Wednesday, December 22, 2010

அது ஒரு புறவழிச் சாலை!

Share |
அது ஒரு புறவழிச் சாலை!

வேகத்தடை ஏதுமில்லா
புறவழிச் சாலை!

முகப்பு விளக்குதான்
எங்கள் முகவரி

முகப்பு விளக்கு வெளிச்சமே
எங்கள் தொடர் இருட்டு


இரு கண்களை நானும்
ஒரு கண்ணை அவனும்
ஊடுருவும் தருணம்!

ஊடல்
கூடல் முன்
ஊடுருவலே பிரதானம்!

ஆணா,
பெண்ணா,
என்னா என்பதில்
படியும் பேரம்

இருட்டில்
திருட்டில்
எல்லாம் முடியும்


வெளிச்சம் கண்டு
வெகு நாளானது

வெய்யில் வாராது
போய்விடுமோ?

வெய்யில் இல்லாத
தேசத்தில் மழை வருமோ?

ஐயோ வேண்டாம்
மழை வரும் வேளையில்தான்
மானம் அதிகமாய்
பரிபோகிறது!

நெடு நாட்களுக்கு பிறகான கவிதை முயற்சி இது. என்னை பாதிக்காத எந்த ஒரு விசயத்தையும் என்னால் கவிதையாய் உருவாக்க முடிவதில்லை. நான் தினம் செல்லும் புறவழி சாலையில் பார்க்கிற நிகழ்வு இது. மிருகங்கள் கூட மழைக்கு ஒதுங்கிவிடுகிறது. மழையில் இவர்கள் படும் துயரம்....

Sunday, December 5, 2010

தா

Share |
பெண் பார்த்து வந்த தருணம் முதல் ஒவ்வொரு நொடியையும் அவளுக்காகவே அவன் வாழ்கிறான். தன்னை முழுவதும் மாற்றிக்கொள்கிறான். மிகுந்த சிரமப்பட்டு அவளுக்காக ஏற்படுத்திய இப்படிபட்ட காதலை தன்னுடைய தவறான செயலினால் அவன் இழக்க நேரிடுகிறது. இனி எப்பொழுதும் அவள் இல்லை என்று உறுதியாகிறது. துக்கங்களை போக்கும் மருந்தான கண்ணீர் கூட விட முடியாத சூழலில் தன் குடும்பத்தோடு பயணம் செய்ய நேரிடுகிறது. இப்படிபட்ட ஒரு சமயத்தில் தன் நண்பர்களோடு செல்வதே சரியென அவன் தந்தை நினைக்கிறார். நடந்து செல்லும் வழியில் யாரோ ஒருவரின் வீட்டில் ஒப்பாரி சத்தம் கேட்க அங்கே இருக்கும் சடலத்தை பார்த்து அவன் உடைந்து கதறுகிறான். சோகத்தை சொல்ல இப்படிப்பட்ட ஒரு கவித்துவமான காட்சியை நான் எந்த திரைப்படத்திலும் கண்டதில்லை.

தன் நண்பர்களில் ஒருவன் நாயகனை 'தண்ணி அடிக்க' காலையிலே வந்து அழைக்கிறான். அப்பொழுது வீட்டிற்கு வந்த ஒரு குடும்ப நண்பர் தன் மகளுக்கு நாயகனை திருமணம் செய்ய கேட்டு செல்கிறார். நாயகன் நண்பனுடன் செல்கிறான். அவர்கள் மது அருந்துகிறார்கள். அவன் இரவு வீடு திரும்புகிறான். அவன் தாய் அவனிடம் திருமணம் சம்பந்தமான பேச்சை துவங்குகிறார். இது ஒரு மிக சாதாரணமான காட்சி. திரைப்படங்களில் continuity என்று சொல்லப்படும் 'தொடர்சியான நிலை' படம் நெடுக வருவதற்கு இது ஒரு சிறந்த சாட்சி.அந்த continuityயே நம்மை திரைப்படத்துடன் படம் நெடுக ஒன்ற வைக்கிறது.



இவ்வளவு அறிமுகங்களுடன் (நடிகர்கள் - 'நாடோடிகளில் வருபவரை தவிர எல்லோரும், இசை, பாடிய அனைத்து பாடகர்கள், நடனம், சண்டை பயிற்சி, ஒளிப்பதிவு, இயக்கம்) வந்த படம் என்பது பார்ப்பவரை மலைக்க வைக்கிறது. குறிப்பாக நாயகனின் நடிப்பு. நாயகன் ஸ்ரீஹரி படத்தின் இறுதியில் அவரும் கலங்கி நம்மையும் கண் கலங்க வைக்கிறார். நாயகனின் நண்பர்களாக வரும் நடிகர்களான பெனிட்டோ, மதன், சண்முகம், வெற்றிவேல் மற்றும் கோவிந்தன் நிறைவான நடிப்பை தந்துள்ளனர். நாயகனின் தாய் வசந்தி ஒரு நல்ல தேர்வு.

இசை அமைப்பாளர் ஸ்ரீவிஜய் அவர்களை பற்றி கூற வேண்டிய அவசியமில்லை. அவரின் 'ஏதோ ஒரு ஏக்கமோ', 'என்னை தொட்டுபுட்டா'. 'இமை திறந்தேன்' அவரை பற்றி பேசும்.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் மற்றும் இயக்கம் - சூர்ய பிரபாகர். எத்தனையோ துறைகளில் எவ்வளவோ திறமைசாலிகள் இருந்தாலும் வெளிச்சத்திற்கு அதிகமாகய் நாம் கொண்டுவருவது திரைத்துரையினரைதான். இந்த படம் பார்த்த பிறகு அதில் ஒன்றும் தவறு இருப்பதாய் தோன்றவில்லை.

படத்தின் பெயர் - 'தா'

நான் இதுவரை எந்த படத்தையும் 'திறனாய்வு' செய்தததில்லை. அது தவறான விசயம் என்று கூட நினைத்துள்ளேன். (திறனாய்வு என்ற பெயரில் திரைப்படத்தின் கதையை சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுவதே காரணம்). ஆனால் விமர்சனம் போன்ற விசயங்களே பலராலும் அறியப்படாத படத்தை பலரும் அறிய உதவுகிறது என்பதை புரிந்துகொண்டதால் இந்த விமர்சனம்.