Monday, May 11, 2009

அம்மா (கதை - 7)

Share |
இன்று உலகம் முழுக்க அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரின் வாழ்விற்கும் ஆரம்பப் புள்ளி அவள்தான் என்பதை விட ஒரு சிறப்பு அவளுக்கு என்ன இருக்க முடியும். ஆனாலும் அதையும் தாண்டி ஒவ்வொரு தாய்க்கும் ஒரு மகனின் பார்வையில் ஒரு சிறப்பம்சம் இருக்கத்தான் செய்கிறது.
இது என் தாயைப் பற்றிய சிறப்பம்சம்.

எங்கள் வீட்டில் நானும், என் தங்கையும். அப்பா ஒரு அரசு வேலையில் இருக்க, என் அன்னை வீட்டை கவனித்து வந்தார்.

அப்பொழுது நான் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேர வேண்டிய நேரம் வந்தது. மதுரையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்க்கப்பட்டேன். இயந்திரவியல் பிரிவு. என் அப்பாவும், அன்னையும் வந்து என்னை சேர்ப்பித்து, விட்டுச் சென்றனர்.

முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. வெள்ளிக்கிழமை வந்தால் என் கால்கள் மாட்டுத்தாவநியில்தான் நிற்கும். என் ஊருக்கு 3 மணிநேரம்தான்.

ஒவ்வொரு புதியவரும், நண்பனாய் மாற எல்லாம் பழகிப்போனது, சீனியர்சின் ராகிங் உட்பட. சென்னை, கோயம்புத்தூர் போன்ற ஊர்களில் இருந்து வந்த மாணவர்களால் வாரவாரம் ஊருக்கு செல்ல முடியவில்லை.
"ஏன்டா நாங்க எல்லாம் எல்லா வாரமுமா ஊருக்கு போறோம்..?"

அந்த வாரம் நான் ஊருக்கு செல்லவில்லை.
"அம்மா, பிரண்ட்ஸ் எல்லாம் ஊருக்கு போவேணாம்னு சொலறாங்கம்மா. அவங்களுக்கு தனியா போர் அடிக்குதாம்."

விடுதியிலேயே தங்கி விட்டேனே தவிர, ஊருக்கு போயிருக்க வேண்டும் என்றே யோசித்துக்கொண்டிருந்தேன். அவர்கள் எல்லோரும் விடுதிக்கு உள்ளேயே கிரிக்கெட் விளையாடினார்கள். சிலர் பீர் அருந்தினார்கள். எனக்கு அதில் அவ்வளவு ஆர்வமில்லை.

அடுத்த வாரம் எப்பொழுது வரும் என காத்துக்கொண்டிருந்தேன்.
இரண்டு வாரங்கள் கழிந்தது. "டேய், போன வாரம்தானே ஊருக்கு போன.."
"ஆமாண்டா. ஊருக்கு போனேன். ஆனா இங்க இருக்கப்போ மட்டும் என்ன பண்ணேன்..? நீங்க பாட்டுக்கு கிரிக்கெட் விளையாண்டீங்க...ஊருக்கு போயிருந்தா கூட நல்ல சாப்பாடு, ஒரு படம் பார்த்திருப்பேன்..."
"இதான் உன் பிரச்சனையா.."

வெள்ளிக்கிழமை இரவு. அம்மா மெஸ்ஸில் சாப்பிடோம்.
"சொல்லு மாப்ள. என்ன படத்துக்கு போவோம்..?"
"செகண்ட்-சோவா..??"
"யார்ரா இவன். இவனுக்காக நம்ம வந்தா, பச்ச கொளந்த மாதிரி பேசிட்டு இருக்கான்.."

அண்ணாமலையில் முதல்வன் பார்த்து, ஆட்டோ பிடித்து ஹாஸ்டல் வந்தோம்.

சனிக்கிழமை எழுந்தபோது மணி 12. சாப்பிட்டு முடித்து எல்லோரும் கிரிக்கெட் விளையாடப்போனார்கள். நானும் விளையாட வேண்டி வந்தது.

கடுமையான உடல் வலி வந்தது.
"டேய், ஏதாவது பாம் வச்சிருக்கியா, உடம்பு வலி பின்னுது."
"என்னடா இதுக்கே, இப்படி ஆயிட்ட. இதுக்கெல்லாம் நம்ம மணி ரூம்தான். அங்கதான் எல்லா மருந்தும் இருக்கும்."

