Sunday, January 4, 2015

பிசாசு

Share |
முன்னுரை :

முன்னுரையை முகநூலில் ஏற்கனவே படித்தவர்கள் ஒரு 10 பத்தி (Paragraph) தள்ளி இருக்கும் விமர்சனம் செல்லுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

மிஷ்கின் - 'சித்திரம் பேசுதடி' வெளிவந்து சில காட்சிகள், வாள மீனு பாட்டுன்னு பிரபலமடையறதுக்குள்ள படம் தியேட்டர்விட்டு போயிடுச்சேன்னு ரொம்ப வருத்தமா இருந்தது. விகடன் விமர்சனம் வேற ஒரு நல்ல படத்துக்கு இந்த நிலைமையான்னு வருத்தத்த அதிகப்படுத்துச்சு. நல்ல வேலையா படம் மறுபடியும் 'ரிலீஸ்' ஆகி நல்ல ஆதரவு கிடைச்சது. 'மிஷ்கின்' அப்படிங்குற ஒரு நல்ல இயக்குனர் தமிழ் திரையுலகில அறிமுகமானார். 2 தடவ 'தேவில படம் பார்த்தேன்.

அடுத்த வந்த அஞ்சாதே ஒரு 'மிஷ்கின்' Genre உருவாக்குச்சு. மனிதம் பேசும் ஒரு த்ரில்லர் இயக்குனரா உயர்ந்தாரு. USல இருந்ததால இணையத்துலதான் பார்க்க முடிஞ்சது.

நந்தலாலா எப்போ ரிலீஸ் ஆகும்னு காத்து காத்து, படத்தோட 'Style' தெரிஞ்சும், எப்படியும் ஒரு வாரத்துல தூக்கிடுவாங்கன்னு தெரிஞ்சு வாரநாள்லேயே அவசரமா போய் 'சங்கம்ல' பார்த்தோம் (நானும் என் மனைவியும்). படம் எனக்கு பிடிச்சது. தியேட்டர் ஆள் இல்ல.

அடுத்த வந்த 'யுத்தம் செய்', யாரையும் தன்னால நடிக்கவைக்க முடியும்னு சொல்ற படமா, (என்னைப் பொறுத்தவர) அந்த வருடத்தோட சிறந்த படமா இருந்தது. ரசிகர்கள அறிவாளிகளா மாத்த முயற்சித்த படம் அது.


அடுத்து மிஷ்கின் படம் வந்தா முதல் நாளே (வெள்ளிக்கிழமை முதல் காட்சி) பார்க்கணும்னுங்கிற அளவுக்கு ஒரு சிறந்த இயக்குனரா எனக்குபட்டார்.

ஆனா அடுத்து வந்த முகமூடி அந்த நினைப்ப காலிசெஞ்சது. முதல் பாதி நல்லா இருந்தாலும், இரண்டாம் பாதி படு சொதப்பல். நம்பிக்கை போயிடிச்சு.

'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்'  மேல ரிலீஸ் ஆனப்ப பெரிய அபிப்ராயம் இல்ல. படம் வந்த சமயம் ஏதோ விசயமா ஊருக்கு போனேன். 'மூடர் கூடம்' போகலாம்னு போனா படத்த தூக்கிட்டாங்க. சரி 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' போலாம்னு போனேன். ரொம்ப நல்ல படம். வெள்ளிக்கிழமை இரவு காட்சிக்கு மொத்தம் ஒரு 25 பேர்தான் இருந்தாங்க. வருத்தமா இருந்துச்சு. சுத்தமா 'Promo' இல்ல. அடுத்த வாரத்துல திருச்சில மிஷ்கினே வந்து போஸ்டர் ஒட்டிட்டு இருந்தது சிலர் 'ஸ்டண்ட்டுன்னு' சொன்னாலும் எனக்கு வருத்தமாதான் இருந்தது. அடுத்த அதிர்ச்சியா 2 வாரத்துல் தீபாவளிக்கு விஜய் டிவில படத்தபோட்டானுங்க.

பிசாசு - Review Rating நல்லா இருந்துச்சு. போன வாரங்கள்ல டிக்கெட் கிடைக்காம 'PK' போனோம். இந்த வாரம் வெள்ளிக்கிழமை பார்த்தோம்.

எல்லா படங்களின் காட்சிகளுமே படம் பார்த்த கொஞ்ச நேரத்துக்காவது மறுபடி மறுபடி நம்ம நினைவில் வரும். வெள்ளிக்கிழமை இரவு என்ன 'பிசாசு' தூங்கவிடல. உண்மைய சொல்லணும்னா, 'பிசாச' நான் தேட ஆரம்பிச்சிட்டேன்.

முன் கதை சுருக்கம் முடிஞ்சது :).

விமர்சனம் -

ஒரு சாலை விபத்தில் அடிபட்ட பெண்ணை காப்பாற்ற அங்கிருக்கும் ஆட்டோ டிரைவர், மனைவியோடு வரும் இன்னொரு நபர் மற்றும் தன் காரின் பக்கம் நின்றுகொண்டு போன் பேசும் நாயகன் மூவரும் முனைகின்றனர். மருத்துவமனையில் நாயகனின் கையை பிடித்துக்கொண்டு அவனை பார்த்து ஒரு புன்னகையோடு அந்த பெண் இறந்துபோகிறாள். அந்த பெண் அணிந்திருந்த செருப்போடு கிளம்பும் நாயகனை இந்த சம்பவம் வெகுவாக பாதிக்கிறது. தன்னுடைய வயலின் வாசிக்கும் பணியையும் பாதிக்கிறது. மன சாந்தியடைய பார்வையற்றவர்களோடு தன் நேரத்தை செலவிடுகிறான். குடித்தால் மறக்கலாம் என முடிவெடுத்து வீட்டிற்கு வருபவனை அங்கிருக்கும் சக்தி - விபத்தில் இறந்த பெண் பிசாசாக மாறி குடிக்கவிடாமல் செய்கிறது.

பிசாசை விரட்ட வரும் ஏமாற்று கும்பலை துரத்தி அடிக்கிறது. நாயகனின் தாயை இன்னொரு அபார்ட்மெண்ட் முரடன் ஒருவன் அடிக்க அவனை புரட்டி எடுக்கிறது. நாயகனின் தாயை ஒரு விபத்திலிருந்து காப்பாற்றுகிறது. நாயகன் வீட்டில் திருட வரும் 'Genius' ஒருவனை கத்தியால் குத்தி விரட்டுகிறது.


தன் அம்மாவின் விபத்தை தவறாக நினைக்கும் நாயகன் பிசாசை விரட்ட முயற்சித்து, அந்த பெண்ணின் அப்பாவை சந்திக்க, அந்த அப்பாவிற்காக அந்த விபத்து குறித்தும், அந்த விபத்து ஏற்படுத்தியவனை கண்டுபிடிக்க செய்யும் முயற்சிகள், அந்த முயற்சியின் விளைவோடு படம் முடிகிறது.

பிசாசாக 'பிராயாகா மார்டின்' - படம் முழுக்க வரும் கஷ்டமான காட்சிகளில் எல்லாம் உடலை வருத்தி நடித்துள்ளார். பிசாசாக இருந்தாலும் அவர் மீது ஒரு பரிவை, அன்பை ஏற்படுத்துகிறார். அவர் முகம் தோன்றும் ஒரே ஒரு காட்சியிலும் அன்பை பொழிகிறார்.

நாயகன் நாகா - மிஷ்கின் என்ன சொல்லியிருப்பாரோ அதை சரியாக செய்துள்ளார்.


இவரைத் தவிர பிசாசின் அப்பாவாக ராதாரவி, நாயகனின் தாயாக கல்யாணி நடராஜன், கீழ்வீட்டு முரடனாக ஹரீஸ் (தனிப்பட்ட முறையில் ஹரீஸ் அவர்களின் வளர்ச்சி மகிழ்ச்சி தருகிறது), நாயகனின் நண்பர்கள், ஆட்டோ டிரைவர் என எல்லோருமே சிறப்பாக நடித்துள்ளார்கள்.

இசை - மிஷ்கின் பட இசை. மிஷ்கின் பட இசையமைப்பாளர்கள் வரிசையில் ஆரால் கோரல்லி சேர்கிறார். பாடலும் அருமை.

ஒளிப்பதிவு - ரவி ராய். படத்திற்கான உழைப்பில் இவருக்கு முக்கிய பங்குண்டு.

மிஷ்கின் - மிஷ்கின் படத்திற்கென இருக்கும் சாயல்கள், சண்டை காட்சி, எல்லா காட்சிகளிலும் இழையோடும் மனிதம் இந்த படத்தில் மிகப் பிராதனமாய், மிகப் பிரமாதமாய் வெளிவந்துள்ளது. ஆட்டோ டிரைவர் 'பச்சை' என்ற ஒரு கதாபாத்திரம்கொண்டு மீண்டும் பார்ப்பவரை அறிவாளியாக மாற்றுகிறார். அவரின் அதீத உழைப்பு மேன்மேலும் வளரவேண்டும்.

தயாரித்த பாலாவிற்கு வாழ்த்துக்கள்.

ஒரு பேய் படத்துக்கு போயிட்டு வந்தா எவ்வளவுதான் நமக்கு வீரம் இருந்தாலும், (படத்துக்கு போயிட்டு வந்த நாள்) ராத்திரி வேலையில நம்ம எந்திரிக்கிறபோ அந்த பேய் எங்கையாவது நம்ம வீட்டுக்குள்ள இருக்கான்னு ஒரு பயத்தோட பார்ப்போம். ஆனா இந்த பேய் நம்ம வீட்டுக்குள்ள வந்திடுதான்னு ஆசையோட நிச்சயமா நாம தேடுவோம். அதுதான் 'பிசாசு'.

