Thursday, June 25, 2009

கடிதம் (கதை - 11)

Share |
                                உ
திருச்சி                                   மதுரை
      அன்புள்ள சந்தோஷிற்கு நயினா அம்மா எழுதிக்கொண்டது. இங்கு யாபேர்களும் நலம். இதுபோல அங்கு நீ நலமாக இருக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.மேலும் நலத்திற்கு கடிதம் எழுதவும்.
      உன் கடிதம் கிடைக்கப்பெற்றோம். உன் கடிதம் கண்டவுடன் எங்கள் இதயம் உடைந்து சுக்கு நூறாகி விட்டது. ஏனென்றால் நீ ஒரு பரிட்சையில் பெயில் ஆவாய் என்று நாங்கள் கொஞ்சம் கூட நினைத்து கிடையாது. ஏதோ ஒரு இடி எங்கள் தலை மேல் விழுந்ததை போன்று உணர்கிறோம். எது நடக்க வேண்டுமோ அது கண்டிப்பாக நடந்தே தீரும். நாங்கள் எங்கள் மனதை தேற்றிக்கொள்ள முயற்சிக்கிறோம். முடியுமா என்பது சந்தேகமே. ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள். நீ நன்றாக படித்தால்தான் நம் சொந்தபந்தங்களும், மற்ற சுற்றத்தாரும் உன்மேல் வைத்திருக்கும் மரியாதை நிலைத்து நிற்கும். இனியாவது அதனை கெடுத்துக்கொள்ளும்படி நடக்காதே.
      ஆனால் என் மனதில் பட்டதை அன்றே சொன்னேன். ஹாஸ்டலை விட்டு வெளியே வந்தால் இப்படி ஆகும் என்று. இது என் கருத்து. என் கருத்தை நீ பொய்யாக்கி இருக்க வேண்டும்.
      நீ பாஸ் ஆனாலும், பெயில் ஆனாலும் அது உன்னுடைய வாழ்க்கை. நாங்கள் உனக்கு செலவுதான் செய்யலாம். ஆலோசனை கூறலாம். மேற்கொண்டு உன் வாழ்க்கையை நிர்ணயிப்பது நீதான். ஆயிரம் சமாதானம் சொன்னாலும் மனதால் ஜீரணிக்கவே முடியவில்லை. இனிமேலாவது உன் எதிர்கால வாழ்கையை நினைத்து, நம் குடும்ப சூழ்நிலையையும் நினைத்து எப்படி படிக்க விரும்புகிறாயோ, அப்படி படி. உனக்கு அதிகப்படியாக புத்தி கூற தேவையில்லை என்று நினைக்கிறேன்.
நைனா கூறிய யாவற்றையும் அப்படியே அம்மா எழுதி உள்ளேன்.

சந்தோஷிற்கு அம்மா எழுதுவது.
      உன் படிப்பையும், வேலையையும் வைத்துதான் நம் குடும்பமே முன்னுக்கு வரவேண்டும் என்று எண்ணி உள்ளேன். எனவே அனுதினமும் நன்றாக படித்து வீட்டிற்கு மார்குகள் வரும்படி செய்யவும்.
      மேலும் நயினா மிகவும் மனது உடைந்து போயுள்ளார். யாரிடமும் சந்தோஷ் பெயில் என்று கூறிவிடாதே, எல்லா சொந்தங்களும் வேதனைப்பட்டு விடுவார்கள் என்று கூறினார். நயினா வாழ்க்கையில மிகவும் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறார். உன் மார்க்கும் இப்படி ஆனவுடன் மிகவும் வேதனைப்பட்டார். எனவே வாழ்க்கையில் கடவுள் நம்பிக்கையும், படிப்பில் நன்கு கவனமும் செலுத்தப்பார்க்கவும்.
      மேலும் யார் மீதும் வாழ்க்கையில் கோபம் என்பதே வைத்துக்கொள்ளாதே. எல்லோரிடமும் அன்பாக பேசவும். எல்லோரையும் போல நீயும் நிறைய கோபப்படுகிறாய். தயவுகூர்ந்து அன்புடன் கோபத்தை குறைத்துக்கொள். இது என் தாழ்மையான வேண்டுகோள். நன்றாக படி.

