Wednesday, May 30, 2018

ஏன் இந்த குழப்பம் ரஜினி?

Share |
உங்களுடைய டிசம்பர் 31 அரசியல் பிரவேச அறிவிப்புக்குப் பின் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போரட்டாம் குறித்துதான் நீங்கள் இது வரை அதிகம் பேசியிருக்கிறீர்கள். நீங்கள் பேசவே மாட்டீர்கள் என்று சொன்ன காவிரி குறித்து அதற்கு அடுத்தபடியாக பேசியிருந்தீர்கள். எல்லா பிரச்சனைகளுக்கும், எல்லா சமயங்களிலும்  கருத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை என்ற உங்கள் நிலைப்பாட்டை நான் வரவேற்கிறேன்.

உங்களுடைய அரசியல் வருகைக்கான, அதன் பிறகான எல்லா விமர்சனங்களுக்கும் தேவைப்பட்ட இடத்தில் தகுந்த பதிலடியும் கொடுத்தீர்கள். எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் உங்களுடைய பேச்சு, உங்கள் ரசிகர்களை தாண்டி சாமானிய மக்கள் பலரை கவர்ந்தது. உங்களுடைய எதிரிகள் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும், அவர்களின் வாயை அடைத்தது.

ஒரு ஒற்றைக் கேள்வி மட்டும் நீங்கள் எத்தனை விளக்கங்கள் கொடுத்தாலும் பின் தொடரத்தான் போகிறது. நீங்கள் பிஜேபியின் ஆளா? உங்களை வைத்து தங்களுடைய சித்தாந்தத்தை வளர்க்க நினைக்கும் பிஜேபி ஆட்கள் இருக்கும்வரை அதற்கான விளக்கத்தை நீங்கள் எத்தனை முறை கொடுத்தாலும், அதனை வைத்து அரசியல் செய்பவர்கள் செய்யத்தான் போகிறார்கள். அது குறித்து நீங்கள் தெளிவாக இருப்பதாகவே உணர்கிறேன்.

இப்பொழுது தூத்துக்குடிக்கு வருவோம். மார்ச் 31 அன்றுதான் முதன்முதலாக போராட்டம் குறித்து உங்கள் பார்வையை வெளிப்படையாக அறிவித்தீர்கள். 



இந்த அரசாங்கம் ஏன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது என கேள்வி எழுப்பினீர்கள். அதற்கு அடுத்தபடியாக நேரடியாக இல்லாமல், புத்தாண்டு வாழ்த்து செய்தியிலும் தூத்துக்குடி போராட்டம் குறித்து கருத்து தெரிவித்தீர்கள்.

"உழும் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை, அருந்தும் நீரைக் காக்க, நீதியை நிலைநாட்டி நம் உரிமையைப் பெறக்கூட போராட்டம் என வாழ்க்கையே போராட்டமாகிவிட்ட நிலையில்...."

ரஜினிகாந்த மக்கள் பிரச்சனைகளை தொடர்ந்து கவனித்து வருகிறார் என்று மக்கள் தெரிந்துகொண்டார்கள்.

துப்பாக்கி சூடு நடந்தேறியது. படுகொலைகள் நிகழ்ந்தது. "காவலர் சீருடையில் இருப்பவர்களை தாக்கக்கூடாதுன்னு சொன்னவரு இப்ப மட்டும் என்ன மக்களுக்கு ஆதரவாவா பேசிடுவாரு...." என்று ஏளனம் செய்தார்கள், முன்பு அது எந்த தருணத்தில் பேசப்பட்டது என புரிந்துகொள்ளாதவர்கள்.

துப்பாக்கி சூடு நடந்த அன்று மாலையே நீங்கள் மிகச் சரியாக அரசை சாடினீர்கள். தமிழக அரசை முழுப் பொறுப்பாக்கினீர்கள். அதற்கு அடுத்த தினம் இன்னும் ஒரு படி மேலே சென்று, "காவல்துறையின் சட்டத்திற்கு புறம்பான, வரம்பு மீறிய, மிருகத்தனமான செயலை வன்மையாக கண்டிக்கிறேன்" என்று மக்களிடம் பேசினீர்கள். உங்களின் எதிரிகள் மறுபடியும் வாயடைத்துபோனார்கள்.