'Pisasu' - A ghost that you want to love and live with.

Friday, December 19, 2014

அப்பா வேணாம்ப்பா - நிச்சயம் வேணும்.

Share |
திரையுலகின் மீது வெறி ஏதும் இல்லாவிட்டாலும், ஒவ்வொரு வாரமும் என்ன என்ன படங்கள் வருகிறது என பார்த்து வருபவன்தான் நான். ஆனால் எப்படியோ இப்படி ஒரு படம் வந்தது தெரியாமல் போய்விட்டது. சில சமயம் ஏதோ ஒரு படம் தெரியாமல் போயிருந்தால் அதற்காக பெரிதாக அலட்டிக்கொண்டது கிடையாது. ஆனால் இந்த படத்தை நான் பார்க்காமல் இருந்திருந்தால் நிச்சயம் வருத்தப்பட்டிருப்பேன். அந்தப் படம் - "அப்பா வேணாம்ப்பா."

இரண்டு தினங்களுக்கு முன் நண்பர் ஜெய் 'குடி' சம்பந்தமான படம் என்றும், வெள்ளிக்கிழமை மீண்டும் வெளியிடப்படுகிறது என்று  சொல்லியிருந்தது கூட சரியாக இன்று நினைவில் இல்லை. ஆனால் அப்பொழுதே 'ட்ரெயிலர்' பார்த்தேன் - கருத்துமிக்க படமாக இருக்கும் என தோன்றியது. காலையில் அண்ணன் இளங்கோ அழைத்தபோதுதான் நினைவு வந்து சென்றேன். சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் முயற்சியால் ஓரளவுக்கு ஆட்கள் என்பதை விட ஆர்வலர்கள் வந்திருந்தார்கள். இயக்குனர் வெங்கட்ரமணனும், இசையமைப்பாளர் கண்ணனும் வெளியேதான் காத்திருந்தார்கள்.


இது போன்ற பெரும்பாலான படங்களில் எப்படியும் கதைக்கு வருவதற்குள் ஒரு அறிமுக பாடல், 2 தேவையற்ற டூயட், குறைந்தது 1 சண்டை, மீதம் கதாநாயகனும் அவரின் 4 நண்பர்களும் செய்யும் காமெடி என்று முடிந்து இடைவெளியின் போது, இரண்டாம் பாதியில் பெரிய கதை இருப்பதுபோல் 'பெப்' கொடுப்பார்கள். கமர்ஷியம் சமரசம் என்று நாமும் அதனை ஏற்றுக்கொள்வோம்.இரண்டாம் பாதியில் கதை வரும். படம் முடியும்.

அப்பா..வேணாம்ப்பா நிச்சயம் அப்படிப்பட்ட பலமில்லை. ஒரு துளி கூட சமரசம் ஆகாத படம் இது. இப்படத்தில் வரும் சம்பவங்கள் அனைத்தும் உண்மையே என்று ஒவ்வொரு காட்சியும் நம் சமூகத்தின் கன்னத்தில் அறைகிறது. முதல் காட்சியிலிருந்தே படம் துவங்குகிறது. பேருந்து நிலையத்தில், நம் வாழ்க்கையில் நாம் ஒரு முறையாவது பார்த்த காட்சி அது - ஒரு குடும்பமோ அல்லது ஒரு மனைவியோ பணம் சில்லறை வாங்க சென்ற கணவனுக்காக காத்திருக்கும் காட்சி. சில்லறை வாங்க சென்றவன் மதுக்கடைக்கு செல்கிறான். குடியோ குடி என குடிக்கிறான். வீட்டிற்கு வந்து உங்கள போய் நான் பஸ் ஸ்டாண்டில் தேடினேன், நீங்க ஏன் வீட்டிற்கு வந்தீங்க என்று இரவில் வந்து குடிகாரன் பாசை பேசுகிறான்.

காலை முதல் இரவு வரை குடி ஒன்றையே செய்து வரும் நாயகன்; தினம் தினம் நம் கணவன் திருந்திவிடுவான் என நம்பிக்கை கொண்டு அவனுடன் வாழும் நாயகி; அவர்களின் மூத்த பெண் மற்றும் இளைய மகன்; அந்த குடும்பத்திற்கு உதவி செய்யும் நாயகியின் அண்ணன் - இவர்கள்தான் கதாபாத்திரங்கள்.


குடிகாரனின் அத்தனை சேட்டைகளையும் (தன் நீண்ட நாள் நண்பன் வேறு வழியில்லாமல் சரக்கு வாங்கித் தர அவனையே சைட்-டிஷ்ஷாக தொட்டுக்கொள்வது ஒரு சிறு துளி) திரையில் கொண்டுவந்துள்ளார் இயக்குனர். அதே போல் குடிக்காமல் அவன் படும் சிரமங்களையும் (காலை எழுந்தவுடன் அவனுக்கு ஏற்படும் படபடப்பு) மிக நேர்த்தியாக காண்பித்துள்ளார். குடி என்பது ஒரு பழக்கத்திலிருந்து அவனுக்கு நோயாக மாற, மாற அவனுக்கு ஏற்படும் மறதி (Black-out), அவனுக்கு ஏற்படும் பயம், அவனுக்கு ஏற்படும் சந்தேகம் எல்லாமே அநாசயமாக வெளிப்பட்டுள்ளது. அவனுடைய தினசரி வேலை குடி என்றாலும், எந்த ஒரு காட்சியும் 'ரிபீட்' ஆகவில்லை. எந்த ஒரு காட்சியும் நம்மை சளிப்படையவைக்கவில்லை.

குடி நோய் முற்றி வீதிகளில் அவன் புரள, அவன் வெளியே சென்று அவமானப்பட வேண்டாம் என முடிவெடுத்து வீட்டிலேயே சரக்கு வாங்கி தரும் மனைவியை குடிக்க சொல்லி கட்டாயப்படுத்தி, தொடர்ந்து மனிதப் பண்புகள் அனைத்தையும் இழக்கிறான். தாங்க முடியாத மனைவி குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

மேலும் குடிக்கிறான். தன் மானம் இழந்து ஒரு தெரு நாயை விட கேவலமாக ஆகிறான். நோய் முற்றி இரத்த வாந்தி எடுக்கிறான். இடைவேளை.

இரண்டாம் பாதி - குடி நோயால் முற்றியவர்களுக்கான ஒரு வகுப்பு. குடி நோயிலிருந்து தப்பிக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு பள்ளிகூடமாக மாறுகிறது. ஒரு குடி நோயாளி பாதி திருந்திய பின் அவனுக்கு தேவையான ஆதரவை, அது கிடைக்காமல் ஏமாறும்போது அவன் எடுக்கும் முடிவை, குடியை ஒழிப்பது என்பது முதலில் சிரமமாக துவங்கி பின்னர் எப்படி எளிமையானது என்பதை விளக்குகிறது. சுபம்.

நாயகன் - இயக்குனர் வெங்கட்ரமணன் நாயகனாக நடித்துள்ளார் என்பதை விட வாழ்ந்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். சாக்கடையில் புரள்வதை பற்றியோ அல்லது குடிகாரனாக உள்ளாடையோடு அழைவது பற்றியோ கவலைகொள்ளாமல் ஒரு மாபெரும் சமூக பணிக்காக அவரை அர்ப்பணித்துள்ளார். அதே சமயம் குடிகாரனாக அவர் படம் முடுக்க பேசும் தெளிவற்ற பேச்சு, சபரிமலைக்கு மாலை போட்டதும் பேசும் தெளிவான பேச்சு என  பிரமாதப்படுத்துகிறார். உங்கள் சமூக அக்கறைக்காக கோடி வந்தனங்கள் அய்யா.

நாயகி - இது போன்ற கதாபாத்திரங்கள் தேவையிருந்தாலும் சில நேரங்களில் அதிகமாக அழுது அவர்களே ஒரு நோயாளி போன்று இருப்பார்கள். ஆனால் இவர் ஒரு நடுத்தர வர்க்கத்து, 2 குழந்தைகளின் தாய் என்ன செய்வாரோ அதை சிறப்பாக செய்துள்ளார்.

இரண்டாம் பாதியில் வரும் டி.டி.கே மருத்துவர்களும் தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர். 

பாடல் வரிகள் - 'விதியே', 'எங்கேதான் வாழ்வது' சிறப்பு.

இசை - கண்ணன். பிண்ணனி இசையை விட பாடல்கள் மிகச் சிறப்பாக இருந்தது. குடி பாடலில் குதூகலித்து, சோக பாடலில் நம்மையும் வருத்தம்கொள்ள செய்கிறது.

ஒளிப்பதிவு - தேவையான காட்சிகளை தேவையான அளவு படம்பிடித்திருந்தது.

இயக்கம் மற்றும் இதர பணிகள் செய்த வெங்கட்ரமணன் - வாழ்க்கையில் 10 படங்கள் எடுத்து வணிக ரீதியாக வெற்றியோ/தோல்வியோ அடைவதை விட, சமூகத்திற்காக இது போன்ற ஒரே ஒரு படம் எடுத்து தன் காலம் வரை மார்தட்டிகொள்ளலாம். வரலாற்றில் நிச்சயம் உங்களுக்கு இரு இடம் உண்டு.

