Wednesday, October 28, 2009

ராகுல் தினகரன் - ஒரு அறிமுகம்

Share |
நீண்ட நாட்களாகவே எழுத நினைத்த பதிவு இது. இன்றைய தேதிக்கு இதை விட ஒரு சிறந்த சந்தர்ப்பம் அமையாது.
ராகுல் தினகரன் - கல்கி நிறுவனத்தின் (Kalki Mechanical Prototypes Pvt Ltd) நிர்வாக இயக்குனர். பொறியியல் படித்த ஒவ்வொருவரும் தங்களுக்கான வேலையே வேறு ஒரு இடத்திலே தேடிக் கொண்டிருக்கையில், தனக்கான சுயத்தை தானாகவே தோண்டி எடுத்தவர். எத்துனை சோதனைகள் வந்தபோதும், தன்னுடைய முடிவில் உறுதியாக நின்று, உழைப்பை மட்டுமே உரமாக விதைத்து இன்று ஒரு சிறந்த தொழிலதிபராக உருவெடுத்திருக்கிறார்.

2005 ஆம் ஆண்டு மதுரையில் தொடங்கப்பட்ட கல்கி நிறுவனம் இயந்திர வடிவைமப்பு, (machine design) இயந்திர கட்டுமானம் (machine building), நுகர்வோர் உற்பத்தி, (consumer products) தானியங்கி உபகரணங்கள் (Automotive Systems) என்று பல இயந்திர பிரிவுகளில் சிறப்பானதொரு பங்கு அளித்து வருகிறது. இதில் மற்றுமொரு குறிப்பிடித்தக்க அம்சம் இவர் செய்யும் ஊனமுற்றோருக்கான உபகரணங்கள். தொழில் என்றால் பணம், அதிகமான விருப்பு தவிர்த்து இப்படியொரு தொழில் சார்ந்த சமுதாய எண்ணம் இருப்பது பாரட்டத்தக்க அம்சமாக விளங்குகிறது.

கல்லூரியில் படிக்கும்பொழுது எல்லோரும் அவர்களின் எதிர் பாலரை காதலிக்க இவரின் காதல் மட்டும் வாகனங்களின் மீது இருந்துள்ளது. பந்தய வாகனங்கள் (Motor Car) இவரை வசீகரித்தது போல வேறு ஏதும் இவரை வசீகரிக்கவில்லை.அந்த காதலே தன்னுடைய நிறுவனத்தில் பந்தய வாகனங்களுக்கென ஒரு தனி துரையையும் வளர்க்க வைத்துள்ளது.

தன்னுடைய அறிவை பிறருக்கு அளிப்பவனே அடுத்த தலைமுறையின் ஒரு சிறந்த தலைவன். அவ்வகையில் கல்லூரியில் சொல்லி தரும் பாடங்களை விடுத்து ஒருவன் ஒரு இயந்திர துறையில் வெற்றி பெற அவனுக்கான முழு பயிற்சியையும் ராகுல் கொடுத்து வருகிறார். இவருடைய பயிற்சி துறை மற்ற முக்கியமான இயந்திர துறையை சேர்ந்த CAD மென்பொருளையும் கற்பித்து வருகிறது.

அவரின் உழைப்பை பற்றி நான் இங்கு அவ்வளவாக கூறவில்லை என சிலர் கருதலாம். நான் சொல்வதை விட நீங்களே அவரின் உழைப்பு அவரை எங்கே கொண்டு சென்றுள்ளது என பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.



CNBC தொலைக்காட்சியும், லுப்தான்சா நிறுவனமும் ஒரு வளர்ந்த தொழில் அதிபரையும், உலகு அறியாத ஒரு வளர்ந்து வரும் தொழில் அதிபரையும் உலகுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியே நீங்கள் மேலே பார்த்தது. TVS நிறுவனத்தை சேர்ந்த வேணு ஸ்ரீநிவாசன் அவர்களை கல்கி நிறுவன நிர்வாக இயக்குனர் ராகுல் தினகரன் காணும் நேர்காணல்.

ராகுல் அவர்களை வேறு ஒரு வளர்ந்து வரும் தொழில் அதிபர் நேர்முகம் காணும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது திண்ணம்.
அவரை பற்றி மேலும் அறிய :
http://www.kalkimechanicalprototypes.com

Monday, August 31, 2009

ராஜேஷும் பில் கேட்சும் (கதை - 13)

Share |
"டேய் ஜெகதீஸ் எங்க இருக்க..?"

ராஜேஷ் கூப்பிட்ட தொனியிலே ஒரு பதட்டம் இருந்தது. பல தமிழ் திரைப்படங்களில் காட்டப்படுவது போல, அப்பொழுதே நான் சாப்பிட அமர்ந்து முதல் உருண்டையை கையில் எடுத்திருந்தேன். முதல் உருண்டையை என்பதை விட முதல் சிக்கன் பீஸ் என்று சொல்வதே சாலச் சிறந்தது.

"வீட்லதாண்டா...ஏன்..? வந்து உன்ன பிக்-அப் பண்ணனுமா..?"

"பிக்-அப்பா....டேய் அப்ளிகேசன் பாரம் பில்-அப் பண்ணனும்டா...உடனே வா..."
அப்ளிகேசன் பாரம்?!.....என்னால் அதிர்ச்சியை தாங்க முடியவில்லை.

"அப்போ மொத ரவுண்டு முடிஞ்சதா..?"

"முடிஞ்சதுடா.....ப்ளீஸ் டா...உடனே வா....சீக்கிரம் கூப்ட்ருவாங்க ..."

அப்ளிகேசன் பாரம் பில்-அப் செய்வதை விட ராஜேஷ் தேர்வாகிவிட்டான் என்ற பேரதிர்ச்சியிலே கைகளை அளம்பினேன். போன இரண்டு வாரமும் இதே போல் சாப்பிடுவதற்கு முன்போ இல்லை , சாப்பிடும் வேலையிலோ தொலைபேசி அழைப்பு வந்து கிளம்பியது அம்மா திட்டும்போதுதான் தெரிந்தது. சென்ற ஜென்மத்தில் இதை விட அதிக கோழிகளை கொன்று குவித்திருப்பேனோ..?

நான் என்னுடைய இரு சக்கர வாகனத்தில் கிளம்பினேன். நான் அங்கு போய் சேர்வதற்குள் கொசுவத்தியை சுற்றுவதே கதை படிப்பவர்களுக்கு நலம்.


ராஜேஷ். என் கல்லூரி நண்பன். பார்ப்பதற்கு பீமன் போல (மகாபாரத பீமன் - தமிழ் படம் அல்ல) காட்சி அளிப்பான். அவனுடைய உடல் வாகினாலும், அவனுடைய அப்பா அரிசி மண்டி வைத்திருந்ததாலும் அவனை எல்லோரும் "அரிசி மூட்டை" என செல்லமாக அழைப்பர்.

நாங்கள் படித்தது மெக்கானிக்கல் என்றாலும் எங்களுடைய இரண்டாம் ஆண்டு பாடத்தில் C++ என்னும் கணிப்பொறி சார்ந்த ஒரு பாடமும் இருந்தது. அதுவரை கணிப்பொறியை கண்ணாடி வழியாக மட்டுமே பார்த்த நாங்கள் அதனுடன் நெருங்கி பழக வேண்டிய இக்கட்டு ஏற்பட்டது. எல்லோரும் தட்டு தடுமாறி அந்த பாடத்தில் தேர்ச்சி பெற்றோம். ஆனால் ராஜேஷ் தேர்வாக கொஞ்சம் நேரம் பிடித்தது. மூன்றாம் பருவத்தில் 3 மதிப்பெண்ணில் தொடங்கி எட்டாம் மற்றும் இறுதி பருவத்தில் ஒரு வழியாக தேர்ச்சி அடைந்தான்.

கல்லூரி முடியும்போது ராஜேஷின் ஆட்டோகிராப் புத்தகத்தில் எல்லோரும் வைத்த விண்ணப்பம், வேண்டுகோள், ஆணை எல்லாம் ஒன்றே ஒன்றுதான் - "தயவு பண்ணி ஈமெயில் id கிரியேட் பண்ண முயற்சி பண்ணாத. எல்லோரும் எல்லோரோடயும் டச்-ல இருக்க மெயில் id வெச்சுக்குவாங்க. அதே ஆசை உனக்கும் வரலாம். ஆனா அப்பிடி ஒரு ஆசை இந்த கணிப்பொறி துறை முழுக்க பாதிக்க கூடிய வாய்ப்பு இருக்கு. நீ எப்ப வேணும்னாலும் எங்களுக்கு கடுதாசி எழுதலாம்." என்பதோடு எல்லோரும் அவர்களின் முகவரியை அவனுக்கு மட்டும் கொடுத்தார்கள்.

இன்று வரை யாரேனும் எங்கே இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள நாங்கள் ராஜேஷிடம் அவர்களுக்கு கடிதம் எழுத சொல்லுவோம். அவன் எழுதினால் யார் எங்கு இருந்தாலும் உடனடி பதில் வரும். அவர்களால் முடியவில்லை என்றால், நண்பர்கள் அவர்களின் பெற்றோர்கள் மூலியமாக கடிதம் எழுதுவர்.

ஆனால் விதி வலியதல்லவா..?? ராஜேஷின் அப்பா அவன் படிப்பு முடிந்தவுடன் ஒரு பெருஞ்செயல் செய்தார். அவருடைய நண்பரின் ஆலோசனைப்படி, அவனை ஒரு கம்ப்யூட்டர் கோர்ஸில் சேர்த்துவிட்டார். ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டிவிட்டால் போதும், அந்த கோர்ஸில் தற்பொழுது வேலை வாங்கி தரக்கூடிய பாடங்கள் எடுத்து, அவர்களே குறைந்தபட்சம் 1 வருடத்திற்கு வேலையும் தருவார்கள்.அதற்கான மாத சம்பளம் 6,000 ரூபாய் தரப்படும்.

'போட்ட காச இப்டி எடுத்தாதான் உண்டு' என்ற அவரின் வியாபார தந்திரம் எங்களை மெய் சிலிர்க்க வைத்தாலும், இதனால் கணிப்பொறி துறைக்கு ஏற்பட போகும் தீங்கை எங்களால் சிந்திக்கக்கூட முடியவில்லை.

ராஜேஷ் அங்கு சேர்ந்தான். இவனை போலவே இன்னும் சிலர் சேர்ந்தனர் போல. அங்கு நடக்கும் பரிட்சைகளில் இவனையும் சேர்த்து ஒரு ஆறு பேர் குறைந்த மதிப்பெண்ணே வாங்கி வந்தனர்.

"கவலைபடாதடா, எல்லாத்தையும் உங்க அப்பா பார்த்துக்குவாரு.."

"போடா...செருப்ப கழட்டி அடிப்பாரு....இவ்ளோ காசு போட்டுட்டு, சரியா மார்க் வங்காளன்னா..."

"அந்த எடத்துலதான் உங்க அப்பாவ நீ சரியாய் புரிஞ்சிக்கல. இப்போ இவனுங்க என்ன சொல்லி இருக்காங்க.....ஒரு வருசத்துக்கு வேல உண்டுன்னு சொல்லி இருக்காங்க இல்லையா..."

"ஆமாண்டா..ஆனா இப்போ சரியாய் மார்க் வாங்காட்டி நல்ல ப்ராஜெக்ட் கொடுக்க மாட்டங்க..நான் அப்புறம் எப்டி ஒரு வருஷம் கழிச்சு நல்ல கம்பெனி போறது..."

"பெர்பெக்ட்" அதுவரை ஏதோ சிந்தித்து கொண்டிருந்த இன்னொரு நண்பன்.

"என்னடா பெர்பெக்ட்..?"

"உங்க அப்பாக்கு இது தெரியுமா...??"

"ம்ம்.."

"பார்த்தியா....இப்போ உன்ன நேரடியா அரிசி மண்டிக்கு கூப்பிட்டா போவியா..?போகமாட்ட ..ஆனா ஒரு வருஷம் கழிச்சு அரிசி மண்டிக்குதான் போவ.....இதுக்கு பேர்தான் பெர்பெக்ட் ப்லன்னிங்-நு சொல்றது..."

ஒரு வழியாக படிப்பு முடிந்து ராஜேஷ் வேலை தொடங்கினான். இவனுடன் படித்தவர்களில் சிலருக்கு வேறு இடங்களில் படிப்பு முடித்தவுடனேயே வேலை கிடைத்தது. சிலர் மலேசியா எல்லாம் சென்றார்கள்.

ஒரு வருட வேலையும் முடிந்து இவனையும் சேர்த்து நால்வர் மட்டுமே வேறு ஏதேனும் வேலை கிடைக்காமல் இருந்தனர். கம்பெனி என்ன நினைத்தோ ராஜேஷை இன்னொரு வருடம் கூட தேவைப்பட்டால் வேலையை தொடரலாம் என்றனர்.

கம்பெனி முதலாளி செய்த பாவத்துக்கு பிராயச்சித்தம் தேடினார் போல.ராஜேஷ் மிக்க மகிழ்ச்சி அடைந்தான்.

நானும், என் நண்பர்களும் ராஜேஷைவிட நிறையவே ஊதியம் வாங்கினோம். நானும் ஒரு புகழ் பெற்ற மென்பொருள் நிறுவனத்தில்தான் வேலை பார்த்து வந்தேன். நாங்கள் அனைவரும் அவனை வேறு நிறுவனத்திற்கு மாறுமாறு வற்புறுத்தினோம். அவன் ஒவ்வொரு முறையும், "கொஞ்சம் படிச்சிகிறேண்டா. இண்டர்வியுலே கேள்வி எல்லாம் கேட்பாங்க இல்ல.." என்பான்.

எங்களில் ஒரு நண்பன், உண்மையான அக்கறையுடன், "உனக்கு winamp ல பாட்டு போட தெரியுமில்ல..?"

"ம்ம்"

"மீடியா பிளேயர்ல படம் ..?"

"ம்ம்.."

"அது போதும். விடு பார்த்துக்கலாம்."

"ஆனா நான் வேல பாக்குறது டாட்.நெட் டா. அதுலதான் கேள்வி கேட்பாங்க."

"விட்ரா. winamp தெரியுது, டாட்.நெட் தெரியாமலா இருக்கும்..?" .

நான் அவனை இடைமறித்து, "என்னடா இன்னும் படிக்கிற...நீ போற மொத இண்டர்வியுவே கிளியர் பண்ணனும்னு அவசியம் இல்லே...மொதல்ல முயற்சி பண்ணு...அப்புறம் பார்ப்போம் " என்று சொல்லி ஒரு வழியாக இரண்டாம் ஆண்டு முடிவில் நான் என் நிறுவனத்திலேயே அவனை பரிந்துரை செய்தேன்.

அதற்கான நேர்முகம்தான் இன்று. கொசுவத்தியை அணைத்துவிடலாம்.

நான் என் நிறுவனத்தின் உள்ளே சென்றேன். இரண்டாம் மாடியில் ராஜேஷ் அமர்ந்து இருந்தான். "என்னடா ஆச்சு..?"

"இந்த பாரம் மொதல்ல எப்பிடி பில்-அப் பண்றதுன்னு சொல்டா..நானே கொஞ்சம் பண்ண ஆரம்பிச்சிட்டேன்."

"அதுக்குள்ள மொத ரவுண்டு முடிஞ்சதா..?"

தொழில் சார்ந்த கேள்விகள் முதல் சுற்றில் இருக்கும். அதில் தேர்வு பெற்றவர்கள் மட்டுமே இந்த விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும். அடுத்தது மனித வள சுற்று. அதில் பொதுவாக கொஞ்சம் பேசி, மனித வள பணியாளரிடம் சம்பள பேரம் பேச வேண்டும்.

"டேய்...நான் பில்-அப் பண்றேன். மொதல்ல என்ன நடந்ததுன்னு சொல்லு.."

"சொல்றேன்-டா.....இத முடிச்சிட்டு வந்திடறேன்.."

விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்கிறேன் என்று அங்கு அங்கு அடித்து திருத்தியிருந்தான், அவன் பெயர் உட்பட. "டேய், இதென்ன உன்னோட கணக்கு பரீட்சைத் தாளா..உன் பெயரக்கூட உனக்கு சரியா எழுத தெரியாதா..?"

"இல்லடா.... மொதல்ல இனிசியல் தானே போடனும்னு போட்டேன். அப்புறம்தான் பச்ட் நேம், லாஸ்ட் நேம் ..." தலையை சொரிந்தான்.

"HR ரவுண்டு-ல அவ்வளவு சுலபமா வேலை போகாது....நான் இத பார்த்ததுக்கு அப்புறம் அத மாத்திக்கனும்னு தோணுது..."

"என்னடா சொல்ற..?"

"அத விடு. உனக்கு என்ன பதில் வேணும்னு கேளு. நான் சொல்றேன்."

தொடங்கினான்.
"காரியார் கோலா..அப்டீனா..? "என்னடா என் strength..?"

"ம்ம்..ஒரே நேரத்துல 40 இட்லி சாப்பிடுவேன்னு போடு.."

"டேய்...ப்ளீஸ் டா.." நான் ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாக பதில் சொன்னேன்.

"டேய், எவ்ளோடா சம்பளம் கேட்கலாம்..?"

"கூச்சமே படறதில்ல......கேளு ஒரு 5 லட்ச ரூவா கேளு..."

"ரொம்ப ஜாச்தியிள்ள....?"

"நீ பாக்குற வேலைக்கு நியாயப்படி நீதான் அவங்களுக்கு கொடுக்கணும்.....பரவா இல்ல....கேட்டுப்பாரு.."

உள்ளே போய் வந்தான். "என்னடா இவன், 4.75 தான் கொடுப்பேன்னு சொல்லிட்டான்."

"அட நாயே...உண்மையிலே உனக்கு வேல கெடைச்சிருச்சா..?"

"ஆமா ஜகதீசு உனக்கு எவ்ளோ சம்பளம் இங்க....என்னோட ஜாஸ்தியா..." நக்கல் கலந்த தொனியில் கேட்டான்.

யோசித்து பார்த்தால் எனக்கு இதை விட குறைவுதான் என்பது தெரிந்தது.

"ஒழுங்கு மரியாதையா மொத ரவுண்டு என்ன நடந்துச்சுன்னு சொல்லு..."

"இதுதான் நடந்தது...நான் மொதல்ல உள்ளே போனேன். அவரு டாட்.நெட் கேள்வி ஒன்னு கேட்டாரு. நான் சரியாய் தப்பான்ன பதில் சொன்னேன். அவரு சரிபன்னாரு. இன்னொரு கேள்வி கேட்டாரு, நாமதான் தப்பா சொல்றேமேன்னு, இந்த தடவ சொல்லவே இல்லை. அவரு என்ன தயவு பண்ணி வெளிய போக சொல்லிட்டார். நான் வந்துட்டேன்."

"என்னடா சொல்ற...அப்புறம் எப்டி ரெண்டாவது ரவுண்டு.."

"இருடா கத இன்னும் முடியல....எனக்கு அடுத்து இன்னொருத்தன் போனான். நானாவது 5 நிமிஷம் இருந்தேன். அவன் சரியா 3 நிமிஷம். வெளிய வந்துட்டான்.அவனே பார்த்து நான் சிரிச்சிட்டு இருக்கும்போதே அவரே வெளிய வந்தார். என்ட்ட எங்க மத்தவங்கன்னு கேட்டாரு."

"ம்ம்....எங்க போயிருந்தாங்க அவங்க எல்லாம்..? ஒரு நிமிஷம் இரு. இதே மாடிலதான் உனக்கு மொத ரவுண்டு நடந்ததா..?"

"மத்தவங்களா.....வந்தது மொத்தம் ரெண்டுபேர்தாண்டா..."

"என்னது...?"

"ஆமா....இதே அதிர்ச்சிதான் அவரு முகத்துலையும். சரின்னு நான் கிளம்பினேன்...என்ன திரும்ப கூப்பிட்டு மறுபடியும் உள்ள வர சொன்னாரு. மறுபடியும் கேள்வி கேட்டாரு. அவரே பதிலும் சொன்னாரு. இப்படியே ஒரு பத்து கேள்வி. பத்து பதில். இதெல்லாம் படிக்க எவ்ளோ நாள் ஆகும்னு கேட்டாரு. நான் ஒரு 3 வாரம் சொன்னேன்."

"என்ன சொன்ன..? அந்த கேள்வியாவது உனக்கு ஞாபகம் இருக்கா..?"

"அவர பாக்க பாவமா இருந்துச்சுடா...அதான் சொன்னேன்."

"அட நாசமா போனவனே...."

"சரிடா, அதான் வேல கிடைச்சிடுச்சே , உனக்கு ட்ரீட் வேணுமா..?"

"இந்த கருமத்த கேட்டபுரம் கொஞ்சம் விஷம் இருந்தா வாங்கிக் கொடு.."


இதெல்லாம் நடந்து ஒரு வருடம் ஆனது. என்னுடைய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த ராஜேஷ் ஒரு வருடம் பல பல ப்ராஜெக்ட்ஸ் மாற்றப்பட்டான். கடைசியாக நேற்று மைக்ரோசாப்ட் ப்ராஜெக்ட் ஒன்றில் சேர்ந்திருப்பதாக சொன்னான். இன்று அதிகாலை செய்தித்தாள் எடுத்தேன். முதல் பக்கத்தில் இருந்த செய்தி இது: "Bill Gates retired today".

Monday, July 20, 2009

பைத்தியக்காரன்-2 (கதை - 12)

Share |
முன் குறிப்பு : என்னுடைய இந்த கதைக்கும், முந்தைய பைத்தியக்காரன்-1 க்கும் சில சம்பந்தகள் உள்ளது. முதல் கதையை படித்தால்தான் இது புரியும் என்ற கட்டாயம் இல்லை.


ரு வழியாக எனக்கு வேலை கிடைத்தது. நான் தொடர்ந்து என் சித்தி வீட்டிலேயே தங்கி இருந்தேன். முடிந்தவரை என் சித்திக்கும், என் தங்கைக்கும் உதவியாக இருந்தேன்.

ஒரு சனிக்கிழமை மாலை என்னுடன் வேலை செய்யும் உயர் அலுவலகர் வீட்டிற்கு புறப்பட்டு கொண்டிருந்தேன். அவருடைய பெண் குழந்தைக்கு இன்று பிறந்தநாள்.வெளியில் மழை தூவிக்கொண்டிருந்தது.

என்னுடைய இரு சக்கர வாகனம் மழையில் நின்றிருந்ததால் அதனை உயிர்ப்பிப்பது கொஞ்சம் சிரமமாய் இருந்தது. மீண்டும் மீண்டும் உதைந்தேன்.வண்டியில் அமர்ந்தவாறே கீழே குனிந்து ஸ்பார்க்-ப்ளக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். நிமிர்ந்து பார்க்கும்பொழுது எனக்கு மிக நெருக்கத்தில் ஒரு சிறுவன் நிற்க, கொஞ்சம் தூக்கிவாரி போட்டது.