மணி அறையில்தான் எல்லோரும் பீர் அருந்துவார்கள். மணி ஏற்கனவே போதையில் இருந்தான். நான் மருந்து தேடினேன்.
"மாப்ள, நீ என் நண்பனா இல்லையா..?" இது மணி.
"ஏன்..?"
"சொல்லு மாப்ள.."
"ம்ம்."
"அப்படின்னா இந்த பீர் குடி."

எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் என்பதை விட, இப்பொழுது யோசித்தால் நான் விரும்பித்தான் குடித்திருப்பேன் என தோன்றுகிறது.

இரண்டு வாரம், மூன்று வாரம் ஆனது. மூன்று வாரம் 1 மாதமானது.

எங்கள் கல்லூரியில் மட்டும், முதலாம் ஆண்டும் இரண்டு செமஸ்டர். முதல் செமஸ்டர் வந்தது. ஓரளவுக்கு நல்ல மதிப்பெண்கள் எடுத்தேன்.
விடுதி வட்டாரத்தில் அது "டாப் மார்க்" ஆனது.

பீர் மாறி சில நேரங்களில் விஸ்கி, பிராந்தி என குடிக்க ஆரம்பித்து இருந்தோம். இரண்டாம் செம்மும் வந்தது.
"உனக்கென்னடா..எங்களோட சுத்திகிட்டே சூப்பர் மார்க் எடுத்திருவ.."

பரீட்சை முடிந்து எல்லோரும் கொடைக்கானல், ஊட்டி, சென்னை என ஊர் சுற்றினோம். நான் வீட்டை சுத்தமாக மறந்து போனேன்.

இம்முறையும் நான் "டாப் மார்க்" அவர்களை பொறுத்தவரை. விடுதியில் இருந்து அரியர் இல்லாமல் தப்பித்த சிலரில் நானும் ஒருவன் ஆனேன். 3 பேப்பரில் ஜஸ்ட் பாஸ். எல்லோரையும் கூப்பிட்டு HOD கண்டித்தார்.

"நீ போன தடவ, நல்லாதானே படிச்ச...இப்ப என்ன ஆச்சு உனக்கு..?"

நாங்கள் சீனியர்ஸ் ஆனோம். எங்கள் கல்லூரியின் மாணவ்ர்கள் சட்டப்படி, விடுதியில் இருக்கும் முதலாம் ஆண்டு மாணவர்களை விடுதியில் இருப்பர்வகள் மட்டுமே ராகிங் செய்ய முடியும்.

அதே போல்தான் தினம் வந்து செல்வோருக்கும்.

இந்த சட்டம் மீறப்பட்டது. சிவில் படிக்கும் மாணவன் ஒருவன், எங்கள் விடுதி மாணவனை ராகிங் செய்தான்.

"மச்சான், இந்த சிவில் ............ நாம யாருன்னு காட்டணும். இனி ஒரு ஜூனியர் டே-ஸ்காலர் கூட விடாதீங்க. எல்லாரையும் சாவடீங்க." மணி எங்களுக்கு உத்தரவு பிறப்பித்தான்.

ராகிங் செய்த மாணவன் தாக்கப்பட்டான். ஜூனியர் டே-ஸ்காலர் எங்களை பார்த்து நடுங்கினர்.

தாக்கப்பட்ட மாணவன் ஆள் சேர்க்க, விஷயம் அவன் வீட்டில் தெரிந்து, நாங்கள் எல்லோரும் 15 நாட்களுக்கு தற்காலிகமாக நீக்கப்பட்டோம்.

கல்லூரியில் இருந்து நீக்கப்படாலும், விடுதியில் தங்க அனுமதி கிடைத்தது. விடுதியில் இருக்கும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு எங்கள் மீது பயம் ஏதும் இல்லாமல் இருந்தது.

அன்று விடுமுறை. முதலாம் அண்டு மாணவன் ஒருவன் ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தான். எங்களை பார்த்தும் பார்க்காததுபோல் இருந்தான்.
"டேய்....இங்க வா....." "நீ அப்படியே கிளம்பு.."
அந்த பெண்ணை கிளம்ப செய்ததில், அவனுக்கு கோபம்.

"என்னங்க....நீங்க யாரு அவள கிளம்ப சொல்றதுக்கு..?"
"......இந்த வயசுலேயே உனக்கு ஜாரி கேட்குதா...? " மணி பொளேர் என ஒரு அரை வைக்க, அவன் மயக்கமானான்.இதை பார்த்துக்கொண்டிருந்த அந்த பெண் ஓட்டம் பிடித்தாள்.