//11.45க்கு உள்ளே சென்றபோது டிக்கெட் கிழிக்க வேண்டிய பையன் 12 மணிக்குதான் படம், எல்லோரும் வெளியே போங்க என (இயக்குனர் உட்பட - அவர் இயக்குனர் என தெரிந்திருக்க வாய்ப்பில்லை) சொன்னான். அவன் மட்டும் இல்லை திரைத்துறையும் கூட இது போன்ற நல்ல திரைப்படங்களை, இயக்குனர்களை கண்டுகொள்வதில்லை.வெளியே துறத்தவே பார்க்கிறது

இந்த நல்ல படத்தை வாங்க ஆள் இல்லாமல் இயக்குனரே திரையரங்குகளை வாடகைக்கு எடுத்துள்ளார். முதல் வாரம் அண்ணா மற்றும் எம்.எம். திரையரங்கத்திலும், அடுத்த வார வியாழன் (டிசம்பர் 25) வரை விருகம்பாக்கம் தேவி கருமாரி திரையரங்கத்தில் - http://www.devikarumaritheatres.com/ பகல் காட்சி (11.30) மட்டும் எடுக்கப்பட்டுள்ளது.

இது போன்ற நல்ல திரைப்படங்கள் ஜெயிக்க வேண்டும் என நினைத்தால் நீங்கள் செய்ய வேண்டியது இதுவே - வரும் வியாழன் வரை தேவி கருமாரியில் பகல் காட்சி 'அரங்கள் நிறைந்த காட்சியாக' இருக்க வேண்டும். நம்மால் சாத்தியமா?//

Wednesday, November 19, 2014

உலக கழிப்பறை தினம்

Share |
சேவை பெறும் உரிமைக்காக தமிழகம் முழுக்க பயணம் என்றவுடன் என் மனதில் எழுந்த முதல் பயம் - கழிவறை.  ஊரை விட்டு, கல்லூரியை விட்டு, நண்பர்கள் அறையை விட்டு, உறவினர் வீட்டில் இருந்துகொண்டு வேலைக்கு சென்ற நாட்கள் தொட்டே நான் 'Western' கழிப்பறைக்கு மாறிவிட்டேன். வேலை விசயமாக சென்ற வெளிநாட்டில் கேட்கவா வேண்டும்?

அமெரிக்காவிலிருந்து திரும்பிய பிறகும் 'Western' கழிப்பறைதான் தொடர்ந்தது. எப்பொழுதாவது ஊருக்கோ இல்லை நம்மூர் கழிப்பறை இருக்கும் வீட்டிற்கு செல்ல நேர்ந்தாலோ என் மனமும், உடலும் படும்பாடு எனக்கு மட்டுமே தெரியும்.

என் மனைவியின் கிராமத்தில், திருவிழா சமயத்தில் அவர்கள் வீட்டிற்கு நான் வரவேண்டும் என்பதற்காகவே 'Western' கழிப்பறை கட்டினாள் என் மனைவி.

அப்படிப்பட்டவன் எல்லா மாவட்டங்களிலும் என்ன பாடுபடுவேனோ என்ற பயம் எனக்கு நிச்சயம் இருந்தது. சென்ற முதல் நாள் திருவள்ளூர் மாவட்டத்தில் சமூக சேவகர் அண்ணன் 'குத்தாம்பாக்கம்' இளங்கோ அவர்களின் அலுவலகத்தில் தங்கினோம். நம்மூர் கழிப்பறைதான். ஒரு வழியாக அனுசரித்தேன். இரண்டாம் நாள் அதே மாவட்டத்தில் கொல்லகுப்பம். இன்றுவரை நான் முகம் பார்த்திராத நண்பர் கோகுல் அவர்களின் வீட்டில். இங்கும் அதேதான். சமாளித்தேன்.

மூன்றாவது நாள் காஞ்சிபுரம் கிராமத்தில் புதுப்பாக்கம் என்ற கிராமம். சமூகத்திற்காக பணியாற்றும் திரு.அன்பு அவர்களின் அணியிலிருந்த தம்பி ஸ்ரீதர் தன் தாத்தா வீட்டில் தங்கவைத்தான். வீட்டை சுற்றிப் பார்த்தேன். கழிப்பறை கட்டப்பட்டு அதில் சிமெண்ட் மூட்டைகளை அடுக்கிவைத்திருந்தார்கள்.

'என்ன இது?' என்றேன்.
'தாத்தா எப்போதும் வெளியதான் போவாங்க'.
தண்ணீர் தொட்டியை எட்டிப்பார்த்தேன். ஒரு உடும்பு படுத்திருந்தது. இதே வேற காலைல சமாளிக்கணுமா?
'நீங்க கவலைபடாதீங்க..தண்ணி எடுத்துக்கலாம். நான் காலைல எழுப்பிவிடறேன்'

தம்பி ஒரு 4.30 மணிக்கெல்லாம் எழுப்பினான். கொஞ்ச தூரம் அழைத்து சென்றான்.

கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. சென்னையிலிருந்து 60 கி.மீ தொலைவு. சுகாதாரம் பல்லிக்கிறது. அவன் ஒரு பொறியியல் பட்டதாரி. சமூக பணிகள் செய்பவன். திறந்த வெளி கழித்தல் தவறென அவனுக்கு தெரியவில்லை.



"ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் உங்க ஊர்ல இல்லையா?"
"இருக்கு..ரொம்ப தூரம் போகணும்.போனாலும் பெண்கள் மட்டும்தான் போவாங்க"
"பரவாயில்ல..பெண்கள் பயன்படுத்துவாங்கள்ல.."
"இல்ல....தண்ணி இல்லாததால அவுங்களும் பயன்படுத்தமாட்டாங்க"

அடுத்தது காஞ்சிபுரம் திருக்கழுக்குன்றம் தாலுக்கா - வள்ளிபுரம் கிராமம். குப்பைகள் நிறைந்த, கூட்டி பல காலம் ஆன சமூக கூடத்தில் தங்கினோம். ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் பக்கத்திலேயே இருந்தது. காலை ஜெய் உள்ளே சென்றார்.

'Pipe Connection இருக்கு, Tap இல்ல'
பரவாயில்லை வெளியில் தண்ணீர் பிடித்துக்கொள்ளலாம் என முடிவெடுத்தார். உள்ளே நுழைந்தவரால் உட்கார முடியவில்லை. அவ்வளவு சின்ன இடம் .சிறப்பான கட்டுமானம்.

அருகிலிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையம் சென்று நான் என் பணியை முடித்தேன். அடுத்து விழுப்புரம். கிள்ளியூர் கிராமம். காலை 4.30 மணி. சூடான தேனீர் கொடுத்து அழைத்து சென்றார் கட்சி உறுப்பினர் கோவிந்தராஜன். ஒரு பெரிய திறந்த வெளி மலக்காடு. திரும்பி வரும்போது ஊருக்குள் நுழையும் வரை மலம், மலம், மலம். தற்பொழுதே புதுப்பிக்கப்பட்டு முக்கியஸ்தர் ஒருவரின் வருகைக்காக காத்துகிடந்தது ஒருங்கிணைந்த சுகாதார வளாகம்.



அடுத்து கடலூர், கிள்ளை - ஒருங்கிணைந்த சுகாதார வளாகமும் இல்லாத கிராமம். கடல் தண்ணீரை மாசுபடுத்தும் அவலம். இராமேஸ்வரம் நிரபராதி கூட்டமைப்பின் அய்யா திரு.அருளானந்தம் சொன்னது நினைவுக்கு வந்தது. "நிகோபார்ல இருக்கிற காட்டுவாசிகள் கடல அசுத்தம் செய்றதில்ல..அவுங்கள பொறுத்த வறை கடல் அவுங்க அம்மா".

அவன் காட்டுவாசி, நாம் நாட்டுவாசி.

அடுத்து ஜெய்யின் நண்பர் வீடு. நெய்வேலி. அடுத்து கடலூர் பென்னாடம். சமூக சேவகர் திரு.ஜோதி அவர்களின் வீடு. அடுத்து அரியலூர் மாவட்டம் ஆதனங்குறிச்சியில் 'உன்னால் முடியும் தம்பி' குழுவுடன். காலை அரியலூர் சிமெண்ட தொழிற்சாலைகளை பார்த்தவாறு திறந்த வெளி கழித்தல். ஒருங்கிணைந்த வளாகம் இருந்தும் பயன்படுத்த முடியாத கிராமம்.

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை (கீச்சாங்குப்பம் - கடற்கரை கிராமம்) - தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களிலும் திறந்தவெளி மலம் கழித்தல் மட்டுமே நடக்கிறது என்பதை சத்தியமாக சொல்ல முடியும்.

இதற்கு என்னதான் தீர்வு?
முதலில் பிரச்சனை(கள்) :

1. பெரும்பாலான அரசு விசயங்களில் இருக்கும் லஞ்சம் மற்றும் ஊழல். வளாகம் கட்டுவதில் அரசு அதிகாரி முதல் ஒப்பந்தாரர் வரை ஊழல். சரியாக கட்டப்பட்டுள்ளதா என்ற கண்காணிப்பு அறவே இல்லாதது.

2. தண்ணீர் பிரச்சனை.

முதல் பிரச்சனைக்கான தீர்வு :

கிராம பஞ்சாயத்துகளுக்கு முழு அதிகாரம். பஞ்சாயத்து தலைவர்களை கவனிக்கும் மாவட்ட நிர்வாகம் (ஆட்சியர்). அதிகார பரவலாக்கல். திறந்த வெளி கழிப்பிடம் ஒழிக்கும் கிராம பஞ்சாயத்திற்கு வருடந்தோறும் ஊக்கத்தொகை.

இரண்டாம் பிரச்சனைக்கான தீர்வு :

இதற்கான பதிலும் எங்கள் பயணத்திலேயே இருந்தது. பெரம்பலூர் மாவட்டம் தேனூர் கிராமத்தில் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுவரும் சூ.மே.சு எனும் சூழல் மேம்பாட்டு சுகாதார திட்டம். தேனூர் கிராமம் தெரிந்தவர்களுக்கு திரு.செந்திலை தெரிந்திருக்க வாய்ப்புண்டு. தேனூர் மாவட்டத்தில் அவர் செய்து வரும் அளப்பரிய பணிகளுக்காக தேனூர் 'சிவாஜி' (ஆம், ரஜினி படம்தான்) எனும் தலைப்பில் பிரபலமான வார இதழ் கட்டுரை எழுதியது.