என்னுடைய பயம் தெளியும் முன்னரே, "அங்கிள், ஒரு 2 ருபீஸ் இருக்குமா அங்கிள் " என்றான். அவனுடைய உடலில் ஒரு நடுக்கம் இருந்தது

என்னுடைய பயம் இப்பொழுது கோபமாக மாறி இருந்தது. அவனுக்கு ஒரு 15,16 வயது இருக்கலாம். மேல்சட்டையும், ஷார்ட்சும் அணிந்திருந்தான். அவனுடைய முகத்தில் கொஞ்சம் பயம் இருந்தது. இப்பொழுது என்னுடைய முக மாற்றம் கண்டு இன்னும் கொஞ்சம் பயந்து போனான்.

"உன் வீடு எதுடா..?" கோபமாக கேட்டேன்.
"இல்ல அங்கிள், வேணாம் அங்கிள், நான் போயிடறேன்.."
"உன் வீடு எது சொல்லு..? உன் பெயர் என்ன..?"
"இல்ல அங்கிள்....." சொல்லிக்கொண்டே ஓட்டமும், நடையுமாக அங்கிருந்து கிளம்பினான்.
"நில்லு..."
என்னுடைய கோபம் குறைந்து அவனுடைய செய்கை கண்டு அவன் மீது பரிதாபம் வந்தது. அவனை தொடர்ந்தேன்.
"நில்லு தம்பி..."

தூறலுக்கு ஒதுங்கி நின்ற எங்கள் குடியிருப்புகளின் காவலாளி என்னை நோக்கி வேகமாக வந்தார்.
"என்ன சார்...என்ன ஆச்சு..?"
"ஒன்னும் இல்லங்க....." நான் அவனை தொடர முயற்சித்தேன்.
அவன் எங்களது குடியிருப்பில் என்னுடைய வலது பக்க வீதியில் சென்று மறைந்தான்.
"சார், என்ன ஆச்சு..?"
"ஒன்னும் இல்ல வாட்ச்மன், அந்த பையன் நம்ம காலனிதானா..?"
"நம்ம காலனிதான் சார்..ஏன் சார்..? எதாவது பிரச்சனை பண்ணிட்டானா..?"
"அதெல்லாம் ஒன்னும் இல்ல....."

தூறல் முழுமையாக நின்றது. வண்டியும் உயிர்ப்பெற்றது.வாட்ச்மேனிடம் ஒரு 10 ரூபாய் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.

என்னுடைய உயர் பணியாளருக்கு ஒரு பையன் மற்றும் ஒரு பெண். போகும் வழியில் அவளுக்கு ஒரு பிறந்தநாள் பரிசு வாங்கிக்கொண்டேன்.

வீடு முழுக்க அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அந்த அறையின் நடுவில் ஒரு மேசை வைக்கப்பட்டு அதன் மீது ஒரு சிகப்பு நிற பட்டு போர்வை போர்த்தப்பட்டு இருந்தது. அதற்கு பின்னே இருந்த சுவற்றில் , "இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சிவானி" என்ற வார்த்தைகள் காட்சி அளித்தன.

என்னுடைய உயர் பணியாளர் என்னை அவர்களின் குடும்பத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார். அவருடைய பையனை பார்த்தவுடன் எனக்கு என் வீட்டருகே சந்தித்த பையனின் நினைவு வந்தது. "என்னவாக இருக்கும் அவனின் பிரச்சனை..?"

பிறந்தநாள் விழா முடிந்து வீட்டிற்கு வந்தேன். மீண்டும் மீண்டும் அவன் நினைவுக்கு வந்தான். தூக்கம் பிடிக்கவில்லை. நாளையும் விடுமுறைதான்.

வீட்டை விட்டு வெளியே வந்தேன். அவன் சென்ற திசை நோக்கி நடந்தேன். மாலை நேர காவலாளி மாறி இப்பொழுது இரவு நேர காவலாளி வந்திருந்தார். புகைப்பிடித்துக்கொண்டிருந்தார். இவர் கொஞ்சம் வயது மூத்தவர். நிறைய பேர் இவரை அய்யா என்றுதான் அழைப்பார்கள்.

"என்ன தம்பி ..? ஏதாவது வேணுமா..?"
"இல்லங்க அய்யா....சும்மா தூக்கம் வரல..."
"ஆமா ராசு ஏதாவது பிரச்சனை பண்ணிட்டான உங்ககிட்ட..? நம்ம ஏழுமலை சொன்னான்....நீங்க அவன தொரத்திட்டே போனீங்கன்னு.."
அவன் பெயர் வரதராஜு.
"இல்லங்க அய்யா. பிரச்சனை ஏதும் பண்ணல.....ஆமா அவன் வீடு எது..?"
"அதோ அங்க ஒரு போஸ்ட் கம்பம் தெரியுதில்ல, அதுல இருந்து மூணாவது வீடு, ரெண்டாவது மாடி...." "ஹ்ம்ம்.." என்ற ஒரு பேரு மூச்சுக்கு பின், அவரே தொடர்ந்தார்.
"அவனுக்கு ஏழு வயசு இருக்கும்போது அவங்க குடும்பம் இங்க வந்துச்சு.....எப்ப பார்த்தாலும் அவங்க அப்பன்ட்ட அடி, ஒத வாங்கிட்டே இருப்பான். இப்ப இந்த மாதிரி ஆயிட்டான்."
"எந்த மாதிரி...?"

வரதராஜுவிற்கு போதை பழக்கம் உள்ளது என்றும், அவன் பெற்றோர் அதனால்தான் அவனை வீட்டிற்குள்ளேயே அடைத்துவைக்கிறார்கள் என்றும் தெரிந்துகொண்டேன்.
அதற்காகத்தான் என்னிடம் ரூபாயும் கேட்டிருப்பான் போல.

"அவன பார்த்தா எனக்கு போதை பிரச்சனை மட்டும் தெரியல அய்யா...வேற ஏதாவது பிரச்சனை இருக்குமோன்னு தோணுது. அவங்க அப்பா அம்மாவ நெனச்சாதான் கஷ்டமா இருக்கு.."
"என்ன பைத்தியக்காரன் மாதிரி இருக்கானா..?" அண்ணாந்து பார்த்து ஒரு வறட்டு சிரிப்பு சிரித்தார். "அட போங்க தம்பி, அப்பா அம்மா....அவன் அப்பாதான் இது எல்லாத்துக்கும் காரணம்.."
"என்ன சொல்றீங்க..?"

வரதராஜு பிறந்தது அமெரிக்காவில். அவனுடைய பெற்றோர் இருவரும் அங்கு வேலை பார்த்து வந்தவர்கள். தங்களுடைய வேலை பளுவுக்கு இடையிலும் அவனுக்கு செய்ய வேண்டிய எல்லாவற்றையும் சரியாகவே செய்து வந்தனர். அவனின் அப்பா அடிக்கடி மற்ற ஊர்களுக்கும் அழைவதால் அவனுக்கான அன்பு கொஞ்சம் கம்மியாகவே கிடைத்துவந்தது. படிப்பில் கெட்டியாக இருந்தாலும் வரதராஜு ஒரு சுட்டி பிள்ளையாகவே வளர்ந்து வந்தான். அவனின் சக மாணவர்களை அடிப்பது, அமெரிக்க குழந்தைகளை கேலி செய்வது அவனின் பொழுதுபோக்கு.

தனக்கு கிடைக்கும் கொஞ்ச நேரத்திலும் தன் குழந்தையை பற்றி அவர் கேட்ட விஷயங்கள் அவருக்கு கோபத்தையே வெளிப்படுத்தியது. முதலில் திட்டிப் பார்த்த அவர் ஒரு நாள் அடித்தேவிட்டார். இதுவே கொஞ்ச காலத்தில் வழக்கமாகிப்போனது.

அவனுக்கு ஒரு ஏழு வயது இருக்கும். அவன் செய்த ஒரு சுட்டித் தனத்துக்கு அவனை இவர் அடிக்க, வரதராஜு அமெரிக்க காவல்துறைக்கு தொலைப்பேசினான்.
வெளியூர் செல்ல காத்திருந்த அவனின் தந்தையை ஒரு விமான நிலையத்தில் வைத்து காவல் துறை கண்டித்தது. பிள்ளைகளிடம் எப்படி அன்பாக நடந்துகொள்ள வேண்டும் என்று புத்தி சொல்லி சென்றது.

வீட்டுக்கு வந்தவர் அனைவரும் ஒரு வாரத்தில் இந்தியா கிளம்புவதாக அறிவித்தார். விஷயம் தெரிந்த அவள் மனைவி வரதராஜுவை அடிக்க சென்றால். அதை அவர் தடுத்துவிட்டார். மன்னிப்பு கேட்ட வரதராஜுவையும் அவர் கண்டுக்கொள்ளவில்லை.

விமானம் சென்னையில் தரை இறங்கியது. வெளியே வந்தவுடன், தான் மாட்டி இருந்த பெல்ட் அவிழ்த்து தூக்கத்தில் தடுமாறிக்கொண்டிருந்த சிறுவனை............
"இப்ப கூப்பிடறா, எவன் வர்றான்னு பாக்குறேன்.." என்றார்.

எனக்கு கண்ணீர் முட்டியது.

அதற்குப் பிறகு அவன் இங்கு ஒரு பள்ளியில் சேர்க்கப்பட்டான். அமெரிக்காவில் வாங்கிய அதே அளவு பணம் தேவைப்பட்டதால் கணவனும் மனைவியும் நிறைய நேரம் உழைத்தனர். வரதராஜு அனாதையாக்கப்பட்டான். எப்பொழுதும் ஒரு அச்சத்தோடு வாழ்ந்துவந்தான். பத்தாம் வகுப்பு படிக்கும்போது அவனுக்கு போதை பழக்கம் வந்தது.

தெரிந்த அவன் அப்பா, "என்னைக்கு பெத்த அப்பன போலீஸ்ல புடிச்சு கொடுத்துச்சோ, அன்னைக்கே இதெல்லாம் உரப்படாதுன்னு தெரியும்" என்றார்.

"அப்ப இருந்து ராச வீட்டுக்குள்ள வச்சு பூட்டிட்டு போய்டுவாங்க."

அவனுடைய வீடு எதுவென விசாரித்து அவன் வீட்டின் பக்கம் சென்றேன். அவன் அந்த ஜன்னலின் வழியே வீதியை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான்.

Thursday, June 25, 2009

கடிதம் (கதை - 11)

Share |
                                உ
திருச்சி                                   மதுரை
      அன்புள்ள சந்தோஷிற்கு நயினா அம்மா எழுதிக்கொண்டது. இங்கு யாபேர்களும் நலம். இதுபோல அங்கு நீ நலமாக இருக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.மேலும் நலத்திற்கு கடிதம் எழுதவும்.
      உன் கடிதம் கிடைக்கப்பெற்றோம். உன் கடிதம் கண்டவுடன் எங்கள் இதயம் உடைந்து சுக்கு நூறாகி விட்டது. ஏனென்றால் நீ ஒரு பரிட்சையில் பெயில் ஆவாய் என்று நாங்கள் கொஞ்சம் கூட நினைத்து கிடையாது. ஏதோ ஒரு இடி எங்கள் தலை மேல் விழுந்ததை போன்று உணர்கிறோம். எது நடக்க வேண்டுமோ அது கண்டிப்பாக நடந்தே தீரும். நாங்கள் எங்கள் மனதை தேற்றிக்கொள்ள முயற்சிக்கிறோம். முடியுமா என்பது சந்தேகமே. ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள். நீ நன்றாக படித்தால்தான் நம் சொந்தபந்தங்களும், மற்ற சுற்றத்தாரும் உன்மேல் வைத்திருக்கும் மரியாதை நிலைத்து நிற்கும். இனியாவது அதனை கெடுத்துக்கொள்ளும்படி நடக்காதே.
      ஆனால் என் மனதில் பட்டதை அன்றே சொன்னேன். ஹாஸ்டலை விட்டு வெளியே வந்தால் இப்படி ஆகும் என்று. இது என் கருத்து. என் கருத்தை நீ பொய்யாக்கி இருக்க வேண்டும்.
      நீ பாஸ் ஆனாலும், பெயில் ஆனாலும் அது உன்னுடைய வாழ்க்கை. நாங்கள் உனக்கு செலவுதான் செய்யலாம். ஆலோசனை கூறலாம். மேற்கொண்டு உன் வாழ்க்கையை நிர்ணயிப்பது நீதான். ஆயிரம் சமாதானம் சொன்னாலும் மனதால் ஜீரணிக்கவே முடியவில்லை. இனிமேலாவது உன் எதிர்கால வாழ்கையை நினைத்து, நம் குடும்ப சூழ்நிலையையும் நினைத்து எப்படி படிக்க விரும்புகிறாயோ, அப்படி படி. உனக்கு அதிகப்படியாக புத்தி கூற தேவையில்லை என்று நினைக்கிறேன்.
நைனா கூறிய யாவற்றையும் அப்படியே அம்மா எழுதி உள்ளேன்.

சந்தோஷிற்கு அம்மா எழுதுவது.
      உன் படிப்பையும், வேலையையும் வைத்துதான் நம் குடும்பமே முன்னுக்கு வரவேண்டும் என்று எண்ணி உள்ளேன். எனவே அனுதினமும் நன்றாக படித்து வீட்டிற்கு மார்குகள் வரும்படி செய்யவும்.
      மேலும் நயினா மிகவும் மனது உடைந்து போயுள்ளார். யாரிடமும் சந்தோஷ் பெயில் என்று கூறிவிடாதே, எல்லா சொந்தங்களும் வேதனைப்பட்டு விடுவார்கள் என்று கூறினார். நயினா வாழ்க்கையில மிகவும் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறார். உன் மார்க்கும் இப்படி ஆனவுடன் மிகவும் வேதனைப்பட்டார். எனவே வாழ்க்கையில் கடவுள் நம்பிக்கையும், படிப்பில் நன்கு கவனமும் செலுத்தப்பார்க்கவும்.
      மேலும் யார் மீதும் வாழ்க்கையில் கோபம் என்பதே வைத்துக்கொள்ளாதே. எல்லோரிடமும் அன்பாக பேசவும். எல்லோரையும் போல நீயும் நிறைய கோபப்படுகிறாய். தயவுகூர்ந்து அன்புடன் கோபத்தை குறைத்துக்கொள். இது என் தாழ்மையான வேண்டுகோள். நன்றாக படி.

என் கண்களில் கண்ணீர் கோர்த்துக்கொண்டது. என் பக்கத்தில் இருந்த குடத்தில் கொஞ்சம் தண்ணீர் எடுத்து குடித்தேன். தண்ணீர் விழுங்குவது சிரமமாய் இருந்தது.

என் கடிதத்திற்கான பதில் கடிதம்தான் இது. முதலில் வீட்டில் தெரியப்படுத்தாமல் மறைத்துவிடலாம் எனதான் நினைத்தேன். அதற்காக கல்லூரி பதிவேட்டில்கூட என் நிரந்தர முகவரியை மதுரைக்கே மாற்றி இருந்தேன்.

நான் ஒரு பரிட்சையில் தோல்வி அடைந்தேன் என்பது எனக்கே மிகுந்த வேதனையாகவும், சில நேரத்தில் ஆச்சர்யமாகவும் இருந்தது.


பள்ளி படிப்பில் எப்பொழுதுமே நான் முதல் ரேங்க் மாணவன். LKG முதற்கொண்டு எட்டாம் வகுப்பு வரை நான் முதல் ரேங்க் தவிர்த்து வாங்கியதில்லை. ஒன்பதாம் வகுப்பு வேறு ஒரு பள்ளிக்கு மாறினேன். அங்கு நிறையவே போட்டி இருந்தது. முதல் ரேங்க் என் கையை விட்டு போனது. இரண்டாம், மூன்றாம் இடங்களுக்கு எப்பொழுதும் தள்ளப்பட்டேன். பத்தாம் வகுப்பிலும், பன்னிரெண்டாம் வகுப்பிலும் பள்ளியில் முறையே இரண்டாம், மூன்றாம் இடம் பிடித்தேன். அப்பா சிறிது கவலை கொண்டாலும் பெரிதாய் ஒன்றும் காட்டிக்கொள்ளவில்லை.

நல்ல மதிப்பெண்கள்தான் எனக்கு அரசு பொறியியல் கல்லூரியை பெற்றுக்கொடுத்தது. அதே கல்லூரி என்னை இப்படி ஏளனப்படுத்தி பார்க்கும் என்று ஒருநாளும் நான் நினைத்ததில்லை.

நிறைய நண்பர்கள், ஊர் சுற்றல் என்று காலம் கழிந்தது. ஹாஸ்டல் சாப்பாடு எப்பொழுதும் கசந்ததால், பெரும்பாலும் வெளியேதான் சாப்பிட்டோம். நாங்கள் சாப்பிடும் ஒவ்வொரு உணவகம் பக்கமும் ஒரு திரை அரங்கு தவறாமல் இருந்தது. வெளியே சாப்பிடுவது கட்டுபடி ஆகாத காரணத்தால் ஹாஸ்டல் விட்டு வந்து வெளியே ஒரு வீடு எடுத்து தங்கினோம். இன்னும் சுதந்திரமாக செயல்பட்டோம். மாலை காட்சி இரவு காட்சியானது. சில பழக்கங்கள் எங்களோடு வந்து சேர்ந்தது.

முதலாம் செமஸ்டர் தினம் படித்தேன். இரண்டாம் செமஸ்டர் இன்டெர்னல் மட்டும் படித்தேன். மூன்றாம் செமஸ்டர் கடைசி பரீட்சைக்கு மட்டும் படித்தேன். தேவையான அளவு மட்டும் வகுப்புக்கு சென்றேன். டிராயிங் வகுப்புகளுக்கு யாராவது proxy கொடுக்க, அதனை முற்றிலும் தவிர்த்தேன்.
"என்ன மாப்ள நாம பார்க்காத ட்ராயிங்கா..?"

டிராயிங் பரீட்சை தொடங்கிய மூன்றாவது நிமிடம் முதல் முதலாய் என்னை பின்னோக்கி ஓட்டிப்பார்த்தேன். கடவுளிடம் கெஞ்சினேன். இந்த முறை எப்படியாவது தேற்றிவிட்டால், கண்டிப்பாக ஒழுங்காய் படிப்பதாய் வேண்டிக்கொண்டேன். தியரி பரீட்சை என்றாலாவது அக்கம் பக்கம் பார்க்கலாம், இந்த பரிட்சையில் என்ன செய்ய முடியும். மேலும் டிராயிங் கருவியான drafter-ஐ எப்படி சரியாக பொருத்துவது என்பது கூட என்னால் யோசிக்கமுடியவில்லை. தொடர்ந்து அங்கு இருந்தால் ஏதேனும் இருதய கோளாறு உண்டாகும் என 1 மணி நேரத்தில் அறையை விட்டு கிளம்பிவந்தேன்.


அப்பா - இன்று முன்னேறிவிடலாம், இன்று முன்னேறிவிடலாம் என்று பெருங்கனவுகளோடு வாழும் ஒரு ஏழ்மையான மனிதர். நான் நன்றாக படிப்பதால் எனக்கு எப்பொழுதும் அவரிடத்தில் ஒரு தனி மரியாதை.
"என் புள்ளதான் என்னோட கனவெல்லாம் நெனவாக்குவான் பாரேன்"....பெருமையோடு என் அப்பா. அவர் ஆசையெல்லாம் ஒன்றுதான். ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும். அதற்கும் பணம் செர்த்துக்கொண்டுதான் உள்ளார். ஆனால் சேர்க்கும் பணம் ஒவ்வொரு முறையும் ஏதாவது செலவுக்கு உபயோகப்படுகிறது, என் படிப்பு, சாப்பாடு செலவு உட்பட.

அம்மா - அன்பான அம்மா. அடுத்தவர் உள்ளம் நோகாமல் எல்லோரிடத்திலும் அன்பு காட்டுபவர். அவரின் கனவு, அப்பாவின் கனவை நினைவாக்குவது.

சொந்தபந்தங்கள் - "ச..நம்ம சந்தோஷுக்கு டிஷ்டிரிக்ட் ரேங்க் வரலன்னா, அப்போ சரியாய் யாரும் பேப்பர் திருத்தலன்னுதானே அர்த்தம்."
என் பத்தாம் வகுப்பு பரிட்சையை பெரிதாக எதிர் பார்த்து ஏமாந்தவர்கள்.

இவர்களை ஏமாற்றுவது நான் கண்ட தோல்வியைவிட என்னை பெரிதும் துன்புறுத்தியது. அதனால்தான் என் கடிதம் எழுதினேன். என்னை மன்னிக்கும்படி வேண்டி கேட்டுக்கொண்டேன். பதில் கடிதமும் கிடைக்கப்பெற்றேன்.


"எங்கள் இதயம் உடைந்து சுக்கு நூறாகி விட்டது "
"எங்கள் இதயம் உடைந்து சுக்கு நூறாகி விட்டது"
இந்த வார்த்தைகளை தேடியே மீண்டும் மீண்டும் மனது அலைபாய்ந்தது. கண்ணீர் பீறிட்டு வந்தது.

என் கண்ணீரில் சிலத்துளி பட்டு அந்த எழுத்துக்கள் அழிந்து போனது.

அங்கங்கே சிதறி கிடந்த புத்தகங்களை ஒழுங்கு செய்து என் மேஜையில் வைத்தேன். எல்லா புத்தகங்களுக்கும் மேலே என் பெற்றோரின் கடிதத்தை வைத்தேன்.

Wednesday, June 17, 2009

பைத்தியக்காரன் - 1 (கதை - 10)

Share |
அவன் அந்த ஜன்னலின் வழியே வீதியை வெறித்து பார்த்துக்கொண்டிருப்பான். அவனுக்கு சுமார் 18 வயது இருக்கும். அந்த வீட்டினுள் இருந்து எப்பொழுதும் மெல்லிய ஓசையில் ஃப்.ம் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். அந்த வீட்டில் அவனை தவிர அவனின் தந்தை, தாய் மற்றும் அவனின் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் தம்பி. அவர்கள் எல்லோரும் தத்தம் தங்கள் பணிகளுக்கு கிளம்பிவிட, அவன் வீட்டினுள் வைத்து பூட்டப்படுவான். ஒரு சிறு குழந்தையை கொஞ்சுவதைபோல் அவன் அன்னை அவனை கொஞ்சிச் செல்வார்.கொஞ்சி முடித்து தன்னுடைய கணவனின் வண்டியில் பின் அமரும்போது அவர்களின் கண்களில் தண்ணீர் கோர்த்திருக்கும்.

