Tuesday, December 29, 2015

சகாயம், இளைஞர் அரசியல், சட்டமன்ற தேர்தல் இன்ன பிற

Share |
மு.கு : பல நாட்களுக்கு முன் எழுத நினைத்த பதிவு இது. நேரமின்மையால் எழுத முடியவில்லை.

பொறுப்பு துறப்பு  : இந்த கட்டுரை சிலருக்கு - அரசியலுக்கு புதிதான சிலருக்கு - சோர்வடையவைப்பதாகவும், சிலருக்கு நடைமுறையை உணர்த்தும் யதார்த்த பதிவாகவும் தெரியலாம்.

இளைஞர்களால் நிகழ்த்தப்பட்ட 2 அரசியல் முன்னெடுப்பு கூட்டங்களுக்கு செல்லும் வாய்ப்பு அமைந்தது. முதலில் மிகப் பெரிய வாழ்த்துக்கள் அவர்களுக்கு. தீய அரசியலுக்கு மாற்று நல்ல அரசியலே என்ற உணர்வு வரவேற்கக்கூடிய ஒன்று. போற்றுதலுக்குரியது.

அரசியலுக்கு வரும் பலரும் இந்த சமயத்தில் வர 2 முக்கிய காரணிகள். 1) பேரிடரில் அரசின் மீதான கோபம். 2) அந்த பேரிடர் ஏற்படுத்தியிருக்கும் அரசியல் வெற்றிடம் - அதற்கு தோதாக சட்டமன்ற தேர்தல்.

முதலில் நல்லவங்க எல்லோரும் ஒன்னு சேர முடியாதா? என்கிற கேள்வி பல வருடங்களாக கேட்டுக்கொண்டே இருக்கும் ஒன்றுதான். புதியவர்களுக்கு இது புது கேள்வி. அவ்வளவுதான். அதற்கான முயற்சிகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதா என்றால் அதற்கும் பதில் ஆம் என்பதே. சமீபத்திய உதாரணம் என்றால் அய்யா எஸ்.எம். அரசு அவர்களின் முயற்சியில் 'மக்கள் நல்வாழ்வு இணையம்' 2014 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டதை சொல்லலாம்.

இது போன்ற முயற்சிகளில் வரும் சவால்கள் என்ன?

1) கொள்கை - அட என்ன சார் நீங்க, யாருகிட்ட கொள்கை இருக்கு, காம்ரேடுகளே அவுங்க கொள்கைய பலர்ட்ட அடமானம் வெச்ச பிறகு என்ன கொள்கை வெங்காயம்?

கொள்கை குறித்த இன்று விவாதங்கள் கிடையாது என்பது உண்மைதான். எல்லோரும் தொங்கும் தே.மு.தி.கவிடம் என்ன கொள்கை உள்ளது. மக்கள் நல கூட்டணியில் உள்ளவர்கள் கம்யூனிச கொள்கைகளை ஏற்றுக்கொண்டார்கள் என்று சொல்ல முடியுமா?

சரி கொள்கை என்று சொல்ல வேண்டாம். சில பிரச்சனைகளுக்கான தீர்வு வேண்டாமா? பின் எதனை இந்த புதிய இயக்கங்கள் தங்களின் தேர்தல் பிரச்சாரமாக முன்னிறுத்தும். கூடங்குளத்தையும், ஈழத்தையும் தொடாமல் போக முடியுமா? மதுக்கொள்கையில் பூரண மதுவிலக்குதான் வேண்டும் என்று எல்லோரும் ஏற்றுக்கொள்வார்களா இல்லை அது எங்கும் தோல்வியானதால் மது கட்டுப்பாடு போதும் என்று சொல்வார்களா?

அதெல்லாம் எதுமே தேவையில்லை சார் - ஊழல ஒழிச்சா போதும் என்று ஒற்றை வரிதான் கொள்கை என்றால் - அதனை சேவை பெறும் உரிமை சட்டம், லோக்அயுக்தா போன்ற அமைப்பு ரீதியான மாற்றங்கள் கொண்டு செய்வார்களா இல்லை லஞ்சம் என்பது தனி மனித பிரச்சனை என்று பரைசாற்றுவார்களா?

