின் வண்டியில் பின் அமரும்போது அவர்களின் கண்களில் தண்ணீர் கோர்த்திருக்கும்.

நான் தங்கி இருந்தது அவனின் எதிர் வீட்டில். நிறைய வீடுகளை கொண்டது எங்கள் குடியிருப்பு. எங்கள் இருவரின் வீடும் தரை தளத்தில் எதிர் எதிராய் அமைந்திருக்கும். என் வீட்டை விட்டு வெளியே வந்து மூன்று அடி நேராக வைத்தால் அவர்களின் வீட்டுக்குள் நான் ஒரு அடி சென்றிருப்பேன். எங்கள் குடியிருப்புக்கு எதிர்புறம் வெறும் பொட்டல் காடு போல் இருக்கும். நிறைய முள் செடிகள் மட்டுமே காட்சி அளிக்கும். மக்கள் அதைதான் குப்பை போடும் இடமாக பயன் படுத்தி வந்தனர். இந்த வரிசையில் ரயில் பாதை வரும் ஒரு திட்டம் இருப்பதால் இங்கு யாரும் வீடு கட்டவில்லையாம்.

அவன் அடைக்கப்பட்ட அறை வீதி நோக்கி இருந்ததால், அவனை பார்க்க நான் வீட்டை விட்டு வெளியில்தான் வர வேண்டும். வீதியில் செல்லும் யாவரும் அவனை பார்க்கலாம் என்றாலும், இந்த அவசர சென்னையில் யாருக்கும் அவனை பார்க்கும் நேரமோ, எண்ணமோ கூட இருந்திருக்க வாய்ப்பில்லை. என் சித்திக்கு கூட இப்படி ஒருவன் இருக்கிறான் என்று தெரியாது. அவளும் பணிக்கு செல்பவள். என் அம்மாவாக இருந்திருந்தால் இந்த நேரத்திற்கு அந்த குடும்பத்தின் கதையை கேட்டிருப்பாள்.

நான் தங்கியிருந்த வீடு என் சித்தி, அம்மாவின் தங்கயுடையது. எல்லோரும் போல் நானும் வேலை தேடித்தான் இங்கே வந்திருக்கிறேன். என் சித்திக்கு ஒரு பெண் மட்டும். பதிணொண்றாம் வகுப்பு படிக்கிறாள்.

வேலை தேடும் மற்ற பொழுதில் நான் இவனைதான் கவனித்துக்கொண்டிருப்பேன். அவனை பார்த்துக்கொள்ள ஒரு ஆளாவது இருந்திருக்கலாம். இல்லையேல் அவன் அன்னையே அவனை பார்த்துக்கொண்டிருக்கலாம். காலையில் வேலைக்கு செல்லும் அவன் அம்மா மதியம் ஒரு 3 மணிபோல் வந்துவிடுகிறார். அதன் பிறகு அவனை ஒரு அரை மணி நேரத்திற்கு அங்கு காண முடிவதில்லை.

காலையில் அவர்கள் எல்லோரும் வெளியே செல்கையில் அவன் மேல் சட்டை, கால் சட்டை அணிந்து காண்கிறேன். அவன் ஜன்னலுக்கு வரும்பொழுது, அவனின் மேல சட்டை இல்லை. கால் சட்டை அணிந்துள்ளானா என்பதை என்னால் நிச்சயம் சொல்ல முடியவில்லை. மதியம் அவன் அன்னை வந்த பிறகு வேறு ஒரு ஆடையில் தோன்றுகிறான்.

அவன் அன்னை வந்த பிறகு வானொலி சத்தம் குறைகிறது. நான் என் வீட்டுக்குள் சென்றால், அவனின் அன்னை அவனை கொஞ்சும் சத்தம் கேட்கின்றது. அவனை சாப்பிட வைக்க, சில மாத்திரைகள் விழுங்க வைக்க என்று விதவிதமான கொஞ்சல்.

அவனுடைய தந்தை ஒரு 5 மணிக்கு வருகிறார். அவர் சில நேரத்தில் அவனை கொஞ்சுகிறார்.