நான் தங்கி இருந்தது அவனின் எதிர் வீட்டில். நிறைய வீடுகளை கொண்டது எங்கள் குடியிருப்பு. எங்கள் இருவரின் வீடும் தரை தளத்தில் எதிர் எதிராய் அமைந்திருக்கும். என் வீட்டை விட்டு வெளியே வந்து மூன்று அடி நேராக வைத்தால் அவர்களின் வீட்டுக்குள் நான் ஒரு அடி சென்றிருப்பேன். எங்கள் குடியிருப்புக்கு எதிர்புறம் வெறும் பொட்டல் காடு போல் இருக்கும். நிறைய முள் செடிகள் மட்டுமே காட்சி அளிக்கும். மக்கள் அதைதான் குப்பை போடும் இடமாக பயன் படுத்தி வந்தனர். இந்த வரிசையில் ரயில் பாதை வரும் ஒரு திட்டம் இருப்பதால் இங்கு யாரும் வீடு கட்டவில்லையாம்.

அவன் அடைக்கப்பட்ட அறை வீதி நோக்கி இருந்ததால், அவனை பார்க்க நான் வீட்டை விட்டு வெளியில்தான் வர வேண்டும். வீதியில் செல்லும் யாவரும் அவனை பார்க்கலாம் என்றாலும், இந்த அவசர சென்னையில் யாருக்கும் அவனை பார்க்கும் நேரமோ, எண்ணமோ கூட இருந்திருக்க வாய்ப்பில்லை. என் சித்திக்கு கூட இப்படி ஒருவன் இருக்கிறான் என்று தெரியாது. அவளும் பணிக்கு செல்பவள். என் அம்மாவாக இருந்திருந்தால் இந்த நேரத்திற்கு அந்த குடும்பத்தின் கதையை கேட்டிருப்பாள்.

நான் தங்கியிருந்த வீடு என் சித்தி, அம்மாவின் தங்கயுடையது. எல்லோரும் போல் நானும் வேலை தேடித்தான் இங்கே வந்திருக்கிறேன். என் சித்திக்கு ஒரு பெண் மட்டும். பதிணொண்றாம் வகுப்பு படிக்கிறாள்.

வேலை தேடும் மற்ற பொழுதில் நான் இவனைதான் கவனித்துக்கொண்டிருப்பேன். அவனை பார்த்துக்கொள்ள ஒரு ஆளாவது இருந்திருக்கலாம். இல்லையேல் அவன் அன்னையே அவனை பார்த்துக்கொண்டிருக்கலாம். காலையில் வேலைக்கு செல்லும் அவன் அம்மா மதியம் ஒரு 3 மணிபோல் வந்துவிடுகிறார். அதன் பிறகு அவனை ஒரு அரை மணி நேரத்திற்கு அங்கு காண முடிவதில்லை.

காலையில் அவர்கள் எல்லோரும் வெளியே செல்கையில் அவன் மேல் சட்டை, கால் சட்டை அணிந்து காண்கிறேன். அவன் ஜன்னலுக்கு வரும்பொழுது, அவனின் மேல சட்டை இல்லை. கால் சட்டை அணிந்துள்ளானா என்பதை என்னால் நிச்சயம் சொல்ல முடியவில்லை. மதியம் அவன் அன்னை வந்த பிறகு வேறு ஒரு ஆடையில் தோன்றுகிறான்.

அவன் அன்னை வந்த பிறகு வானொலி சத்தம் குறைகிறது. நான் என் வீட்டுக்குள் சென்றால், அவனின் அன்னை அவனை கொஞ்சும் சத்தம் கேட்கின்றது. அவனை சாப்பிட வைக்க, சில மாத்திரைகள் விழுங்க வைக்க என்று விதவிதமான கொஞ்சல்.

அவனுடைய தந்தை ஒரு 5 மணிக்கு வருகிறார். அவர் சில நேரத்தில் அவனை கொஞ்சுகிறார்.

அவன் தம்பி பள்ளி முடிந்து 6 மணிக்கு வருகிறான். அவனுடைய முகத்தில் ஒரு சலிப்புதான் தோன்றுகிறது.

அன்று நான் வெளியே ஒரு நேர்முகத்தேர்விற்கு சென்று வந்தேன். வீட்டு பக்கத்தில் வந்ததும் அவனை பார்க்க நினைத்தேன். அவனை காணவில்லை. நான் ஆடை மாற்றும்பொழுது அவன் வீட்டில் இருந்து கத்தும் சத்தம் கேட்டது. ஓடிப்போய் அந்த வீட்டை தட்டினேன். வீடு பூட்டபட்டிருக்க வேண்டும். ஜன்னல் வழியே பார்த்தேன். சத்தம் மட்டுமே வந்தது. வீட்டை உடைக்கலாமா..? யாரையாவது கூப்பிடலாமா..? வீதிக்கு வந்தேன். நல்ல வேலையாக அவன் அம்மா வந்துகொண்டிருந்தார்.அவர் திசை நோக்கி ஓடினேன்.

"கொஞ்சம் சீக்கிரம் வாங்க.." என்னை வெறித்து பார்த்தார்.
"நான் உங்க எதிர் வீட்ல இருக்கேன். உங்க பையன் உள்ள சத்தம் போட்டுட்டு இருக்கான்."
"நீங்க புதுசா. மன்னிச்சிடுங்க. உங்கள தொந்தரவு செஞ்சிட்டனா..?"
இவர் என்ன பேசுகிறார்.
"அதெல்லாம் இல்லங்க. அவனுக்கு என்ன ஆச்சோன்னு..."

அவர் பதட்டப்படவில்லை.
கதவு திறந்தார். அவன் ஆடை ஒன்றும் அணியாமல் கீழே படுத்திருந்தான்.
"என் செல்ல குட்டி..." என்று கொஞ்ச ஆரம்பித்தார்.
நான் அங்கிருந்து விலகினேன்.

ஒரு சனிக்கிழமை காலை, அவன் அப்பா அவனை வீட்டைவிட்டு வெளியே கூட்டிவந்தார். அவனை தன் ஸ்கூட்டரின் முன் இருக்கையில் அமர்த்தி, இவர் பின் அமர்ந்து கொண்டார். ஒரு ஆட்டோ வந்தது. அதில் அவன் அம்மா ஏறிக்கொண்டார்.

"நான் வேணா ஆட்டோல கூட்டிவரட்டா..?"
"இல்லமா வேணாம். நானே பார்த்துகிறேன்."

ஒரு 2 மணி நேரம் கழிந்து அவர்கள் வந்தார்கள். மீண்டும் கொஞ்சல் சத்தம் கேட்டது.

கொஞ்ச நேரத்தில் வெளியே சென்ற என் தங்கை வீட்டிற்குள் ஓடி வந்தாள். அவன் தன் உடம்பில் ஆடை ஏதும் இல்லாமல் வீதி நோக்கி போய்க்கொண்டிருக்கிரானாம்.
ஓடி சென்று அவனை இழுத்து வந்து அவனுடைய வீட்டில் சேர்த்தேன்.

அவர்கள் இருவரும் அவனை ஆற தழுவிக்கொண்டார்கள்.
"என்ன கண்ணு. அடி பட்டிருந்தா என்ன பண்ணுவ..?"
"ரொம்ப தேங்க்ஸ் சார். கதவ திறந்து வெச்சிட்டு தூங்கிட்டோம்."

"இந்த தம்பிதாங்க அன்னைக்கு இவன் சத்தம் கேட்டு, ஓடி வந்தாப்ள"
"தேங்க்ஸ் தம்பி. நீங்க எதிர் வீட்ல இருக்கீங்களா..?"

நான் அவனை பற்றி ஒன்றும் கேட்டுக்கொள்ளவில்லை.

அடுத்த தினம் முதல் நான் பார்க்கும்போது, அவனும் என்னை பார்ப்பான். நான் சிரிக்க அவனும் சிரிப்பான். அவனுக்கு ஏதாவது வாங்கித்தர தோன்றியது.

என் அம்மா என் சித்தி வீட்டிற்கு வந்தாள். அம்மாவை பேருந்து நிலையத்திலிருந்து கூட்டி வரும்போது அவனை பற்றி பேசி வந்தேன்.


அவன் சிறு வயதில் எல்லா குழந்தையை போல் நன்றாகவே இருந்திருக்கிறான். படிப்பும் நன்றாகவே இருந்திருக்கிறது. ஏழாம் வகுப்பு படிக்கும்போது இவர்கள் ஏதோ ஒரு உறவினரின் திருமணத்திற்கு சென்றனர். திரும்பி வரும்பொழுது, இவனுக்கு பிடித்த ரயிலில் பயணிக்கலாம் என நினைத்தனர். இவனின் தம்பியும், அன்னையும் நடை மேடையில் காத்திருக்க, பிரயான சீட்டு வாங்க இவன் தந்தையுடன் இவனும் சென்றான். சீக்கிரம் வாங்கி திரும்ப வேண்டும் என்பதற்காக தண்டவாளம் வழியே இவர்கள் செல்ல, பக்கத்து தண்டவாளத்தில் வந்த வண்டி தன்னுடைய தண்டவாளத்தில்தான் வருவதாய் நினைத்து இவன் பயம் கொண்டு "அப்பா" என சத்தம் செய்துள்ளான். அவன் பேசிய கடைசி வார்த்தை அதுதான்.

எத்தனையோ மருத்துவர்கள், எவ்வளவோ மாத்திரைகள்.பார்க்கும் மருத்துவர் எல்லாம் கண்டிப்பாக குணமடைய வாய்புள்ளதாகவே கருதுகின்றனராம். ஆனால் எப்பொழுது என்று சரியாக சொல்ல முடியவில்லை.

இரவெல்லாம் மழை பெய்தது. காலை பார்க்கும்பொழுது தெருவெல்லாம் சேறாக காட்சி தந்தது.

அவனை மருத்துவமனை அழைத்து செல்ல வேண்டிய தினம் போல இன்று. சென்ற முறை போல் இந்த முறையும் ஆட்டோ வந்தது. அவன் அம்மா ஆட்டோவில் ஏறிக்கொள்ள, அவன் அப்பா அந்த ஸ்கூட்டரில் அவனை ஏற்றிக்கொண்டார். அவனை என்னால் சரியாக பார்க்க முடியவில்லை. அவன் சிரிப்பு பார்க்க எண்ணி ஏமாந்தேன்.

ஒரு பத்தடி செல்வதுற்குள் வேகமாக சைக்கிள் ஓட்டி வந்த ஒருவர் இவரின் ஸ்கூட்டரில் மோத அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவனுக்கு வலிப்பு வந்தது.

எல்லோரும் ஓடினோம். விழுந்த அதிர்ச்சியில் அவனுக்கு வலிப்பு உண்டாகி இருந்தது. அவன் அம்மா ஆட்டோவில் இருந்து ஓடி வந்து அவனை தூக்கினார். அவனுடைய தந்தையும் தடுமாறி எழுந்தார். செய்வதறியாது திகைத்து நின்றார். ஒருவர் யாரையாவது சாவி அல்லது இரும்பு எடுத்து வர சொன்னார். அவனின் அம்மா சென்ற ஆட்டோ ஓட்டுனர் இரும்பு எடுத்து வந்தார். நான் ஓடி சென்று தண்ணீர் எடுத்து வந்தேன். அவனுக்கு வலிப்பு அடங்கியது. என்னிடம் தண்ணீர் வாங்கி அவன் முகத்தில் அறைந்தனர். அவன் உடல் எல்லாம் சேறு பூசி இருந்தது. அவன் பெற்றோர் கண்களில் கண்ணீர் கசிந்தது.

"ஒண்ணுமில்ல விழுந்த அதிர்ச்சி..எல்லாம் சரியாய் போய்டும்." தண்ணீர் அறைந்தவர் சொன்னார்.
அவர்கள் அவனுக்கு வேறு ஏதேனும் அடிபட்டுள்ளதா என பார்த்தனர். நல்லவேளையாக ஒன்றும் இல்லை. அவனின் தந்தைக்குதான் கையில் சிராய்ப்பு ஏற்பட்டு இருந்தது.

ஒரு இரண்டு தினம் கழித்து மருத்துவமனை போகலாம் என முடிவு செய்தனர். அவனை வீட்டுக்குள் அழைத்து சென்றார்கள். உள்ளே போகாமல் அவன் அடம் பிடித்தான். அவன் அன்னை அவனை கட்டிக்கொண்டு உள்ளே இழுத்து சென்றார். அவனுடைய கத்தல் அந்தே வீதியே கேட்டது.

அடுத்த நாள் அவன் அம்மா என்னிடம் வந்தார்.
"அவன கொஞ்சம் அப்பப்ப பாத்துக்கிரியா..?"

இரவு வெகு நேரம் கண் விழித்து இருந்ததாகவும் இப்பொழுதே தூங்குகிறான் எனவும் சொன்னார்.
எனக்கு ஒரு மணி நேர வேலை இருந்தது.

"கூட இருக்கெல்லாம் வேணாம் கண்ணு. ஏதாவது சத்தம் கேட்டா மட்டும் பாரு. இந்தா சாவி."

நான் வெளியே சென்றேன். நன்றாக மழை பிடித்துக்கொண்டது. ஒரு மணி நேரத்திற்கு மேலாகி இருந்தது.மழையிலேயே வீடு வந்து சேர்ந்தேன். அவன் வீட்டின் ஜன்னல் வழி பார்த்தேன். அவனை காணவில்லை. உள் அறையில் தூங்குகிறான் போல. கதவில் காது வைத்து பார்த்தேன். வீட்டுக்குள் இருந்து ஒன்றும் சத்தம் இல்லை. மழையின் சத்தம்தான் அதிகமாக இருந்தது.

இரண்டு மணி நேரம் ஆனது. எனக்கு பசித்தது. கதவை திறக்க எண்ணி என் வீட்டை திறந்தேன். என் கதவின் மேல் ஒரு பாம்பு நின்றது. ஒரு நிமிடம் பயந்து போய் அலறினேன். என் சத்தம் வெளியே கேட்டிருக்க வாய்ப்பில்லை. கதவை அப்படியே வைக்கவும் முடியாது. மூடினாலும் பாம்பு போய் விடும் என்று உறுதியாக சொல்ல முடியாது. கண்ணுக்கு எட்டும் தூரத்தில் எதுவும் அகப்படவில்லை. வீட்டிற்குள் சென்று ஏதேனும் எடுக்கக்கூட முடியாமல் அந்த பாம்பையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு 15 நிமிடத்தில் பாம்பு கதவை விட்டு இறங்கி வீதி நோக்கி சென்றது. பின் அந்த பொட்டலில் சென்று மறைந்தது.

ஒரு நிம்மதி பெரு மூச்சு விட்டு வீட்டுக்குள் வந்தேன். பாம்பு வந்ததில் நான் அவனை மறந்துபோயிருந்தேன். சாவியை எங்கு வைத்தேன் என நினைவில்லை. திடீர் என ஒரு பயம் என்னை கவ்விக்கொண்டது. எங்கிருந்து வந்தது இந்த பாம்பு..?அவன் கதவில் மீண்டும் காது வைத்தேன். இப்பொழுதும் சத்தம் இல்லை.

வேகமாக தேடி சாவியை கண்டுப்பிடித்தேன். வீட்டை திறந்தேன். அவன் இன்னும் உறங்கிக்கொண்டிருந்தான். நிம்மதியாக இருந்தது. அவனை எழுப்ப முயற்சித்தேன்.

எழுந்து என்னை வித்தியாசமாய் பார்த்தான். சுற்றும் முற்றும் பார்த்தான்.
"அப்பா..." என்றான், அவர் எங்கே என கேட்பதுபோல்.

Thursday, May 28, 2009

நிருபர் (கதை - 9) - போட்டிக்கான சிறுகதை

Share |
குழந்தை தொழிலாளிகள்...முன்வருமா சமூகம்..?
------------------------------------------------------------------------
வாசு


வாகனங்களின் சத்தம் காதில் இரைந்தது.

"உன் பெயர் என்ன தம்பி..?"
அவன் என்னை பார்த்தான். கண்கள் என்னை பார்த்தபோதும் அவனுடைய கை மிக நேர்த்தியாக பூக்களை ஒரு நூலில் கோர்த்துக்கொண்டிருந்தது. என் கையில் இருக்கும் சின்ன ஏடு, என் கழுத்தில் மாட்டி இருந்த புகைப்படக் கருவி எல்லாம் பார்த்தான்.

"பாண்டி சார். பூ வேணுமா சார்..?"
"இல்லபா உன்ட்ட கொஞ்சம் பேசணும்."

கொஞ்சம் வித்தியாசமாய் பார்த்தான்.
"என்ன சார் பேசணும்..? நீ அந்த பத்திரிக்கை கம்பேனீல வேல பாக்குறியா சார்..?"

"ஆமா தம்பி. உன் வயசு என்ன..?"
"என் வயசு 12 இருக்கும் சார். நான் பொறந்த மாசம் அம்மாக்கு சரியா நெனவில்லியாம்."

"எவ்ளோ நாளா பூ வியாபாரம் பாக்குற..?" இடையிடையே குனிந்து பூக்களை எடுத்துக்கொண்டான்.
"இப்போ ஒரு ரெண்டு வருசமாதான் சார். மொத எங்க அப்பாகூடதான் வந்திட்டு இருந்தேன். இப்போ அப்பா வேற ஏரியா பாக்குறார். அதனால என்னையே பாத்துக்க சொல்லிட்டாரு."

"அதுக்கு முன்ன என்ன பண்ண..?"
"இஸ்கூல் போவேன் சார்.."

"எந்த கிளாஸ் வர படிச்ச..?"
"அஞ்சாவது வர படிச்சேன் சார். அதுக்கு அப்புறம்தான் அப்பா பூ வியாபாரம் பாக்க கூட்டிட்டு போனார்.."

"ஸ்கூல் போகாதது உனக்கு கஷ்டமா இல்லையா..?"
"ஆரம்பத்தில என் பிரண்ட்ஸ் எல்லாம் பாக்காம கஷ்டமாத்தான் இருந்திச்சு. அப்புறம் தெரியல சார்.."

"நீ ஸ்கூல்-ல என்ன ரேங்க் வாங்குவ..?"
"10 குள்ள வருவேன் சார்.."

"ஒரு நாளைக்கு எவ்வளவு வியாபாராம் பார்ப்ப..?"
"சில நாள் 100 ரூவா வரும். நல்ல வியாபாரம்னா, 200 ரூவா வரும் சார்.."
"உன்ன ஒரு போட்டோ பிடிச்சிக்கவா..?"

பாண்டி அண்ணா சாலை நடை மேடையில் தொழில் செய்யும் ஒரு குழந்தை தொழிலாளி.

இன்னும் கொஞ்ச தூரம் நடந்தேன்.

வயது மூத்த ஒருவரும், சிறுவனும் ஒரு குடையின் கீழ் அமர்ந்திருந்தனர்.அந்த மூத்தவர் சுற்றி நிறைய பூட்டுக்களும், சாவியும் இருந்தது. அந்த சிறுவன் ஒரு கூடை நிறைய மாம்பழம் வைத்திருந்தான்.

"என்ன நைனா...சாவி தொலைஞ்சு போச்சா..?" அந்த மூத்தவர் என்னை பார்த்துக்கேட்டார்.
"இல்லங்க...இந்த பையன் யாரு..?"
"இது நம்ம புள்ளதான் நைனா...இன்னாத்துக்கு கேட்குற..? டேய், அம்மாசி சார்-க்கு மாம்பழம் வேணும் போல இருக்கு...கொடுரா.."

"ஒரு டஜன் போடவா சார்..?" இது அம்மாசி.

"இல்ல எனக்கு மாம்பழம் வேணாம். உங்களோட கொஞ்சம் பேசணும்..."
"பேசு நைனா...எதாவது சினிமால என் புள்ள நடிக்கணுமா..?"
"அதெல்லாம் இல்ல. உங்களோட ஒரு பேட்டி வேணும்.."
"ஓ..நீ பத்திரிக்கையா..? ஒரு போட்டோ எடு நைனா...என்னையும், என் புள்ளையையும்..."

"சொல்லுங்க ...அம்மாசிய பள்ளிக்கூடத்துக்கு அனுப்பலையா..?"
"போய்ட்டுதான் நைனா இருந்தான் போன வருஷம் வரைக்கும். இந்த வருஷம் போல.."
"அதான் ஏன்..?"
"போன வருஷ லீவுக்கு என்னோட தொழில் பாக்க கூட்டி வந்தேன். அவனுக்கு பூட்டு தொழில் பிடிக்கலயாம். அவனா மாம்பழம் வாங்கி யாவாரம் பார்த்தான். அதையே இப்பவும் பாக்குறான்...நல்ல கெட்டிக்கார பய நைனா..இஸ்கூல்ல நல்லா மார்க் எல்லாம் வாங்குவான். "

"அம்மாசி...நீ ஸ்கூல் போலையா..?"
"இதுலையே நல்ல காசு வருது சார். எங்க அப்பா நான் சம்பாதிக்கிற காசு கேட்கமாட்டாரு. அம்மாட்டதான் கொடுப்பேன். அம்மாதான் ஸ்கூல் போகாம இதையே பாக்க சொல்லிருச்சு." அவன் கண்களில் ஒரு ஏக்கம் இருந்தது.
"உனக்கு படிப்பு வேணாமா..?"
"தெரியலையே சார்..அம்மாட்டதான் கேட்கணும்."

"நைனா..பீடி வச்சிருக்கியா..?" அம்மாசியின் அப்பா என்னிடம் கேட்டார்.
"இல்லையே..."
அம்மாசியின் அப்பா பீடி வாங்க கிளம்ப,
"என்ன அம்மாசி உனக்கு படிப்பு வேணாமா..? நல்லா மார்க் வாங்குவன்னு வேற உங்க அப்பா சொல்றாரு.."
"இல்ல சார்...அப்பா இதுல வர்ற வருமானத்துல குடிச்சிடுவார் சார். அதனாலதான் அம்மா என்னையும் கூட அனுப்புது. இப்பவும் நான் வராட்டி குடிக்க போய்டுவார். அதனாலாதான் அம்மா என்னையும் இங்க உட்கார சொல்லிடுச்சு."

குழந்தை தொழிலாளி என்றாலே ஏதோ உணவங்களிலும், சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலையிலும், மெக்கானிக் கடைகளிலும் உள்ளவர்கள் என்றே நாம் நினைக்கிறோம். இவர்களும் தொழிலாளர்கள்தான். நாளை உலகத்தில் இவர்களின் நிலைமை ஒரு கேள்விக்குறியே.

இதற்கு ஏதேனும் ஒரு தீர்வு இல்லையா என்று இந்த தருணத்தில் நீங்கள் நினைத்தால், அதற்கான பதிலும் நீங்களாகத்தான் இருப்பீர்கள்.