அவர்களின் அடுத்த ஆயுதம் - "ஏசி ரூமுக்குள்ள உட்காந்துகிட்டு கருத்து சொல்றதெல்லாம்...யார் வேணா பண்ணலாம்.." என்றார்கள். அதனையும் உடைக்க முடிவெடுத்து, உடைத்தும் காட்டினீர்கள். என்னடா இந்த ஆளு களத்துக்கும் கிளம்பிட்டான் என்றவர்களுக்கு உங்களின் "என்னை பார்த்தா அந்த மக்கள் கொஞ்சம் சந்தோசப்படுவார்கள்" என்பதை வைத்து அரசியல் செய்ய பார்த்தார்கள். அதுவும் உடைந்தது. நீங்கள் கண்டித்த காவல்துறையும் உங்களை இன்முகத்துடன் வரவேற்று மருத்துவமனைக்குள் அழைத்து சென்றது. போராட்டத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த மக்கள் உண்மையில் மகிழ்ந்தார்கள். அவர்களின் வலியை மறந்து கொஞ்சம் சிரித்தார்கள்.

பின்னர் துவங்கியது செய்தியாளர்கள் சந்திப்பு. அரசை கடுமையாக விமர்சித்த ரஜினி, மக்களின் கோரிக்கையாக 'எடப்பாடி பதவி விலகு' என்ற அரசியல் ரீதியான நிலையெடுப்பார் என சிலர் நினைத்தார்கள். படுகொலை செய்த காவல்துறையின் மீது என்ன நடவடிக்கை என்று கேட்பார் என்று நினைத்தார்கள். ஏன் அரசாணையால் உபயோகம் இல்லை, அரசின் கொள்கை முடிவுதான் வலுவானது என்று நாளை அரசாங்கத்தை ஆள நினைப்பவராக தெளிந்து சொல்வார் என்று நினைத்தார்கள். கடைசியாக சமூக விரோதிகள் என்று போராடியவர்களை கொச்சைப்படுத்துபவரை கண்டிப்பார் என்று நினைத்தார்கள். ஆனால் நடந்ததெல்லாம தலைகீழ் என்பதவிட குழப்பம். அந்த இளைஞன் கேட்ட கேள்வி உங்களை காயப்படுத்தியிருக்கலாம். நியாயமற்ற பல கேள்விகளைகூட சந்திக்க வேண்டிய களத்தில், அவர் கேட்ட கேள்வி ஒன்றும் அவ்வளவு நியாயமற்றது அல்ல. வேறு ஒரு தலைவர் தன்னுடைய பதிலால் அந்த இளைஞனையும் கவர்ந்திருக்கலாம்.



புனித போராட்டம் என்றவர் அடுத்த கேள்வியில் போராடவே கூடாது என்றீர்கள். நீதிமன்றத்தில் வெகு நாட்களாக வழக்கிருப்பதாலும், 'விரிவாக்கம்' என்ற பெயரில் ஸ்டெர்லைட் இன்னொரு புதிய கட்டுமானத்தை எழுப்புவதாலும்தான் இந்த போராட்டமே என நீங்கள் புரிந்துகொண்டீர்களா என தெரியவில்லை. நீதிமன்றத்தில் அரசுக்கு எதிராக 40000க்கு மேற்பட்ட வழக்குகள் உள்ளது என உங்களுக்கு தெரியுமா என்றும் தெரியவில்லை. நீதிமன்றம், அரசாங்கம் எல்லாம் கைவிட்ட பிறகு மக்கள் போராட்டம் ஒன்றுதான் ஜல்லிக்கட்டை கொண்டுவந்தது என்பதை நீங்கள் பார்த்தவர்தானே?.