அவரிடம் திறந்தவெளி கழிப்பிடம் குறித்து பேசினேன். (சூ.மே.சு திட்டம் குறித்து அவர் எங்களுக்கு அறிமுகப்படுத்தும் முன்).

"நீங்க ஏன் மலத்த அசிங்கமா பாக்குறீங்க?" என்றார் அவர்.
எனக்கு ஒரு மாதிரியாய் இருந்தது.
"மலம் ஒரு உரம்" என்று அவர் இந்த இடத்திற்கு அழைத்து சென்றார்.

(நிறைய படிக்க நினைப்பவர்கள் 'Compost'. 'Ecosan' போன்ற வார்த்தைகளை google செய்யவும்).

இந்த நடைமுறையை நான் சொல்வதைவிட இந்த புகைப்படங்கள் சிறப்பாக சொல்லும். மனித கழிவை உரமாக மாற்றி அவர்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள்.



இது வேறு எங்காவது உண்டா என்ற கேள்விக்கு, இது முதன் முதலில் முசிறியில் துவங்கப்பட்டது என்றார்.அப்பொழுது வந்த செய்தியின் இணைப்பு - Pilot project for eco-san toilets at Musiri

காவேரி அசுத்தாமவதை தடுக்க 2005ஆம் ஆண்டே இந்த திட்டம் துவங்கியுள்ளது. ஆனால் இத்தனை ஆண்டுகளில் அரசாங்கம் இதனை பெரிதாக ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என்பது கேள்விக்குறியாக உள்ளது. பிரச்சனைகளுக்கான தீர்வுகள் உண்டு. நடைமுறை..?

என்னதான் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் இருந்தாலும் அவற்றை மக்கள் பயன்படுத்த அரசு மேற்கொள்ளும் பணி ஏதேனும் உண்டா? எனக்கு தெரிந்தவரை "சீ........திறந்தவெளியில் மலம் கழிப்பவரை கண்டால்...சீ...." சொல்லுவோம் என்ற ஒரு ஓவியத்தோடு அரசு தன் கடமையை முடித்துக்கொள்கிறது. எப்படி "இந்த இடத்தில் புகைப்பிடிப்பது குற்றம் " என்ற வாசகம் தாங்கிய இடம் புகைப்பிடிப்பிற்கான இடமோ அதே போல் ஓவியம் உள்ள இடம் மலம் கழிக்க ஏதுவான இடமாக மாறிப்போகிறது.

மிக முக்கியமான இன்று - ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் நிச்சயம் நீண்ட கால தீர்வில்லை. ஒவ்வொருவரும் அவர்வர் வீட்டில் கழிப்பிடம் கட்டுவதுதான் சரியான தீர்வு. கட்டிய பிறகு அதனை பயன்படுத்துவது அவசியம்.

இதற்கான ஒரு நிகழ்வையும் திண்டுக்கல்லில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்டோம். மக்கள் தங்களது வீடுகளிலேயே கழிப்பறை கட்ட அரசு மானியம் தருகிறது. பயனாளிகளை எவ்வாறு தேர்ந்தெடுத்தார்கள் தெரியுமா? - 100 நாள் வேலை பார்ப்பவர் மட்டுமே பயனாளி. அவரும் கட்டி முடித்து கிராம நிர்வாக அலுலவரிடம் சென்று அந்த பணத்தை பெற வேண்டும். இது உருப்படுமா?

திறந்தவெளியில் கழிப்பது என்பது கிராமத்தோடு நின்றுவிடுவதில்லை. இன்றும் சிங்கார சென்னையின் கூவ நதியோரம் மக்கள் திறந்த வெளியில்தான் கழிக்கிறார்கள். எங்கு வேண்டுமானாலும் ஆண்கள் சிறுநீர் கழிக்கலாம் என்ற நிலை. இதில் பெண்கள்பாடு?

போராட்டங்களின் போதும், முக்கியஸ்தர் பாதுகாப்பிற்காகவும் ஒரு நாள் முழுக்க வீதியில் நிற்கும் பெண் காவலர்களின் துன்ப நிலை அறிவோமா நாம்? எந்த அரசிற்கு அவர்கள் பாதுகாப்பு தருகிறார்களோ அந்த அரசிற்கு அவர்களின் அவல நிலை புரியுமா?

தமிழகத்தின் சுற்றுலா பகுதிகளில் (தேவிப்பட்டிணம், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம், சேதுக்கரை....) ஏதாவது ஒரு இடத்திலாவது பெண்களுக்கான கழிப்பறையோ அல்லது அவர்களுக்கான உடை மாற்றும் அறையோ செயல்படுகிறதா?

அரசோ அல்லது தனியாரோ - பள்ளிகளின் கழிப்பறைகள் லட்சணத்தை உச்சநீதிமன்றம் எவ்வளவு கிழித்தாலும் சிறிது அளவேனும் நம் அரசாங்களுக்கு வெட்கம் உண்டா?



கேள்விகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம்...

உலக கழிப்பறை தினம் கொண்டாடும் உலக கழிப்பறை அமைப்பு சொல்லும் 4 விசயங்களோடு இந்த கட்டுரையை முடிப்பது சரியாக இருக்கும்.

1. ஒவ்வொரு தினமும் 1000 குழந்தைகள் சுகாதார குறைப்பாட்டால் உலகம் முழுக்க இறக்கிறார்கள்.
2. சுத்தமான மற்றும் பாதுகாப்பான கழிவறைகள் இல்லாததால், பாடசாலைகளுக்கு பெண் குழந்தைகளின் வருகை தொடர்ந்து குறைகிறது.
3. நிர்ணயிக்கப்பட்ட "புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகளில்" சுகாதாரத் துறையில் நாம் இதுவரை அறவே முன்னேற்றம் காணாமல் இருக்கிறோம். உலகத்தில் 15% மக்கள் இன்னும் திறந்தவெளியில்தான் கழிக்கிறார்கள்.
4. சுகாதாரத்திற்கு நாம் செலவு செய்யும் 1 டாலர் நமக்கு 8 டாலருக்கான நன்மைகளை பயக்கிறது என்பதை புரிந்துகொள்ளாமல் இருக்கிறோம்.

Monday, October 6, 2014

நம் கடைசி நம்பிக்கையின் இன்றைய நிலையும், தீர்வும்.

Share |
மு.கு : இன்று விசாரணைக்கு வரும் ஜெயலலிதா அவர்களின் ஜாமீன் மனு இன்றைய விசாரணை பட்டியலில் 76வதாக வருவதாக செய்திகள் சொல்கின்றன.
சில மிக அதி முக்கியமான வழக்குகளுக்காக நான் நீதிமன்றம் சென்றுள்ளேன். வழக்கறிஞர்கள் அன்றைய முதல் வழக்கை விசாரணைக்கு எடுக்கும்முன் 'mentioning' என்ற ஒரு கூறில் பின்னால் இருக்கும் முக்கிய வழக்குகளை முதலாவதாக விசாரிக்க நீதிபதியிடம் கேட்கலாம்.அது போன்ற முயற்சிகள் இன்றும் இருக்கும்.
கடந்த வருடம் கட்டாய கல்வி உரிமைக்காக திரு.பாடம் நாராயணன் அவர்கள் தொடுத்த வழக்கில் லோக்சத்தாவும் தன்னை இணைத்துக்கொண்டது. ஜூன் மாதம் பள்ளி திறக்கும் முன் எப்படியாவது வழக்கை கொண்டுவர வேண்டும் என்ற முனைப்புடன் 'விடுமுறை அமர்வில்' (நம் நீதிமன்றங்கள் மே மாதம் விடுமுறையில் இருக்கும்) தாக்கல் செய்தோம். வழக்கு எடுத்துக்கொள்ளபடவில்லை. அதன் பிறகு நீதிமன்றம் விடுமுறை முடித்தும் பல நாட்கள் விசாரணை பட்டியலில் 45, 56, 78,...... என்று இருந்தும் ஒவ்வொரு தினமும் வழக்கு வராமல் நீதிமன்றத்திலேயே காத்து கிடந்த நாட்கள் பல உண்டு.'Mentioning' செய்தாலும் 'whats the urgency' என்றும் அரசு தரப்பு பதில் கொடுக்காமலும் இழுத்த நாட்கள் உண்டு.
முக்கிய வழக்குகளுக்கே இப்படியென்றால், ஒரு சாமானியனின் நிலை.....இதற்கு தீர்வு ஏதேனும் உண்டா..?

நிலுவையிலுள்ள வழக்குகள்.

1993 ஆம் ஆண்டின்படி உயர் நீதிமன்றங்களில் நிலுவையிலுந்த வழக்குகள் மொத்தம் 26 ½ லட்சம். 2002 ஆம் ஆண்டு இது 36 லட்சமாக உயர்ந்தது. சில வழக்குகள் 15 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்து வருகிறது. கீழமை நீதிமன்றங்களில் சுமார் 2 கோடி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

மார்ச் 2012 ஆந்திராவில் நடந்த அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்றொரு உச்ச நீதிமன்ற நீதிபதி சுரிந்தர் சிங் அடுத்த ஆண்டு மொத்தம் 15 கோடி வழக்குகள் நிலுவையில் இருக்கும் என அதிர்ச்சி தெரிவித்தார்.