இதை போக்க மக்களாகிய நீங்கள்தான் முன் வரவேண்டும். நீங்கள் செய்வது பொருள் உதவியாக இருக்கலாம், அல்லது உங்கள் அறிவை பகிர்வதாய் இருக்கலாம். அவர்கள் இடம் சென்று அவர்களுக்கு நீங்கள் கற்பிக்கலாம். இன்னொரு கலாம் கூட உருவாக்கலாம்.
--------------------------------------------------------------------------------

என்னுடைய முதல் கட்டுரையை எழுதி முடித்தேன். பத்திரிக்கை ஆசிரியரைப் பார்க்க அவரின் அறை சென்றேன். கதவில் இருக்கும் பொத்தானை அமுக்கினேன்.

"யாரு..?" ஆசிரியர் குரல் கேட்டது.
"வாசு சார்..உள்ள வரலாமா..?"
"வா வாசு.."

ஒரு நிமிடம் என்று செய்கை காட்டி, என்னை அமரும்படி செய்கை செய்தார். ஆசிரியர் ஏதோ ஒன்றில் மூழ்கி இருந்தார்.
அவருடைய அறை முழுக்க பத்திரிக்கை தாள்கள்.சுவற்றோரத்தில் சில சாக்கு மூட்டைகள்.அவருக்கு பின் இருக்கும் சுவற்றில் பத்திரிக்கை தொடங்கிய ஆசிரியரின் புகைப்படம். அவரின் மேஜை மீது ஒழுங்கு செய்யப்பட்டு காட்சி அளித்த காகிதங்கள்.

"சொல்லு வாசு.."
"இல்ல சார்...என் ஆர்டிகள்.."

"ம்ம்...நல்லா இருக்கு வாசு....சில சேன்ஜஸ் பண்ணனும். நான் பண்ணிடவா..?"
"என்ன சேன்ஜஸ் சார்..?"

"நல்ல ஆரம்பம்...நல்ல மெசேஜ். ஆனா ஆர்டிகள் முடிச்சது சரி இல்லையோன்னு தோணுது.."
"ஏன் சார்..?"

"நீ யாரு..?"
"சார்..." நான் கொஞ்சம் அதிர்ச்சியானேன்.

"அதாவது நீ இங்க யாரு..?"
"பத்திரிக்கை நிருபர் ."

"பத்திரிக்கையாலனோட வேல நியூஸ் சொல்றது மட்டும்தான். அதற்கான தீர்வு சொல்றது நம்ம வேல இல்ல."
"அப்போ நம்ம பத்திரிக்கைல கட்டுரைகள் எழுத வேண்டிய அவசியம் என்ன சார்..?"

"அத நாம படிக்க வைக்கணும்...அவளோதான். அத பார்த்து வாசகர்கள் என்ன செய்யணும்ங்கறது சொல்றது நம்மோட வேல இல்ல.."
"நாம யோசிக்கிற மாதிரி அவங்களும் வாசகர்களோட வேல படிக்கிறதுன்னு சும்மா இருந்துட்டா..?" இந்த கேள்வி கொஞ்சம் கோபமாகத்தான் வந்தது.

"உணர்ச்சி வசப்படாத வாசு....ஆர்டிகள் நல்லா வந்திருக்கு...கண்டிப்பா ஏதாவது நடக்கும்.."
"என்ன சார் நடக்கும்..? சென்னை அண்ணா சாலையில ஒரு நாளைக்கு போறவுங்க எத்தன பேரு..? ஏன் உங்க ஆபீஸ் ஸ்டாஃப் கூட தினம் அவன்ட்ட பூ வாங்குறாங்களாம். யாராவது இத ஒரு விஷயமா யோசிச்சாங்களா..?"
என்னுடைய சத்தம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

"வாசு. உன்னோட முதல் ஆர்டிகள் இது. நான் இங்க 25 வருசமா வேல செய்றவன். உன்ன தட்டி கொடுத்து தூக்கிவிட வேண்டியது என் வேல. என் அனுபவுத்துல சொல்றேன். நான் சொல்ற மாதிரி போடலாம்." அவரிடம் துளியும் கோபம் இல்லை.

"சரி சார். நீங்க சொல்ற மாதிரியே போடலாம்." அதற்கு மேல் அவரிடம் பேச ஒன்றுமில்லை.

வெளியே வந்தேன். என்னுடைய இரு சக்கர வாகனத்தில் அறைக்கு கிளம்பினேன். வெய்யில் இன்னும் குறையவில்லை. பாண்டியும், அம்மாசியும் தொழில் பார்த்துக்கொண்டிருந்தாகள்.

எனக்குள்ளே மீண்டும் அந்த கேள்விகள் வந்தது.
"டேய்..மெக்கானிக்கல் படிச்சுட்டு ஜர்னலிசம் பக்கம் போறியா..? என்ன பிரச்சனை உனக்கு..? எல்லோரும் சிரித்தனர்.
"அப்போ மெக்கானிக்கல் படிச்சிட்டு சாப்ட்வேர் இஞ்சினியர் ஆகலாம்....ஆனா பத்திரிக்க பக்கம் போகக்கூடாது.."

நான் படித்தது பொறியியல். பன்னிரண்டாம் வகுப்பில் நிறைய மதிப்பெண் வாங்கி இருந்ததால் என் பெற்றோரின் வற்புறுத்தலுக்காக பொறியியல் படித்தேன். ஆனால் என்னுடைய ஆசை, கனவு எல்லாமே ஒரு பத்திரிக்கையாளனாக வேண்டும் என்பதுதான். என்னை பொறுத்தவரை படிப்பு அறிவை வளர்க்க மட்டுமே. படித்த படிப்பு சம்பந்தமாகத்தான் வேலை செய்ய வேண்டும் என்பதெல்லாம் சுத்தமான பொய். எங்கு நிறைய வருமானம் கிடைக்குமோ அங்கு சேர்வதுதான் இங்கு பலரின் எண்ணம்.

காம்பஸ் இன்டெர்வியு என சொல்லப்படும் வேலை வாய்ப்பில் எனக்கும் வேலை கிடைத்தது. நிறைய வருமானமும் தருவதாய் சொன்னார்கள். வேலை கிடைத்த இரவுதான் நிறைய யோசித்தேன். இந்த நான்கு ஆண்டு கல்லூரி வாழ்க்கை எனக்கான சுயத்தை இன்னும் அதிகரித்திருந்தது. வேலையில் சேர முடியாதென மறுத்துவிட்டேன். வேலைக்கு சேர்ந்தால் ஒரு பத்திரிக்கையாளனாக மட்டுமே வேலை செய்ய வேண்டும் என் உறுதி பூண்டேன்.

என்னுடைய எழுத்து மூலம் நிறைய மாற்றங்கள் கொண்டு வர முடியும் என நம்பினேன். ஏன்..? ஒரு பத்திரிக்கையாளன் நினைத்தால் எந்த விதமான சமூக புரட்சியும் ஏற்படுத்த முடியும். என்னுடைய ஆசைப்படி ஒரு புகழ்பெற்ற பத்திரிக்கையில் இணைந்தேன்.


என் அறை வந்து சேர்ந்தேன்.
என் நண்பனுக்கு கைபேசியில் அழைத்தேன்.
"என்னடா ஜர்னளிச்ட், வேல எப்டி இருக்கு..? வேல இன்னைக்கே ஆரம்பிச்சிட்டியா..?"

எல்லாம் அவனிடம் சொன்னேன்.
"இன்னிக்குதாண்டா சேர்ந்து இருக்க.. அவங்க சொல்றத கேட்க வேண்டியதுதானே..?"


அடுத்த இதழில் என்னுடைய கட்டுரை வந்தது. நிறைய வாசகர்கள் கட்டுரை அற்புதமாக உள்ளதாக சொல்லி இருந்தனர். சிலர் அந்த சிறுவர்களுக்காக வருந்தினர். கண்டிப்பாக இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு உண்டு என்றனர். சில பேர் அரசை குற்றம் சொல்லினர்.

வாசகர் கடிதம் எடுத்துக்கொண்டு ஆசிரியர் அறை சென்றேன்.
"நல்ல ரெஸ்பான்ஸ் பார்த்தியா..? அடுத்த கட்டுரை ஆரம்பிக்கிறியா..?"

வெளியே வந்தேன். என் நண்பனை கூப்பிட்டேன்.
"எனக்கு ஒரு உதவி பண்ணுவியா..? உங்க கம்பெனி-ல எனக்கு வேல கெடைக்குமான்னு பாக்குறியா..? உன் அக்கௌன்ட்ல எவ்ளோ பணம் வெச்சிருக்க..?"

கைபேசியை வைத்துவிட்டு பாண்டியையும், அம்மாசியையும் பார்க்கச் சென்றேன்.

(உரையாடல்-சமூக கலை இலக்கிய அமைப்பு போட்டிக்கான சிறுகதை)

Tuesday, May 12, 2009

கதவு (கதை - 8)

Share |
இன்று வெகு நாட்களுக்கு பிறகு மதிய உணவு உண்ண வீட்டிற்கு போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒரு காலத்தில் தினம் சென்றுகொண்டிருந்தேன். அந்த "ஒரு காலம்" இன்றும் நெஞ்சை படபடக்க வைக்கிறது.


என் அலுவலகத்திற்கும், வீட்டிற்குமான தூரம் 6 நிமிட நடைத்தொலைவு. ஒரு ஞாயிறன்று காலையில் யாரோ ஒருவர் கதவு தட்டும் சத்தம் கேட்டது. தூக்கத்திலேயே கதவை திறந்தேன். பார்பதற்கு அந்த பெண்மணி தமிழ் போலவே காட்சி அளித்தார். அவர் கை பிடித்த ஒரு குழந்தை ஒன்று தலை நிமிர்ந்து என்னை பார்த்தது. தமிழாய் தெரிந்தாலும் நாங்கள் வாழ்வது அமெரிக்கா என்பதால், ஆங்கிலத்தில், "என் வீட்டு கதவை திறக்க கொஞ்சம் உதவ முடியுமா" என வினவினார்.

நான் வேறு ஆடை மாற்றிக்கொண்டு அவர் பின் சென்றேன். அவர் வீடு நான் வசித்த அதே ஏழாவது மாடியில் ஒரு மூன்று வீடு தள்ளி இருந்தது. அவர் புதிதாக குடி வந்தவராக இருத்தல் வேண்டும். நாங்கள் வசித்த குடியிருப்பில் இருக்கும் பொதுவான பிரச்சனை இது. ஒவ்வொரு கதவுக்கு பின்னும், இரண்டு பூட்டுகள் இருக்கும். ஒன்று auto lock என சொல்லப்படும் தானியங்கி பூட்டு. மற்றொன்று நாம் சாவியால் பூட்ட வேண்டிய பூட்டு.

நான் சாவி வாங்கினேன். இரண்டு மூன்று முறை முயற்சி செய்து பார்த்தேன். அவரின் கணவரிடம் இருக்கும் சாவியில் எந்த வித பிரச்சனையும் இல்லை என சொன்னார். கீழே சென்று குடியிருப்பு நிர்வாகிகள் யாரையாவது கூப்பிடலாமா என எண்ணிய போது சரியாக கதவு திறந்தது.

அவரிடம் இரண்டு பூட்டுகள் பற்றி தமிழிலேயே விளக்கி வந்தேன். அவர் என் முகத்தை கூட சரியாக பார்க்கவில்லை.

அடுத்த நாள் மதியம் வீட்டிற்கு உணவருந்த என் வீட்டை நோக்கி வந்துக்கொண்டிருந்தேன். அவர் திறக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தார்.
"என்னங்க திரும்பவும் திறக்க முடியலையா..?"
"ஆமாங்க. இப்பதான் மேநேஜ்மென்ட்ல வந்து பார்த்தாங்க, அவங்க வந்து பார்த்தப்புறம் மேல என் பிரண்ட் வீட்டுக்கு போயிட்டு வந்தேன். மறுபடியும் திறக்க முடியல."

நான் முயற்சி செய்தேன். இந்த முறை எனக்கு கொஞ்சம் எளிமையாகவே இருந்தது. வீட்டை திறந்து, உள்ளே சென்று அவரையும் உள்ளே அழைத்து, இரு பூட்டுகள் காண்பித்து, அவை எவ்வாறு வேலை செய்கிறதென விளக்கினேன். இந்த முறை அவர் நன்றாக கேட்டுக்கொண்டார். அவர் குழந்தை மெதுவாய் சிணுங்கியது.

அடுத்த நாள் நான் மதிய உணவு உண்ணும்பொழுது யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டது. "சாரிங்க, எப்ப பார்த்தாலும் உங்கள டிஸ்டர்ப் பண்றோம். ஐயோ, சாபிடரீங்களா...சாப்ட்டு வாங்க, நாங்க வெயிட் பண்றோம்."
"இல்லங்க பரவா இல்ல."

நான் கை கழுவி அவரிடம் சாவி வாங்கினேன். அவர் குழந்தை பசியில் இருப்பதுபோல் தோன்றியது.அவர் குழந்தையை சமாதானம் செய்தார்.இந்த முறை நான் முதல் முயற்சியில் மிக எளிதாய் திறந்தேன்.

"என்னங்க, நீங்க இவ்ளோ ஈசியா திறக்கறீங்க..."
"நீங்க வந்து எவ்ளோ நாள் ஆச்சு..?"
"ஏன்..? போன வாரம் வந்தோம்..."
"நான் ரொம்ப நாளா இங்க இருக்கேன் இல்லையா. அதன் இந்த பூட்டு ஏன் பேட்சு கேட்குது."

இந்த முறை மீண்டும் விளக்கினேன்.
"அமெரிக்கால லாக் வந்து இந்தியாவோட தலைகீழ். இதுல ரெண்டு பூட்டு இருக்குதுல்ல, அதுல ஆட்டோ லாக் மட்டும் போட்டா கூட போதும். அதனால நீங்க பூட்டும்போது சும்மா கதவ சாத்திடுங்க. அதுவே பூட்டிக்கும்."

நான் விளக்கியது போல் செய்து காண்பித்தேன்.
"இப்போ பூட்டிகிச்சா."
"ம்ம்."
"இப்போ திறக்கிறேன் பாருங்க. திறக்கும்போது இந்த நாப உங்க பக்கம் இழுத்துக்கங்க."
நான் கதவின் கைப்பிடி இழுத்து எளிதாக திறந்து காண்பித்தேன். கதவை மீண்டும் மூடி அவரை திறக்க சொன்னேன்.

அவர் முயற்சி செய்தார். அவர் முயலும்பொழுது சரியாக பூட்டை திறந்தார். ஆனாலும் பூட்டு திறந்தவுடன் உடனே கைப்பிடியை விட அது மீண்டும் பூட்டிக் கொண்டது.
"ஓ. உங்க பிரச்சனை என்னனு புரியுது. பிடிச்ச நாப கதவு திறக்கற வரை விடாதீங்க. இப்போ முயற்சி பண்ணுங்க."

இந்த முறை அவரே கதவு திறந்தார். ஆயினும் இன்னும் அவருக்கு அது லாவகமாக ஏற்படவில்லை.

"இது நல்லா வர்றவரை நீங்க ஆட்டோ லாக்-கே மட்டும் போடுங்க. இன்னொரு லாக் போடவேணாம்."
"ரொம்ப தேங்க்ஸ்ங்க"

நான் என் வீடு நோக்கி சென்றேன்."இருடா செல்லம், அம்மா மம்மு கலந்து தர்றேன்" குழந்தையை தூக்கிக்கொண்டு அவர் வீட்டினுள் நுழைந்தார்.
அதற்கு பிறகு நான் அவரை சந்திக்கவில்லை.

ஒரு நாள் இரவு 8 மணி. கதவு தட்டும் சத்தம்.
"சாரிங்க, என் வீட்டுக்காரர் வேலை விஷயமா பக்கத்துக்கு சிட்டிக்கு போய்ட்டார். போனவர் ரெண்டு சாவியையும் எடுத்துட்டு போய்ட்டார். நான் இவ்ளோ நேரம் மேல என் பிரண்ட் வீட்ல இருந்த போது எனக்கு நெனப்பே இல்ல. கீழ மேநேஜ்மென்ட்டும் மூடி இருக்கு."
"செக்யூரிட்டில பார்த்தீங்களா..?"
"இல்லங்க"

நான் கீழே சென்றேன். செக்யூரிட்டி "எமெர்ஜென்சி மெயின்டெநன்ஸ்" அழைக்கச் சொன்னார்.

அவர்களை கூப்பிட்டேன். அவர்கள் சாவி காலையில்தான் கிடைக்கும் என கூறினர்.
"உங்க பிரண்ட் மேல இருக்காங்களா..?"
"நீங்க கேட்குறது புரியுதுங்க, அவங்க வெளியூர் கிளம்பிட்டாங்க, அவங்களுக்கு கொஞ்சம் திங்க்ஸ் எல்லாம் அடுக்கிட்டு இருந்ததுலதான் சாவி விஷயத்தையே மறந்துட்டேன். "
"சரி. என்ன பண்ணலாம்."
"......"
"உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லனா நீங்க என் வீட்ல தூங்கலாம். நான் என் பிரண்ட் வீட்ல பொய் படுத்துக்கறேன். காலைல கீழ போய் விஷயம் சொன்னா அவங்க உங்க வீட்ட திறந்துகொடுப்பாங்க."

நான் அவருக்கு படுக்கை ஏற்படுத்தி, அவர் குழந்தைக்கு தேவைப்பட்டால் வேண்டிய பால், அவருக்கு தேவைப்பட்டால் வேண்டிய உணவு எல்லாம் என் குளிர் சாதன பெட்டியில் வைத்து கிளம்பினேன்.

"நான் என் சாவிய இங்க வச்சிட்டு போறேன். காலைல கதவு தட்டறேன். உங்க போன் நம்பர் கொடுங்க. அதையும் எதுக்கும் வச்சிக்குறேன்"

காலை நான் கதவு தட்டிய உடனையே அவர் திறந்தார். முன்னரே எழுந்திருப்பார் போல.
"காப்பி..?"
"இல்லங்க பரவா இல்ல. பையனுக்கு மட்டும் கொஞ்சம் பால் எடுத்துகிட்டேன்"
நான் இருவருக்கும் காப்பி கலக்கினேன்.

"சரிங்க நான் ஆபீஸ் கிளம்புறேன். இன்னொரு அரை மணிநேரத்துல கீழ ஆள் வருவாங்க. நீங்க போகும்போது சும்மா சாத்திட்டு போங்க"
"ரொம்ப தேங்க்ஸ்ங்க"

அன்று மாலை மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்டது.
"என்ன ஆச்சு..?"
"பயப்படாதீங்க. இன்னைக்கு நீங்க எங்க வீட்டுக்கு சாப்பிட வரணும்."
"அட பரவா இல்லங்க."
நல்ல உணவு. சாப்பிட்டு வந்தேன்.

ஒரு ஒரு வாரம் ஆனது. மீண்டும்.. அவராகத்தான் இருக்க வேண்டும்.திறந்தேன்.
"டேய்.. ............. நீதான் என் பொண்டாட்டிய வச்சிருக்கியா..? ஏன்டா இப்படி அழயறீங்க..? உங்களுக்கு எல்லாம் வேற வேலை இல்லை."

அக்கம் பக்கத்தில் இருந்த வெள்ளைக்காரர்கள், இந்தியர்கள் வெளியே வந்தார்கள்.
"ஒரு நிமிஷம் உள்ள வர்றீங்களா சார்..?"
"என் பொண்டாட்டிய மொதல்ல உள்ள கூப்பிட்ட, இப்போ என்ன கூப்படரியா..? என் பொண்டாட்டி செல் போன்ல என்ன ............. உன் நம்பர் இருக்கு..? வெளிய ஊர் சுத்தரீங்களா ரெண்டு பேரும்..?"

எனக்கு கோபத்தை விட இந்த காலத்தில் கூட இந்த மாதிரி ஆட்கள் இருப்பது வியப்பை தந்தது. இப்பொழுது நான் என்ன பேசினாலும் அவரின் மனைவிதான் பாதிக்கப்படுவார்கள். நான் மறுபேச்சு பேசவில்லை.

"பேசுடா. உண்மை தெரிஞ்சிடுச்சுன்னு அசிங்கமா இருக்கா..? இது மாதிரி எத்தன குடும்பத்த தாலி அத்துருக்க..?"

நான் பேசாதது அவனை அமைதி அடைய வைத்ததுபோல தெரியவில்லை.
நேரே அவன் வீட்டுக்குள் சென்றான். அவன் மனைவியை வெளியே இழுத்துவந்து, "இந்தாடா இவளே நீயே வெச்சுக்க. போடி...அவன்கூடவே போ.."

அவர் முகம் முழுக்க அவன் கைரேகைகள். முடி எல்லாம் களைந்து இருந்தது. இனியும் பொறுமை காத்து ப்ரயஜோனமில்லை. நான் அவனை நோக்கி போகவும் உள்ளே ஒரு அமெரிக்கா காவலர் நுழையவும் சரியாக இருந்தது.

அவன் அப்படியே அமைதியானான். வந்தவர் அவனிடம் சில கேள்விகள் கேட்டார். அவன் மனைவியிடமும் சில கேள்விகள் கேட்டார். நாலு வீடு தள்ளி இருந்த பெரியவர் தான்தான் காவலரை வர சொன்னேன் என்றார். மேலும் அவர் அவன் அந்த பெண்ணை தாக்கியதாகவும் புகார் கொடுத்தார். அவன் வந்த காவலர்களால் அழைத்து செல்லப்பட்டான். காவலர் இன்னும் 5 நிமிடத்தில் முதலுதவி வண்டி வரும் என்றும், அதில் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். செய்வதறியாது அவர் மனைவி திகைத்து நின்றார்.

குழந்தையையும் தூக்கிக்கொண்டு, நாங்கள் மருத்துவமனை சென்றோம். என்னை வெளியே இருக்க சொல்லி அவர் மட்டும் அழைத்து செல்லப்பட்டார்.

நிறைய இடங்களில் காயம் போல. நிறைய தழும்புகள் வேறாம். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த குழந்தையின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவருக்கு ஒரு அரை வழங்கப்பட்டது. ஆனால் அதை மறுத்து உடனடியாக வீட்டுக்கு போக வேண்டும் என்றார். நான் மருத்துவமனையில் பேசினேன். நாங்கள் வீட்டுக்கு சென்றோம். நாங்கள் வீடு அடைவதற்குள் குழந்தை உறங்கிப்போனான்.

"யாருக்காவது போன் பண்ணவா உங்க வீட்ல..?"
"............"
"உங்களைதான் கேட்குறேன்.."
"இல்லங்க வேணாம். அவர எப்ப விடுவாங்க. அவரு ஒன்னும் தப்பு பண்ணலன்னு போய் நாம சொல்ல முடியுமா..?"