என் கண்களில் கண்ணீர் கோர்த்துக்கொண்டது. என் பக்கத்தில் இருந்த குடத்தில் கொஞ்சம் தண்ணீர் எடுத்து குடித்தேன். தண்ணீர் விழுங்குவது சிரமமாய் இருந்தது.

என் கடிதத்திற்கான பதில் கடிதம்தான் இது. முதலில் வீட்டில் தெரியப்படுத்தாமல் மறைத்துவிடலாம் எனதான் நினைத்தேன். அதற்காக கல்லூரி பதிவேட்டில்கூட என் நிரந்தர முகவரியை மதுரைக்கே மாற்றி இருந்தேன்.

நான் ஒரு பரிட்சையில் தோல்வி அடைந்தேன் என்பது எனக்கே மிகுந்த வேதனையாகவும், சில நேரத்தில் ஆச்சர்யமாகவும் இருந்தது.


பள்ளி படிப்பில் எப்பொழுதுமே நான் முதல் ரேங்க் மாணவன். LKG முதற்கொண்டு எட்டாம் வகுப்பு வரை நான் முதல் ரேங்க் தவிர்த்து வாங்கியதில்லை. ஒன்பதாம் வகுப்பு வேறு ஒரு பள்ளிக்கு மாறினேன். அங்கு நிறையவே போட்டி இருந்தது. முதல் ரேங்க் என் கையை விட்டு போனது. இரண்டாம், மூன்றாம் இடங்களுக்கு எப்பொழுதும் தள்ளப்பட்டேன். பத்தாம் வகுப்பிலும், பன்னிரெண்டாம் வகுப்பிலும் பள்ளியில் முறையே இரண்டாம், மூன்றாம் இடம் பிடித்தேன். அப்பா சிறிது கவலை கொண்டாலும் பெரிதாய் ஒன்றும் காட்டிக்கொள்ளவில்லை.

நல்ல மதிப்பெண்கள்தான் எனக்கு அரசு பொறியியல் கல்லூரியை பெற்றுக்கொடுத்தது. அதே கல்லூரி என்னை இப்படி ஏளனப்படுத்தி பார்க்கும் என்று ஒருநாளும் நான் நினைத்ததில்லை.

நிறைய நண்பர்கள், ஊர் சுற்றல் என்று காலம் கழிந்தது. ஹாஸ்டல் சாப்பாடு எப்பொழுதும் கசந்ததால், பெரும்பாலும் வெளியேதான் சாப்பிட்டோம். நாங்கள் சாப்பிடும் ஒவ்வொரு உணவகம் பக்கமும் ஒரு திரை அரங்கு தவறாமல் இருந்தது. வெளியே சாப்பிடுவது கட்டுபடி ஆகாத காரணத்தால் ஹாஸ்டல் விட்டு வந்து வெளியே ஒரு வீடு எடுத்து தங்கினோம். இன்னும் சுதந்திரமாக செயல்பட்டோம். மாலை காட்சி இரவு காட்சியானது. சில பழக்கங்கள் எங்களோடு வந்து சேர்ந்தது.

முதலாம் செமஸ்டர் தினம் படித்தேன். இரண்டாம் செமஸ்டர் இன்டெர்னல் மட்டும் படித்தேன். மூன்றாம் செமஸ்டர் கடைசி பரீட்சைக்கு மட்டும் படித்தேன். தேவையான அளவு மட்டும் வகுப்புக்கு சென்றேன். டிராயிங் வகுப்புகளுக்கு யாராவது proxy கொடுக்க, அதனை முற்றிலும் தவிர்த்தேன்.
"என்ன மாப்ள நாம பார்க்காத ட்ராயிங்கா..?"