பிரதமர் தெரிவிக்கையில் தற்பொழுது 3 கோடி வழக்குகளுக்கு மேல் நிலுவையில் இருப்பதாகவும் அவற்றில் 26%, 5 வருடங்களுக்கு மேல் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாடு புள்ளி விவரங்கள்

சென்னை உயர்நீதிமன்றங்கள் 2010ஆம் ஆண்டு தொடக்கத்தில் நிலுவையில் இருந்த உரிமையில் வழக்குகள் – 11,09,762. 2010ஆம் ஆண்டு மேலும் 11,58,969 வழக்கு தொடரப்பட்டு, 2010 ஆம் ஆண்டு முடிவில் நிலுவையில் இருந்த வழக்குகள் 11,51,623(11,17,108 மொத்தம் தீர்க்கப்பட்டுள்ளன).

இதே போல் 2010ஆம் ஆண்டு முடிவில் நிலுவையில் இருக்கும் குற்ற வழக்குகள் 5,37,915.

தமிழ்நாட்டில் அதிகப்படியான வழக்குகள் தீர்க்கப்பட்டாலும் 2011ஆம் ஆண்டின் படி தமிழ்நாட்டின் மொத்த வழக்குகள் 16.5 லட்சம். இவற்றில் கீழமை நீதிமன்றங்களில் மட்டும் 11.83 லட்சம் வழக்குகளும், சென்னை உயர்நீதிமன்றத்தில் 3.65 லட்சம் வழக்குகளும், மதுரை அமர்வில் 1.07 லட்சமும் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.


இதற்கு என்னதான் தீர்வு ?

அமெரிக்காவின் ``மக்கள் நீதிமன்றம் (People’s court)
நகராட்சி, நகர, மண்டல சட்ட எல்லைகளுக்கு உட்பட்ட, சிறிய தொகைக்கான உரிமையியல் வழக்குகளுக்கும், சிறிய சட்ட மீறல்களுக்கும் அமெரிக்காவில் ``மக்கள் நீதிமன்றம்’’ வெகு சிறப்பாக செயல்படுகிறது. உதாரணத்திற்கு சிறிய அளவிலான சாலை போக்குவரத்து விதி மீறல் இந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும். சிக்கல்கள் ஏதுமில்லாத மிக எளிமையான நடைமுறைகள். தங்களுடைய வழக்கை தாங்களே நீதிபதியிடமோ, நீதிமன்ற ஆணையிரிடமோ தாக்கல் செய்து வழக்காடும் உரிமை. இந்திய மதிப்பில் 50,000 முதல் 7½ லட்சம் வரையிலான வழக்குகள் இங்கு விசாரிக்கப்படும். ஆண்டு ஒன்றுக்கு 10 கோடி வழக்குகள் வரை இந்த நீதிமன்றத்தில் தீர்க்கப்படுகின்றன.


இங்கலாந்தின் ``ஜஸ்டிசஸ் ஆஃப் பீஸ்’’ (Justices of the Peace)  
90% அதிகமான உரிமையியல் மற்றும் குற்ற வழக்குகள் இந்த நீதியரசர்களின் மூலம் தீர்க்கப்படுகிறது. இவர்களுக்கென தனி சம்பளம் என்பது கிடையாது. இந்த நீதியரசர்கள் உள்ளூர் நீதிமன்றங்களில் இந்த வழக்குகளை சிறப்பாக நடத்தி முடிக்கிறார்கள். உட்கட்டமைப்பு, பொது போக்குவரத்து ஆகியவை மிகச் சிறப்பாக உள்ள இங்கிலாந்தில், சில உள்ளூர் நீதிமன்றங்கள் மூடப்பட்டபொழுது சாட்சிகள், குடும்பங்கள், காவலர்கள் 10 முதல் 15 மைல் தொலைவு பயணிப்பதற்கே கண்டனக் குரல்கள் எழுந்தன. இங்கலாந்தில் சிறிய தொகைக்கு 1973-ல் வகுக்கப்பட்ட இந்த நடைமுறைகள் மிக எளிமையானவை. சிறிய தொகைக்கான அளவாக இந்திய ரூபாயில் 60,000 என 1990-ல் நிர்ணயிக்கப்பட்ட்து. 1998ஆம் ஆண்டு இந்த தொகை 3 லட்சமாக உயர்த்தப்பட்ட்து. எளிமையான நடைமுறை, வழக்கின் வேகம், செலவுகள் ஏதுமில்லா சூழல் இந்த நீதிமன்றங்களை அனைவரும் ``அணுகும் தூரத்தில் வைத்துள்ளது

இந்தியா. . . . . . . . ?

இந்தியாவில் எளிமையான, சாதாரணமான சட்ட நடைமுறைகள் கொண்ட அதிகப்படியான கீழமை நீதிமன்றங்களை அமைப்பது முதல் முக்கிய தேவை. ஏன், நம் நாட்டிலும் `இரண்டாம் வகுப்பு குற்றவியல் நீதிமன்றங்கள்’’ மிகச் சிறப்பாக நடந்து வந்தவைதான். அதே போன்றதொரு வேகமான, நியாமான, கடினமில்லாத நடைமுறைகள் கொண்ட, வட்டார மொழியை மட்டும் பயன்படுத்தும், அதிக செலவில்லாத, குற்றம் நடந்த உள்ளூரிலேயே (நகராட்சி, மண்டலம்) விசாரித்து தீர்ப்பளிக்கக்கூடிய அமைப்புகள்தான் நம் முதல் முக்கிய தேவை. அப்படிப்பட்ட ஒரு அமைப்பு சட்டமன்ற பாராளுமன்றவாதிகளிடமிருந்தும்(Legislative) , சட்டத்தை நிறைவேற்றுபவர்களிடமிருந்தும்(Executive)  சுதந்திரம் பெற்ற மக்களின் நம்பிக்கைக்குறிய அமைப்பாக செயல்படவேண்டும். ஏற்கனவே இருக்கும் நீதிபரிபாலனத்திற்கு கட்டுப்பட்டவையாகவும் அதன் கட்டமைப்பில் இருக்கும் `அவசியமான ஒன்றாகவும் இருக்க வேண்டும். எதிர்ப்புகள் மேல்முறையீட்டிற்கு வாய்ப்பு வழங்குவதாகவும், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கீழ் (உரிமையியல் – தொகை, குற்றவியல் – அளவு) தொடுக்கப்படும் வழக்குகள் இந்த நீதிமன்றங்களிலேயே விசாரிக்கப்பட வேண்டும். எல்லாவற்றிக்கும் மேலாக வழங்கப்படும் தீர்ப்பு எளிமையாக, சுலபாமாக வேகமாக அமல்படுத்த வேண்டும். சாத்தியமா?

நிச்சயம் சாத்தியம் - ``மாதிரி’’ உள்ளூர் நீதிமன்றம்:
  • கிராமங்களில் 25,000 மக்கள் தொகைக்கும், நகரங்களில் 50,000 மக்கள் தொகைக்கும் ஒரு உள்ளூர் நீதிமன்றம்.
  • மாவட்ட அல்லது குற்றவியல் அமர்வு நீதிபதியால் (பணிபுரியும் இன்னும் 2 நீதிபதிகளிடம் கலந்தாலோசித்து) நியமிக்கப்பட்ட சட்டம் படித்தவர் அல்லது ஓய்வுபெற்ற நீதிபதி அல்லது அரசு அதிகாரி நீதிபதியாக நியமனம். இவர்களுக்கு மதிப்பூட்டுத் தொகை மற்றும் பயணச்செலவு எல்லாம் சேர்த்து ஒரு மாதத்திற்கு 15,000-க்குள் செலவு.
  • நிரந்தர ஊழியர்கள் இல்லாது ஏற்கனவே இருக்கும் அரசு அலுவலகங்களை நீதிமன்றமாக உபயோகித்தல் .
  •  நீதிபதியின் பதவிக்காலம் 3 ஆண்டுகள், தேவைபட்டால் மறுசேர்க்கை.
  •  குறைந்தபட்ச வயது – 45
  •  குற்றம் நடந்த இடத்திற்கே சென்று விசாரிக்கும் அதிகாரம்.
  •  வழக்காட வட்டார மொழி மட்டும்
  •  உரிமையியல் வழக்குகள் – 1 லட்சம் மிகாமல், குற்ற வழக்கு – 1 வருட தண்டனை மிகாமல்
  •  எந்த ஒரு வழக்கிற்கும் – 90 நாட்களுக்குள் தீர்ப்பு.
  •  முதல் மேல்முறையீடு 6 மாதத்திற்குள் முடிவு. இரண்டாம் மேல் முறையீடு அனுமதி மறுப்பு.
  •  இளநிலை உரிமையியல் மாவட்ட நீதிபதி கொண்டு தீர்ப்பு அமல்.
மிக குறைந்த காலத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை வெகுவாக உயர்த்த முடியும். இந்தியா முழுக்க சுமார் 30,000 உள்ளூர் நீதிமன்றங்களை அமைக்க முடியும். 2002-ஆம் ஆண்டு மதிபீட்டின்படி மொத நாட்டிற்கும் சுமார் 600 கோடி ரூபாயிலேயே இந்த நீதிமன்றங்களை அமைக்க முடியும். தற்பொழுது 1400 கோடியில் இவற்றை அமைக்கலாம். இந்திய அரசின் ஒரு நாள் செலவு மட்டும் 5500 கோடி. ஒரு வருடத்திற்கு 90 லட்சம் வழக்குகள் வரை இந்த நீதிமன்றத்தால் விசாரித்து தீர்ப்பு வழங்க முடியும். நீதிமன்றங்களின் மீது ஏற்பட்டுவரும் நம்பிக்கை இழப்பை குறைத்து ஏழை மக்களுக்கும் அணுகும் தூரத்திலான நீதியை  நம்மால் வழங்க முடியும்.