அவன் தம்பி பள்ளி முடிந்து 6 மணிக்கு வருகிறான். அவனுடைய முகத்தில் ஒரு சலிப்புதான் தோன்றுகிறது.

அன்று நான் வெளியே ஒரு நேர்முகத்தேர்விற்கு சென்று வந்தேன். வீட்டு பக்கத்தில் வந்ததும் அவனை பார்க்க நினைத்தேன். அவனை காணவில்லை. நான் ஆடை மாற்றும்பொழுது அவன் வீட்டில் இருந்து கத்தும் சத்தம் கேட்டது. ஓடிப்போய் அந்த வீட்டை தட்டினேன். வீடு பூட்டபட்டிருக்க வேண்டும். ஜன்னல் வழியே பார்த்தேன். சத்தம் மட்டுமே வந்தது. வீட்டை உடைக்கலாமா..? யாரையாவது கூப்பிடலாமா..? வீதிக்கு வந்தேன். நல்ல வேலையாக அவன் அம்மா வந்துகொண்டிருந்தார்.அவர் திசை நோக்கி ஓடினேன்.

"கொஞ்சம் சீக்கிரம் வாங்க.." என்னை வெறித்து பார்த்தார்.
"நான் உங்க எதிர் வீட்ல இருக்கேன். உங்க பையன் உள்ள சத்தம் போட்டுட்டு இருக்கான்."
"நீங்க புதுசா. மன்னிச்சிடுங்க. உங்கள தொந்தரவு செஞ்சிட்டனா..?"
இவர் என்ன பேசுகிறார்.
"அதெல்லாம் இல்லங்க. அவனுக்கு என்ன ஆச்சோன்னு..."

அவர் பதட்டப்படவில்லை.
கதவு திறந்தார். அவன் ஆடை ஒன்றும் அணியாமல் கீழே படுத்திருந்தான்.
"என் செல்ல குட்டி..." என்று கொஞ்ச ஆரம்பித்தார்.
நான் அங்கிருந்து விலகினேன்.

ஒரு சனிக்கிழமை காலை, அவன் அப்பா அவனை வீட்டைவிட்டு வெளியே கூட்டிவந்தார். அவனை தன் ஸ்கூட்டரின் முன் இருக்கையில் அமர்த்தி, இவர் பின் அமர்ந்து கொண்டார். ஒரு ஆட்டோ வந்தது. அதில் அவன் அம்மா ஏறிக்கொண்டார்.

"நான் வேணா ஆட்டோல கூட்டிவரட்டா..?"
"இல்லமா வேணாம். நானே பார்த்துகிறேன்."

ஒரு 2 மணி நேரம் கழிந்து அவர்கள் வந்தார்கள். மீண்டும் கொஞ்சல் சத்தம் கேட்டது.

கொஞ்ச நேரத்தில் வெளியே சென்ற என் தங்கை வீட்டிற்குள் ஓடி வந்தாள். அவன் தன் உடம்பில் ஆடை ஏதும் இல்லாமல் வீதி நோக்கி போய்க்கொண்டிருக்கிரானாம்.
ஓடி சென்று அவனை இழுத்து வந்து அவனுடைய வீட்டில் சேர்த்தேன்.

அவர்கள் இருவரும் அவனை ஆற தழுவிக்கொண்டார்கள்.
"என்ன கண்ணு. அடி பட்டிருந்தா என்ன பண்ணுவ..?"
"ரொம்ப தேங்க்ஸ் சார். கதவ திறந்து வெச்சிட்டு தூங்கிட்டோம்."

"இந்த தம்பிதாங்க அன்னைக்கு இவன் சத்தம் கேட்டு, ஓடி வந்தாப்ள"
"தேங்க்ஸ் தம்பி. நீங்க எதிர் வீட்ல இருக்கீங்களா..?"

நான் அவனை பற்றி ஒன்றும் கேட்டுக்கொள்ளவில்லை.

அடுத்த தினம் முதல் நான் பார்க்கும்போது, அவனும் என்னை பார்ப்பான். நான் சிரிக்க அவனும் சிரிப்பான். அவனுக்கு ஏதாவது வாங்கித்தர தோன்றியது.