டிராயிங் பரீட்சை தொடங்கிய மூன்றாவது நிமிடம் முதல் முதலாய் என்னை பின்னோக்கி ஓட்டிப்பார்த்தேன். கடவுளிடம் கெஞ்சினேன். இந்த முறை எப்படியாவது தேற்றிவிட்டால், கண்டிப்பாக ஒழுங்காய் படிப்பதாய் வேண்டிக்கொண்டேன். தியரி பரீட்சை என்றாலாவது அக்கம் பக்கம் பார்க்கலாம், இந்த பரிட்சையில் என்ன செய்ய முடியும். மேலும் டிராயிங் கருவியான drafter-ஐ எப்படி சரியாக பொருத்துவது என்பது கூட என்னால் யோசிக்கமுடியவில்லை. தொடர்ந்து அங்கு இருந்தால் ஏதேனும் இருதய கோளாறு உண்டாகும் என 1 மணி நேரத்தில் அறையை விட்டு கிளம்பிவந்தேன்.


அப்பா - இன்று முன்னேறிவிடலாம், இன்று முன்னேறிவிடலாம் என்று பெருங்கனவுகளோடு வாழும் ஒரு ஏழ்மையான மனிதர். நான் நன்றாக படிப்பதால் எனக்கு எப்பொழுதும் அவரிடத்தில் ஒரு தனி மரியாதை.
"என் புள்ளதான் என்னோட கனவெல்லாம் நெனவாக்குவான் பாரேன்"....பெருமையோடு என் அப்பா. அவர் ஆசையெல்லாம் ஒன்றுதான். ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும். அதற்கும் பணம் செர்த்துக்கொண்டுதான் உள்ளார். ஆனால் சேர்க்கும் பணம் ஒவ்வொரு முறையும் ஏதாவது செலவுக்கு உபயோகப்படுகிறது, என் படிப்பு, சாப்பாடு செலவு உட்பட.

அம்மா - அன்பான அம்மா. அடுத்தவர் உள்ளம் நோகாமல் எல்லோரிடத்திலும் அன்பு காட்டுபவர். அவரின் கனவு, அப்பாவின் கனவை நினைவாக்குவது.

சொந்தபந்தங்கள் - "ச..நம்ம சந்தோஷுக்கு டிஷ்டிரிக்ட் ரேங்க் வரலன்னா, அப்போ சரியாய் யாரும் பேப்பர் திருத்தலன்னுதானே அர்த்தம்."
என் பத்தாம் வகுப்பு பரிட்சையை பெரிதாக எதிர் பார்த்து ஏமாந்தவர்கள்.

இவர்களை ஏமாற்றுவது நான் கண்ட தோல்வியைவிட என்னை பெரிதும் துன்புறுத்தியது. அதனால்தான் என் கடிதம் எழுதினேன். என்னை மன்னிக்கும்படி வேண்டி கேட்டுக்கொண்டேன். பதில் கடிதமும் கிடைக்கப்பெற்றேன்.


"எங்கள் இதயம் உடைந்து சுக்கு நூறாகி விட்டது "
"எங்கள் இதயம் உடைந்து சுக்கு நூறாகி விட்டது"
இந்த வார்த்தைகளை தேடியே மீண்டும் மீண்டும் மனது அலைபாய்ந்தது. கண்ணீர் பீறிட்டு வந்தது.

என் கண்ணீரில் சிலத்துளி பட்டு அந்த எழுத்துக்கள் அழிந்து போனது.

அங்கங்கே சிதறி கிடந்த புத்தகங்களை ஒழுங்கு செய்து என் மேஜையில் வைத்தேன். எல்லா புத்தகங்களுக்கும் மேலே என் பெற்றோரின் கடிதத்தை வைத்தேன்.

Wednesday, June 17, 2009

பைத்தியக்காரன் - 1 (கதை - 10)

Share |
அவன் அந்த ஜன்னலின் வழியே வீதியை வெறித்து பார்த்துக்கொண்டிருப்பான். அவனுக்கு சுமார் 18 வயது இருக்கும். அந்த வீட்டினுள் இருந்து எப்பொழுதும் மெல்லிய ஓசையில் ஃப்.ம் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். அந்த வீட்டில் அவனை தவிர அவனின் தந்தை, தாய் மற்றும் அவனின் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் தம்பி. அவர்கள் எல்லோரும் தத்தம் தங்கள் பணிகளுக்கு கிளம்பிவிட, அவன் வீட்டினுள் வைத்து பூட்டப்படுவான். ஒரு சிறு குழந்தையை கொஞ்சுவதைபோல் அவன் அன்னை அவனை கொஞ்சிச் செல்வார்.கொஞ்சி முடித்து தன்னுடைய கணவனின் வண்டியில் பின் அமரும்போது அவர்களின் கண்களில் தண்ணீர் கோர்த்திருக்கும்.