போலீசாரை தாக்கியதால்தான் வன்முறை என ஆதாரப்பூர்வமாக சொன்ன நீங்கள், காவல்துறை அதற்கு படுகொலை செய்யலாமா என அந்த இடத்தில் கேட்க தவறினீர்கள். காவல்துறை தனது உடுப்பில் இருக்கும்போது அவர்களை தாக்கக்கூடாது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது, தண்டிக்கப்பட வேண்டியது எனும்போதும், திரைப்படங்களில் ஹீரோ ஒருவர், 'நீ போட்டிருக்க uniformனால உன்ன விடறேன்' என்பதை போன்று அலுப்பு தட்டுகிறது. இறந்தவர்களின் வீட்டிலும், காயம்பட்டவர்களின் வீட்டிலும் காலவ்துறை உறவினர்கள், நண்பர்கள் உண்டு. அவர்களே கையறு நிலையில் இருக்கிறார்கள். முதலில் நாம் மனிதர்கள். அடுத்துதான் இந்த உடுப்பெல்லாம்.

நியூஸ் 7 தொலைக்காட்சியின் கேள்வி நேரத்தில் பத்திரிக்கையாளர் லக்ஷ்மணன் 3 விசயங்களை மிகத்தெளிவாக ரஜினி செய்ததையும், செய்யத்தவறியதையும் தோலுரித்துகாட்டினார். ரஜினி அதனை பார்ப்பார் என்று நம்புகிறேன். எடப்பாடி அரசு பதவி விலகவேண்டாம் என்பது கூட ரஜினிக்கு அரசியல் ரீதியான பின்னடைவுதான்.



IPL போட்டிகள் போதும் சரி, இப்பொழுதும் சரி, ரஜினியை எதிர்ப்பவர்கள் 1 1/2 சதவீத வாக்குகள் வைத்திருப்பவர்கள். அவர்களுக்கு ரஜினியை எதிர்த்தால்தான் தங்களுடைய வாக்கு வங்கி இருக்கும் என்று நம்புகிறார்கள். துணை வட்டாட்சியர் அறிக்கையில் 3 இயக்கங்களை சுட்டிக்காட்டிய அரசு கூட, சட்டமன்றத்தில் திமுகதான் இந்த வன்முறைக்கு பொறுப்பு என்று சொல்வது எடப்பாடிக்கு கூட தன்னுடைய எதிரி யார் என்று தெரியும் என்பதை காட்டுகிறது. அந்த 1 1/2 சதவீத வாக்குகள் வைத்திருப்பவர்களுடன் போட்டிபோட அவசியம் உங்களுக்கில்லை ரஜினி.

ஊடகத்தை கையாளுவதோ இல்லை சில அரசியல் நிலைப்பாடுகள் எடுப்பதிலோ நீங்கள் ஜெயலலிதா Style of Politics பின்பற்ற முயற்சி செய்கிறீர்கள். அது சரியாக கூட இருக்கலாம். ஆனால் ஜெயலலிதா ஒரு சர்வாதிகாரி என்பதை மறந்துவிடாதீர்கள் ரஜினி. ஜெயலலிதாவிவிடமும், அரசியலுக்கு வந்த பின் பலருக்கும் மறந்துபோகும் மனித நேயம் உங்களிடம் இருக்கும் என நினைக்கும் மக்களை ஏமாற்றிவிடாதீர்கள்.

எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக பேச்சிற்கு முன் பேனருக்காக மன்னிப்பு கேட்டீர்கள். நேற்றைய செயல்களுக்காகவும் வருந்தி, தெளிந்து மன்னிப்பு கேட்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்....

இது ரஜினி ரசிகர்களுக்காக - 'அதிமுக, திமுகல இருக்க பய பூரா அடிமைங்க என்று சொல்லிவிட்டு, ரஜினி சொல்லிவிட்டார் என்ற ஒற்றை காரணத்திற்காகவே நீங்களும் அதற்கு சப்பை கட்டு கட்டுவதை விடுங்கள். நீங்கள் எதிர்ப்பார்க்கும் மாற்றம் என்ன என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள் - இது அறிவாளிகளுக்கும் பொருந்தும்.




0 comments:

Post a Comment