என் அம்மா என் சித்தி வீட்டிற்கு வந்தாள். அம்மாவை பேருந்து நிலையத்திலிருந்து கூட்டி வரும்போது அவனை பற்றி பேசி வந்தேன்.


அவன் சிறு வயதில் எல்லா குழந்தையை போல் நன்றாகவே இருந்திருக்கிறான். படிப்பும் நன்றாகவே இருந்திருக்கிறது. ஏழாம் வகுப்பு படிக்கும்போது இவர்கள் ஏதோ ஒரு உறவினரின் திருமணத்திற்கு சென்றனர். திரும்பி வரும்பொழுது, இவனுக்கு பிடித்த ரயிலில் பயணிக்கலாம் என நினைத்தனர். இவனின் தம்பியும், அன்னையும் நடை மேடையில் காத்திருக்க, பிரயான சீட்டு வாங்க இவன் தந்தையுடன் இவனும் சென்றான். சீக்கிரம் வாங்கி திரும்ப வேண்டும் என்பதற்காக தண்டவாளம் வழியே இவர்கள் செல்ல, பக்கத்து தண்டவாளத்தில் வந்த வண்டி தன்னுடைய தண்டவாளத்தில்தான் வருவதாய் நினைத்து இவன் பயம் கொண்டு "அப்பா" என சத்தம் செய்துள்ளான். அவன் பேசிய கடைசி வார்த்தை அதுதான்.

எத்தனையோ மருத்துவர்கள், எவ்வளவோ மாத்திரைகள்.பார்க்கும் மருத்துவர் எல்லாம் கண்டிப்பாக குணமடைய வாய்புள்ளதாகவே கருதுகின்றனராம். ஆனால் எப்பொழுது என்று சரியாக சொல்ல முடியவில்லை.

இரவெல்லாம் மழை பெய்தது. காலை பார்க்கும்பொழுது தெருவெல்லாம் சேறாக காட்சி தந்தது.

அவனை மருத்துவமனை அழைத்து செல்ல வேண்டிய தினம் போல இன்று. சென்ற முறை போல் இந்த முறையும் ஆட்டோ வந்தது. அவன் அம்மா ஆட்டோவில் ஏறிக்கொள்ள, அவன் அப்பா அந்த ஸ்கூட்டரில் அவனை ஏற்றிக்கொண்டார். அவனை என்னால் சரியாக பார்க்க முடியவில்லை. அவன் சிரிப்பு பார்க்க எண்ணி ஏமாந்தேன்.

ஒரு பத்தடி செல்வதுற்குள் வேகமாக சைக்கிள் ஓட்டி வந்த ஒருவர் இவரின் ஸ்கூட்டரில் மோத அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவனுக்கு வலிப்பு வந்தது.

எல்லோரும் ஓடினோம். விழுந்த அதிர்ச்சியில் அவனுக்கு வலிப்பு உண்டாகி இருந்தது. அவன் அம்மா ஆட்டோவில் இருந்து ஓடி வந்து அவனை தூக்கினார். அவனுடைய தந்தையும் தடுமாறி எழுந்தார். செய்வதறியாது திகைத்து நின்றார். ஒருவர் யாரையாவது சாவி அல்லது இரும்பு எடுத்து வர சொன்னார். அவனின் அம்மா சென்ற ஆட்டோ ஓட்டுனர் இரும்பு எடுத்து வந்தார். நான் ஓடி சென்று தண்ணீர் எடுத்து வந்தேன். அவனுக்கு வலிப்பு அடங்கியது. என்னிடம் தண்ணீர் வாங்கி அவன் முகத்தில் அறைந்தனர். அவன் உடல் எல்லாம் சேறு பூசி இருந்தது. அவன் பெற்றோர் கண்களில் கண்ணீர் கசிந்தது.