நான் தங்கி இருந்தது அவனின் எதிர் வீட்டில். நிறைய வீடுகளை கொண்டது எங்கள் குடியிருப்பு. எங்கள் இருவரின் வீடும் தரை தளத்தில் எதிர் எதிராய் அமைந்திருக்கும். என் வீட்டை விட்டு வெளியே வந்து மூன்று அடி நேராக வைத்தால் அவர்களின் வீட்டுக்குள் நான் ஒரு அடி சென்றிருப்பேன். எங்கள் குடியிருப்புக்கு எதிர்புறம் வெறும் பொட்டல் காடு போல் இருக்கும். நிறைய முள் செடிகள் மட்டுமே காட்சி அளிக்கும். மக்கள் அதைதான் குப்பை போடும் இடமாக பயன் படுத்தி வந்தனர். இந்த வரிசையில் ரயில் பாதை வரும் ஒரு திட்டம் இருப்பதால் இங்கு யாரும் வீடு கட்டவில்லையாம்.

அவன் அடைக்கப்பட்ட அறை வீதி நோக்கி இருந்ததால், அவனை பார்க்க நான் வீட்டை விட்டு வெளியில்தான் வர வேண்டும். வீதியில் செல்லும் யாவரும் அவனை பார்க்கலாம் என்றாலும், இந்த அவசர சென்னையில் யாருக்கும் அவனை பார்க்கும் நேரமோ, எண்ணமோ கூட இருந்திருக்க வாய்ப்பில்லை. என் சித்திக்கு கூட இப்படி ஒருவன் இருக்கிறான் என்று தெரியாது. அவளும் பணிக்கு செல்பவள். என் அம்மாவாக இருந்திருந்தால் இந்த நேரத்திற்கு அந்த குடும்பத்தின் கதையை கேட்டிருப்பாள்.

நான் தங்கியிருந்த வீடு என் சித்தி, அம்மாவின் தங்கயுடையது. எல்லோரும் போல் நானும் வேலை தேடித்தான் இங்கே வந்திருக்கிறேன். என் சித்திக்கு ஒரு பெண் மட்டும். பதிணொண்றாம் வகுப்பு படிக்கிறாள்.

வேலை தேடும் மற்ற பொழுதில் நான் இவனைதான் கவனித்துக்கொண்டிருப்பேன். அவனை பார்த்துக்கொள்ள ஒரு ஆளாவது இருந்திருக்கலாம். இல்லையேல் அவன் அன்னையே அவனை பார்த்துக்கொண்டிருக்கலாம். காலையில் வேலைக்கு செல்லும் அவன் அம்மா மதியம் ஒரு 3 மணிபோல் வந்துவிடுகிறார். அதன் பிறகு அவனை ஒரு அரை மணி நேரத்திற்கு அங்கு காண முடிவதில்லை.

காலையில் அவர்கள் எல்லோரும் வெளியே செல்கையில் அவன் மேல் சட்டை, கால் சட்டை அணிந்து காண்கிறேன். அவன் ஜன்னலுக்கு வரும்பொழுது, அவனின் மேல சட்டை இல்லை. கால் சட்டை அணிந்துள்ளானா என்பதை என்னால் நிச்சயம் சொல்ல முடியவில்லை. மதியம் அவன் அன்னை வந்த பிறகு வேறு ஒரு ஆடையில் தோன்றுகிறான்.

அவன் அன்னை வந்த பிறகு வானொலி சத்தம் குறைகிறது. நான் என் வீட்டுக்குள் சென்றால், அவனின் அன்னை அவனை கொஞ்சும் சத்தம் கேட்கின்றது. அவனை சாப்பிட வைக்க, சில மாத்திரைகள் விழுங்க வைக்க என்று விதவிதமான கொஞ்சல்.