பி.கு : இது மிக முக்கியமான சீர்திருத்தம் என்றாலும், இது போன்ற இன்னும் சில சீர்திருத்தங்களும் - நீதிபதிகள் நியமனம், தேர்வுதேசிய நீதி ஆணையம், தவறு செய்யும் நீதிபதிகளுக்கான தண்டனை ஆகியவை அவசியம்.

Saturday, October 4, 2014

ஜெயலலிதா தண்டனை - பகுப்பாய்வு - பகுதி 1

Share |
நேரடியாக விசயத்திற்கு வருவோம்.

ஜெயலலிதா அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை பல விவாதங்களை துவக்கியுள்ளது. அலசி தொடர்ந்து ஆராயப்பட்டுவரும் சட்ட நுணுக்கங்களை விட்டு, 2 முக்கியமான விசயங்கள் பொது தளத்தில் முன்வைக்கப்படுகின்றன.

1. இந்த முறை ஜெயலலிதா புரிந்து வந்த செம்மையான ஆட்சி.
2. எவரும் மாற்று இல்லாத நேரத்தில் காலம் தாழ்த்தி, தவறான நேரத்தில் வழங்கப்பட்ட, அதிகபட்ச தண்டனை

செம்மையான ஆட்சி :

செம்மையான ஆட்சிக்கு அடிப்படை என்பது எல்லா அல்லது பெரும்பாலான மக்களை சென்றடையும் திட்டம் என்பதாகவே இருக்கும். 

1) அம்மா திட்டங்கள் - அம்மா உணவகம், காய்கறி, மருந்தகம்..தற்பொழுது குடிநீர் வரை.

மேல்சொன்ன எல்லாமே குறைவான விலையில் கிடைக்கிறது என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. அடிப்படை அடிப்படையாக வைத்து பார்த்தால் இந்த திட்டத்தின் பயனாளிகள் எவ்வளவு பேர்?

இதே விலையில் மற்றவர்களால் ஏன் தர முடியவில்லை? - ஏன் முடியாது? நிச்சயம் முடியும்....தடுப்பது எது? அம்மா உணவகம் செயல்படும் இடங்கள் மாநகராட்சிக்கு சொந்தமானது, அரிசி 1 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. லாபம் தேவையற்றது. மிக முக்கியமாக எந்த ஒரு அரசுத் துறைக்கும் எந்த லஞ்சமும் தர வேண்டியதில்லை. காவல்துறையில் இருந்து எவரும் ஓசி இட்லிக்கு வருவதில்லை.

ஒரு தள்ளுவண்டிக்காரர் சென்னையில் விற்கும் இட்லியின் விலை - 4 ரூபாய். அவருக்கு இலவச அரிசி (தினம் இட்லி விற்கும் அளவு) அவ்வளவு கிடைப்பதில்லை. அவருக்கு லாபம் தேவை. மிக முக்கியமாக தினம் வரும் காவலர்களுக்கு அவர் கப்பம் கட்டியே ஆக வேண்டும்.




இன்று தமிழ்நாட்டில் எவராவது ஒரு பைசா லஞ்சம் கொடுக்காமல் ஒரு கடை, ஒரு தொழில் துவங்கமுடியுமா..? லஞ்சமும் வேண்டும், அதே சமயம் நல்ல பெயரும் வேண்டும் என்றால் தமிழ்நாட்டு 'மாதிரி' அருமையான திட்டம். திட்டங்களை வந்து பார்த்து சென்ற வெளிநாட்டினரும், மற்ற மாநிலத்தவரும் இதனை துவக்கும்போது மட்டுமே புரியும் சூட்சமங்கள் இவை.

ஒரு அரசாங்கத்தின் பணி அரசிற்கும், தனியாருக்கும் சிறப்பான பாலமாய் இருப்பதே தவிர, நிரந்தரமற்ற ஓட்டு வங்கிக்கு மேன்மேலும் லஞ்சத்தை ஊக்கிவித்து தொழில்களை அழிப்பது இல்லை. அரசாங்கத்தின் உண்மையான வெற்றி தொழில் செய்வோருக்கான ஒரு சாதகமான சூழலை உருவாக்கி குறைந்த விலையில் அவர்களை விற்க செய்வதே ஆகும். 

2) காவிரி - அரசிதழில் காவிரி தீர்ப்பை வெளியிட வைத்தது ஜெயலலிதாவே சொன்னது போல் அவரின் அரசியல் வாழ்வில் மேற்கொண்ட ஒப்பற்ற சாதனை. மாற்றுக் கருத்தே இல்லை. 

ஆனால் நம் விவசாயிகள் கர்நாடகத்தில் மழை பெய்து தன்ணீர் கிடைக்கும் வருடங்களில் சமயங்களில் துன்பப்படுவது 2 நேரத்தில் - 1. ஆரம்ப ஜூன் மாதம். 2. இறுதி ஜனவரி மாதம். அந்த இறுதியில் நம் தேவைக்கான 30 டி.எம்.சிக்கு மிகப் பெரிய போராட்டங்கள், நீண்ட கடிதங்கள், தற்கொலைகள் நடக்கும். டெல்டா பகுதிகளில் அந்த 30 டி.எம்.சியை தேக்கி வைக்க வாய்ப்பு இருந்தும் அவற்றை நாம் செய்ய முடியாததற்கு யார் காரணம்?

தூர் வாருங்கள் என்று தொடர்ந்து குரல் கேட்டாலும், 'ஏனோ, தானோ' என்ற தூர் வாரும் பணிக்கு, அல்லது மறந்தும் தூர் வாராத நீர் நிலைகளுக்கு யார் காரணம்?

3) முல்லை பெரியாறு - மீண்டும் ஜெயலலிதாவின் சட்டப் போராட்டத்திற்கு, மத்திய அரசிற்கு கொடுத்த தொடர் அழுத்தத்திற்கு கிடைத்த வெற்றி. ஆனால் ஜெயலலிதாவிற்கு மட்டும் அல்லது இந்த வெற்றியின் முன் வரிசையில் அவர் மட்டுமே நிற்கும் தகுதி இருக்கிறதா? ஓட்டுகள் முக்கியம்தான். உண்மையான போராடியவர்களுக்கு கொடுக்கும் மரியாதை அவரின் ஓட்டுகளை மேம்படுத்தத்தானே போகிறது?


4) மீனவர் பிரச்சனை, கச்சத்தீவு மீட்டல் - ஜெயலலிதா தவிர்த்து இந்த பிரச்சனைக்கான தொடர்ந்து குரல் கொடுக்கும் ஒவ்வொருவருக்கும் தெரியும் கச்சத்தீவை மீட்பதால் ஒரு துரும்பும் அசையாது என்று. மீனவர்கள் மேல் உண்மையான அக்கறை கொண்டிருந்தால் அவர்களுக்கான மாற்று தொழில் ஏற்படுத்தி கொடுப்பதில் மாநில அரசிற்கு என்ன சிரமம்? அதற்கான ஒரு சிறு முயற்சியாவது உண்டா..?

உண்மையான அக்கறை கொண்ட அரசியல் கட்சி ஆட்சிக்கு வரும்வரை இது தொடர்கதையாக மட்டுமே இருக்கும்.

5) இலங்கை பிரச்சனை - ஜெயலலிதாவின் இரட்டை நிலைப்பாடு நாம் அரியாததா ?

6) மின்சார பற்றாக்குறை - ஜெயலலிதா அடிக்கடி சொல்வதுபோல் நாம் 'மின்சார பற்றாக்குறை' என்பதே இல்லை என்ற வாதம் பொய்யாக இருந்தாலும், நிச்சயம் அதில் முன்னேற்றம் உள்ளது. ஆனால் கடுமையான மின் பற்றாக்குறையில் மூடப்பட்ட சிறு, குறு தொழில்களை நாம் மீட்டெடுத்தால்தானே தொழில்துறை வளர்ச்சியில் நாம் தற்பொழுது இருக்கும் கடைசி இடத்தில் இருந்து முன்னேற முடியும்?

மேலே சொன்னவை பிரதானமாக சொல்லப்படுபவை. மேலே சொன்னவற்றில் கருணாநிதியை விட இவர் பரவாயில்லை என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. உண்மையே. ஆனால் அவர் செய்த மோசமான ஆட்சியினால்தான் தொடர் தோல்விகளை அவர் சந்தித்து வருகிறார். அதைதான ஜெயலலிதாவும் விரும்புகிறாரா? மேலும் இதற்காக மட்டும்தான் நாம் அவரை தேர்வி செய்தோமா?

நம் தேவை என்ன?

1. லஞ்சம் - இது மிக சாதாரணமாக இன்று போய்விட்டது. ஆனால் அரசு அலுவலகங்களில் நாம் விரும்பிதான் லஞ்சம் கொடுக்கிறோமா? இந்தியாவின் 19 மாநிலங்கள் அரசு அலுவலகத்தில் மக்கள் அல்லல்படக்கூடாதென் கொண்டு வந்த 'சேவை பெறும் உரிமை' சட்டம் தமிழகத்தில் மட்டும் கனவாக இருப்பதேன்?


ஆசிரியர் மாறுதலுக்கு, செவிலியர் மாறுதலுக்கு மாவட்ட வாரியாக கொடுக்க வேண்டிய லஞ்சம் எவ்வளவு தெரியுமா?

2. வெளிப்படைத்தன்மை - வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் தகவல் பெறும் உரிமை தமிழகத்தில் மிகக் கேவலமாக செயல்படாமல் இருப்பது தெரிந்தும் ஜெயலலிதா செய்ததென்ன?

3. ஊழல் - கணிம கொள்ளை, மணல் கொள்ளை, போக்குவரத்து ஊழல், ஆதி திராவிடர் மாணவர்கள் ஊழல். தவறு செய்யும் அரசு அதிகாரிகளை, அரசியல்வாதிகளை தண்டிக்கும் லோக் ஆயுக்தா எப்போது?