எனக்கு இந்த மாதிரியான சட்டங்கள் பற்றி தெரியவில்லை.
"நான் முயற்சி பண்றேங்க. என் கிளையன்ட் யார்டயாவது பேசி என்ன பண்ணலாம்னு பாக்குறேன். நீங்க இப்பைக்கு ஒன்னும் கவலை படாதீங்க."

இந்த நேரத்தில் என் வெள்ளைக்கார முதலாளிகளிடம் பேச முடியாது. காலை முதல் வேலையாக இதை பார்க்க வேண்டும்.
இப்பொழுதே 911 எண்ணிற்கு தொலைபேசியில் பேசிப்பார்த்தால் என்ன என தோன்றியது. நான் விபரம் முழுவதும் சொன்னேன். அவன் எங்கு வைக்கப்பட்டிருக்குறான் என தெரிந்து கொண்டேன்.

அவரை அவர் அறையில் விட்டு, நான் என் அறைக்கு வந்தேன்.
காலை கதவு தட்டப்பட்டது. அவராகத்தான் இருக்கும்.
காவலர்கள்!!
"எஸ்"

வெளியே வந்தேன். நிறைய காவலர்கள் அவர் வீட்டில்.அவனை மீண்டும் அழைத்து வந்துவிட்டார்களா..? குழந்தை அழுதது. குழந்தையை ஒரு காவலர் தன கையில் வைத்திருந்தார்.

"என்ன ஆனது..."
"அவர் மேலிருந்து கீழே குதித்துவிட்டார்."
"......................."
"R u alright..?"

எனக்கு மயக்கம் வந்தது. அவருடைய வீட்டில் யாரையாவது எனக்கு தெரியுமா என காவலர் வினவினார்.அவருடைய செல் போனில் இருந்த எண்கள் முயற்சித்து கடைசியாக அவரின் மாமனாரிடம் பேசினோம். நான் எல்லா விசயமும் சொன்னேன்.
"அடப் பாவி, நல்லா இருந்த குடும்பத்த நாசமாக்கிட்டியே.."யாரும் புரிந்து கொள்வதாக தெரியவில்லை.

அவரின் அப்பா, அம்மாவிடம் பேச முயற்சித்தோம். அவர்கள் எங்கிருப்பர்கள் என தெரியவில்லை.அவன் அழைத்துவரப்பட்டான்.

நாந்தான் அவன் மனைவியை கொலை செய்திருக்க கூடும் என சொன்னான். அவன் மனைவியை அவன் காதல் திருமணம் செய்துள்ளான் என்பதும், அவர் ஒரு அனாதை விடுதியில் வளந்தார் என்பதும் அப்பொழுதே தெரிந்தது.

சில மாதங்கள் வழக்கு நடந்தது. குழந்தை அரசு கவனிப்பில் இருந்தது. அவன் மனைவியின் இறப்புக்கு காரணம் அவன்தான் என முடிவானது.

சாப்பிட்டு முடித்தேன். நேற்றுதான் எல்லா வேலைகளும் முடிந்தது. அவர் வீட்டை பார்த்துக் கொண்டே கிளம்பினேன். நேற்றே அந்த வீட்டை அவருக்காக திறந்தது போல் இருந்தது.

நான் வக்கீல் வீட்டுக்கு சென்றேன். அவர் எல்லாம் சரி பார்த்தார். நாங்கள் இருவரும் அந்த குழந்தை கவனிப்பு மையம் சென்றோம்.

அவர் கடைசியாக என்னிடம், "U sure u want to do this..?" என்றார்.

அவனை தூக்கிக்கொண்டு வீடு வந்தேன். அந்த குழந்தை அது இருந்த வீடு பார்த்து பார்த்து கதவை நோக்கி கை நீட்டியது.

Monday, May 11, 2009

அம்மா (கதை - 7)

Share |
இன்று உலகம் முழுக்க அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரின் வாழ்விற்கும் ஆரம்பப் புள்ளி அவள்தான் என்பதை விட ஒரு சிறப்பு அவளுக்கு என்ன இருக்க முடியும். ஆனாலும் அதையும் தாண்டி ஒவ்வொரு தாய்க்கும் ஒரு மகனின் பார்வையில் ஒரு சிறப்பம்சம் இருக்கத்தான் செய்கிறது.
இது என் தாயைப் பற்றிய சிறப்பம்சம்.

எங்கள் வீட்டில் நானும், என் தங்கையும். அப்பா ஒரு அரசு வேலையில் இருக்க, என் அன்னை வீட்டை கவனித்து வந்தார்.

அப்பொழுது நான் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேர வேண்டிய நேரம் வந்தது. மதுரையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்க்கப்பட்டேன். இயந்திரவியல் பிரிவு. என் அப்பாவும், அன்னையும் வந்து என்னை சேர்ப்பித்து, விட்டுச் சென்றனர்.

முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. வெள்ளிக்கிழமை வந்தால் என் கால்கள் மாட்டுத்தாவநியில்தான் நிற்கும். என் ஊருக்கு 3 மணிநேரம்தான்.

ஒவ்வொரு புதியவரும், நண்பனாய் மாற எல்லாம் பழகிப்போனது, சீனியர்சின் ராகிங் உட்பட. சென்னை, கோயம்புத்தூர் போன்ற ஊர்களில் இருந்து வந்த மாணவர்களால் வாரவாரம் ஊருக்கு செல்ல முடியவில்லை.
"ஏன்டா நாங்க எல்லாம் எல்லா வாரமுமா ஊருக்கு போறோம்..?"

அந்த வாரம் நான் ஊருக்கு செல்லவில்லை.
"அம்மா, பிரண்ட்ஸ் எல்லாம் ஊருக்கு போவேணாம்னு சொலறாங்கம்மா. அவங்களுக்கு தனியா போர் அடிக்குதாம்."

விடுதியிலேயே தங்கி விட்டேனே தவிர, ஊருக்கு போயிருக்க வேண்டும் என்றே யோசித்துக்கொண்டிருந்தேன். அவர்கள் எல்லோரும் விடுதிக்கு உள்ளேயே கிரிக்கெட் விளையாடினார்கள். சிலர் பீர் அருந்தினார்கள். எனக்கு அதில் அவ்வளவு ஆர்வமில்லை.

அடுத்த வாரம் எப்பொழுது வரும் என காத்துக்கொண்டிருந்தேன்.
இரண்டு வாரங்கள் கழிந்தது. "டேய், போன வாரம்தானே ஊருக்கு போன.."
"ஆமாண்டா. ஊருக்கு போனேன். ஆனா இங்க இருக்கப்போ மட்டும் என்ன பண்ணேன்..? நீங்க பாட்டுக்கு கிரிக்கெட் விளையாண்டீங்க...ஊருக்கு போயிருந்தா கூட நல்ல சாப்பாடு, ஒரு படம் பார்த்திருப்பேன்..."
"இதான் உன் பிரச்சனையா.."

வெள்ளிக்கிழமை இரவு. அம்மா மெஸ்ஸில் சாப்பிடோம்.
"சொல்லு மாப்ள. என்ன படத்துக்கு போவோம்..?"
"செகண்ட்-சோவா..??"
"யார்ரா இவன். இவனுக்காக நம்ம வந்தா, பச்ச கொளந்த மாதிரி பேசிட்டு இருக்கான்.."

அண்ணாமலையில் முதல்வன் பார்த்து, ஆட்டோ பிடித்து ஹாஸ்டல் வந்தோம்.

சனிக்கிழமை எழுந்தபோது மணி 12. சாப்பிட்டு முடித்து எல்லோரும் கிரிக்கெட் விளையாடப்போனார்கள். நானும் விளையாட வேண்டி வந்தது.

கடுமையான உடல் வலி வந்தது.
"டேய், ஏதாவது பாம் வச்சிருக்கியா, உடம்பு வலி பின்னுது."
"என்னடா இதுக்கே, இப்படி ஆயிட்ட. இதுக்கெல்லாம் நம்ம மணி ரூம்தான். அங்கதான் எல்லா மருந்தும் இருக்கும்."

மணி அறையில்தான் எல்லோரும் பீர் அருந்துவார்கள். மணி ஏற்கனவே போதையில் இருந்தான். நான் மருந்து தேடினேன்.
"மாப்ள, நீ என் நண்பனா இல்லையா..?" இது மணி.
"ஏன்..?"
"சொல்லு மாப்ள.."
"ம்ம்."
"அப்படின்னா இந்த பீர் குடி."

எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் என்பதை விட, இப்பொழுது யோசித்தால் நான் விரும்பித்தான் குடித்திருப்பேன் என தோன்றுகிறது.

இரண்டு வாரம், மூன்று வாரம் ஆனது. மூன்று வாரம் 1 மாதமானது.

எங்கள் கல்லூரியில் மட்டும், முதலாம் ஆண்டும் இரண்டு செமஸ்டர். முதல் செமஸ்டர் வந்தது. ஓரளவுக்கு நல்ல மதிப்பெண்கள் எடுத்தேன்.
விடுதி வட்டாரத்தில் அது "டாப் மார்க்" ஆனது.

பீர் மாறி சில நேரங்களில் விஸ்கி, பிராந்தி என குடிக்க ஆரம்பித்து இருந்தோம். இரண்டாம் செம்மும் வந்தது.
"உனக்கென்னடா..எங்களோட சுத்திகிட்டே சூப்பர் மார்க் எடுத்திருவ.."

பரீட்சை முடிந்து எல்லோரும் கொடைக்கானல், ஊட்டி, சென்னை என ஊர் சுற்றினோம். நான் வீட்டை சுத்தமாக மறந்து போனேன்.

இம்முறையும் நான் "டாப் மார்க்" அவர்களை பொறுத்தவரை. விடுதியில் இருந்து அரியர் இல்லாமல் தப்பித்த சிலரில் நானும் ஒருவன் ஆனேன். 3 பேப்பரில் ஜஸ்ட் பாஸ். எல்லோரையும் கூப்பிட்டு HOD கண்டித்தார்.

"நீ போன தடவ, நல்லாதானே படிச்ச...இப்ப என்ன ஆச்சு உனக்கு..?"

நாங்கள் சீனியர்ஸ் ஆனோம். எங்கள் கல்லூரியின் மாணவ்ர்கள் சட்டப்படி, விடுதியில் இருக்கும் முதலாம் ஆண்டு மாணவர்களை விடுதியில் இருப்பர்வகள் மட்டுமே ராகிங் செய்ய முடியும்.

அதே போல்தான் தினம் வந்து செல்வோருக்கும்.

இந்த சட்டம் மீறப்பட்டது. சிவில் படிக்கும் மாணவன் ஒருவன், எங்கள் விடுதி மாணவனை ராகிங் செய்தான்.

"மச்சான், இந்த சிவில் ............ நாம யாருன்னு காட்டணும். இனி ஒரு ஜூனியர் டே-ஸ்காலர் கூட விடாதீங்க. எல்லாரையும் சாவடீங்க." மணி எங்களுக்கு உத்தரவு பிறப்பித்தான்.

ராகிங் செய்த மாணவன் தாக்கப்பட்டான். ஜூனியர் டே-ஸ்காலர் எங்களை பார்த்து நடுங்கினர்.

தாக்கப்பட்ட மாணவன் ஆள் சேர்க்க, விஷயம் அவன் வீட்டில் தெரிந்து, நாங்கள் எல்லோரும் 15 நாட்களுக்கு தற்காலிகமாக நீக்கப்பட்டோம்.

கல்லூரியில் இருந்து நீக்கப்படாலும், விடுதியில் தங்க அனுமதி கிடைத்தது. விடுதியில் இருக்கும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு எங்கள் மீது பயம் ஏதும் இல்லாமல் இருந்தது.

அன்று விடுமுறை. முதலாம் அண்டு மாணவன் ஒருவன் ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தான். எங்களை பார்த்தும் பார்க்காததுபோல் இருந்தான்.
"டேய்....இங்க வா....." "நீ அப்படியே கிளம்பு.."
அந்த பெண்ணை கிளம்ப செய்ததில், அவனுக்கு கோபம்.

"என்னங்க....நீங்க யாரு அவள கிளம்ப சொல்றதுக்கு..?"
"......இந்த வயசுலேயே உனக்கு ஜாரி கேட்குதா...? " மணி பொளேர் என ஒரு அரை வைக்க, அவன் மயக்கமானான்.இதை பார்த்துக்கொண்டிருந்த அந்த பெண் ஓட்டம் பிடித்தாள்.

இந்த முறை ஒரு மாதம் நீக்கப்பட்டோம். அதோடு பெற்றோரையும் அழைத்து வர வேண்டிய காட்டயத்திற்கு ஆளானோம்.

அப்பாவிடம் செய்யாத தவறுக்கு நான் மாட்டிக்கொண்டேன் என பொய் சொல்லி, அவரை அங்கிருந்தே பேசச் செய்தேன்.

ஒரு வழியாய் பிரச்சனை ஓய்ந்தது. அடுத்த செமஸ்டர் வந்தது.

இந்த முறை 10 நாட்களே விடுமுறை இருந்தது.

பரீட்சை முடிவு வந்தது. நான் எல்லா பாடங்களிலும் தோல்வியை சந்தித்தேன். ஒரு பாடத்தில் கூட இன்டெர்நலில் முப்பதிற்கு 10 மதிப்பெண் கூட வாங்கவில்லை. கல்லூரி விட்டு வெளியே வந்தேன். மணி பத்தவைத்திருந்த சிகரெட் வாங்கி புகைத்தேன்.

" ...... வேணும்னே குத்திருக்கானுங்க மாப்ள.."

என்னுடைய வகுப்பறைக்கு வெளியே எல்லா பாடங்களிலும் தோல்வி அடைந்த என்னையும், மணியையும் எந்த ஆசிரியரும் உள்ளே விடக்கூடாது என்று அறிவிப்பு இருந்தது.

HOD பார்க்க சென்றோம்.
"அப்பாவ கூட்டிட்டு வாங்க. நாங்க TC ரெடி பண்ணியாச்சு."
"சார்..."
"வெளியப் போ.."

வேறு வழியேயில்லை.
அப்பா வந்தார். HOD என்னை வெளியே நிற்கச் சொன்னார்.

அப்பா வெளியே வந்தார்.
"கிளம்பு. ஊருக்கு போகலாம்."
"அப்பா..."
விடுதியிலும், பேருந்திலும் ஒன்றும் பேசவில்லை.

வீட்டுக்குள் சென்றதும் பளார் என ஒரு அடி விழுந்தது. என் அப்பா என்னை இதுவரை கைநீட்டி அடித்ததில்லை.
"உன் வாழ்க்கை நல்ல இருக்கணும்னா படி"

அம்மா ஓடி வந்து என்னை தாங்கிப்பிடித்தார்.
அப்பா அம்மாவிடம், "உனக்கு தேவையான துணிமணி எடுத்துக்க. ரெண்டு பெரும் மதுரை கிளம்புங்க. ஒரு ரெண்டு நாளைக்கு நீ ஹாஸ்டல் கெஸ்ட் ஹவுஸ்ல தங்கிக்க. அதுக்குள்ள இவன காலேஜ் பக்கத்தில ஒரு வீடு பார்க்க சொல்லு. இனி அவன் நல்லா வர்றதும், நாசமா போறதும் உங்க ரெண்டு பேர் கைல."

நான் என் அறைக்கு சென்றதும் அப்பா அம்மா பேசுவது கேட்டது. "தண்ணி, சிகரெட் ஒன்னு விடல. ராக்கிங் வேற பண்ணி இருக்கான். என்ன பிரச்சனடி இவனுக்கு..?"

அம்மா என்னிடம் சகஜமாய்தான் பேசினார். மதுரை வந்து ஒரு வீடு பிடித்தேன்.
கல்லூரி சென்றேன். மணியின் அப்பாவும் வந்து போயுள்ளார்.
"தம் வாங்க கூட காசில்ல மாப்ள.."
"விட்றா..நான் வாங்கித்தரேன்."

நானும் மணியும் நன்றாக குடித்தோம்.
"மாப்ள, இதோட ஹாஸ்டல் போமுடியதுரா..."எங்க அப்பா வார்டன், வாட்ச்மன் எல்லார்டையும் சொல்லிட்டு போயிருக்கான்.

எங்கள் வீட்டுக்கு போனோம்.அம்மா உறங்காமல் காத்திருந்தார்.
"அம்மா. இது மணி."
"உள்ள வாப்பா."
இருவருக்கும் அம்மா உணவு பரிமாறினார்.

"மணி, உங்க அப்பாவும் வந்தாரப்பா..?"மணி தயங்கினான்.
"நீ கெட்டுப்போனதுக்கு என் பையன்தான் காரணம்னு HOD சொன்னாரா..?"மணி பதில் பேசவில்லை.
"என்னடா அப்பிடியா..?" இது நான்.

"உங்க அப்பாட்ட என்ன சொன்னாங்கன்னு தெரியுமா உனக்கு..?" இது அம்மா.
நாங்கள் இருவரும் வருகிற பரிட்சையில், ஒரு பாடத்தில் கூட தேர்ச்சி பெறப்போவதில்லை. கல்லூரிக்கும் சரியாக வரப்போவது கிடையாது. சென்ற பருவத்தில் வந்த நாட்கள், இந்த பருவத்தில் செல்லும் நாட்கள் எல்லாம் மொத்தம் கணக்கு செய்து வருகை பதிவேடு காரணம் காட்டி எங்களை எங்கள் பல்கலைக்கழகம் மூலியமாக வெளிய அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
அம்மா கொஞ்சம் கூட கோபம் காட்டாமல் எல்லாம் சொல்லி முடித்தார்.

"எனக்கு ஒரே ஒரு ஆசைதான்பா. நாளைக்கு உன் தங்கச்சி கல்யாணம்போது, என்னால முடிஞ்சது இதுப்பான்னு நீ கொடுத்தா, நாங்க எவ்வளவு சந்தோசப்படுவோம்."

எங்கள் இருவருக்கும் படுக்கை தயார் செய்து அவரும் உறங்க சென்றார்.
எங்களுக்கு தூக்கம் வரவில்லை. வீட்டின் வெளியே வந்து அமர்ந்தோம். அம்மா உறங்கிவிட்டார் என முடிவி செய்த மணி சிகரெட் பற்ற வைத்தான்.

"அவனுங்க வேணும்னே நம்மள குத்தறாங்க ....நம்ம என்னடா தப்பு பண்ணோம்..?"

காலை எங்கள் இருவருக்கும் அம்மா உணவு பரிமாறினார்."மணி. உன் பிரண்ட யாராவது வம்பிழுத்தா....நீ என்ன பண்ணுவ..?"
"சாவடிசிருவேன்மா..."
"உன்ன யாரவது வம்பிழுத்தா உங்க அப்பா அம்மா அந்த பையன என்ன பண்ணுவாங்க..?"

என்னிடம் 10 ரூபாய் நீட்டினார்.
"3 சிகரெட் வாங்கிக்க. காலேஜ்ல இருந்து நேரா வீட்டுக்கு வா."
"மணி. என் பையன நீ ஒரு நல்ல பிரண்டா நெனச்சா, நீயும் இங்கயே தங்கலாம். இல்லாட்டி இதுவே நீ இங்க வர்றது கடைசியா இருக்கும்."

ரெண்டு பேருக்கும் ஒன்னு சொல்றேன்.
"யாராவது உங்கள பழிவாங்குறதா நெனச்சா, உங்கள விட முட்டாள் யாருமே கிடையாது.."

பெட்டி படுக்கை எடுத்துக்கொண்டு மணியும் என்னுடன் வந்தான். அவனுக்கும் அம்மா 10 ரூபாய் கொடுத்தார்.

அடுத்த செமஸ்டர் வந்தது. இந்த செம் பேப்பர் காலையில் இருக்க, அரியர் பேப்பர் மதியம் இருக்கும். இரவு கண் விழித்து படிப்போம். எங்களுடன் அம்மாவும் அமர்ந்திருப்பார். நாங்கள் இருவரும் ஒரு 4 மணிப்போல் தூங்குவோம். அம்மா அதற்குள் காலை உணவு செய்து எங்கலுக்கு கொடுப்பார். மதிய உணவு சமைத்து கல்லூரிக்கே வந்து கொடுத்துப்போவார்.

நானும், மணியும் சேர்ந்து படித்தோம். அரியர் பேப்பரில் நான்கை இந்த முறையும், மீதி நான்கை அடுத்த முறையும் எழுத அம்மா சொன்னார்.

தேர்வு முடிந்ததது. நான் அம்மாவை ஊருக்கு போக சொன்னேன். அம்மா கேட்கவில்லை. நாங்கள் மூவரும் வீட்டிலயே இருந்தோம். அந்த 4 பாடம் படித்தோம். எங்கள் விடுமுறை நேரத்திலும் அம்மா அவ்வளவாக ஓய்வு எடுக்கவில்லை.

முடிவுகள் வந்தது. இந்த செமஸ்டரின் எல்லா பாடங்களிலும், அந்த 4 பாடங்களிலும் தேர்சிப்பெற்றோம்.

அப்பா முதல் முறையாக எங்கள் வீட்டிற்கு வந்தார். அம்மாவை கிளம்பச்சொன்னார். தங்கையும் வந்தாள். அம்மா தான் வந்த வேலை இன்னும் முடியவில்லை என சொல்லி மறுத்துவிட்டார். தங்கையிடம் தனியாக பேசினார்.

ஐந்தாவது செமஸ்டர். இந்த முறையும் காலை ஒரு பேப்பர். மதியம் ஒன்று. எல்லாம் தேர்ச்சி அடைந்தோம்.

HOD எங்களை அழைத்தார்.
"என்னடா படிக்கிறீங்க போல இருக்கு"
எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியாய் இருந்தது. அம்மாவிடம் சொன்னேன். அம்மாவின் முகத்தில் மகிழ்ச்சி இல்லை.

"இப்போ நீ எவ்ளோ பெர்செண்ட் வெச்சிருக்க..?"
"மொத செம்ல 70, ரெண்டாவது 60. மூனாவது...."
"பரவா இல்ல சொல்லு..."
"52"
"நாலு, அஞ்சு..?"
"55, 58"
"மொத்தம்..?"
"59"
"உங்களுக்கு எப்போ கம்பஸ்..?"
"7th செம் ஆரம்பத்திலேயே வந்துரும்.."
"எவ்ளோ வேணும் கம்பஸ்க்கு..?"
"60 - மினிமம். ஆனா நம்ம விட நெறைய பேர் இருந்தா அது ஜாஸ்தி கூட ஆகலாம்."
"சரி. போய் சாப்பிடு"

யோசித்து பார்த்தேன். இரண்டு தேர்விலும் 12 பாடங்கள் எழுதி உள்ளேன். இந்த முறை 8. ஏன் நான் முயற்சி செய்யக்கூடாது?

ஆறாவது செம்மில் நான் எடுத்தது 80 சகதிவிகிதம். எல்லோரும் புகழ்ந்தார்கள். என் மொத்த சகதிவிகிதம் 62.5 ஆனது.