அவனுடைய தந்தை ஒரு 5 மணிக்கு வருகிறார். அவர் சில நேரத்தில் அவனை கொஞ்சுகிறார்.

அவன் தம்பி பள்ளி முடிந்து 6 மணிக்கு வருகிறான். அவனுடைய முகத்தில் ஒரு சலிப்புதான் தோன்றுகிறது.

அன்று நான் வெளியே ஒரு நேர்முகத்தேர்விற்கு சென்று வந்தேன். வீட்டு பக்கத்தில் வந்ததும் அவனை பார்க்க நினைத்தேன். அவனை காணவில்லை. நான் ஆடை மாற்றும்பொழுது அவன் வீட்டில் இருந்து கத்தும் சத்தம் கேட்டது. ஓடிப்போய் அந்த வீட்டை தட்டினேன். வீடு பூட்டபட்டிருக்க வேண்டும். ஜன்னல் வழியே பார்த்தேன். சத்தம் மட்டுமே வந்தது. வீட்டை உடைக்கலாமா..? யாரையாவது கூப்பிடலாமா..? வீதிக்கு வந்தேன். நல்ல வேலையாக அவன் அம்மா வந்துகொண்டிருந்தார்.அவர் திசை நோக்கி ஓடினேன்.

"கொஞ்சம் சீக்கிரம் வாங்க.." என்னை வெறித்து பார்த்தார்.
"நான் உங்க எதிர் வீட்ல இருக்கேன். உங்க பையன் உள்ள சத்தம் போட்டுட்டு இருக்கான்."
"நீங்க புதுசா. மன்னிச்சிடுங்க. உங்கள தொந்தரவு செஞ்சிட்டனா..?"
இவர் என்ன பேசுகிறார்.
"அதெல்லாம் இல்லங்க. அவனுக்கு என்ன ஆச்சோன்னு..."

அவர் பதட்டப்படவில்லை.
கதவு திறந்தார். அவன் ஆடை ஒன்றும் அணியாமல் கீழே படுத்திருந்தான்.
"என் செல்ல குட்டி..." என்று கொஞ்ச ஆரம்பித்தார்.
நான் அங்கிருந்து விலகினேன்.

ஒரு சனிக்கிழமை காலை, அவன் அப்பா அவனை வீட்டைவிட்டு வெளியே கூட்டிவந்தார். அவனை தன் ஸ்கூட்டரின் முன் இருக்கையில் அமர்த்தி, இவர் பின் அமர்ந்து கொண்டார். ஒரு ஆட்டோ வந்தது. அதில் அவன் அம்மா ஏறிக்கொண்டார்.

"நான் வேணா ஆட்டோல கூட்டிவரட்டா..?"
"இல்லமா வேணாம். நானே பார்த்துகிறேன்."

ஒரு 2 மணி நேரம் கழிந்து அவர்கள் வந்தார்கள். மீண்டும் கொஞ்சல் சத்தம் கேட்டது.

கொஞ்ச நேரத்தில் வெளியே சென்ற என் தங்கை வீட்டிற்குள் ஓடி வந்தாள். அவன் தன் உடம்பில் ஆடை ஏதும் இல்லாமல் வீதி நோக்கி போய்க்கொண்டிருக்கிரானாம்.
ஓடி சென்று அவனை இழுத்து வந்து அவனுடைய வீட்டில் சேர்த்தேன்.

அவர்கள் இருவரும் அவனை ஆற தழுவிக்கொண்டார்கள்.
"என்ன கண்ணு. அடி பட்டிருந்தா என்ன பண்ணுவ..?"
"ரொம்ப தேங்க்ஸ் சார். கதவ திறந்து வெச்சிட்டு தூங்கிட்டோம்."

"இந்த தம்பிதாங்க அன்னைக்கு இவன் சத்தம் கேட்டு, ஓடி வந்தாப்ள"
"தேங்க்ஸ் தம்பி. நீங்க எதிர் வீட்ல இருக்கீங்களா..?"

நான் அவனை பற்றி ஒன்றும் கேட்டுக்கொள்ளவில்லை.