4. காவல்துறை - பெண்கள் திருட்டு பயமில்லாமல் இன்று வீதியில் உண்மையிலேயே நடக்க முடிகிறதா? எந்த ஒரு பரிந்துரையும் இல்லாமல் இன்று நாம் கொடுக்கும் ஒரு புகாருக்கு CSR அல்லது FIR வாங்க முடியமா?

5. நீதித்துறை - வழக்குகளை விரைந்து முடிக்கும் 'உள்ளூர் நீதிமன்றங்கள்' அமைக்க எவ்வளவோ வலியுறுத்தப்பட்டும் அது குறித்த ஒரு சிந்தனையாவது ஜெயலலிதாவிற்கு உண்டா?

இன்னும் எத்தனை எத்தனையோ சொல்லி செல்லலாம். எந்த ஒரு ஊரிலாவது பேருந்து நிலையத்தில் இருக்கும் பராமரிக்கப்படாத கழிவறைக்கு இலவசமாக அல்லது குறைந்தபட்சம் 3 ரூபாய்க்குள் சென்று வர முடியுமா.?

திறந்த வெளியில் மக்கள் கழிக்காத ஏதாவது ஒரு கிராமத்தை காண்பிக்க முடியுமா..?

இன்னும் எத்தனை எத்தனையோ கேள்விகள் உண்டு - 1. விபத்துகளில் அதிகமாக உயிரிழக்கும் மாநிலமாக தமிழகம்  தொடர்ந்து இருப்பது ஏன்? 2. தற்கொலைகளில் அதிகமாக உயிரிழக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம்  தொடர்ந்து இருப்பது ஏன்? 3. டாஸ்மாக்கினால் ஏற்படும் உயிரழப்புகளுக்கு யார் பொறுப்பு? 4. மாநில மனித உரிமை ஆணையத்திற்கு தலைவர் நியமனம் எப்போது? 5. இந்தியாவிலேயே மிகச் சிறப்பாக பேசப்படும் மாநிலத்தின் கல்வி உலகளவில் சந்தி சிரிப்பது ஏன்? 6. சாதி ஒழிப்பு ? 7. கடைசியாக நாம் சென்று வரும் சுற்றுலாத் தளங்களில் நம் வீட்டு பெண்களுக்கான ஆடைகள் மாற்றும் அறை அல்லது பெண்களுக்கான கழிப்பறை உண்டா?


2.எவரும் மாற்று இல்லாத நேரத்தில் காலம் தாழ்த்தி, தவறான நேரத்தில் வழங்கப்பட்ட, அதிகபட்ச தண்டனை - அடுத்த பகுதியில்.....


Monday, September 29, 2014

ஜீவா

Share |
திரைப்படங்களில் நிதர்சனம் அல்லது யதார்தத்தை பற்றி பேசும்பொழுது எதிர்மறை முடிவுகள் இயல்பானது. அப்படியான நிதர்சன முடிவுகளில் அந்த முடிவை தாங்கும் கதாபாத்திரத்தோடு அந்த கதாபாத்திரம் பட்ட கஷ்டங்களும் முடிவுக்கு வந்துவிடும். அப்பொழுது உண்மையான உழைப்புக்கான பலன்?

மேலே சொன்ன 2 விசயங்களையும் மிக அழகாக தாங்கி வந்துள்ள படம் ஜீவா. சுசீந்திரன் இயக்கத்தில் இமான் இசையில் விஷ்ணு, ஸ்ரீ திவ்யா, லஷ்மண் நாராயண், சூரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

வயது வித்தியாசம் இன்றி கிரிக்கெட மட்டையை தொட்ட எவருக்கும் இந்த படம் பிடிக்கக்கூடிய வாய்ப்புண்டு. குறிப்பாக சிறு வயதில் தெரு கிரிக்கெட்டில் துவங்கி நாமும் ஒரு நாள் பெரிய கிரிக்கெட்டராக வருவோம் என்று ஏதாவது ஒரு தருணத்தில் நினைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த படம் பிடிக்கும்.


ஜீவாவாக வரும் விஷ்ணுவிற்கும் கிரிக்கெட் மீது தீராத காதல். சச்சின் மேல் மற்றவர்கள் கொண்ட பற்று அவரையும் கனவை நோக்கி ஓடச் செய்கிறது. அந்த கனவிற்கு பெரிய துணையாக தன் சொந்த அப்பா இல்லாவிட்டாலும், அவனின் பக்கத்து வீட்டு அருள் அப்பா அதற்கு பள்ளி காலம் தொட்டு துணையாக இருக்கிறார். பள்ளி கால காதலி ஜென்னியாக ஸ்ரீ திவ்யா - சென்னையில் படிக்கும் மாணவியின் குறும்புகளோடு. பள்ளி குறித்த காதல் காட்டப்பட்டிருந்தாலும், தங்கள் பெற்றோரின் வார்த்தைக்கு ஜென்னி மதிப்பு கொடுத்து காதலை துறக்கும்போது ஈர்க்கிறார். ஆனால் அதே காதல் விஷ்ணு மனதில் ரணமாகிறது.

ஒரு விசயத்தை மறக்க இன்னொரு நல்ல விசயம் தேவை என்ற அடிப்படையில் ஜீவாவின் அப்பா அவனின் தீவிர கிரிக்கெட் பயிற்சிக்கு சம்மதிக்க, அதற்கு பிறகு வரும் கிரிக்கெட் வளர்ச்சி, பயிற்சி, கிரிக்கெட் விளையாடுபவர்களுக்குள் வரும் ஈகோ சண்டைகள், Team work, காதல், நட்பு, கலாய்ப்புகள்தான் பெரும்பாலான படம். சிரிப்பு மூட்ட சூரி.

கிரிக்கெட்டின் உச்ச கட்டத்தை அடைவதற்கு ஒவ்வொருவரும் கடக்க வேண்டிய பாதை மற்றும் Process சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது. அந்த உச்சத்தை அடைய ஜீவா மற்றும் மற்றொரு கிரிக்கெட்டர் ரஞ்சித் ஆகிய இருவருக்கும் தகுதி, திறமை இருந்தும், நம் நாட்டின் சாபக் கேடான சாதி அரசியல் இவர்களை தோற்கடிக்கிறது.'வாய்ப்பு வழங்கப்படாமலேயே இவர்கள் தோற்கும் நிலைமையும் வருகிறது.

பள்ளி மாணவனாக ஜீவாவை பார்ப்பது கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் படம் முழுக்க சிறப்பாக நடித்துள்ளார். இன்னொரு முறை சரியான படங்களை தேர்வு செய்து நடித்துள்ளதிலும் ஜெயித்துள்ளார். பள்ளி காதலியாக ஜீவாவை காதலிப்பதும், பின்னர் அவரை விட்டு விலக நினைப்பதும் என ஸ்ரீ திவ்யாவிடமும் சிறந்த நடிப்பு. ரஞ்சித்தாக வரும் லஷ்மண் நாராயண் கிரிக்கெட்டராகவே தெரிகிறார். தோற்கும்போது காட்டும் வலியில் ஈர்க்கிறார். அவர்களை தாண்டி ஜீவாவின் அப்பா, சார்லி, ரஞ்சித் நண்பர்கள், 'கதற கதற காதலிக்கும்' பி.பி.சேகர், சிறு வயது ஜீவா என அனைவருமே தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளார்கள்.


இமானின் இசையில் 'ஒவ்வொன்றாய் திருடுகிறாய்' மற்றும் 'ஒருத்தி மேலே' சிறப்பு. ஆனால் ஒன்று இளையராஜாவையும், மற்றொன்று பரத்வாஜையும் ஞாபகப்படுத்துகிறது.

மதியின் ஒளிப்பதிவு பாராட்டுக்குரியது. 'ஒவ்வொன்றாய் திருடுகிறாய்' பாடலில் வரும் மிக சாதாரண அமைவிடங்களை வித்தியாசமாய காட்டியது ஆகட்டும், கிரிக்கெட் போட்டிகளை படம் பிடித்தது ஆகட்டும், இல்லை கடைசியில் வரும் பிரம்மாண்ட 'IPL' போட்டி போன்ற ஒன்றை காட்டியதாகட்டும் மிக நிறைவான பணி.

சுசீந்திரன் - இப்படிபட்ட ஒரு கதை களத்தை தேர்வு செய்ததற்கும், துணிச்சலாக கிரிக்கெட்டில் நடக்கும் ஜாதி அரசியலை பேசியதற்கும் மனப்பூர்வ வாழ்த்துக்கள். உறவுகளை கையாள்வதில் அவர் ஒரு வித்தகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். முதலில் காட்டப்படும்பொழுது தேவையற்ற டாஸ்மாக காட்சியிலும் பின்னர் ஒரு நெகிழ்வை கொண்டுவருகிறார்.வாழ்த்துக்கள் சுசீந்திரன்.

நான் முதலில் சொன்னதுபோல தமிழ்நாட்டில் இருக்கும் அநேகமானவர்கள் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்புள்ளது. இந்த படத்தை நிச்சயம் பார்க்க வேண்டியவர்கள் பார்த்து இதனால் ஒரு சிறு மனமாற்றம் ஏற்பட்டாலும் அதுவும் ஒரு வெற்றியே.

Tuesday, September 23, 2014

பைத்தியக்காரன்-3 - "என்னாச்சு?"