2) கட்டமைப்பு - திமுக், அதிமுகவின் கோட்டையை இன்று வரை உடைக்க முடியாத காரணம் - இந்த கட்டமைப்பு. விஜயகாந்த துப்பினாலும் 'என் மேலே படலியே' என்று பல தலைவர்களும் அவர் பின் செல்ல முக்கிய காரணம் தே.மு.தி.கவின் கட்டமைப்பு. (சில இடங்களில் திமுக, அதிமுகவை விட தே.மு.திகவின் கட்டமைப்பு ஆச்சர்யப்படுத்தும்).

இந்த கட்டமைப்பு என்பது சில நாட்களோ இல்லை சில மாதங்களிலோ உருவான ஒன்றல்ல. பல வருடங்கள்.

இல்லை கட்டமைப்பு எல்லாம் வேண்டாம் - அதற்கு மாற்று 'கூட்டமைப்பு' என்று சொல்வது வார்த்தை ஜாலத்திற்கு ஒத்துவருமே தவிர பூத் முகவர், ஓட்டு எண்ணும் முகவர் என்ற கட்டம் வரும்போது மூச்சு முட்டிப்போகும். அவ்வளவு ஏன்? வார நாளில் உங்களுடன் பிரச்சாரம் செய்ய பலர் கூட வருவதற்கே நீங்கள் பிரயத்தனப்பட வேண்டியிருக்கும்.

3) ஈகோ - ஆயிரம் குற்றங்கள் வைத்தாலும், இப்பொழுது இருக்கும் கட்சிகளுக்கு (எல்லா கட்சிகளும் இல்லை) இருக்கும் நற்பண்பு - தலைமை சொல்வது சரியோ, தவறோ அதனை செய்து முடிக்கும் 'கீழ்ப்படிதல்'.

ஆனால் புதிய இயக்கங்கள், கட்சிகள் 'ஈகோ கூடாது, ஈகோ கூடாது' என்று எவ்வளவு சொன்னாலும், அதை விட்டு அவர்களுக்குள்ளே ட்விஸ்ட் ஆகும் போக்குதான் இன்றுவரை உள்ளது.

4) ஊடக ஆதரவு - இதனை நான் சொல்லத்தேவையில்லை. டெல்லியில் ஆம் ஆத்மி வெற்றி பெற ஒரு முக்கிய காரணியாக ஊடகம் இருந்தது. 'நிர்பயா' போராட்டம் வலுப் பெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட மகத்தான பங்கு வகித்தது. இங்கு? எந்த ஒரு ஊடகமும் இளைஞர்களை, புதியவர்களை ஆதரிக்க முன் வராது. அதற்கான காரணமும் வெளிப்படை. சமூக வளைத்தளம் கொண்டு பல மக்களை சென்றடையலாம். ஆனால் சமூக வலைத்தளம் இல்லாதவர்களை?

எல்லாவற்றையும் தாண்டி இன்று களத்திற்கு வரும் பலர் - தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்பவர் - 'நாம நின்னா நம்ம பக்கத்து வீட்டுக்காரர் ஓட்டுப்போடுவாரா? இது வரைக்கும் நம்ம தொகுதிக்கு (நீங்கள் பல சமுதாய வேலைகள் செய்தவராய் இருக்கலாம்) என்ன செய்துள்ளோம்' என யோசியுங்கள்

அப்போ நாங்க என்னதான் செய்றது?

Start with Small - சின்னதில் இருந்து துவங்குங்கள். நடிச்சா ஹூரோதான் என்ற போக்கை விட்டு, அமெரிக்க மாப்பிள்ளை, ஹீரோவின் நண்பன் என்ற கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர் போன்ற இடங்களுக்கான வெற்றி பெறுவதற்கான பணியை இப்பொழுதே துவக்குங்கள் - இன்னும் சரியாக 10 மாதம் உள்ளது. சுமார் லட்சக்கணக்கான பதவிகள் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ளது. மறுபடியும் சொல்கிறேன் - பணியை இப்பொழுதே துவக்குங்கள் - அதுவே உங்கள் மூலதனம்.