அடுத்த தினம் முதல் நான் பார்க்கும்போது, அவனும் என்னை பார்ப்பான். நான் சிரிக்க அவனும் சிரிப்பான். அவனுக்கு ஏதாவது வாங்கித்தர தோன்றியது.

என் அம்மா என் சித்தி வீட்டிற்கு வந்தாள். அம்மாவை பேருந்து நிலையத்திலிருந்து கூட்டி வரும்போது அவனை பற்றி பேசி வந்தேன்.


அவன் சிறு வயதில் எல்லா குழந்தையை போல் நன்றாகவே இருந்திருக்கிறான். படிப்பும் நன்றாகவே இருந்திருக்கிறது. ஏழாம் வகுப்பு படிக்கும்போது இவர்கள் ஏதோ ஒரு உறவினரின் திருமணத்திற்கு சென்றனர். திரும்பி வரும்பொழுது, இவனுக்கு பிடித்த ரயிலில் பயணிக்கலாம் என நினைத்தனர். இவனின் தம்பியும், அன்னையும் நடை மேடையில் காத்திருக்க, பிரயான சீட்டு வாங்க இவன் தந்தையுடன் இவனும் சென்றான். சீக்கிரம் வாங்கி திரும்ப வேண்டும் என்பதற்காக தண்டவாளம் வழியே இவர்கள் செல்ல, பக்கத்து தண்டவாளத்தில் வந்த வண்டி தன்னுடைய தண்டவாளத்தில்தான் வருவதாய் நினைத்து இவன் பயம் கொண்டு "அப்பா" என சத்தம் செய்துள்ளான். அவன் பேசிய கடைசி வார்த்தை அதுதான்.

எத்தனையோ மருத்துவர்கள், எவ்வளவோ மாத்திரைகள்.பார்க்கும் மருத்துவர் எல்லாம் கண்டிப்பாக குணமடைய வாய்புள்ளதாகவே கருதுகின்றனராம். ஆனால் எப்பொழுது என்று சரியாக சொல்ல முடியவில்லை.

இரவெல்லாம் மழை பெய்தது. காலை பார்க்கும்பொழுது தெருவெல்லாம் சேறாக காட்சி தந்தது.

அவனை மருத்துவமனை அழைத்து செல்ல வேண்டிய தினம் போல இன்று. சென்ற முறை போல் இந்த முறையும் ஆட்டோ வந்தது. அவன் அம்மா ஆட்டோவில் ஏறிக்கொள்ள, அவன் அப்பா அந்த ஸ்கூட்டரில் அவனை ஏற்றிக்கொண்டார். அவனை என்னால் சரியாக பார்க்க முடியவில்லை. அவன் சிரிப்பு பார்க்க எண்ணி ஏமாந்தேன்.

ஒரு பத்தடி செல்வதுற்குள் வேகமாக சைக்கிள் ஓட்டி வந்த ஒருவர் இவரின் ஸ்கூட்டரில் மோத அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவனுக்கு வலிப்பு வந்தது.

எல்லோரும் ஓடினோம். விழுந்த அதிர்ச்சியில் அவனுக்கு வலிப்பு உண்டாகி இருந்தது. அவன் அம்மா ஆட்டோவில் இருந்து ஓடி வந்து அவனை தூக்கினார். அவனுடைய தந்தையும் தடுமாறி எழுந்தார். செய்வதறியாது திகைத்து நின்றார். ஒருவர் யாரையாவது சாவி அல்லது இரும்பு எடுத்து வர சொன்னார். அவனின் அம்மா சென்ற ஆட்டோ ஓட்டுனர் இரும்பு எடுத்து வந்தார். நான் ஓடி சென்று தண்ணீர் எடுத்து வந்தேன். அவனுக்கு வலிப்பு அடங்கியது. என்னிடம் தண்ணீர் வாங்கி அவன் முகத்தில் அறைந்தனர். அவன் உடல் எல்லாம் சேறு பூசி இருந்தது. அவன் பெற்றோர் கண்களில் கண்ணீர் கசிந்தது.