அம்மா இப்பொழுதும் மகிழ்ச்சியாய் இல்லை.
"கம்பஸ்க்கு படிக்க ஆரம்பி."

என்னுடைய இயந்திரவியல் துறையில் நாந்தான் முதல் ஆளாக வேலைக்கு தேர்வு பெற்றேன்.இனிப்பு வாங்கி வீட்டிற்கு வந்தேன். அம்மா உறங்கிக்கொண்டிருந்தார். முதல் முறையாக அம்மா உறங்குவதை நான் பார்த்தேன்.

அம்மா என்னை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்தார்.
"நான் ஊருக்கு கிளம்புறேன்பா. செம் லீவுக்கு வீட்டுக்கு வா."

நானும் அம்மாவும் நல்ல உணவகத்தில் உணவருந்தினோம். அம்மா பேருந்தில் ஏறியவுடன், அம்மாவிடம் ஒரு மோதிரம் கொடுத்தேன்.
"என்னடா இது. யார்டயாவது கடன் வாங்கினியா..?"
"இல்லம்மா. நீ என்னைக்கு 10 ரூவா கொடுத்தியோ அன்னைக்கே நான் சிகரெட் பிடிக்கிறத நிருத்திட்டேன்மா. இது தங்கச்சிக்கு. நான் வாங்குன மொத நகை. என் தங்கச்சி கல்யாணம் என் காசில மட்டும்தான்மா நடக்கும்."

Thursday, April 30, 2009

அரசு (கதை - 6)

Share |
ஏப்ரல் 26 ஞாயிற்றுக்கிழமை மதியம், சென்னை

தொலைக்காட்சிகள் எல்லாம் அவசர செய்தி வாசித்தது.மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் சில நுண் உயிரினிங்கள் கலந்திருக்கலாம் என்றும், ஆகையால் அனைவரும் குடிநீரை ஒரு நிமிடமாவது காய்ச்சி குடிக்க வேண்டும் என்றும் சென்னை குடிநீர் வாரியம் கேட்டுக்கொண்டது. அரசு, குடிநீர் வாரியத்துடன் இணைந்து, விரைந்து செயல்பட்டு இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் என்றும் அந்த அரசு குறிப்பில் கூறப்பட்டது.

ஏப்ரல் 26 ஞாயிற்றுக்கிழமை இரவு, சென்னை

தொலைக்காட்சி, மாலை நாளிதழ்கள், வானொலி என எல்லா சாதனங்களும் இந்த தகவல் எல்லோருக்கும் சேர வேண்டும் என முனைப்புடன் செயல்பட்டது.மேலும் இந்த பிரச்சனை எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்றும் விளக்கம் கொடுத்தது.

மாநில முதல்வர் எல்லோருக்கும் விடுக்கும் வேண்டுகோள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

சென்னை குடிநீர் வாரியத்தின் தலைவர் பேட்டியும் ஒளிபரப்பானது.

கே: நான் எதற்காக தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும்?
ப: சென்னை குடிநீர் வாரியத்தின் நீர்த்தேக்கம் எண் ஆறில் நுண் உயிரினிங்கள் இருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம். ஆகையால் மக்களின் பாதுகாப்பு கருதி, தண்ணீரை காய்ச்சி குடிக்க கேட்டுக்கொள்கிறோம்.

கே: தண்ணீரை காய்ச்சி குடிப்பதால் இந்த உயிரினிங்கள் அழிக்கப்படுமா?
ப: தண்ணீரை காய்ச்சி குடிப்பதால் இந்த உயிரினிங்கள் கொல்லப்படும்.

கே: எவ்வளவு நேரம் நான் தண்ணீரை காய்ச்ச வேண்டும்?
ப: உணவுக்கு உபயோக்கிபடும் தண்ணீரையும், குடிக்கும் தண்ணீரையும் ஒரு நிமிடமாவது நன்றாக காய்ச்ச வேண்டும்.

கே: அந்த தண்ணீரில் குளிப்பது, பல் துலக்குதல் போன்றவற்றால் எதாவது பிரச்சனை ஏற்படுமா?
ப : இல்லை. தண்ணீரை உட்கொள்வதால் மட்டுமே பிரச்சனை வர வாய்ப்புள்ளது.

கே: வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் போன்றோர் ஏதாவது தனியாக செய்ய வேண்டுமா?
ப : இல்லை. தண்ணீரை காய்ச்சுவது மட்டுமே போதுமானது.

கே : இந்த நுண் உயிரினிங்கள் எப்படி இருக்கும்?
ப : இவற்றை நம் சாதரண கண்களினால் காண முடியாது. மைக்ரோஸ்கோப் எனப்படும் நுண்காட்டி வழியாக பார்த்தல் ஒரு கொண்டை ஊசி போல காணப்படும்.

கே : இவற்றை உட்கொண்டால் உண்டாகும் பாதிப்புகள் என்ன?
ப: இது வரை பாதிப்புகள் கண்டுபிடிக்க முடியவில்லை. நாங்கள் தொடர்ந்து முயற்சிக்கிறோம்.

அது ஒரு தேவையான, விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேட்டியாக தோன்றியது. மேலும் பிரச்சனையின் உக்கிரமும் புரிந்தது.
"தெரிஞ்ச பேய்நாலும் பரவா இல்ல. தெரியாத பிசாசா இருக்கே இது." மக்களின் கவலை வெளிப்பட்டது.

வீட்டில் இருப்பவர்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்கலாம். ஆனால் வெளியே அலைவோரின் நிலைமை பற்றி கேள்வி எழுந்தது.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் இன்னொரு அரசு செய்தி வெளியானது.
அரசு கனிம நீர் (mineral water) உற்பத்தியாளர்களிடம் தண்ணீர் புட்டிகளின் விலையை குறைக்க சொல்லி இருப்பதாகவும், அதற்கு அவர்கள் இது வரை விற்ற விலையில் இருந்து பாதி விலைக்கு விற்க முடிவு செய்திருப்பதாகவும் அது கூறியது.

மேலும் சில நுண்ணலை அடுப்பு(microwave oven) உற்பத்தியாளர்களும் தங்களின் விலையை குறைத்துள்ளதாக கூறினர். கலன் வாயு(Cylinder gas) பற்றி கவலை கொண்ட மக்களுக்கு இது ஒரு நல்ல மாற்றாக தோன்றியது. நுண்ணலை அடுப்பில் தண்ணீர் காய்ச்சுவது சிக்கனமானதாக தோன்றியது.

திங்கட்கிழமை காலை வெளியான அரசு செய்தி குறிப்பில், கலன் வாயுவின் விலையை குறைக்க சொல்லி மத்திய அரசுக்கு மாநில அரசு கோரிக்கை ஏற்படுத்தும் என்றும், ஏற்கனவே நிறைய மக்கள் நுண்ணலை அடுப்பு வாங்குவதால் உடனடியாக மின்சார கட்டணத்தை முடிந்தவரை அரசு குறைத்துள்ளதாகவும் வெளியானது. இந்த மின்சார கட்டண குறைப்பு பிரச்சனை முடியும் வரை தொடரும் என்றும் சொன்னது.

மக்கள் நுண்ணலை அடுப்பு வாங்கினர்.

சில இடங்களில் கடைக்காரர்கள் கனிம நீரின் விலையை குறைத்ததாக தெரியவில்லை. சில இடங்களில் விலை குறைந்து இருந்தது. சில இடங்களில் கனிம நீர் பற்றாகுறையினால் விலை அதிகமாக இருந்தது.

நுண்ணலை அடுப்பின் விலை 50 சதவீத தள்ளுபடியில் விற்பதாய் கடைகள் தெரிவித்தன. மக்கள் சரியான நேரத்தை பயன்படுத்தி கொண்டனர். நிறைய பணம் இல்லாதவர்களுக்கு, மாத தவணை திட்டம் வழங்கப்பட்டது. மக்கள் மேலும் நுண்ணலை அடுப்பு வாங்கினர்.

அடுப்பில் காய்ச்சுவதை விட, இதுவே சரியாக மக்களுக்கு தோன்றியது. கையாள்வதும் மிக சுலபமாய் இருந்தது. யாருக்கும் எந்த நோயும் ஏற்படாமல் நுண்ணலை அடுப்பு காப்பற்றியது.


சென்னை குடிநீர் வாரியம் ஒரு வார காலம் போராடி தண்ணீரில் நுண் கிருமிகள் இல்லை என கண்டுபிடித்தது.

ஏப்ரல் 26 ஞாயிற்றுக்கிழமை காலை, சென்னை மாநில முதல்வர் இல்லம்.

"தலைவரே உங்கள நம்பி நெறைய மைக்ரோவேவ் அடுப்பு இறக்கிட்டேன். சொல்லுங்க இப்போ எப்டி விக்குறது? "

"விக்குறது இருக்கட்டும். எவ்ளோ போட்ருக்க..?"
"10. எண் தம்பியோட மினரல் வாட்டர் பிசிநெஸ்ல இருந்து வந்த காசு எல்லாம். அவன் பிசிநெசும் இப்போ ரொம்ப டல்லாம். அவன்தான் மேஜர் பார்ட்னர் இப்போ வரைக்கும். இப்போ அதுக்கு வேற போட்டி வர மாதிரி சொல்றான்.

"எவ்ளோல முடிக்கலாம்..?"நீங்களே சொல்லுங்க தலைவரே."
"2 ரெண்டுக்கும் 2."

"2 ஆ..?"
"ரெண்டு கல்லுல ஒரு மாமரம் - கேள்வி பட்ருக்க..?"

"புரியலையே தலைவரே..."
"அங்க இருக்க புத்தகத்துல குடிநீர் வாரியம்-நு ஒரு நம்பர் இருக்கும், அத பார்த்து சொல்லு".

Monday, April 27, 2009

பாகிஸ்தான் மண்ணில் தலிபான்.

Share |
நான் வாழும் ஊரில் குழந்தைகள் பள்ளிக்கு செல்கிறார்கள். இன்னொரு குழந்தையோடு விளையாடுகிறார்கள். தொலைக்காட்சி, கேளிக்கைகள், விளையாட்டு சாதனங்கள், கணிப்பொறி என்று அவர்களின் உலகம் உள்ளது. மிக சிலர் தொலைந்து போகிறார்கள்.

நான் பிறந்த மண்ணில் குழந்தைகள் பள்ளிக்கு செல்கிறார்கள். இன்னொரு குழந்தையோடு விளையாடுகிறார்கள். தொலைக்காட்சி, கேளிக்கைகள், விளையாட்டு சாதனங்கள், கணிப்பொறி என்று அவர்களின் உலகம் உள்ளது. சிலர் யாரும் இல்லாதவராய் மாற்றப்படுகிறார்கள். சிலர் சீரழிக்கப்படுகிறார்கள்.

எங்களிடம் இருந்து பிரிந்த எங்கள் சகோதர நாட்டில் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடிவதில்லை. மற்றொரு குழந்தையோடு விளையாட முடிவதில்லை. அவர்களுக்கு ஒரே புத்தகம்தான் கற்பிக்கப்படுகிறது. அவர்களுள் ஒரே எண்ணம்தான் வளர்க்கப்படுகிறது. 5, 6 வயது குழந்தைகளுக்கு நாம் பொம்மை துப்பாக்கி வாங்க யோசித்துகொண்டிருக்கும் வேலையில், நிஜ துப்பாக்கிகள் அவர்களின் கையில் திணிக்கப்படுகிறது.

பெண் குழந்தைகளுக்கு கல்வியும், வெளியுலக தொடர்பும் முற்றிலும் மறுக்கப்படுகிறது. பெண்கள் ஒரு பொருட்டாக கூட மதிக்கப்படுவதில்லை.

பிற்காலத்தில் நீ என்ன செய்ய விரும்புகிறாய் என்பது மாறி, நீ எந்த குழுவில் கொலைகாரனாக இருக்க விரும்புகிறாய் என கேள்வி எழுப்பப்படுகிறது.
மக்களின் ஏழ்மை நிலையும், அதிகாரம் படைத்தோரின் வெற்று பேச்சும் அப்பாவிகளை பினக்குவியலாய் மாற்றிக்கொண்டுள்ளது.

ஓரிடம் விட்டு இன்னொரு இடத்திற்கு மக்கள் துரத்தப்படுகிறார்கள்.

இந்த காட்சிகளில் வரும் குழந்தைகளுக்கு ஏதேனும் பேராபத்து வந்துவிடுமோ என மனம் சஞ்சலம் கொள்கிறது. பேட்டி கண்ட பெண்மணியின் துணிச்சலை தாண்டி எங்கே அவர் கொல்லப்படுவாரோ என பயம் ஏற்படுகிறது.

பார்த்துணர : http://www.pbs.org/frontlineworld/stories/pakistan802/video/video_index.html
ஆசிரியர் ஷர்மீன் நேர்முகம் :
http://www.pbs.org/frontlineworld/blog/2009/04/pakistanas_tali.html

நன்றி : http://www.pbs.org/

Monday, April 20, 2009

யாழிசை ஒரு அறிமுகம்

Share |
"இயந்திர வாழ்கை நம்மை அல்லும் பகலும் ஆட்டி படைக்க ஒரே விடிவு என நான் கருதியது தமிழ் இலக்கிய வாசிப்பு...இது ஓர் இனிய இலக்கிய அனுபவ பயணம்.வாழ்வின் தேடல் குறித்து உணர செய்ய வாசிப்பு என்பது ஒரு சுகானுபவம்."

தன்னுடைய பதிவு பற்றி லேகாவின் வார்த்தைகள் இவை.

இயந்திர வாழ்க்கை மட்டுமின்றி, எவ்வயதினரும் தங்களுடைய வாழ்க்கையயை அழகாக செப்பநிடவைப்பது புத்தகங்கள். நானும் என் நண்பனும் பேசிக் கொண்டிருக்கையில், எல்லா குழந்தைகளும் பள்ளிக்கூடத்திற்கு செல்லும் வாய்ப்பு ஏற்படுகிறதோ இல்லையோ, கண்டிப்பாக நூலகத்திற்கு செல்ல வேண்டும் என நினைப்போம். அப்படி ஒரு பழக்கத்தை நம் பெற்றோர் நம்மீது திணித்தால் கூட அது தவறன்று. எல்லா தரப்பினரையும் ஏதோ ஒரு புத்தகம் நிட்சயமாய் கவரப் போவது நிட்சயமான உண்மை .

எத்தனையோ நல்ல புத்தகங்கள் நமக்கு வாய்த்திருந்தாலும், நம் முன்னோர் நல்ல புத்தகங்களை பற்றி நமக்கு சொல்லாதது ஒரு குறையே. இன்னும் சொல்லப்போனால் நம் ஒவ்வொருவரின் தந்தையும், அன்னையும் செய்ய வேண்டிய ஒரு மாபெரும் பணியை இவரது வலைப்பதிவு செய்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

ஒவ்வொரு புத்தகத்தையும் ஆழ்ந்து படித்து, அதிலுள்ள ஒவ்வொரு உணர்ச்சியையும் தன்னுள் உள் வாங்கி, மனம் எழுப்பும் கேள்விகளுக்கு விடை தேட முயற்சித்து நம்மையும் அந்த பாதைக்கு வெகு சுலபமாக அழைத்து செல்வது இவரின் 'நாவல் பற்றிய விமர்சனங்கள்'.

வெவ்வேறு தரப்பில் இருக்கும் நிறைய எழுத்தாளர்களின் புத்தகங்களை தேடி தேடிப் படித்து, நமக்கும் ஒரு நல்ல வாசிப்பை உருவாக்குகிறார். இவரின் எழுத்து நடையும் கூடிய விரைவில் இவரும் ஒரு நல்ல எழுத்தாளராக உருவாகப் போகிறார் என்பதற்கு சான்று.

அது மட்டுமன்றி நல்ல எழுத்தாளர்கள் பற்றியும் நமக்கு அறிமுகம் செய்து வைத்து நம்மையும் புத்தக உலகத்திற்கே அழைத்து செல்கிறார்.

புத்தகங்கள் மட்டுமின்றி நல்ல கட்டுரைகள், உலக திரைப்படங்கள் என இவரின் விமர்சனமும், கருத்து பகிர்வும் தொடர்கிறது.

இலக்கிய உலகத்தின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான ராமகிருஷ்ணன் அவர்களின், 2008 விருப்ப பட்டியலில், லேகாவின் வலைப்பதிவும் ஒன்று என்பது அவர் செய்யும் பணிக்கு கிடைத்த ஒரு நிறைவான அங்கீகாரம்.http://www.sramakrishnan.com/deep_story.asp?id=216&page=

நீங்கள் ஒரு பெற்றோராரக இருந்து, உங்கள் குழந்தை நாளை உங்களிடம் நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்ய சொல்லி கேட்டால், உங்களுடைய கைவிரல் காட்டும் இடம் இதுவாகத்தான் இருக்கும்:http://www.yalisai.blogspot.com/

Friday, April 17, 2009

பிஞ்சமண்டயன் (கதை - 5)

Share |
"டேய், எங்கடா நம்ம புது மாப்ள, வந்துட்டானா..?" நான் கேட்டுக்கொண்டே வீட்டினுள் நுழைந்தேன்.
"அத ஏன் மாப்ள கேட்குற.....என்னடா பிஞ்சமண்டயான்னு கேட்டதுக்கு ஒரு மாதிரி பார்வை பார்த்துட்டு ரூம்குள்ள போனான்...இன்னும் வெளிய வரல...."


பிஞ்சமண்டயன். அவனுடைய இயற்பெயர் ரவி என்றாலும், அவனை எல்லோரும் அழைப்பது இப்படிதான். எல்லோரும் நினைப்பது போல் அவன் முன் தலயில் விழுந்த வலுக்கயால்தான் இப்படி ஒரு பெயர் வந்தது அவனுக்கு. முதலில் கொஞ்சம் கோபமடைந்தாலும் நாட்கள் செல்ல செல்ல இது அவனுக்கும் சகஜமாகிபோனது.

கல்லூரி படிக்கும்போது அவனுடைய தலைமுடி நன்றாய்தான் இருந்திருக்கிறது. வேலைக்காக சென்னை வந்து மூன்றே மாதத்தில், முன் மண்டையெல்லாம் கொட்டிபோனது. பின் தலையில் ஒன்றும் பிரச்சனை இல்லை. சரி செய்ய வேண்டும் என யோசிப்பதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது.

சென்னை தண்ணீரை பற்றி யாரவது உயர்வாக பேசினால் இவனுக்கு கோபம் வரும்.

இந்த முறை அவன் ஊருக்கு போனது அவனுக்கு பெண் பார்க்க. மிகுந்த மகிழ்ச்சியோடு சென்றான். அவர்கள் வீட்டில் பெண் பார்க்க ஆரம்பித்து சுமார் 1 வருடம் ஆகிறது. வந்த வரன் எல்லாம் ஜாதகம் பொருந்தாத காரணத்தினால், திருமணம் என்பது அவனுக்கு ஒரு கனவாகவும், கவலையாகவும் போனது.

பெண் ஒன்று அமைந்துவிட்ட மகிழ்ச்சியில் எங்களுக்கெல்லாம் விருந்தளித்தான்.

விருந்தின் போது, சக தோழன் ஒருவன், "டேய் பிஞ்ச மண்டையா ...ரொம்ப சந்தோசமா இருக்குடா..." என்றான்.
"thanks da"
"ஆமா பிஞ்சமண்டயா, உனக்கே கல்யாணம்னா அப்போ எங்களுக்கெல்லாம் எவ்ளோ ஈசியா நடந்துரும்..." எல்லோரும் சிரித்தனர்.
ரவியும் சிரித்தான்.
"டேய், பில் கொடுக்கவா வேணாமா...?"
"உன்ன கல்யாணம் பண்ற அந்த பொண்ணு ரொம்ப கொடுத்துவச்சவடா...பில் நீயே கொடுத்துரு மாப்ள.."

நான் ரவியை தனியாக அழைத்தேன்.
"உன் மனசுக்கு எல்லாம் நல்லபடியாக அமையும். எண்ணம்போல் வாழ்வு. சரி சொல்றதுக்கு முன்னாடி அந்த பொண்ணுட்ட பேசி முடிவு எடு. வாழ்த்துக்கள்" என்றேன்

ரவி உண்மையிலேயே ஒரு சிறந்த மனிதன். யாருக்கு உதவி என்றாலும் முதல் ஆளாக இருப்பவன். எங்கள் எல்லோரின் அன்புக்கு உரியவன். நானும் அவனும் ஒரே கல்லூரியில் வேறு படித்ததால் எங்களுக்குள் என்றுமே ஒரு நல்ல நட்பு இருந்து வந்தது.


இப்பொழுது என்ன கோபம் அவனுக்கு. பெண் இவன் நினைத்த மாதிரி இல்லையா.
இல்லை அவள் வேறு யாரையாவது மனதில் நினைத்திருந்தாளா..?

நான் அறைக்குள் சென்றேன். நல்ல இருட்டாக இருந்தது.

"ரவி.."
தூங்குகிறான் போல. சரி பிறகு எழுப்பலாம்.
"வினோத்"

"முழிச்சிட்டுதான் இருக்கியா. பேருந்துல வந்தது அசதியா இருக்கா.."
"அதெல்லாம் இல்லடா."

உடனே நான் தொடங்க வேண்டாம் என்று நினைத்தேன்.

"நான் வேணா போய் நம்ம ரெண்டு பேருக்கும் சாப்பாடு வாங்கிட்டு வரவா"
"அதெல்லாம் வேணாம் மாப்ள."

"சரி கொஞ்சம் நேரம் கழிச்சு ரெண்டு பேருமே போலாம். அப்புறம் ஊர்ல அப்பா, அம்மாவெல்லாம் எப்படி இருக்காங்க.."
"ம்ம்...நல்லா இருக்காங்கடா"

நான் உடை மாற்றி முடித்து மின் விளக்கை எரிய வைத்தேன்.
அவன் முகம் பார்த்தேன்.

"ரவி....." அவன் முகம் கொஞ்சம் வீங்கி போயிருந்தது. அவன் படுத்திருந்த தலையணை எல்லாம் ஈரம்.

அதற்குள் என் இன்னொரு நண்பன் அறைக்குள் வர அவன் நடப்பது புரியாமல்,
"பிஞ்சமண்டயா...ஊர்ல இருந்து வந்திருக்க...திங்க எதாவது கொண்டு வந்தியா..." என்றான்.

ரவிக்கு எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்ததோ....
அவன் பக்கத்தில் கிடந்த அவன் காலணி எடுத்து நண்பன் மீது விட்டெறிந்தான்.
பதிலுக்கு நண்பன் அவன் மீது பாய போக, நான் அவனை தடுத்து வெளியேற்றினேன்.