அப்போ சட்டமன்றம் ?

இன்னும் 5 வருடம் சிக்கி, சீரழிந்து சின்னாபின்னாமாக போகட்டும். நம் ஊரில் செயற்கை பேரிடர்களுக்கும், பிரச்சனைகளுக்கும் பஞ்சமா என்ன?

அடுத்த 5 வருடத்தில் பிரச்சனைகளை தெரிந்துகொள்ளுங்கள். உண்மையை தேடுங்கள். தீர்வுகளை முன்வையுங்கள். அறிவுப்பூர்வமான அரசியலுக்கு உங்களை தயார் செய்துகொள்ளுங்கள்.

கடைசியாக, அது என்னடா சகாயம்னு தலைப்பு போட்டு, இது வரை அவரை பற்றி ஒன்னும் சொல்லலியே என்பவர்களுக்காக -

நான் பாடிக்குப்பம் என்ற என் பகுதியில் தொடர்ந்து வேலை செய்து வருகிறேன். அங்கிருக்கும் மிகத் தெளிவான ஒரு இளைஞன் கொண்டுதான் ஒவ்வொரு நிவாரண உதவியையும் திட்டமிடுவோம். அவன் படிப்பது லயோலாவில். அவனுடைய ஆசை IAS ஆவது. அவனிடம் சென்ற வாரம் (சகாயம் அவர்களுக்காக நடந்த பேரணிக்கு முந்தைய நாள்) 'நாளைக்கு சகாயம் அரசியலுக்கு வரணும்னு ஒரு கூட்டம் நடக்குதுபா' என்றேன்.

அவன் சொன்ன பதில் - 'சகாயம்னா யாரு சார்?'

அதிர்ச்சி அடையாதீர்கள். சென்னையின் குப்பம், குடிசை பகுதிகளில் சகாயம் அவர்களும், நடிகர் தனுஷும் போட்டியிட்டால் தனுஷ் மிகப்பெரிய வெற்றிவடைவார்.

இவர்கள்தான் உண்மையான (காசு வாங்கினாலும், இல்லாவிட்டாலும்) வாக்காளர்கள் என்றும், இவர்கள் ஏன் மற்ற கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்குவதில்லை என்றும் சொல்லித்தான் புரிய வேண்டுமோ?

Sunday, January 4, 2015

பிசாசு

Share |
முன்னுரை :

முன்னுரையை முகநூலில் ஏற்கனவே படித்தவர்கள் ஒரு 10 பத்தி (Paragraph) தள்ளி இருக்கும் விமர்சனம் செல்லுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

மிஷ்கின் - 'சித்திரம் பேசுதடி' வெளிவந்து சில காட்சிகள், வாள மீனு பாட்டுன்னு பிரபலமடையறதுக்குள்ள படம் தியேட்டர்விட்டு போயிடுச்சேன்னு ரொம்ப வருத்தமா இருந்தது. விகடன் விமர்சனம் வேற ஒரு நல்ல படத்துக்கு இந்த நிலைமையான்னு வருத்தத்த அதிகப்படுத்துச்சு. நல்ல வேலையா படம் மறுபடியும் 'ரிலீஸ்' ஆகி நல்ல ஆதரவு கிடைச்சது. 'மிஷ்கின்' அப்படிங்குற ஒரு நல்ல இயக்குனர் தமிழ் திரையுலகில அறிமுகமானார். 2 தடவ 'தேவில படம் பார்த்தேன்.

அடுத்த வந்த அஞ்சாதே ஒரு 'மிஷ்கின்' Genre உருவாக்குச்சு. மனிதம் பேசும் ஒரு த்ரில்லர் இயக்குனரா உயர்ந்தாரு. USல இருந்ததால இணையத்துலதான் பார்க்க முடிஞ்சது.

நந்தலாலா எப்போ ரிலீஸ் ஆகும்னு காத்து காத்து, படத்தோட 'Style' தெரிஞ்சும், எப்படியும் ஒரு வாரத்துல தூக்கிடுவாங்கன்னு தெரிஞ்சு வாரநாள்லேயே அவசரமா போய் 'சங்கம்ல' பார்த்தோம் (நானும் என் மனைவியும்). படம் எனக்கு பிடிச்சது. தியேட்டர் ஆள் இல்ல.