"ஒண்ணுமில்ல விழுந்த அதிர்ச்சி..எல்லாம் சரியாய் போய்டும்." தண்ணீர் அறைந்தவர் சொன்னார்.
அவர்கள் அவனுக்கு வேறு ஏதேனும் அடிபட்டுள்ளதா என பார்த்தனர். நல்லவேளையாக ஒன்றும் இல்லை. அவனின் தந்தைக்குதான் கையில் சிராய்ப்பு ஏற்பட்டு இருந்தது.

ஒரு இரண்டு தினம் கழித்து மருத்துவமனை போகலாம் என முடிவு செய்தனர். அவனை வீட்டுக்குள் அழைத்து சென்றார்கள். உள்ளே போகாமல் அவன் அடம் பிடித்தான். அவன் அன்னை அவனை கட்டிக்கொண்டு உள்ளே இழுத்து சென்றார். அவனுடைய கத்தல் அந்தே வீதியே கேட்டது.

அடுத்த நாள் அவன் அம்மா என்னிடம் வந்தார்.
"அவன கொஞ்சம் அப்பப்ப பாத்துக்கிரியா..?"

இரவு வெகு நேரம் கண் விழித்து இருந்ததாகவும் இப்பொழுதே தூங்குகிறான் எனவும் சொன்னார்.
எனக்கு ஒரு மணி நேர வேலை இருந்தது.

"கூட இருக்கெல்லாம் வேணாம் கண்ணு. ஏதாவது சத்தம் கேட்டா மட்டும் பாரு. இந்தா சாவி."

நான் வெளியே சென்றேன். நன்றாக மழை பிடித்துக்கொண்டது. ஒரு மணி நேரத்திற்கு மேலாகி இருந்தது.மழையிலேயே வீடு வந்து சேர்ந்தேன். அவன் வீட்டின் ஜன்னல் வழி பார்த்தேன். அவனை காணவில்லை. உள் அறையில் தூங்குகிறான் போல. கதவில் காது வைத்து பார்த்தேன். வீட்டுக்குள் இருந்து ஒன்றும் சத்தம் இல்லை. மழையின் சத்தம்தான் அதிகமாக இருந்தது.

இரண்டு மணி நேரம் ஆனது. எனக்கு பசித்தது. கதவை திறக்க எண்ணி என் வீட்டை திறந்தேன். என் கதவின் மேல் ஒரு பாம்பு நின்றது. ஒரு நிமிடம் பயந்து போய் அலறினேன். என் சத்தம் வெளியே கேட்டிருக்க வாய்ப்பில்லை. கதவை அப்படியே வைக்கவும் முடியாது. மூடினாலும் பாம்பு போய் விடும் என்று உறுதியாக சொல்ல முடியாது. கண்ணுக்கு எட்டும் தூரத்தில் எதுவும் அகப்படவில்லை. வீட்டிற்குள் சென்று ஏதேனும் எடுக்கக்கூட முடியாமல் அந்த பாம்பையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு 15 நிமிடத்தில் பாம்பு கதவை விட்டு இறங்கி வீதி நோக்கி சென்றது. பின் அந்த பொட்டலில் சென்று மறைந்தது.

ஒரு நிம்மதி பெரு மூச்சு விட்டு வீட்டுக்குள் வந்தேன். பாம்பு வந்ததில் நான் அவனை மறந்துபோயிருந்தேன். சாவியை எங்கு வைத்தேன் என நினைவில்லை. திடீர் என ஒரு பயம் என்னை கவ்விக்கொண்டது. எங்கிருந்து வந்தது இந்த பாம்பு..?அவன் கதவில் மீண்டும் காது வைத்தேன். இப்பொழுதும் சத்தம் இல்லை.

வேகமாக தேடி சாவியை கண்டுப்பிடித்தேன். வீட்டை திறந்தேன். அவன் இன்னும் உறங்கிக்கொண்டிருந்தான். நிம்மதியாக இருந்தது. அவனை எழுப்ப முயற்சித்தேன்.

எழுந்து என்னை வித்தியாசமாய் பார்த்தான். சுற்றும் முற்றும் பார்த்தான்.
"அப்பா..." என்றான், அவர் எங்கே என கேட்பதுபோல்.