Share |

இப்படி நடப்பது இது 2வது முறை. முதல் முறையும் அதே இடத்தில்தான் நடந்தது. அன்று நடந்தது மாதிரியே பொதுக் கூட்டத்தின் முடிவில் ஏதோ ஒரு கேள்விக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கும்பொழுது பாதியில் அப்படி ஆனது. இன்றும் பாதி பதிலில் அப்படி ஆனது. மிகக் குறைந்த நொடிகளே அப்படி இருந்ததால் அதனை யோசிப்பதற்கான நேரம் என சொல்ல முடியாது.  யோசனை என்று இருந்திருந்தால் ‘வந்து..வந்து...’ என வாய் சொல்லிக்கொண்டேயிருந்திருக்கும். "நீங்கள் கேட்கும் கேள்வி எனக்கு புரிகிறது. நீங்கள் உங்கள் பேச்சில் ‘வந்து..’ என்ற சொல்லை பயன்படுத்துவதில்லை. அடுத்தவருக்கு அறிவுரையாகக் கூட இதனை நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்.”

“ஆம், உண்மைதான் ‘வந்து..வந்து’ என்று இழுப்பது ஒரு நல்ல பேச்சாளருக்கு அழகில்லை. அவர் பேச்சாளரே இல்லை. எப்படி நான் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் அனைத்திலும் பேச்சாளருக்கு அவர் பேசிய பிறகு கேள்வி-பதில் பகுதி இருக்கவேண்டுமோ அப்படித்தான் 'வந்து' பயன்படுத்துதல் கூடாது.”

ஆனால் அப்படி இழுக்காமல், எனக்கு நடந்தது மிக குறைந்த நொடிகள் மட்டும் இருந்ததில் ஒரு நன்மையும் இருந்தது. யாருக்கும் அது தெரியவில்லை. எனக்கு தெரிந்திருந்தாலும் புரியவில்லை.

தீவிரமாக யோசித்தேன். ஒற்றுமைகள் சரி. வேற்றுமைகள்..? முதல் தடவை நடந்தபோது இரவு 9 முதல் 10 மணிக்குள்....1 மணி நேரம்தான் பேச்சு. 9.30 தாண்டித்தான் நடந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் கேள்வி-பதில் நேரம்.

2வது தடவை 12 முதல் 12.30க்குள். அரை மணி நேரம்தான் பேச்சும், கேள்வி-பதிலும். அந்த இடைவெளியில் எப்பொழுது வேண்டுமானாலும் நடந்திருக்கலாம்.

முதல் தடவை முக்கிய பேச்சாளர்கள் பேசிய பின்தான் நான் கடைசியாக பேசினேன். 2வது தடவை என்னைத் தவிர முக்கிய பேச்சாளர் யாரும் இல்லை. இல்லை அப்படித்தான் சொல்லிக்கொள்கிறார்கள்.

அது இருக்கட்டும். ஏன் அப்படி ஆனது? ஒரு சிகரெட் பற்ற வைத்தால் புரிய வாய்ப்புள்ளதா? எனக்கு அப்படி தோன்றவில்லை. அதைத் தவிர சிகரெட் புகைத்தும் வெகு நாளாகிவிட்டது.

மேலோட்டமாக பார்த்தால் அதனை நினைத்து நான் சிரிக்கலாம். கூட்டத்தில் கூட இது குறித்து பேசி, அதில் சில நன்மைகள் உண்டு என்று நகைச்சுவைக்கு சொல்லி கைத்தட்டல் வாங்கலாம். ஆனால் தீவிரமாக யோசித்தால்? அது தொடர்ந்திருந்தால்? நினைத்துப்பார்க்கவே பயமாக உள்ளது. அது தொடர்ந்திருந்தால், எங்கு நினைப்பார்ப்பது? அத்தோடு எல்லாம் காலி. வெகுகாலம் இல்லை. சில நிமிடங்கள் தொடர்ந்திருந்தாலே என் ஆட்டம் முடிந்திருக்கும்.

இதனை பற்றி யாரிடமாவது சொல்லலாம் என்றால் ஒரு பக்கம் பயம். எங்கே ஏதாவது தர்கா கூட்டி சென்று தாயத்தோ இல்லை பகவதி அம்மன் கோயில் கூட்டி சென்று பேயோட்டுவார்களோ என்ற பயம்.

இன்னொரு பக்கம் நாம் நகைப்புக்கு உள்ளாவாமோ என்ற நினைப்பு – ‘நடிக்காதடா’ என்ற நகைப்பு.

அது எந்த மாதிரி நிலை..? கஞ்சா அடித்து திரிவார்களே அந்த மாதிரி நிலையா..? கஞ்சா அடித்தால் கடைசியாக என்ன செய்துகொண்டிருந்தார்களோ அதைதான் செய்வார்கள் என கேள்விப்பட்டுள்ளேன். கடைசியாக சிரித்துக்கொண்டிருந்தால் சிரிப்பு, அழுகை வந்தால் அழுகை. உங்களிடம் சொல்வதில் என்ன? – நான் ஒரு முறை மரிஜூணா புகைத்துள்ளேன். நண்பர்கள் வீட்டில் விருந்து. விருந்து முடித்து அனைவரும் சுற்றி அமர்ந்து ஒரு பெரிய சிகரெட் எடுத்து பத்தவைத்து, ஒரு இழு இழுத்து அதற்கு அடுத்தவரிடத்தில் ‘pass’ செய்தார்கள். நானும் சிகரெட் என்று நினைத்து உறிஞ்சினேன். அடுத்தவரிடம் கொடுத்துவிட்டு இது என்ன என கேட்டேன். அப்பொழுதுதான் சொன்னார்கள். எல்லாம் ஒரு அனுபவம் என பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அடுத்த சுற்றில் நான் பங்கேற்கவில்லை. ஆனால் அன்று கஞ்சா குடித்த யாருக்கும் எனக்கு நடந்தது மாதிரி ஒன்றும் நடக்கவில்லை.

பின் எனக்கு ஏன் இப்படி நடந்தது? நடந்தது கூட பரவாயில்லை. இனி இது நடக்காமல் இருக்கும் என்று என்ன நிச்சயம். ஒரு முறை மட்டும் நடந்திருந்தால் பரவாயில்லை. இரண்டாம் முறையும் இப்படி நடக்கும்போதுதான் இதற்கான தீர்வு என்ன என நான் யோசிக்கிறேன்.

இதற்கு மருத்துவம் ஒரு தீர்வாக அமையலாம். ஆனால் நான் அதனை எப்படி விளக்குவேன்? தேவையில்லாமல் வேறு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டுவிட்டால்? அதுவும் வீட்டுக்கு தெரியாமல் எப்படி?

வீட்டிற்கு தெரிந்தால் கூட சமாளித்துவிடலாம். பொதுவில் தெரிந்துவிட்டால்? பின் எனக்கான கைத்தட்டல்? எனக்கான பாராட்டு? இல்லை. நிச்சயம் தெரியக்கூடாது. கைத்தட்டல்கள் இல்லை என்றால் கூட சமாளித்துவிடலாம். கல்லடி கிடைத்தால்? நமக்கு ஏதாவது ‘பட்டம்’ கட்டிவிட்டால்? இல்லை இதனை சரி செய்யாமல் இன்னொரு கூட்டம் இல்லை. யாராவது கூப்பிட்டால் ஏதாவது பதில் சொல்லி சமாளிக்கலாம். அங்கு சென்று அடிபடுவதை விட இது எவ்வளவோ மேல்.

யோசித்து யோசித்து பின் மண்டை வலிப்பது போல் உள்ளது. கொஞ்சம் தலை பயிற்சி செய்ய வேண்டும். தலையை இந்த பக்கமும் அந்த பக்கமும் மாற்றி, மாற்றி சுற்ற வேண்டும். இப்படித்தான் ஒரு முறை ஒரு மருத்துவர் யாருக்கோ சொல்லிக்கொடுத்ததை பார்த்தேன். நானும் இதனை அடிக்கடி செய்து பார்த்துள்ளேன். தலைக்கு ஒரு பயிற்சி. கை வலித்தால் ஒரு பயிற்சி. முதுகு வலிக்கு ஒரு பயிற்சி. எல்லா பிரச்சனைக்கும் ஒரு பயிற்சி. நானே எனக்குள் சிரித்துக்கொண்டேன். ஒரு யோசனையும் பிறந்தது. இவ்வளவு பிரச்சனைகளுக்கு பயிற்சி இருக்கும்பொழுது நம் பிரச்சனைக்கு பயிற்சி இருக்காதா? ஆனால் அப்படி ஒரு பயிற்சி உண்டா இல்லையா என எப்படி தெரிந்துகொள்வது? இணையம்.

ஆனால் என்ன என்று தேடுவேன்? புரியாத ஒரு பிரச்சனையை எப்படி விளக்குவேன்? பெருவிரல் நகம் வைத்து பற்களை நற நற என தேய்த்தேன். சுற்றும், முற்றும் பார்த்தேன். ஒன்றும் இல்லை. பின் மண்டை வலி ஜாஸ்தியானது. பயிற்சி துவக்கம்.

இந்த பக்கம் 10 முறை. அந்த பக்கம் 10 முறை. தூக்கம் வருவதுபோல் உள்ளது. எழுந்தபின் இது குறித்து யோசிக்கலாம்.

அவர் தூங்கிப்போனார். அவரை சுற்றிலும் எண்ணற்ற காகிதங்கள். ஒரு காகிதத்தில் ஒரு முடிவற்ற கவிதை. இன்னொரு காகிதத்தில் ஒரு நாடகத்திற்கான ஆரம்ப மேடை அலங்காரங்கள். இன்னொன்று சினிமா ‘script’என்ற ஆரம்பம் மட்டும். இன்னொரு காகிதத்தில் இந்த கதையின் தொடக்கம்.......
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த கதைக்கு சம்பந்தமற்ற, மேலும் பைத்தியக்கார கதைகள் படிக்க :  பைத்தியக்காரன்-1 பைத்தியக்காரன்-2