அடுத்த வந்த 'யுத்தம் செய்', யாரையும் தன்னால நடிக்கவைக்க முடியும்னு சொல்ற படமா, (என்னைப் பொறுத்தவர) அந்த வருடத்தோட சிறந்த படமா இருந்தது. ரசிகர்கள அறிவாளிகளா மாத்த முயற்சித்த படம் அது.


அடுத்து மிஷ்கின் படம் வந்தா முதல் நாளே (வெள்ளிக்கிழமை முதல் காட்சி) பார்க்கணும்னுங்கிற அளவுக்கு ஒரு சிறந்த இயக்குனரா எனக்குபட்டார்.

ஆனா அடுத்து வந்த முகமூடி அந்த நினைப்ப காலிசெஞ்சது. முதல் பாதி நல்லா இருந்தாலும், இரண்டாம் பாதி படு சொதப்பல். நம்பிக்கை போயிடிச்சு.

'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்'  மேல ரிலீஸ் ஆனப்ப பெரிய அபிப்ராயம் இல்ல. படம் வந்த சமயம் ஏதோ விசயமா ஊருக்கு போனேன். 'மூடர் கூடம்' போகலாம்னு போனா படத்த தூக்கிட்டாங்க. சரி 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' போலாம்னு போனேன். ரொம்ப நல்ல படம். வெள்ளிக்கிழமை இரவு காட்சிக்கு மொத்தம் ஒரு 25 பேர்தான் இருந்தாங்க. வருத்தமா இருந்துச்சு. சுத்தமா 'Promo' இல்ல. அடுத்த வாரத்துல திருச்சில மிஷ்கினே வந்து போஸ்டர் ஒட்டிட்டு இருந்தது சிலர் 'ஸ்டண்ட்டுன்னு' சொன்னாலும் எனக்கு வருத்தமாதான் இருந்தது. அடுத்த அதிர்ச்சியா 2 வாரத்துல் தீபாவளிக்கு விஜய் டிவில படத்தபோட்டானுங்க.

பிசாசு - Review Rating நல்லா இருந்துச்சு. போன வாரங்கள்ல டிக்கெட் கிடைக்காம 'PK' போனோம். இந்த வாரம் வெள்ளிக்கிழமை பார்த்தோம்.

எல்லா படங்களின் காட்சிகளுமே படம் பார்த்த கொஞ்ச நேரத்துக்காவது மறுபடி மறுபடி நம்ம நினைவில் வரும். வெள்ளிக்கிழமை இரவு என்ன 'பிசாசு' தூங்கவிடல. உண்மைய சொல்லணும்னா, 'பிசாச' நான் தேட ஆரம்பிச்சிட்டேன்.

முன் கதை சுருக்கம் முடிஞ்சது :).

விமர்சனம் -

ஒரு சாலை விபத்தில் அடிபட்ட பெண்ணை காப்பாற்ற அங்கிருக்கும் ஆட்டோ டிரைவர், மனைவியோடு வரும் இன்னொரு நபர் மற்றும் தன் காரின் பக்கம் நின்றுகொண்டு போன் பேசும் நாயகன் மூவரும் முனைகின்றனர். மருத்துவமனையில் நாயகனின் கையை பிடித்துக்கொண்டு அவனை பார்த்து ஒரு புன்னகையோடு அந்த பெண் இறந்துபோகிறாள். அந்த பெண் அணிந்திருந்த செருப்போடு கிளம்பும் நாயகனை இந்த சம்பவம் வெகுவாக பாதிக்கிறது. தன்னுடைய வயலின் வாசிக்கும் பணியையும் பாதிக்கிறது. மன சாந்தியடைய பார்வையற்றவர்களோடு தன் நேரத்தை செலவிடுகிறான். குடித்தால் மறக்கலாம் என முடிவெடுத்து வீட்டிற்கு வருபவனை அங்கிருக்கும் சக்தி - விபத்தில் இறந்த பெண் பிசாசாக மாறி குடிக்கவிடாமல் செய்கிறது.