இந்த முறை ஒரு மாதம் நீக்கப்பட்டோம். அதோடு பெற்றோரையும் அழைத்து வர வேண்டிய காட்டயத்திற்கு ஆளானோம்.

அப்பாவிடம் செய்யாத தவறுக்கு நான் மாட்டிக்கொண்டேன் என பொய் சொல்லி, அவரை அங்கிருந்தே பேசச் செய்தேன்.

ஒரு வழியாய் பிரச்சனை ஓய்ந்தது. அடுத்த செமஸ்டர் வந்தது.

இந்த முறை 10 நாட்களே விடுமுறை இருந்தது.

பரீட்சை முடிவு வந்தது. நான் எல்லா பாடங்களிலும் தோல்வியை சந்தித்தேன். ஒரு பாடத்தில் கூட இன்டெர்நலில் முப்பதிற்கு 10 மதிப்பெண் கூட வாங்கவில்லை. கல்லூரி விட்டு வெளியே வந்தேன். மணி பத்தவைத்திருந்த சிகரெட் வாங்கி புகைத்தேன்.

" ...... வேணும்னே குத்திருக்கானுங்க மாப்ள.."

என்னுடைய வகுப்பறைக்கு வெளியே எல்லா பாடங்களிலும் தோல்வி அடைந்த என்னையும், மணியையும் எந்த ஆசிரியரும் உள்ளே விடக்கூடாது என்று அறிவிப்பு இருந்தது.

HOD பார்க்க சென்றோம்.
"அப்பாவ கூட்டிட்டு வாங்க. நாங்க TC ரெடி பண்ணியாச்சு."
"சார்..."
"வெளியப் போ.."

வேறு வழியேயில்லை.
அப்பா வந்தார். HOD என்னை வெளியே நிற்கச் சொன்னார்.

அப்பா வெளியே வந்தார்.
"கிளம்பு. ஊருக்கு போகலாம்."
"அப்பா..."
விடுதியிலும், பேருந்திலும் ஒன்றும் பேசவில்லை.

வீட்டுக்குள் சென்றதும் பளார் என ஒரு அடி விழுந்தது. என் அப்பா என்னை இதுவரை கைநீட்டி அடித்ததில்லை.
"உன் வாழ்க்கை நல்ல இருக்கணும்னா படி"

அம்மா ஓடி வந்து என்னை தாங்கிப்பிடித்தார்.
அப்பா அம்மாவிடம், "உனக்கு தேவையான துணிமணி எடுத்துக்க. ரெண்டு பெரும் மதுரை கிளம்புங்க. ஒரு ரெண்டு நாளைக்கு நீ ஹாஸ்டல் கெஸ்ட் ஹவுஸ்ல தங்கிக்க. அதுக்குள்ள இவன காலேஜ் பக்கத்தில ஒரு வீடு பார்க்க சொல்லு. இனி அவன் நல்லா வர்றதும், நாசமா போறதும் உங்க ரெண்டு பேர் கைல."

நான் என் அறைக்கு சென்றதும் அப்பா அம்மா பேசுவது கேட்டது. "தண்ணி, சிகரெட் ஒன்னு விடல. ராக்கிங் வேற பண்ணி இருக்கான். என்ன பிரச்சனடி இவனுக்கு..?"

அம்மா என்னிடம் சகஜமாய்தான் பேசினார். மதுரை வந்து ஒரு வீடு பிடித்தேன்.
கல்லூரி சென்றேன். மணியின் அப்பாவும் வந்து போயுள்ளார்.
"தம் வாங்க கூட காசில்ல மாப்ள.."
"விட்றா..நான் வாங்கித்தரேன்."

நானும் மணியும் நன்றாக குடித்தோம்.
"மாப்ள, இதோட ஹாஸ்டல் போமுடியதுரா..."எங்க அப்பா வார்டன், வாட்ச்மன் எல்லார்டையும் சொல்லிட்டு போயிருக்கான்.

எங்கள் வீட்டுக்கு போனோம்.அம்மா உறங்காமல் காத்திருந்தார்.
"அம்மா. இது மணி."
"உள்ள வாப்பா."
இருவருக்கும் அம்மா உணவு பரிமாறினார்.