பிரச்சனை புரிந்தது.
"என்னடா ரவி..? பொண்ணு வேணாம்னு சொல்லிருச்சா..முடினால பிரச்சனையா..."

அவன் ஒன்னும் பேசவில்லை.பச்சை குழந்தை போல் அழத்தொடங்கினான்.

அவனை சரி செய்து விஷயம் தெரிந்து கொண்டேன். இதுவரை பொருந்தாத ஜாதகம் என்று சொன்னதெல்லாம் பொய். எல்லா பெண்களும் இவன் புகைப்படம் பார்த்து இவனை நிராகரித்து உள்ளனர். வருத்தமாய் இருந்தது.

இந்த பெண்ணுக்கு வீட்டில் இவனுடைய பழைய புகைப்படம் கொடுக்கப்பட்டுள்ளது. விஷயம் தெரியாமல் சென்ற இவனுக்கு அவமானமாய் போய்விட்டது.

தொடர்ந்து அழுதான். நானும் மனரீதியாக பேசிப்பார்த்தேன். அவனை வெளியே கூட்டிச் செல்ல முயன்றேன். முடியவில்லை.

இவனிடம் தர்க்க ரீதியாகத்தான் பேச வேண்டும்.

"ரவி...நான் ஒன்னு கேட்குறேன். ஒழுங்கா பதில் சொல்லு"
"கேளு"
"உன்னோட பிரச்சினையே ஒரு உதாரணமா எடுத்துக்குவோம். இப்போ நீ ஒரு பொண்ணு பாக்குற. அந்த பொண்ணுக்கு தலையில சில இடங்கள்ல முடி இல்ல. நீ அவல ஏத்துக்குவியா..?"
"கண்டிப்பா..." உடனே பதில் வந்தது.
"கத விடாதடா.."
"இல்ல மாப்ள...நீ கேட்குறதுக்கு முன்னாடியே நான் இத பத்தி யோசிச்சேன். அப்படி ஒரு பொண்ணு வந்தா நான் ஏத்துக்குவேன். இது எனக்கு ஒரு பிரச்சனை இல்ல. மனசு ஒத்து வாழ்ரபோ இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லடா.."

அப்பா நான் ஒன்னு சொல்றேன், என்ன தப்ப எடுத்துக்காத,
அவன் முடியை சுட்டிகாட்டி, "இத பார்த்து வர்றவ இது மாதிரிதான் இருப்பா என்றேன்."
"அப்டீங்கற...."

தெரியாத பெண்களை பற்றி தவறாக பேசியதில் எனக்கு மிகுந்த வருத்தம் இருந்தாலும், இவன் இப்பொழுது கொஞ்சம் அமைதியானான்.

"சரி வா. சாப்பிட போலாம். வெளிய வேற ஒரு பஞ்சாயத்து இருக்கு..."

வெளியே வந்ததும் ரவி நண்பனிடம் மன்னிப்பு கேட்டான்.
"என்னையும் மன்னிச்சிரு மாப்ள.நீயே ஏதோ பிரச்சனைல இருக்க போல. அது தெரியாம. சரி இப்போ சொல்லு, எதாவது திங்க கொண்டு வந்தியா..."
"ஒன்னும் கொண்டு வரல. வா வெளிய போலாம். என் treat. "
"பிஞ்சமண்டயன்...பிஞ்சமண்டயந்தாண்டா .."
ரவியும் இப்பொழுது சிரித்துவிட்டான்.

சாப்பிட்டு முடித்து இரவு பேசிகொண்டிருந்தோம்.
"ரவி...கொஞ்சம் யோசிச்சு பார்க்கும்போது, நீ என் உன் முடிக்கு எதாவது பண்ண கூடாதான்னு தோணுது.."
"என்னடா பண்ண முடியும் இனிமே..?"

அடுத்த மூன்று மாதம் மூலிகை சிகிச்சையில் புகழ் பெற்ற ஒரு நிறுவனம் சென்றோம். ஒன்றும் பலனில்லை.
அடுத்த மூன்று மாதம் ஹோமியோபதி. பலனில்லை.
வெளிநாடு மருந்து. உள்ளூர் மருந்து. சுத்தமாய் பலனில்லை.

"டேய்..பிஞ்சமண்டயா....இப்படி எல்லாம் பண்ணி அந்த பொண்ண ஏமாத்தலாம்னு பாக்குறியா".
என்னை தவிர யாருக்கும் அன்று நடந்த விஷயம் தெரியாது. ரவி அவர்களிடத்தில் சொல்லவில்லை. கூடிய சீக்கிரம் திருமணம் என்று மட்டும் சொல்லிவைத்தான்.

இதற்கு நடுவேதான் ரவிக்கு இன்னொரு வரன் வந்தது. ரவி மீண்டும் பயந்தான். சரியான புகைப்படம் அனுப்பபட்டுலதா என சரி பார்த்தான்.

அந்த பெண்ணுக்கு இவனை மிகவும் பிடித்து போனது. ரவி மீண்டும் மகிழ்ச்சியின் உச்சிக்கு சென்றான்.

"மாப்ள...இது வரைக்கும் நான் பார்த்ததில இந்த மாதிரி ஒரு அழகான, அறிவான பொண்ண பாக்கலாடா."

அந்த பெண் பாண்டிச்சேரியில் வேலை செய்தாள். கிட்டத்தட்ட அந்த பெண்ணை இவன் காதலிக்க தொடங்கிவிட்டான். நல்லா படியாக நிச்சயம் முடிந்தது. திருமணம் இன்னும் ஒரு ஆறு மாதத்தில் என முடிவானது.

ஒரு முறை அவளுடைய தோழி திருமணத்திற்கு அந்த பெண் சென்னை வரவேண்டிய சூழல் வந்தது. தோழி இவனையும் அழைத்துள்ளதாக சொன்னால். இது வரை அந்த பெண்ணின் தோழிகள் இவனை பார்த்தது இல்லையாம்.

அந்த பெண்ணோடு தொலைபேசியில் இது சம்பதாமாய் உரையாடிக்கொண்டிருந்தான் .
"கண்டிப்பா வரணுமா...?"
"...."
"இல்ல லீவுதான்..."
"...."
"சரி வரேன்."
"......"
"ஹ்ம்ம்....சொல்லு. எதாவது வாங்கிட்டு வரணுமா..?"
"......"
"வேற என்ன சொல்லுமா. என்ன தயக்கம்..?"
"................."
"அப்டியா.....?!?!......சரி.....நான் முயற்சி பண்றேன்."

நான் எல்லாம் கேட்டு கொண்டிருந்தேன்.
"என்ன மாப்ள. என்ன வேணுமா அவங்களுக்கு..?"
"இந்த Hair transplant பத்தி உனக்கு ஏதும் தெரியுமா மாப்ள..?"

Tuesday, April 14, 2009

கதை - 4

Share |
வெள்ளிகிழமை எற்பாடு
என்னுடைய அடுத்த கதை இதைப்பற்றித்தான் என முடிவு செய்தேன். ஆனால் கற்பனைக்காக பொய் சொல்ல வேண்டியது வருமோ என்பதால் தொடர்ந்து எழுத முடியவில்லை. இருப்பினும் வேறு என்னதான் செய்வது..?

இந்த வாரத்தில் 5 நாளில் மொத்தமே ஒரு 20 மணிநேரம்தான் வேலை செய்திருப்பேன். விஷயம் தெரிந்தவனாக இருந்திருந்தால் நான் செய்த அதே வேலையயை 10 மணி நேரத்தில் செய்திருப்பான்.

சில நேரங்களில் உடல் கொண்டு உழைக்கும் மனிதர்களை நினைத்து பார்க்கும்போது எனக்கு வெட்கி தலை குனிய தோன்றும். ஒரு விவசாயி சுமார் 10 முதல் 12 மணி நேரம் வேலை பார்த்தால் அவரின் தினக்கூலி என்னவாய் இருக்கும்..?

கடலுக்குள் சென்று கரை மீள்வோமோ இல்லையோ என்று தெரியாமல் தவிக்கும் ஒரு மீனவனுக்கு தினம் மீன்கலாவது கிடைக்குமா..?
எல்லை காக்க தன்னுயிர் இழக்கிறானே ராணுவ வீரன் அவன் வாங்கும் குண்டுகளுக்கு ஏதேனும் விலை உண்டா..?

ஏன்..?? நான் நன்றாய் படித்தேன்...இல்லை கல்லூரி சென்றேன் என்ற ஒரே காரணத்திற்காக எனக்கு இவ்வளவு ஊதியமா..?

அவ்வளவு உதாரணங்கள் ஏன்.? எனக்கு கீழே அங்கே இந்தியாவில் பணி புரிகிறார்களே அவர்கள் கூட கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள். ஏன்..? நானே ஒரு காலத்தில் 24 மணி நேரங்கள் தாண்டியும் உழைத்துள்ளேன்.

எல்லாம் இருந்தும்...இந்த கேள்வி என்னை உறுத்துகிறது.


வெள்ளிக்கிழமை மாலை
யோசித்ததை எழுதலாம். ஆனால் வெள்ளிகிழமை மாலை பொழுதேன்பது ஏக்கங்களுக்காக எழுதப்பட்ட மாலை பொழுது. தேவையில்லாத/தேவையான கேள்விகளுக்காக பொழுது. மாலை முடிந்து இரவு எப்பொழுது வந்ததென தெரியாமல் கழியும் பொழுது. என்ன செய்தேன் என்பதை யோசிப்பதை காட்டிலும் அந்த பொழுது கழிந்தாலே போதும் என நினைப்பேன்.


வெள்ளிக்கிழமை யாமம்
ஏதோ படம் பார்த்தேன். ஏதோ படித்தேன். பொழுது கழிந்தது.


வெள்ளிகிழமை வைகறை
உறங்க சென்றேன். அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறைதான். என்ன செய்து கிழித்தேன்.?! இரண்டு நாள் விடுமுறைக்கு. நாளை சுமார் ஒரு 10 மணிக்கு எழுந்தாலும் எழுதிவிடலாம். தூங்கிப்போனேன்.ஏதேதோ கனவுகள்.


சனிக்கிழமை காலை
கணிப்பொறி துறையில் உற்பத்தி அனுசரணையாளர்களுக்கு (Production Support) வழங்கப்படும் 'விளிப்பு' கருவி (Beeper) என்னையும் விழிக்க செய்தது.

"Fourtimes SQL Job failed"

மிக சரியாக சொல்ல வேண்டுமேயானால் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் பிழை என்னை சார்ந்தது அன்று. வேறு ஒரு இலாகாவினர் பார்க்க வேண்டியது. ஆனாலும் உலகத்தில் உள்ள யாவும் ஏதோ ஒருவகையில் ஒன்றோடு ஒன்று சம்பதப்பட்டிருப்பதுபோல இந்த பிரச்சனையும் என்னோடு சம்பதபட்டிருந்தது.

அந்த இலாக்காவினரை கைபேசியில் அழைத்தேன். எல்லோருமே தூங்கி கொண்டிருந்தார்கள். இரவு வேலை செய்திருப்பார்கள் என தோன்றியது. அதுதான் இந்த பிழைக்கு காரணமாய் இருக்கலாம்.

எல்லோரும் பதறினார்கள். அந்த இலாகாவின் உயர் அதிகாரி எல்லோரையும் தொலைபேசியில் அழைத்தார். நானும் அந்த தொலைபேசி அழைப்பில் பங்கெடுக்க வேண்டிய கட்டாயம் உருவானது.


சனிக்கிழமை நண்பகல்
எல்லோரும் பேசினார்கள். என்ன பிரச்சனை என்று யூகித்தார்கள். என்னால் என் தொலைபேசியை துண்டிக்க முடியவில்லை. ஒரு வழியாக நண்பகல் 12 மணிக்கு இதுதான் பிரச்சனை என்று கண்டுபிடித்தார்கள். அவர்கள் ஒரு அரை மணி நேரத்தில் அதனை திருத்தி விட்டு என்னை அழைப்பதாக சொன்னார்கள்.

நான் நிம்மதி பெரு மூச்சுவிட்டேன். 4 மணி நேரமாய் பல் கூட துலக்காமல்......கைபேசியை மின்சாரம் வசம் ஒப்படைத்துவிட்டு காலை கடன் முடிக்க சென்றேன்.

நான் திரும்பி வரவும் என் கைபேசி அடிக்கவும் சரியாய் இருந்தது. அவர்கள் வேலை முடிந்ததாம். என் வேலையே சீக்கிரம் முடிக்க உத்தரவிட்டார்கள்.

நான் முடித்துவிட்டு அழைப்பதாய் சொன்னேன். அவர்கள் தொலைபேசியில் காத்திருப்பதாய் சொன்னார்கள். மேலும் நான் செய்கின்ற வேலையினால் வேறு ஏதேனும் பிரச்சனை இல்லை என்பதையும் அவர்கள் உறுதி படுத்த வேண்டுமாம்.

ஒரு 1 மணி நேரம். எல்லாம் முடிந்தது.

பசியில் தலை வலித்தது. ஒரு குளம்பி குடித்தால் நன்றாய் இருக்கும் என தோன்ற குளம்பி கலக்கி வந்து என் கணிப்பொறியை அணைக்க போனேன்.
ஒரு மின்னஞ்சல்:

"Doc Upload Error-Cannot Connect to DB-2147467259[Microsoft][ODBC SQL Server Driver][DBNETLIB]General network error."

ஆ.......இது வேறு பிரச்சனை. என் பிரச்சனை. புரியாத வார்த்தைகளாய் தோன்றினாலும் எனக்கு தெரிந்த பிரச்சனைதான். வழங்கி படுத்துவிட்டது. (server down). ஏன்..?

என் மேலதிகாரிக்கு தொலைபேசி முயற்சி செய்தேன். அவர் எடுப்பதாய் தெரியவில்லை.

இது சம்பதமான கணிப்பொறி உள்கட்டமைப்பு குழுவினருக்கு கூப்பிட்டேன். சனிக்கிழமை என்பதால் ஒரு அரை மணி நேரம் கழித்தே இணைக்கப்பட்டேன்.

அவர்கள் முயற்சி செய்து பார்த்து என்னை அழைப்பதாய் சொன்னார்கள்.


சனிக்கிழமை எற்பாடு
ஆறிப்போன குளம்பி குடித்து முடித்தேன். அவர்களிடம் இருந்து அழைப்பு வந்தது.

சில விபரம் அவர்களுக்கு தேவையாய் இருந்தது. எல்லாம் சொன்னேன்.கருவிக்கு வயதான காரணத்தால் அது பழுதடைந்துள்ளது என்பதே அவர்கள் கண்டறிந்த உண்மை. பழுதடைந்த கருவியை அவர்கள் இடத்தில் இருந்து அவர்களாலும் இணைக்க முடியவில்லை.

இப்பொழுது என்ன செய்ய வேண்டும். அந்த கருவி இருக்கும் அலுவலகம் செல்ல வேண்டும். இன்று விடுமுறை ஆன காரணத்தினால் அவர்களிடத்தில் பணியாளர்கள் குறைவாகவே இருந்தார்கள்.

என்னை உடனடியாக கிளம்பி அந்த அலுவலகம் போக சொன்னார்கள். அவர்கள் அங்கிருந்து சொல்ல சொல்ல நான் செய்ய வேண்டும்.
பசி இப்பொழுது அதிகமானது. அலுவலகம் கிளம்பினேன். என் வீட்டில் இருந்து 70 மைல்.

எல்லாம் முடித்து வீடு திரும்பும்பொழுது சனிக்கிழமை மாலை வந்திருந்தது. இப்பொழுது பசி இல்லை. தூக்கமும் வருவதாய் தெரியவில்லை.

திங்கட்கிழமை காலை
யோசித்ததை எழுதி முடித்தேன். பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் போனது.

Tuesday, April 7, 2009

கதை - 3

Share |
அமெரிக்காவில் வர்த்தக நெருக்கடி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

நவம்பர் 30 2008(1)
அமெரிக்கா கடந்த ஒரு வருடமாக வர்த்தக நெருக்கடியில் இருப்பதாய் அமெரிக்க தேசிய பொருளாதார ஆராய்ச்சி குழு அறிக்கை வெளியிட ஆயத்தமானது.

நவம்பர் 30 2001(1)
இதே தினம்தான் நான் பார்த்து கொண்டிருந்த கணிப்பொறி வேலையில் இருந்து நீக்கப்பட்டேன். வேலைக்கு சேர்ந்து சரியாக மூன்றாவது மாதம்.

செப்டம்பர் 11 2001(1)
இன்னுமொரு வர்த்தக நெருக்கடியை சிலர் துவக்கி வைத்த தினம்.

செப்டம்பர் 1 2001(1)
புதிய வேலை. நான் சிரமப்பட்டு படித்த படிப்பிற்கும் நான் பார்த்த பகுதி நேர வேலைகளுக்கும் பதில் கிடைத்த தினம். என் மொத்த குடும்பத்தின் மகிழ்ச்சியை நான் பகிர்ந்து கொண்ட தினம். இதுவரை நான் படிப்பிற்காக வாங்கிய கடன் எல்லாம் இனி காற்றாய் கரைந்து போகும் என கனவு கண்ட தினம்.

செப்டம்பர் 1 1999.
இன்றுதான் என் முதுகளை படிப்பு தொடங்கியது. ஒருபுறம் பிரிவு வாட்ட மறுபுறம் ஆயிரமாயிரம் கனவுகளை சுமந்து என் அமெரிக்க கல்லூரியில் காலடி எடுத்து வைத்தேன். வெவ்வேறு நாட்டினர். முற்றிலும் புதிய முகங்கள். வேறு மாதிரியான உலகம். ஆரம்பகால நட்பிற்கு இந்திய மாணவர்கள்.எல்லா கஷ்டங்களையும் போக்க ஐந்தாறு கடன் அட்டைகள்.

அமெரிக்க படிப்பிலே பாரட்டப்பட வேண்டிய ஒரு விஷயம் - பகுதி நேர வேலை வாய்ப்பு. குறிப்பாக என்னை போன்ற ஏழைகளுக்கு. கல்லூரி வளாகத்திலேயே பலருக்கும் வேலை கிடைக்கும். கிடைக்காத சிலர் வெளியில் பார்த்துக்கொள்ள வேண்டும். அந்த சிலரில் ஒருவர் ஆனதால் எனக்கு முதலில் கிடைத்த வேலை கழிவறை சுத்தம் செய்தல். மகிழ்ச்சியாய் செய்தேன். நான் வாங்கும் முதல் சம்பளம்.

பகுதி நேர வேலை வாய்ப்புகள் என் இந்திய வீட்டின் பசியையும் அவ்வபோது அடைத்தது. காசு கொடுத்து உதவிய அக்கம் பக்கத்தினருக்கும் பதில் சொல்லியது.

பகுதி நேர வேலையே இப்படியென்றால் இன்னும் இரண்டு வருடங்களில். வர போகும் வசதியை நினைத்து நினைத்து எல்லா எண்ணங்களையும் சேர்த்துவைத்தேன்.

நன்றாய் படித்தேன். படித்தவுடன் வேலையும் கிடைத்தது. கல்லூரி விட்டு வெளியே வந்த உடனேயே எங்களை கொத்திசென்றது கணிப்பொறி வேலைகள்.

செப்டம்பர் 1 2001(2)
நான் வேலைக்கு சென்ற நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை கொண்டது. நல்ல விதமான மேலதிகாரியும் அமைந்தார். நான் இருந்த ஊரில் அரசு போக்குவரத்து அவ்வளவாக இல்லாத காரணத்தினால் ஒரு வாகனம் வாங்க வேண்டியது கட்டாயமானது. என் மேலதிகாரியின் வற்புறுத்தலில் ஒரு புதிய வாகனமும் வாங்கினேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நான் கண்ட கனவுகள் நினைவுகளாய் மாற துவங்கியது.

மதிய உணவை பெரும்பாலும் என் அலுவலக சிற்றுண்டியில்தான் அருந்தினேன். அதற்கு இரு காரணம். 1. இங்கு அமெரிக்க உணவுகள் மட்டுமே சமைக்கப்படும். இது வரை நான் அமெரிக்க உணவை ஓரிரு கல்லூரி விருந்துகளை தவிர்த்து உண்டது இல்லை. ஆகையால் சனி, ஞாயிறு தவிற எல்லா நாட்களும் இங்குதான். 2. அங்குதான் எனக்கு ஒரு நண்பர் கிடைத்தார் - சாம் - கறுப்பின நண்பர் - அங்கு அமெரிக்க உணவு வகைகளை சமையல் செய்பவர். அவருக்கு இந்தியா பற்றி தெரிந்து கொள்வதில் அவ்வளவு ஆர்வம். சில நேரம் எனக்கு தெரியாத இந்தியா விசயங்களை கூட சொல்வார்.

செப்டம்பர் 11 2001(2)
உலகமே ஸ்தம்பித தினம். எங்கள் நிறுவனம் பெரிதாய் ஒன்றும் பாதிக்கப்படவில்லை என்பது கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது.
நான் சாமிடம் தினம் கேட்கும் விஷயம், எனக்காக ஒரு முறை அவர் சாதம் சமைத்து தர வேண்டும் என்பதுதான். அங்கு அமெரிக்க உணவு வகைகள் மட்டுமே செய்வதால் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
நாட்கள் நகர்ந்தன. எல்லா நிறுவன பங்கு தொகைகளும் பாதாளத்திற்கு போயின. எங்கள் நிறுவனத்திலும் மாறுதல்கள் உண்டாயின.

நவம்பர் 30 2001(2)
காலை வந்த உடனே என் மேலதிகாரியிடம் இருந்து ஒரு மின்னஞ்சல்.

கடைசியாய் ஒரு முறை சாமை பார்க்க வந்தேன். சாமிற்கு விஷயம் தெரிந்திருந்தது. எனக்காக சாதம் செய்திருந்தார். என்னால்தான் உணவருந்த முடியவில்லை.

என்ன செய்வேன்???? என் நிறுவனமே இப்படி என்றால் இனி எந்த நிறுவனம் என்னை போன்ற பலரை வேலைக்கு அமர்த்தும். பகுதி நேர வேலை கூட இனி கிடைக்குமா என்பது சந்தேகம்.

வந்த மூன்று மாத சம்பளமும் என் கடன் அட்டைகளை அடைக்கவே சரியாய் போனது.

எப்படி என் இளங்கலை பட்ட கடன் அடிப்பேன். முதுகளை..? வந்த நாள் முதல் வீட்டிற்கு பணம் கொடுத்தேனே. இப்பொழுது எங்கே போவேன்..? எப்படி அவர்களிடத்தில் புரிய வைப்பேன். எனை நம்பி என் தங்கை திருமணம்.

மயக்கம் வந்தாற்போல் இருந்தது. சாம் என் பக்கத்திலேயே உட்கார்ந்து இருந்தார். சாமை போய் சமையலை கவனிக்குமாறு சொன்னேன். இன்னும் நேரம் இருக்கிறது என்றார். காலையிலே வேலை போனதால் நாந்தான் சீக்கிரம் வந்துள்ளேன்.
"இன்னும் நேரம் இருக்கிறது."