"ஒண்ணுமில்ல விழுந்த அதிர்ச்சி..எல்லாம் சரியாய் போய்டும்." தண்ணீர் அறைந்தவர் சொன்னார்.
அவர்கள் அவனுக்கு வேறு ஏதேனும் அடிபட்டுள்ளதா என பார்த்தனர். நல்லவேளையாக ஒன்றும் இல்லை. அவனின் தந்தைக்குதான் கையில் சிராய்ப்பு ஏற்பட்டு இருந்தது.

ஒரு இரண்டு தினம் கழித்து மருத்துவமனை போகலாம் என முடிவு செய்தனர். அவனை வீட்டுக்குள் அழைத்து சென்றார்கள். உள்ளே போகாமல் அவன் அடம் பிடித்தான். அவன் அன்னை அவனை கட்டிக்கொண்டு உள்ளே இழுத்து சென்றார். அவனுடைய கத்தல் அந்தே வீதியே கேட்டது.

அடுத்த நாள் அவன் அம்மா என்னிடம் வந்தார்.
"அவன கொஞ்சம் அப்பப்ப பாத்துக்கிரியா..?"

இரவு வெகு நேரம் கண் விழித்து இருந்ததாகவும் இப்பொழுதே தூங்குகிறான் எனவும் சொன்னார்.
எனக்கு ஒரு மணி நேர வேலை இருந்தது.

"கூட இருக்கெல்லாம் வேணாம் கண்ணு. ஏதாவது சத்தம் கேட்டா மட்டும் பாரு. இந்தா சாவி."

நான் வெளியே சென்றேன். நன்றாக மழை பிடித்துக்கொண்டது. ஒரு மணி நேரத்திற்கு மேலாகி இருந்தது.மழையிலேயே வீடு வந்து சேர்ந்தேன். அவன் வீட்டின் ஜன்னல் வழி பார்த்தேன். அவனை காணவில்லை. உள் அறையில் தூங்குகிறான் போல. கதவில் காது வைத்து பார்த்தேன். வீட்டுக்குள் இருந்து ஒன்றும் சத்தம் இல்லை. மழையின் சத்தம்தான் அதிகமாக இருந்தது.

இரண்டு மணி நேரம் ஆனது. எனக்கு பசித்தது. கதவை திறக்க எண்ணி என் வீட்டை திறந்தேன். என் கதவின் மேல் ஒரு பாம்பு நின்றது. ஒரு நிமிடம் பயந்து போய் அலறினேன். என் சத்தம் வெளியே கேட்டிருக்க வாய்ப்பில்லை. கதவை அப்படியே வைக்கவும் முடியாது. மூடினாலும் பாம்பு போய் விடும் என்று உறுதியாக சொல்ல முடியாது. கண்ணுக்கு எட்டும் தூரத்தில் எதுவும் அகப்படவில்லை. வீட்டிற்குள் சென்று ஏதேனும் எடுக்கக்கூட முடியாமல் அந்த பாம்பையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு 15 நிமிடத்தில் பாம்பு கதவை விட்டு இறங்கி வீதி நோக்கி சென்றது. பின் அந்த பொட்டலில் சென்று மறைந்தது.

ஒரு நிம்மதி பெரு மூச்சு விட்டு வீட்டுக்குள் வந்தேன். பாம்பு வந்ததில் நான் அவனை மறந்துபோயிருந்தேன். சாவியை எங்கு வைத்தேன் என நினைவில்லை. திடீர் என ஒரு பயம் என்னை கவ்விக்கொண்டது. எங்கிருந்து வந்தது இந்த பாம்பு..?அவன் கதவில் மீண்டும் காது வைத்தேன். இப்பொழுதும் சத்தம் இல்லை.

வேகமாக தேடி சாவியை கண்டுப்பிடித்தேன். வீட்டை திறந்தேன். அவன் இன்னும் உறங்கிக்கொண்டிருந்தான். நிம்மதியாக இருந்தது. அவனை எழுப்ப முயற்சித்தேன்.

எழுந்து என்னை வித்தியாசமாய் பார்த்தான். சுற்றும் முற்றும் பார்த்தான்.
"அப்பா..." என்றான், அவர் எங்கே என கேட்பதுபோல்.