"மணி, உங்க அப்பாவும் வந்தாரப்பா..?"மணி தயங்கினான்.
"நீ கெட்டுப்போனதுக்கு என் பையன்தான் காரணம்னு HOD சொன்னாரா..?"மணி பதில் பேசவில்லை.
"என்னடா அப்பிடியா..?" இது நான்.

"உங்க அப்பாட்ட என்ன சொன்னாங்கன்னு தெரியுமா உனக்கு..?" இது அம்மா.
நாங்கள் இருவரும் வருகிற பரிட்சையில், ஒரு பாடத்தில் கூட தேர்ச்சி பெறப்போவதில்லை. கல்லூரிக்கும் சரியாக வரப்போவது கிடையாது. சென்ற பருவத்தில் வந்த நாட்கள், இந்த பருவத்தில் செல்லும் நாட்கள் எல்லாம் மொத்தம் கணக்கு செய்து வருகை பதிவேடு காரணம் காட்டி எங்களை எங்கள் பல்கலைக்கழகம் மூலியமாக வெளிய அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
அம்மா கொஞ்சம் கூட கோபம் காட்டாமல் எல்லாம் சொல்லி முடித்தார்.

"எனக்கு ஒரே ஒரு ஆசைதான்பா. நாளைக்கு உன் தங்கச்சி கல்யாணம்போது, என்னால முடிஞ்சது இதுப்பான்னு நீ கொடுத்தா, நாங்க எவ்வளவு சந்தோசப்படுவோம்."

எங்கள் இருவருக்கும் படுக்கை தயார் செய்து அவரும் உறங்க சென்றார்.
எங்களுக்கு தூக்கம் வரவில்லை. வீட்டின் வெளியே வந்து அமர்ந்தோம். அம்மா உறங்கிவிட்டார் என முடிவி செய்த மணி சிகரெட் பற்ற வைத்தான்.

"அவனுங்க வேணும்னே நம்மள குத்தறாங்க ....நம்ம என்னடா தப்பு பண்ணோம்..?"

காலை எங்கள் இருவருக்கும் அம்மா உணவு பரிமாறினார்."மணி. உன் பிரண்ட யாராவது வம்பிழுத்தா....நீ என்ன பண்ணுவ..?"
"சாவடிசிருவேன்மா..."
"உன்ன யாரவது வம்பிழுத்தா உங்க அப்பா அம்மா அந்த பையன என்ன பண்ணுவாங்க..?"

என்னிடம் 10 ரூபாய் நீட்டினார்.
"3 சிகரெட் வாங்கிக்க. காலேஜ்ல இருந்து நேரா வீட்டுக்கு வா."
"மணி. என் பையன நீ ஒரு நல்ல பிரண்டா நெனச்சா, நீயும் இங்கயே தங்கலாம். இல்லாட்டி இதுவே நீ இங்க வர்றது கடைசியா இருக்கும்."

ரெண்டு பேருக்கும் ஒன்னு சொல்றேன்.
"யாராவது உங்கள பழிவாங்குறதா நெனச்சா, உங்கள விட முட்டாள் யாருமே கிடையாது.."

பெட்டி படுக்கை எடுத்துக்கொண்டு மணியும் என்னுடன் வந்தான். அவனுக்கும் அம்மா 10 ரூபாய் கொடுத்தார்.

அடுத்த செமஸ்டர் வந்தது. இந்த செம் பேப்பர் காலையில் இருக்க, அரியர் பேப்பர் மதியம் இருக்கும். இரவு கண் விழித்து படிப்போம். எங்களுடன் அம்மாவும் அமர்ந்திருப்பார். நாங்கள் இருவரும் ஒரு 4 மணிப்போல் தூங்குவோம். அம்மா அதற்குள் காலை உணவு செய்து எங்கலுக்கு கொடுப்பார். மதிய உணவு சமைத்து கல்லூரிக்கே வந்து கொடுத்துப்போவார்.

நானும், மணியும் சேர்ந்து படித்தோம். அரியர் பேப்பரில் நான்கை இந்த முறையும், மீதி நான்கை அடுத்த முறையும் எழுத அம்மா சொன்னார்.

தேர்வு முடிந்ததது. நான் அம்மாவை ஊருக்கு போக சொன்னேன். அம்மா கேட்கவில்லை. நாங்கள் மூவரும் வீட்டிலயே இருந்தோம். அந்த 4 பாடம் படித்தோம். எங்கள் விடுமுறை நேரத்திலும் அம்மா அவ்வளவாக ஓய்வு எடுக்கவில்லை.