"சாம்.....எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா..?"
"என்ன வேண்டும்? கேள்..."

"உங்கள் அடுக்களையில் என்னை ஒரு அரை மணி நேரம் அனுமதிப்பீரா..?"
"ஏன்.? உனக்கு என்ன வேண்டும்...? நான் செய்கிறேன்.."

"இல்லை. என்னை அனுமதிப்பீரா....ஒரு அரை மணி நேரத்தில் வருகிறேன்."
சாம் என்னை கூப்பிட கூப்பிட அங்கிருந்து கிளம்பினேன்.

திரும்பி வந்த நான் நேராக சாமின் அடுக்களையில் நுழைந்தேன். அடுத்த இரண்டு தினங்களுக்காக எனக்காக ஊற வைத்திருந்த சுண்டலை கையோடு எடுத்து வந்தேன். கூடவே பூண்டு, சீரகம், மஞ்சள் பொடி, கொஞ்சம் கொத்தமல்லி, இஞ்சி, கரம் மசாலா மற்றும் சில பச்சை மிளகாய்கள்.

"என்ன செய்கிறாய் நீ..? என்ன இதெல்லாம்.."
"சாம். கவலைப்படதீர்கள். எனக்கான இந்த உதவியை மட்டும் செய்யுங்கள்."

"எனக்கு ஒன்றும் புரியவில்லை. மற்றவர்கள் பற்றி எனக்கு கவலை இல்லை. அனால் நீ என்ன செய்கிறாய் என்று சொன்னால் நன்றாய் இருக்கும்"
"சொல்கிறேன். இந்த சுண்டலை கொஞ்சம் வேக வைப்பீர்களா..?"

நான் வெங்காயம், தக்காளி, மற்றும் பூண்டு நறுக்கி தனியாக வைத்தேன். இன்னுமொரு சிறிய கூஜாவில் பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி வைத்தேன். இன்னொரு கூஜாவில் இஞ்சி நறுக்கி வைத்தேன்.

20 நிமிடத்தில் சாம் சுண்டல் வேக வைத்து கொடுத்தார். ஒரு பாத்திரம் வாங்கி முதலில் வெங்காயம், பூண்டு எண்ணையில் போட்டு வதக்கினேன். வெங்காயத்தின் நிறம் மாறிய பின் கொத்தமல்லி, சீரகம் மற்றும் மஞ்சள் பொடி சேர்த்தேன். இரண்டொரு நொடியில் தக்காளி சேர்த்தேன்.

தக்காளி கொஞ்சம் நிறம் மாறிய பின் வேக வைத்த சுண்டலை சேர்த்தேன். தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு, கரம் மசாலா, கொஞ்சம் எலுமிச்சை சாறு ஊற்றி ஒரு பத்து நிமிடங்கள் சமைத்தேன்.

"சாம்....கொஞ்சம் ருசி பாருங்கள். காரம் தேவைபட்டால் இந்த பச்சை மிளகாயையும், இஞ்சியையும் சேர்த்து கொள்ளுங்கள்..."
சாம் ருசி பார்த்தார். அவர் கண்களிலேயே சுவை தெரிந்தது.

"எனக்காகவா இவ்வளவும் செய்தாய்..?"
"சாம்...நான் உங்களிடம் ஒரு உதவி கேட்டேனே.."
"?!"

இந்த உணவை மற்ற உணவோடு பரிமாற ஒரு வழியாக சாமை சம்மதிக்க வைத்தேன். எனக்காக அவர் சமைத்த சாதமும் அங்கு வைக்கப்பட்டது.

"சாம். எல்லோரும் சாப்பிட வர இன்னும் எவ்வளவு நேரம் உள்ளது.?"
"ஏன்..?"

கீழே கிடந்த சில அட்டைகள் எடுத்தேன். அதற்கு மேல் வெள்ளை தாள் ஒட்டி "இன்றைய சிறப்பு உணவு - இந்திய சன்னா மசாலா" என எழுதி வைத்தேன்.
நிறைய கேள்விகள் சாமிடம். முக்கியமான கேள்வி - இது தினம் கிடைக்குமா.?

சாம் என்னை உணவக நிறுவனரிடம் அழைத்து சென்றார். எத்தனை தினங்களுக்கு இந்த வேலை உனக்கு வேண்டும் என்றார்.

"நான் இங்கேயே இன்னொரு உணவகம் ஆரம்பிக்கும்வரை. கவலை கொள்ளாதீர்கள். இந்த நிதி நெருக்கடி முடிந்து இங்கே நிறைய இந்தியர்கள் வருவார்கள். இன்னொரு நிதி நெருக்கடி வரும்போது கூட நம்மால் சமாளிக்க முடியும்.."

நான் மாணவனாக விடுபட்டு 3 மாதங்களே ஆன காரணத்தால் அப்பொழுது விசா பிரச்சனை ஏற்படவில்லை. ஒரு வருடத்தில் அவரே எனக்கான விசா ஏற்பாடு செய்தார்.

எட்டு வருடங்கள். எல்லா கடனையும் அடைத்து எனக்கான ஒரு வீடும் இந்தியாவில் வாங்கிவிட்டேன். இடையே என் தங்கையின் திருமணமும் என் திருமணமும் முடிந்து நானும் என் மனைவியும் எங்கள் புதிய உணவகத்தை பார்த்துகொள்கிறோம். என் அனைத்து மகிழ்ச்சியான தருணத்திலும் சாம் என்னுடன் சேர்ந்து இருந்தார். என் திருமணம் போது அவருக்கு என்னுடன் இந்தியா வந்ததில் பெரு மகிழ்ச்சி. தன் கடைசி காலங்களை அங்குதான் கழிப்பேன் என்று உறுதி பூண்டார். அவர் இந்தியாவில்தான் இறைவனை உணர்ந்தாராம்.

நவம்பர் 30 2008(2)
இந்த முறை ஏற்பட்ட வர்த்தக நெருக்கடியில் எங்கள் நிறுவனமே மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. என் பழைய உணவக நிறுவனரிடம்தான் சாம் இன்று வரை வேலை செய்தார்.

நான் போகும்போது சாம் யாருடனோ பேசிகொண்டிருந்தார். என்னை பார்த்ததும்,"இவனும் உன்னை போல்தான். வந்த 3 மாதங்களில் வேலை போனது."

"சாம்.....கிளம்புவோமா...?" என்று கேட்டுக்கொண்டே அவனை உற்று நோக்கினேன்.
"இன்னும் நேரம் இருக்கிறது" என்றார்.
அவன் தனக்குள் "இன்னும் நேரம் இருக்கிறது" என்று முனுமுனுத்தான்.

Thursday, April 2, 2009

பதிவு தலைப்பு - ஒரு சிறு விளக்கம்

Share |
என்னுடைய பதிவு தலைப்பை பற்றி நிறைய பேர் கேட்டிருந்தார்கள். அதற்கான அர்த்தம் என்ன, இதன் மூலம் நான் ஏதேனும் சொல்ல வருகிறேனா, இது ஏதேனும் சங்க பாடலா...இது போன்ற கேள்விகள்.

யாயும் யாயும் யாரகியரோ (ஆங்கிலம் மற்றும் தமிழ்) என்பதை வலையில் தேடியிருந்தால் நான் சொல்லும் விளக்கத்தை விட வேறு சிறப்பான விளக்கங்கள் கிடைத்திருக்கக்கூடும். எனினும் இதன் விளக்கத்தை கூறுவது எனது கடமையாகிறது.

முதலில் பாடல்:
யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.
(குறுந்தொகைப் பாடல் எண் நாற்பது. ஆசிரியர் செம்புலப்பெயனீரார்.)

இது குறுந்தொகை பாடல் என்றும், இதன் ஆசிரியர் பெயர் அறியபடாத காரணத்தினாலும், அவர் பாடலில் உபயோகித்திருக்கும் (4 வது வரி) 'செம்புலப் பெயல்நீர்' அவருடைய பெயராக உருவாகியுள்ளது.

விளக்கம்:
பாடல் விளக்குவதற்கு முன்....சில வரிகளை பார்த்த உடனையே நம் மனது, "ஓ....தூய தமிழா, அப்ப நமக்கு புரியாது" என நினைக்கிறது. அதனை தயவு செய்து உடையுங்கள். இந்த பாடலையே கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

யாயும் யாயும்.... (இன்றும் நம் ஊர்களில் அன்னையை நாம் 'ஆயி' என்று அழைப்போம்).
யாராகியரோ (நான் விளக்க வேண்டுமா..?)
எந்தையும் (எந்தயிலே ஒரு தந்தை வந்தாரா..)
கேளிர் ( இதற்கு அர்த்தம் தேவைப்படலாம் - கேளிர் - உறவு கொண்டவர்)
யானும் நீயும் (உங்களுக்கு புரியும்)....
செம்புலம் (சிவந்த நிலம்)பெயல்நீர் (மழை நீர்)
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே (உங்களுக்கு பாடல் புரிந்துவிட்டது..)

"என் தாயும் உன் தாயும் எவ்விதத்திலும் அறிந்தவர் இல்லை. என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவு கொண்டாருமிலர். நானும் நீயும் இதுவரைகாலம் ஒருவரை யொருவர் முன்னறிமுகம் எனவும் ஆயிலேம், எனினும் என்ன வியப்பு, நம் இருவருடைய இதயங்களும் சிவந்த நிலத்தில் பெய்த மழைநீர் எங்ஙனம் உருமாறி பிரித்தறிய வொண்ணாதபடி, மண்ணின் தன்மையை அடைந்து விடுமோ அதுபோல ஒன்று கலந்து விட்டன"
(மூலம் : திண்ணை.காம்)

இது தலைவன் ஒருவன் தன் காதலை தலைவியிடம் சொல்வதுபோல் பெரும்பாலும் அறியப்பட்டுள்ளது.

நான் "அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே" என்பதை "அன்பு கொண்ட எல்லா நெஞ்சங்களும் ஒன்றாய் கலக்கும்" எனவே பார்க்கிறேன்.
எல்லோர் நெஞ்சிலும் கண்டிப்பாய் இருப்பது அன்பு ஒன்றே. காதல் ஒருவரிடம் மட்டும்தான் செய்ய முடியும். அன்பை எல்லோரிடமும் பகிரலாம். அன்பு செய்யுங்கள்.
"அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்...."

பி.கு : ஏதேனும் பிழையிருந்தால் சுட்டிகாட்டவும். நன்றி.

Wednesday, April 1, 2009

கதை - 2

Share |
எங்களின் அலுவலகம் வேறு ஒரு இடத்திற்கு மாற்றப்படுவதாய் அறிவிப்பு வந்தது. இப்பொழுது இருக்கும் அலுவலகத்தில் இருந்து 13 மைல் தூரம்.

நான் மைல் கணக்கு சொல்லும்பொழுது உங்களுக்கு ஏதேனும் தோன்றினால் நீங்கள் இந்திய வாசகராய் இருத்தல் வேண்டும். அமெரிக்க வாசகர்களுக்கு ஒன்றும் தோன்றாது.

இது குளிர் காலம் வேறு. அமெரிக்க குளிரை நீங்கள் நேரில் பார்க்க வேண்டும். அது வரை உங்களால் நிட்சயம் நம்ப முடியாது.முதல் முறை நான் பனி பார்த்தபோது மிக அதிசயமாய் இருந்தது. இது சாத்தியமா என கூட தோன்றியது.
இந்திய நண்பன் ஒருவன் டார்ஜீலிங்-ல இல்லாத பனியா..? என்றான்.
என் அறை நண்பன் , "டேய் ...இத என்னத்த வேடிக்க பாக்குற ..." என்றான். இது உண்மை எனும்போது "குளிர் கொடுமை" உண்மையாகத்தான் இருக்க வேண்டும்.

அமெரிக்கா வந்த உடனே எல்லோரும் செய்யும் முதல் வேலை ஒரு மகிழுந்து (தேவநேய பாவாணர் தமிழ்) வாங்குவதுதான்.

"நம்ம ஊர் மாதிரி இல்ல, இங்க வண்டி ஓட்றது ரொம்ப ஈசிடா...."

"ஊர்ல டூவீலர் ஓட்டுவியா...?"

"இங்க கியர் கிடையாது தெரியும்ல..."

"வண்டி இல்லாம ஒன்னும் பண்ண முடியாது..."

"இங்க அரசு பேருந்தெல்லாம் கிடையாது. இதெல்லாம் அமெரிக்கா அரசியல்.....எல்லோரும் கார் வாங்கனும்னு செஞ்ச சூழ்ச்சி. கார் வித்தாதான் பெட்ரோல் விக்க முடியும். பல பெட்ரோல் கிணத்துக்கு சொந்தகாரங்க இந்த ஊர் அரசியல்வாதிங்க..." இதென்ன பெட்டி செய்தியா..?!

என்னை மகிழுந்து ஓட்ட வைக்க நண்பர்கள் எடுத்த முயற்சி எல்லாமே தோற்றுபோனது, அமெரிக்க அரசியல் உட்பட.

நல்ல விதமாக என்னுடைய வீடு என் அலுவலகத்தின் பக்கத்தில் இருந்ததால் அவர்களை பார்த்து நான் ஏளனம் செய்ததுதான் அதிகம்.

"டேய்.....எந்த பணக்கரானவது மகிழுந்து ஓட்டுவானா...?"
ஒன்றும் புரியாத நண்பன், "டிரைவர் வெச்சிருப்பாங்க அவங்கெல்லாம்.."

"பாரு..இப்பவே ஒரு பயபுள்ள தயாரா இருக்கான்.."
"பேசு மகனே...பேசு...ஒரு நாள் நீ கார் ஓட்ட வேண்டிய கட்டாயம் வரும்...அன்னைக்கு யார் மேலயாவது மோதி 'மாப்ள என்ன காப்பதுங்கடான்னு பொலம்புவ...அன்னைக்கு தெரியும்.." புரிந்தவன் சாபமிட்டான்.

"இவனுக்கு யாராவது பழரசம் கொடுங்கப்பா...கஷ்டப்பட்டு வசனம் பேசிருக்கான்"


நண்பர்கள் விட்ட சாபம் இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை. நான் மட்டுமே தூரமான அலுவலகத்திற்கு மாற்றபட்டேன். 13 மைல்.

ஒரு வழியாக நானும் ஓட்ட கற்றுக்கொண்டு (மூன்று முறை கூடுதல் சிறப்பு பயிற்சு பெற்று) ஒரு மகிழுந்தும் வாங்கினேன். என் முன்னை போல் இருவர் வேறு என்னுடன் சேர்ந்துகொண்டார்கள். அவர்கள் இப்பொழுதுதான் கற்றுகொள்கிரார்களாம்.

"என்னையும் இந்த உலகம் நம்புதே..."

நீண்ட தூரம் செல்ல வேண்டி இருப்பதால் நான் சீக்கிரமே கிளம்பினேன். இருவரில் ஒருவரும் சீக்கிரம் கிளம்பி இருந்தார். இன்னொருவரை தொலைபேசியில் அழைத்தால், "பாஸ், சுத்தமா மறந்துட்டேன்....ஒரு 2 மினிட்ஸ் கொடுங்க..."

2 நிமிடம் 20 நிமிடம் ஆனது.
"மொத தடவ வண்டி ஓட்டறேன். கொஞ்சம் மெல்ல ஓட்டலாம்-நு நெனச்சேன். இப்பவே நேரமாயிடுச்சு..."
வண்டி கிளம்பியது. "கோச்சுகாதீங்க பாஸ். உங்களுக்காக நல்ல பாட்டு போடறேன் என் i-pod வழியா..."

நான் ஒன்றும் சொல்லவில்லை. வண்டியின் பாட்டு கருவியை ஏதோ செய்து கொண்டிருந்தார்.


நான் சென்ற பாதை தோறும் சிகப்பு விளக்கு குறிப்புகள் வேறு. வேகமாக போகவும் கொஞ்சம் பயம் இருந்தது. அவர் தொடர்ந்து ஏதோ செய்து கொண்டிருந்தார். "யோவ் என்னையா பண்ற..?"
திடீர் என பாட்டு அதிர.... நான் என் முன் சென்ற வண்டியை மோதிவிட்டேன். முன்னே சென்ற வண்டி சரியாக குறிப்பின் கீழ் போய் நின்றது.
"பாஸ்....என்ன பண்ணிடீங்க..."

என்ன செய்தேன் என புரியவில்லை. வண்டியின் நிறுத்த கருவி இயங்கவில்லை எனதான் முதலில் நினைத்தேன்.

அதற்குள் முன் இருந்தவர் இறங்கி வந்தார். தன் வண்டிக்கான சேதம் பார்த்தார். அவரின் கோபம் அவர் கண்களில் தெரிந்தது.

நான் இறங்கி முதலில் மன்னிப்பு கேட்டேன். அவர் என்னை மதிப்பதாய் தெரியவில்லை.

நான் என் நண்பனை கூப்பிட்டேன். "யாருக்கும் எதாவது அடிபட்டுச்சா..?""இல்லடா அவங்க வண்டிக்கும் என் வண்டிக்கும்தான் சேதம்.."

நண்பன் குபீர் என சிரித்தான். "மாப்ள எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா...? நான் விட்ட சாபம் பார்த்தியா..?"
"டேய்...அத பேச இதுவா நேரம்..."
"இப்பதாண்டா பேசணும்..உன்ன மாதிரி ஆளுங்கல்ட.."
"டேய்...என்ன பண்ணனும்னு சொல்டா..."

அதற்குள் இன்னொருவன் கைபேசியை பிடுங்கி,"அவனே சீரியஸா கேட்டுட்டு இருக்கான்..அவன்ட்ட போய்...""டேய் ..911 கால் பண்ணு. மாமா வந்து உன்ன அரஸ்ட் பண்ணுவார். வண்டிய சீஸ் பண்ணுவார்" என சொல்லி சிரிக்க ஆரம்பித்தான்.
"டேய்..என்னடா சொல்ற..?""ஆமாண்டா லைசென்ஸ் இப்பதான் வாங்கி இருக்க....கண்டிப்பா attempt murder கேஸ்தான்."

ஒரு வழியாக என்ன செய்ய வேண்டும் என புரிந்து முடிப்பதற்குள் அவரே காவல் துறையை அழைத்திருந்தார். நண்பர்கள் சொல்லிய மற்றவை விளையாட்டாக இருந்தால் கூட செய்த தவறுக்கு கண்டிப்பாக அபராத தொகை கட்டவேண்டிவரும். வந்த காவலர் நமக்கு வழங்கும் புள்ளியை வைத்து அது முடிவாகுமாம். மேலும் நான் இடித்த அந்த வண்டிக்கும் நான்தான் செலவு செய்ய வேண்டும்.

காவலர் வந்தார். பக்கத்தில் இருந்தவர் கீழே இறங்க போனார். "யோவ். எங்க போற..?"

"இல்ல போலீஸ் வர்றார். மரியாத இல்லாம உட்கார்ந்துகிட்டு..."
"சீ...உட்கார்ந்து இருக்கை வார் போடு.."

"வந்துட்டார்யா map போட" இது இன்னொருவர்.
திரும்பி ஒரு முறை முறைத்தேன்.அபராத தொகையை இவர்கள் தலையிலும் கட்ட வேண்டும் என முடிவு செய்தேன்.அது கூட பரவா இல்லை. புதிதாக வண்டி ஓட்டுபவன் என்பதால் வேறு ஏதேனும் பிரச்சனை வருமா..? உரிமம் ஏதேனும் ரத்தானால் என்ன செய்வது..? கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.

வந்த காவலர் முதலில் யாருக்கேனும் காயம் உள்ளதா என வினவினார். பின்பு அந்த வண்டிகாரரையும் வினவிமுடித்து...வண்டியை கொஞ்சம் ஓரமாக நிறுத்த சொன்னார்.

விசாரணை தொடங்கியது.
"முன்னே சென்ற வண்டிக்கும் என் வண்டிக்குமான தூரம் திடீர் என குறைந்தது. நான் மோதிவிட்டேன்."
"நீங்கள் மோதும்போது சிக்னல் என்ன நிறத்தில் இருந்தது..?"

"சிகப்பு..இல்லை பச்சை இல்லை...மஞ்சள்.." என்ன விளக்கு என்பது எனக்கு உண்மையில் நினைவில்லை.
"மஞ்சள்?"
"ஆம்"

இதே போல் அங்கும் விசாரணை நடந்தது. மீண்டும் காவலர் வந்தார். தன் அட்டையை வழங்கி இன்னும் இரண்டொரு நாளில் வந்து அறிக்கை பெற்று கொள்ள சொன்னார். மேலும் குற்றம் செய்தது அவர் என்பதால் எங்களை மன்னிப்பதாகவும் சொன்னார்.

என்னது..?!

அவரிடம் விசாரிக்கும்போது, அந்த வண்டி ஓட்டுனர் விளக்கின் நிறம் பட்சையாய் இருந்தது என கூறி உள்ளார். அதற்கு காவலர் பட்சையாய் இருக்கும்பொழுது வண்டியை நிறுத்தியது உங்கள் குற்றம். நீங்கள் நிறுத்தியதால் பின்னால் வந்த வண்டிக்கு ஆபத்து விளைவித்து இருக்கிறீர்கள் என அவருக்கு அபராத தொகை கட்ட சொல்லிவிட்டாராம்.

எனக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. கைபேசியை எடுத்தேன்.
"மாப்ள....உரிமம் ரத்தாயிடுச்சு ..."
"லைசென்ஸ-அயே கான்செல் பண்ணிட்டாங்களா..? இது கொஞ்சம் ஜாச்திதாண்டா..."

"இல்லடா தப்பு நாந்தான் பண்ணேன்-நு காவலர் கண்டுபிடிச்சிட்டார். ரொம்ப கஷ்டமா இருக்குடா. உங்கள எல்லாம் எவ்ளோ கிண்டல் பண்ணி இருப்பேன். என்ன மன்னிசிருங்கடா."
"டேய்....சீ சீ... நீயே லைசென்ஸ் இல்லாம....இதெல்லாம் ஏன் இப்போ பேசுற.."

"மாப்ள...ஒரு .சின்ன உதவி ...நான் வண்டி ஓட்டகூடாதிள்ள . கொஞ்சம் இங்க வரீங்களா..?"

காவலர் வந்தார். 'What are you waiting for" (எதற்கு காத்திருக்கிறாய்...?)
"I am waiting for my drivers, sir" (நான் என் ஓட்டுனர்களுக்காக காத்திருக்கிறேன்)
"Drivers...!!You must be a rich guy" (ஓட்டுனர்கள்..!! நீ ஒரு பணக்காரனாய் இருத்தல் வேண்டும்).