பிசாசை விரட்ட வரும் ஏமாற்று கும்பலை துரத்தி அடிக்கிறது. நாயகனின் தாயை இன்னொரு அபார்ட்மெண்ட் முரடன் ஒருவன் அடிக்க அவனை புரட்டி எடுக்கிறது. நாயகனின் தாயை ஒரு விபத்திலிருந்து காப்பாற்றுகிறது. நாயகன் வீட்டில் திருட வரும் 'Genius' ஒருவனை கத்தியால் குத்தி விரட்டுகிறது.


தன் அம்மாவின் விபத்தை தவறாக நினைக்கும் நாயகன் பிசாசை விரட்ட முயற்சித்து, அந்த பெண்ணின் அப்பாவை சந்திக்க, அந்த அப்பாவிற்காக அந்த விபத்து குறித்தும், அந்த விபத்து ஏற்படுத்தியவனை கண்டுபிடிக்க செய்யும் முயற்சிகள், அந்த முயற்சியின் விளைவோடு படம் முடிகிறது.

பிசாசாக 'பிராயாகா மார்டின்' - படம் முழுக்க வரும் கஷ்டமான காட்சிகளில் எல்லாம் உடலை வருத்தி நடித்துள்ளார். பிசாசாக இருந்தாலும் அவர் மீது ஒரு பரிவை, அன்பை ஏற்படுத்துகிறார். அவர் முகம் தோன்றும் ஒரே ஒரு காட்சியிலும் அன்பை பொழிகிறார்.

நாயகன் நாகா - மிஷ்கின் என்ன சொல்லியிருப்பாரோ அதை சரியாக செய்துள்ளார்.


இவரைத் தவிர பிசாசின் அப்பாவாக ராதாரவி, நாயகனின் தாயாக கல்யாணி நடராஜன், கீழ்வீட்டு முரடனாக ஹரீஸ் (தனிப்பட்ட முறையில் ஹரீஸ் அவர்களின் வளர்ச்சி மகிழ்ச்சி தருகிறது), நாயகனின் நண்பர்கள், ஆட்டோ டிரைவர் என எல்லோருமே சிறப்பாக நடித்துள்ளார்கள்.

இசை - மிஷ்கின் பட இசை. மிஷ்கின் பட இசையமைப்பாளர்கள் வரிசையில் ஆரால் கோரல்லி சேர்கிறார். பாடலும் அருமை.

ஒளிப்பதிவு - ரவி ராய். படத்திற்கான உழைப்பில் இவருக்கு முக்கிய பங்குண்டு.

மிஷ்கின் - மிஷ்கின் படத்திற்கென இருக்கும் சாயல்கள், சண்டை காட்சி, எல்லா காட்சிகளிலும் இழையோடும் மனிதம் இந்த படத்தில் மிகப் பிராதனமாய், மிகப் பிரமாதமாய் வெளிவந்துள்ளது. ஆட்டோ டிரைவர் 'பச்சை' என்ற ஒரு கதாபாத்திரம்கொண்டு மீண்டும் பார்ப்பவரை அறிவாளியாக மாற்றுகிறார். அவரின் அதீத உழைப்பு மேன்மேலும் வளரவேண்டும்.

தயாரித்த பாலாவிற்கு வாழ்த்துக்கள்.

ஒரு பேய் படத்துக்கு போயிட்டு வந்தா எவ்வளவுதான் நமக்கு வீரம் இருந்தாலும், (படத்துக்கு போயிட்டு வந்த நாள்) ராத்திரி வேலையில நம்ம எந்திரிக்கிறபோ அந்த பேய் எங்கையாவது நம்ம வீட்டுக்குள்ள இருக்கான்னு ஒரு பயத்தோட பார்ப்போம். ஆனா இந்த பேய் நம்ம வீட்டுக்குள்ள வந்திடுதான்னு ஆசையோட நிச்சயமா நாம தேடுவோம். அதுதான் 'பிசாசு'.

'Pisasu' - A ghost that you want to love and live with.