முடிவுகள் வந்தது. இந்த செமஸ்டரின் எல்லா பாடங்களிலும், அந்த 4 பாடங்களிலும் தேர்சிப்பெற்றோம்.

அப்பா முதல் முறையாக எங்கள் வீட்டிற்கு வந்தார். அம்மாவை கிளம்பச்சொன்னார். தங்கையும் வந்தாள். அம்மா தான் வந்த வேலை இன்னும் முடியவில்லை என சொல்லி மறுத்துவிட்டார். தங்கையிடம் தனியாக பேசினார்.

ஐந்தாவது செமஸ்டர். இந்த முறையும் காலை ஒரு பேப்பர். மதியம் ஒன்று. எல்லாம் தேர்ச்சி அடைந்தோம்.

HOD எங்களை அழைத்தார்.
"என்னடா படிக்கிறீங்க போல இருக்கு"
எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியாய் இருந்தது. அம்மாவிடம் சொன்னேன். அம்மாவின் முகத்தில் மகிழ்ச்சி இல்லை.

"இப்போ நீ எவ்ளோ பெர்செண்ட் வெச்சிருக்க..?"
"மொத செம்ல 70, ரெண்டாவது 60. மூனாவது...."
"பரவா இல்ல சொல்லு..."
"52"
"நாலு, அஞ்சு..?"
"55, 58"
"மொத்தம்..?"
"59"
"உங்களுக்கு எப்போ கம்பஸ்..?"
"7th செம் ஆரம்பத்திலேயே வந்துரும்.."
"எவ்ளோ வேணும் கம்பஸ்க்கு..?"
"60 - மினிமம். ஆனா நம்ம விட நெறைய பேர் இருந்தா அது ஜாஸ்தி கூட ஆகலாம்."
"சரி. போய் சாப்பிடு"

யோசித்து பார்த்தேன். இரண்டு தேர்விலும் 12 பாடங்கள் எழுதி உள்ளேன். இந்த முறை 8. ஏன் நான் முயற்சி செய்யக்கூடாது?

ஆறாவது செம்மில் நான் எடுத்தது 80 சகதிவிகிதம். எல்லோரும் புகழ்ந்தார்கள். என் மொத்த சகதிவிகிதம் 62.5 ஆனது.

அம்மா இப்பொழுதும் மகிழ்ச்சியாய் இல்லை.
"கம்பஸ்க்கு படிக்க ஆரம்பி."

என்னுடைய இயந்திரவியல் துறையில் நாந்தான் முதல் ஆளாக வேலைக்கு தேர்வு பெற்றேன்.இனிப்பு வாங்கி வீட்டிற்கு வந்தேன். அம்மா உறங்கிக்கொண்டிருந்தார். முதல் முறையாக அம்மா உறங்குவதை நான் பார்த்தேன்.

அம்மா என்னை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்தார்.
"நான் ஊருக்கு கிளம்புறேன்பா. செம் லீவுக்கு வீட்டுக்கு வா."

நானும் அம்மாவும் நல்ல உணவகத்தில் உணவருந்தினோம். அம்மா பேருந்தில் ஏறியவுடன், அம்மாவிடம் ஒரு மோதிரம் கொடுத்தேன்.
"என்னடா இது. யார்டயாவது கடன் வாங்கினியா..?"
"இல்லம்மா. நீ என்னைக்கு 10 ரூவா கொடுத்தியோ அன்னைக்கே நான் சிகரெட் பிடிக்கிறத நிருத்திட்டேன்மா. இது தங்கச்சிக்கு. நான் வாங்குன மொத நகை. என் தங்கச்சி கல்யாணம் என் காசில மட்டும்தான்மா நடக்கும்."

5 comments:

Anonymous said...

கதை முடிவில்,அம்மாவை நினைத்து கண் கலங்கிவிட்டது

மொழி said...

நன்றி Anonymous.

Subha said...

kadasai para padikum pothu kann kalanga vaithuvittai! Finishing touch arumai. But screenplay was ok. Matra kathaikagilil irundha oru crispness, vegam ithil illayo yena thondriyathu. Oru velai, nijathayum karpanayayum ithil pirithu paarka mudinthathaal irukalaam!

மொழி said...

நன்றி சுபா.

Prabhu C said...

அழகான கதை, அம்மாவின் அருமை உணர்த்தும் கதை ...

Post a Comment